Tuesday, December 28, 2010

210. நினையாதிருத்தல் அரிது

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 147-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை. சேர நாடு முழுதும் ஆண்ட மன்னர்களில் இவன் சிறப்பான ஒருஅரசன் என்று கருதப்படுகிறான். இவன் தம்பி சேரன் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையும் மிகச் சிறந்த சேரமன்னர்களில் ஒருவன். பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரலிரும்பொறையைப் பதிற்றுப்பத்தில் உள்ள ஒன்பதாம் பத்தில் பாடிப் பெருமளவில் பரிசு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

பாடலின் பின்னணி: சேரன் குடக்கோச் சேரலிரும்பொறையின் கொடைப் புகழைக் கேள்வியுற்ற பெருன்குன்றூர் கிழார் அவனைக் காணச் சென்றார். சேரலிரும்பொறை பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசளிக்கக் கால தாமதாக்கினான். அதனால், பெருங்குன்றூர் கிழார் கோபமடைந்தார். “உன்னைப்போல் புலவர்களுக்கு ஆதரவு அளிக்காத வேந்தர்கள் இருந்தால் புலவர்களுக்கு வாழ்வே இல்லை. வறுமையோடு இருந்தாலும் என் மனைவி கற்புடையவள்; ஒருகால் அவள் உயிரிழந்திருக்கலாம்; இறவாது இருந்தால் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவளைப் பிரிந்து வாழும் நான் இறந்தேனோ என்று எண்னித் தானும் சாக வேண்டும் என்று தன்னை வருத்திக்கொள்வாள். அவள் வருத்தத்தை தீர்த்தல் வேண்டி நான் அவளை நாடிச் செல்கிறேன்” என்று இப்பாடலில் பெருங்குன்றூர் கிழார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
5 செயிர்தீர் கொள்கை எம்வெம் காதலி
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்என
10 நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
விடுத்தேன்; வாழியர் குருசில்! உதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வல்; நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
15 பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறுத்தே.

அருஞ்சொற்பொருள்:
1.மன்பதை = மக்கள் கூட்டம்; புரைமை = உயர்வு. 2. காட்சி = பார்வை. 5. செயிர் = குற்றம்; வெம் = விருப்பம். 6. வயின் = இடம். 8. திறன் = காரணம். 9. இறீஇயர் = கெடுவதாக. 10. சிறுமை = துன்பம்; புலந்து = வெறுத்து. 11. தீரீஇய = தீர்க்க. 12. உது - அருகிலிருப்பதைக் குறிக்கும் சொல் ”இது”; தொலைவில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படும் சொல் ”அது”; அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடைப்பட்ட தூரத்தில் உள்ள பொருளைச் சுட்டிக்காட்டப் பயன்படும் சொல் ”உது”. ”உது” என்னும் சொல் தற்பொழுது வழக்கில் இல்லை. 13. அவலம் = வரித்தம்; கறுத்தோர் = பகைவர். 14. முனை = போர்முனை. 15 கையற்ற = செயலற்ற; புலம்பு = வறுமை; முந்துறுத்து = முன்னே போகவிட்டு.

கொண்டு கூட்டு: குரிசிலே, நும்மனோரும் இனையராயின், எம்மனோர் இவண் பிறவார்; என் காதலி உயிர் சிறிது உடையள் ஆயின் நினையாது இருத்தல் அரிது; அதனால் மனையோள் இடுக்கண் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன்; வாழியர் எனக் கூட்டுக.

உரை: உலகத்து மக்களைக் காக்கும் உயர்ந்த நிலையில் உள்ள உன் போன்றவர்கள் தங்கள் நிலையைக் கருதாமல், அன்பில்லாமலும், அறத்தோடு பொருந்தாத பார்வையோடும் இருந்தால் என் போன்றவர்கள் இவ்வுலகத்தில் பிறவாமல் இருப்பார்களாக. என் மனைவி குற்றமற்ற கற்புடையவள்; என்னை விரும்புபவள். அவள் உயிருடன் இருந்தால் என்னை நினையாது இருக்கமாட்டாள். அதனால், அறமற்ற கூற்றுவன் காரணமின்றி முடிவெடுத்ததால், நான் இறந்ததாக எண்ணித் தன் உயிர் ஒழியட்டும் என்று சொல்லி வருத்தத்துடனும் பலவகையிலும் வெறுப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் துன்பம் தீர்க்க விரும்பி, இப்பொழுதே செல்கிறேன். இதோ பார்! நான் வருந்திய மனத்தோடு செல்கிறேன். உன்னால் தாக்கப்பட்ட உன் பகைவர்களின் அரண்கள் அழிவதைப்போல், என்னை நிலைகலங்கவைக்கும் என் வறுமையை முன்னே போகவிட்டு நான் பின்னே செல்கிறேன். அரசே, நீ வாழ்க!

209. நல்நாட்டுப் பொருந!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரை பற்றிய குறிப்புகளை பாடல் 151 - இல் காண்க.
பாடப்பட்டோன்: மூவன். மூவன் என்பது இவனது இயற்பெயர். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் நாடு கடற்கரையைச் சார்ந்த நெய்தல் நிலவளமும் வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தின் வளமும் கொண்டதாக இருந்தது.
பாடலின் பின்னணி: மூவன் கொடையில் சிறந்தவன் என்ற புகழோடு விளங்கினான். அதனால் பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காணச் சென்றார். மூவன், பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசளிக்காமல் காலம் தாழ்த்தினான். அவனிடமிருந்து பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தனார், மூவன் தன்னை இகழந்ததாகக் கருதினார். “மலையிலிருந்த மரம் ஒன்று பழுத்த பழங்கள் உடையது என்று எண்ணிப் பறவைகள் அந்த மரத்தை நாடிச் சென்றன. ஆனால், பருவகாலம் மாறியதால் அம்மரத்தில் பழங்கள் இல்லை. பறவைகள் பழங்கள் இல்லாமல் திரும்பின. அப்பறவைகளைப்போல், நான் உன்னை நாடி வந்தேன்; நான் இப்பொழுது வெறுங்கையோடு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன். நீ எனக்குப் பரிசு அளிக்காவிட்டால், நான் அது குறித்து வருந்த மாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், நான் பரிசு இல்லாமல் திரும்பிச் செல்வது நமக்குள் இருக்கட்டும்.” என்று கூறிப் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமலேயே சென்றார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்
5 படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
10 பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்
15 குறுநணி காண்குவ தாக; நாளும்
நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை அன்ன மார்பின்
செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே.

அருஞ்சொற்பொருள்:
1. பொய்கை = குளம்; போர்வு = வைக்கோற் போர்; சேத்தல் = கிடத்தல், தங்கியிருத்தல். 2. கழனி = வயல்; தொழுவர் = உழவர். 3. பிணி = அரும்பு; ஆம்பல் = அல்லி. 4. அடை = இலை; அரியல் = மது; மாந்துதல் = குடித்தல். 5. சீர் = தாளவொத்து; பாணி = இசை; பாணி தூங்குதல் = தாளத்திற்கேற்ப ஆடுதல். 6. மென்புலம் = மருதமும் நெய்தலும். 7. அல்கல் = தங்குதல்; விசும்பு = ஆகாயம்; உகந்து = உயர்ந்து. 8. விடர் = மலைப்பிளவு, குகை; சிலம்பு = ஒலி; முன்னுதல் = முற்படுதல், எதிர்ப்படுதல். 9. கையறுதல் = செயலறுதல். 11. நசை = விருப்பம்; நுவலுதல் = கூறுதல். 12. வறுவியேன் = வறுமையுடையவன். 15. குறு நணி = மிகுந்த நெருக்கம். 16. பல் = பல; ஒலித்தல் = தழைத்தல்; கதுப்பு = பெண்களின் கூந்தல். 17. தெரியிழை = ஆராய்ந்த ஆபரணம் (ஆராய்ந்த ஆபரணங்களைத் தரித்த பெண்); பாணி = காலம், சமயம். 18. வரை = மலை. 19. சேய் = முருகன்; செரு = போர்; மகிழிருக்கை = அரசவை, நாள் ஓலக்கம் ( அரசன் நாட்பொழுதில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் இடம்)

கொண்டு கூட்டு: பொருந, வாள் மேம்படுந, சேஎய், நின் இசை நுவல் பரிசிலேன்; வறுவியேன்; பெயர்கோ; ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன்; பெரும், நோயிலை ஆகுமதி; நம்முள் குறுநணியை நின் மகிழிருக்கைக் காண்குவதாக; பிறர் காணாது ஒழிக எனக் கூட்டுக.

உரை: குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர், நன்கு மலர்ந்த ஆம்பலின் அகன்ற இலைகளில் மதுவை உண்டு, தெளிந்த கடல் அலைகளின் இனிய சீரான ஒலிக்கேற்ப ஆடுகின்றனர். இத்தகைய வளமான நெய்தல் மற்றும் மருத நிலங்களையுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! பழங்களை விரும்பி, தாம் வாழும் ஆகாயத்தில் உயரப் பறந்து, பெரிய மலைக் குகையில் எதிரொலி முழங்கச் சென்று, பழமரத்தில் பழங்கள் இல்லாததால் வருந்தி மீளும் பறவைகளைப் போல், உன் மீதுள்ள விருப்பத்தினால் உன் புகழைக் கூற வந்த நான் பரிசு பெறாமல் வெறுங்கையோடு செல்லப் போகிறேனா? வாட்போரில் சிறந்த வீரனே! நீ எனக்குப் பரிசளிக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வாயாக! தலைவ! நாள்தோறும், மணமுடைய, நீண்ட, தழைத்த கூந்தலோடு, ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்து, தேன்போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் உன்னுடைய மலைபோன்ற மார்பைத் தழுவும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போரை விரும்பும் முருகனுக்கு ஒப்பானவன். நான் பரிசு பெறாமல் செல்வது உன் அரசவையில் உன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் .

208. வாணிகப் பரிசிலன் அல்லேன்

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியைக் கண்டு பரிசில் பெறலாம் என்று பெருஞ்சித்திரனார் சென்றார். எக்காரணத்தினாலோ, அதியமான் அவரைக் காணாது, அவர் தகுதிக்கேற்ற பரிசிலை மற்றவர்களிடத்துக் கொடுத்துப் பெருஞ்சித்திரனாரிடம் கொடுக்குமாறு செய்தான். அதியமான் தன்னை காணாது அளித்த பரிசிலை பெருஞ்சித்திரனார் ஏற்றுக்கொள்ள மறுத்தார். “குன்றுகளையும் மலைகளையும் கடந்து நான் பரிசு பெறுவதற்காக மட்டும்தான் வந்தேன் என்று அதியமான் எண்ணினா? சரியான முறையில் என்னை அவன் வரவேற்றிருக்க வேண்டும். என்னைக் காணாமல் அவன் அளித்த பரிசிலை ஏற்றுக்கொள்வதற்கு, நான் ஒரு வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி வரவேற்று, ”வருக” என்று எதிர்கொண்டு அழைத்து, என் புலமையைக் கண்டு, பாராட்டி, எனக்கு அளிக்கும் பரிசு மிகச்சிறியதானாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்” என்று இப்பாடலில் கூறுகிறார். பெருஞ்சித்திரனார் இவ்வாறு பாடிய பிறகு, அதியமான் தன் பிழையை உணர்ந்து, அவரை நேரில் கண்டு தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டியதாகவும், அதன் பின்னர், பெருஞ்சித்திரனார் அதியமான் அளித்த பரிசிலை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி இதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்என என்னை
5 யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினையனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே.

அருஞ்சொற்பொருள்:
1. பின் ஒழிதல் = கடத்தல். 4. ஈங்கனம் = இங்ஙனம், இவ்வாறு. 5. யாங்கு = எவ்வாறு; தாம்க்குதல் = தடுத்தல்; காவலன் = மன்னன். 7. பேணல் = விரும்பல். துணை = அளவு.

உரை: நான் பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் கொண்டு செல்வதற்கு வந்தேன் என்று கூறிய என் மீது அன்புகொண்டு, “இப்பொருளைக் கொண்டு இவ்வாறு செல்க” என்று பகைவரால் தடுத்தற்கரிய அரசன் அதியமான் கூறுகின்றானே! என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? என்னைக் காணாமல் அவன் அளித்த பொருளை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஊதியம் மட்டுமே கருதும் வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி, என் புலமை, கல்வி முதலியவற்றின் அளவை அறிந்து, திணை அளவே பரிசளித்தாலும் நான் அதை இனியதாகக் கருதுவேன்.

207. வருகென வேண்டும்

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இவன் வெளிமான் என்பவனின் தம்பி. வெளிமான் ஓரு சிறந்த கொடைவள்ளல். தமிழ் நட்டில் பல பகுதிகளில் வெளிமான் என்ற பெயருடன் தொடர்புடைய ஊர்கள் இருப்பதாகவும், வெளிமானல்லூர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: புலவர் பெருஞ்சித்திரனார் மிகவும் வறுமையில் வாடியவர். தம் வறுமையைத் தீர்ப்பதற்காகக் கொடை வள்ளலாகிய வெளிமானைக் காணச் சென்றார். இவர் வெளிமானின் அரண்மனைக்குச் சென்ற சமயத்தில், வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன், தன் தம்பியாகிய இளவெளிமானிடம், பெருஞ்சித்திரனார்க்குத் தகுந்த பரிசில் அளிக்குமாறு கூறிய பின்னர் இறந்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரைக் காணும்போது காணாததுபோல் நடந்துகொண்டான். அவரைக் கண்டாலும், அவனிடத்தில் முகமலர்ச்சி இல்லை; அவரை முறையாக வரவேற்கவில்லை. இளவெளிமானின் இத்தகைய செயல்களால் வருத்தமடைந்த புலவர் பெருஞ்சித்திரனார், இப்பாடலில் தம் மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

எழுஇனி நெஞ்சம்; செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்வழி
அருகிற் கண்டும் அறியார் போல
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
5 தாள் இலாளர் வேளார் அல்லர்
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
10 நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே.

அருஞ்சொற்பொருள்:
1. செல்கம் = செல்வோம். 2. பருகுதல் = குடித்தல்; பருகு அன்ன வேட்கை = நீர் வேட்கை உடையவன் நீரைக் கண்டவுடன் குடிப்பது போல், கண்டவுடன் மிகுந்த அன்பு காட்டும் பண்பு. 4. நக = மகிழ; அழிதல் = நிலைகெடுதல். 5. தாள் = முயற்சி.; வேளார் = விரும்ப மாட்டர்கள். 6. வரிசையோர் = பரிசிலர். 8. மீளி = வலிமை; முன்பு = வலிமை; ஆளி = சிங்கம். 9. வெள்ளென = கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு. 10. வயின் = இடம்; திரங்குதல் = தளர்தல். 11. வாயா வன்கனி = நன்றாகப் பழுக்காமல் கன்றிய கனி ; உலமரல் = திரிதல், சுழல்தல்.


கொண்டு கூட்டு: வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே, உள்ளம் உள்ளவிந்து அடங்காது, யாளிபோல், இனி எழு, செல்கம் எனக் கூட்டுக.

உரை: மிகுந்த விருப்பமில்லாமல், கண்டும் காணாதுபோல் இருந்து, உள்ளத்தில் மகிழ்ச்சியில்லாமல், முகம் திரிந்து தரும் பரிசிலை முயற்சி இல்லாதவர்கள்தான் விரும்புவர். வரும்பொழுது, “வருக, வருக” என்று எம்மை வரவேற்க வேண்டும். தகுதி உடையோர்க்கு இந்த உலகம் பெரியது; எங்களை விரும்புவோர் பலரும் உள்ளனர். வலிமை மிகுந்த சிங்கம்போல் ஊக்கம் குறையாது, என் நெஞ்சமே! இப்பொழுதே நீ எழுவாயாக; நாம் செல்வோம். கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு, எம்மைக் கண்டு இரக்கம் கொள்ளாதவரிடத்து வருந்திநின்று, கனியாத கனியை அடைய அலைபவர் யாரோ?

சிறப்புக் குறிப்பு:
திருவள்ளுவர் “பருகுவார் போலினும்” என்ற சொற்றொடரை

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. (குறள் - 811)

என்னும் குறளில் ”அன்பின் மிகுதியால் கண்டவுடன் குடித்துவிடுவார் போல் “ என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பது காண்க.

உள்ளன்பில்லாமல், முக மலர்ச்சியில்லாமல் பெருஞ்சித்திரனாரின் நெஞ்சத்தைப் புண்படுத்திய இளவெளிமானின் செயல், வள்ளுவர் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில்,

மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (குறள் - 90)

என்று கூறும் குறளுக்கு ஒருஎடுத்துக்காட்டு.

206. எத்திசைச் செலினும் சோறே

பாடியவர்: அவ்வையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். அவனது கொடைப் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தத்து. பல ஊர்களிலிருந்தும் அவனைக் காணப் புலவர்களும், பாணர்களும், பரிசிலர்களும் வந்தவண்ணம் இருந்தனர். அதியமானின் புகழைக் கேள்விப்பட்ட அவ்வையார், பரிசிலர் பலரோடும் சேர்ந்து அதியமானைக் காண வந்தார். அவ்வையாரோடு வந்த பரிசிலர் அனைவரும் அதியமானிடம் பரிசு பெற்று விடைபெற்றுச் சென்றனர். அவ்வையாரின் புலமையையும் திறமையையும் கேள்விப்பட்ட அதியமான், அவரைத் தன்னுடன் சிலகாலம் தங்க வைக்க வேண்டும் என்று விரும்பினான். அவருக்குப் பரிசு அளித்தால் அவர் தன் அரண்மனையைவிட்டுச் சென்றுவிடுவார் என்று எண்ணி அவ்வையாருக்குப் பரிசளிக்காமலும் தன்னை காண்பதற்கு அவருக்கு வாய்ப்பு அளிக்காமலும் அதியமான் காலம் கடத்தினான். அதியமான் பரிசளிக்காமல் இருப்பது, தன்னைக் காணாது இருப்பது போன்ற செயல்களின் உள்நோக்கம் அவ்வையாருக்குப் புரியவில்லை. ஆகவே, அவர் தன்னை அதியமான் அவமதிப்பதாக எண்ணி, அதியமான் மீது கோபம் கொண்டார். ஒருநாள், அதியமானைச் சந்திப்பதற்கு அரன்மனைக்குச் சென்றார். ஆனால், வாயிற்காவலன் எப்பொழுதும்போல், அதியமானைக் காணவிடாமல்அவ்வையாரைத் தடுத்து நிறுத்தினான். ”நீ பரிசிலர்க்கு எப்பொழுதும் வாயிற்கதவை அடைப்பதில்லை; ஆனால், எனக்கு மட்டும் வாயிற் கதவை அடைக்கிறாய்; அதனால் எனக்கு அதியமானைக் காண வாய்ப்பில்லை; அதியமான் சொல்லித்தான் நீ இவ்வாறு செய்கிறாய்; உன் அரசனாகிய அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா? நான் சோற்றுக்காகவா இங்கே தங்கியிருக்கிறேன்? நான் இனிமேல் இங்கே இருக்கப் போவதில்லை. நான் என்னுடைய யாழையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு புறப்படப்போகிறேன். அறிவும் திறமையும் உடைவர்களுக்கு எங்கு சென்றாலும் சோறு கிடைக்கும்.” என்று வாயிற்காவலனிடம் கூறினார். இதை அறிந்த அதியமான், அவ்வையாருக்கு மிகுந்த அளவில் பரிசளித்துத் தன் அரசவைப் புலவராக நீண்டகாலம் தன்னுடனேயே இருக்கச்செய்தான்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
5 பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
10 காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

அருஞ்சொற்பொருள்:
2. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; வயங்குதல் = விளங்குதல், மிகுதல். 3. உரன் = வலிமை (மன வலிமை). 4. வரிசை = தகுதி. 6. கடு = விரைவு; மான் = குதிரை; தோன்றல் = அரசன். 9. வறுந்தலை = வெற்றிடம். 10. காவுதல் = சுமத்தல்; கலம் = யாழ்; கலப்பை = கலம் + பை = யாழ் மற்றும் பல பொருள்களையும் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் பை. 12. மழு = கோடரி.

உரை: வாயிற் காவலனே! வாயிற் காவலனே! வரையாது கொடுக்கும் வள்ளல்களின் காதுகளில், விளங்கிய சொற்களை விதைத்துத் தாம் விரும்பிய பரிசிலை விளைவிக்கும் மனவலிமையோடு, தம் தகுதிக்கேற்பப் பரிசுபெற விழையும் பரிசிலர்க்குக் கதவுகளை மூடாத வாயிற் காவலனே! விரைந்தோடும் குதிரைகளையுடைய அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனால் உலகம் வெற்றிடமாகிவிடவில்லை. ஆகவே, என் யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் செல்கிறேன். மரம் வெட்டும் தச்சனின் திறமை வாய்ந்த சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். நான் எங்கே சென்றாலும் அங்கே சோறு (பரிசில்) கிடைக்காமல் போகாது.

சிறப்புக் குறிப்பு: பரிசிலர்களுக்குச் சிறுவர்களும், கல்வி, திறமை ஆகியவற்றிற்கு கோடரியும், சோற்றிற்கு காட்டிலுள்ள மரமும் உவமை என்று கொள்க.

Monday, December 13, 2010

205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 151-இல் காண்க.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன். இவனது இயற்பெயர் நெடுவேட்டுவன். இவன் மதுரைக்கு அருகே உள்ள கோடை மலைச்சாரலில் உள்ள கடியம் என்ற ஊரைச் சார்ந்தவனாதலால் கடிய நெடுவேட்டுவன் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவனை நாடி வந்த பரிசிலர்க்கு இவன் யானைகளையும் பல பரிசுகளையும் அளித்துச் சிறப்பித்தான். இவன் வள்ளன்மையால் புகழ் பெற்றவன்.
பாடலின் பின்னணி: ஒருசமயம், பெருந்தலைச் சாத்தனார் கடிய நெடுவேட்டுவனைக் காண வந்தார். எக்காரணத்தாலோ, அவன் அவருக்குப் பரிசில் அளிப்பதற்கு கால தாமதம் செய்தான். அதனால், வருத்தமுற்ற பெருந்தலைச் சாத்தனார், “பெரும் செல்வமுடைய மூவேந்தராயினும் , அவர்கள் விருப்பமின்றி அளிக்கும் கொடையை யாம் விரும்பமாட்டோம். உன்னிடம் வரும் பரிசிலர்கள், மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொண்டு செல்வதுபோல் பரிசு பெறாமல் செல்வதில்லை. ஆனால், இப்பொழுது நீ எனக்குப் பரிசில் கொடுக்கக் கால தாமதம் செய்தாய்.” என்று கூறி விடை பெறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
5 தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ, நோயிலை யாகுக;
10 ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக்
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே.

அருஞ்சொற்பொருள்:
2. பெட்பு = அன்பு, விருப்பம். 3. விறல் = வெற்றி, வீரம்; பரிதல் = ஓடுதல்; புரவி = குதிரை. 4. உறுவர் = பகைவர்; சார்வு = புகலிடம். 5. தாள் உளம் = முயற்சியுடய உள்ளம்; தபுதல் = கெடுதல். 6. வீ = மலர். 7. புழை = துளை, வழி. 8. கதம் = சினம். 9. சிலை = வில். 10. ஆர்கலி = மிகுந்த ஒலி; தரீஇ = தந்து. 11. குழீஇய = திரண்ட; கொண்மூ = மேகம். 14. கடும்பு = சுற்றம்.

உரை: நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும், எங்கள் மீது விருப்பமில்லாது அவர்கள் அளிக்கும் பரிசுகளை நாங்கள் விரும்பமாட்டோம். வெற்றி பெறுவதற்காகக் கொண்ட சினம் தணிந்து, விரைந்து ஓடும் குதிரைகளையுடைய உன் பகைவர்கள் அஞ்சி வந்து உன்னை அடைந்தால் நீ அவர்களுக்குப் புகலிடமாய் விளங்குகிறாய். அவ்வாறன்றி, முயற்சியுடன் போர் புரிந்தவர்களின் உள்ளத்தின் வலிமையை அழித்த வாட்படையை உடையவன் நீ. வெண்மையான பூக்களையுடைய முல்லையை வேலியாகக்கொண்ட கோடை என்னும் மலைக்குத் தலைவன் நீ. சிறியதாகவும் பெரியதாகவும் உள்ள வழிகளில் குறுக்கே வந்த மான்களின் கூட்டத்தை அழித்த விரைந்து செல்லும் சினம்கொண்ட நாய்களையும் வலிய வில்லையும் உடைய வேட்டுவனே! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக! மிகுந்த ஒலியுடன் புதுமழையைத் தருவதற்காகக் காலூன்றிக் கடலின்மேல் கூடிய மேகம் நீரைக் குடிக்காமல் போகாது. அதுபோல், தேர்களையும், வெண்மையான தந்தங்களையுடைய யானைகளையும் பரிசாகப் பெறாது பரிசிலர் சுற்றம் வெறிதே செல்லமாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமல் கடிய நெடுவேட்டுவனிடமிருந்து விடை பெறுகிறார். அவனிடம் பரிசு பெறுவதற்காக வந்த இரவலர் கூட்டம் தேர்களையும் யானைகளையும் பெறாமல் செல்லமாட்டர்கள் என்று கூறித் தான் பரிசில்லாமல் செல்வதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றும், அவர் “நோயிலை ஆகுக” என்று கூறுவது குறிப்பு மொழியால் அவனை இகழ்ந்ததுபோல் தோன்றுகிறது.

204. அதனினும் உயர்ந்தது

பாடியவர்: கழைதின் யானையார். மூங்கிலைத் தின்னும் யானையைப் பற்றி நயமாக உவமித்து கவிதை பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. இவனைப் பற்றிய குறிப்புகளை 152-ஆம் பாடலில் காண்க.
பாடலின் பின்னணி: வல்வில் ஓரி கொல்லிமலைப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடையெழு வள்லல்களில் ஒருவன். அவனை வன்பரணர் என்ற புலவர் புகழ்ந்து பாடியதை பாடல்கள் 152 மற்றும் 153 ஆகியவற்றில் காணலாம். ஒருகால், கழைதின் யானையார் வல்வில் ஓரியைக் காணவந்தார். அச்சமயம் வல்வில் ஓரி அவருக்குப் பரிசு அளிக்கவில்லை. அவன் பரிசளிக்கவிட்டாலும் அவருக்கு அவன் மீது வெறுப்பில்லை என்பதை இப்பாடலில் கூறுகிறார். மற்றும், இரப்போர்க்கும் அளிப்போர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
5 தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
10 புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

அருஞ்சொற்பொருள்:
1. இழிந்தன்று = இழிந்தது. 3. உயர்ந்தன்று = உயர்ந்தது. 5. இமிழ் = ஒலி. 6. வேட்டல் = விரும்பல். 7. ஆ = பசு; மா = விலங்கு. 8. அதர் = வழி. 10. புள் = பறவை. 12. புலத்தல் = வெறுத்தல். கருவி வானம் = கரிய நிறமுடைய மேகம்.

கொண்டு கூட்டு: ஓரி, வள்ளியோய், பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித்தலல்லது உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால் யானும் நின்னைப் புலவேன், வாழியர் எனக் கூட்டுக.

உரை: ஒருவனிடம் சென்று இரத்தல் இழிந்தது. அவ்வாறு ஒருவன் கேட்ட பிறகு, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிந்தது. ஒருவன் இரப்பதன்முன் இப்பொருளை எடுத்துக்கொள் என்று கொடுப்பது உயர்ந்தது. அப்படிக் கொடுத்த பிறகு அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது அதைவிட உயர்ந்தது. நீர் வேட்கை (தாகம்) எடுத்தால் தெளிந்த நீர் பரப்பையுடைய கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் மற்ற விலங்குகளும் உண்ணுவதால் சேறுடன் கலங்கிய நீர் சிறிதளவே இருந்தாலும் அதைத் தேடிப் பல வழிகளில் பலரும் செல்வர்.
உன்னைப் போன்றவர்களிடத்துப் பரிசில் பெறச் செல்பவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தாம் புறப்பட்ட நேரத்தையும் சகுனத்தையும் பழிப்பார்களே அன்றி, உன்னைப்போல் வரையாது கொடுக்கும் வள்லல்களைப் பழிக்க மாட்டார்கள். ஆகவே, நீ எனக்குப் பொருள் வழங்கவில்லை என்றாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஓரி, நீ வாழ்க! வானத்தில் உள்ள கரிய மேகம் மழைபொழிவதுபோல் குறையாது பரிசளிக்கும் வள்ளலே!

203. இரவலர்க்கு உதவுக

பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார் (10, 203, 370, 378). இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பனையோலையால் குடை போல் செய்து அதை உணவு உண்பதற்கும், பூப்பறிப்பதற்கும் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர். பனையோலையில் ஊன் கொண்டு செல்வதை இவர் “ ஊன்பொதி பசுங்குடை” என்று பாடியதால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி(10, 203, 370, 378).நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த ஊராகும். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான். நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி ஆகியோர் ஒருவர் அல்ல; அவர் வேறு வேறு மன்னர்கள் என்று கூறுவாரும் உளர்.
பாடலின் பின்னணி: ஊன்பொதி பசுங்குடையார் முன்பு ஒருமுறை சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியைக் கண்டு பரிசில் பெற்றார். அவர் மீண்டும் அவனைக் காண வந்தார். இம்முறை, சோழன் அவருக்கும் மற்ற புலவர்களுக்கும் பரிசில் அளிக்கக் கால தாமதமாக்கினான். அதனால் அவனை நாடி வந்த புலவர்கள் வருத்தமடைந்தனர். இவ்வாறு பரிசில் அளிக்காமல் நீட்டிப்பது சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் இயல்பு அல்ல என்பதை ஊன்பொதி பசுங்குடையார் அறிந்திருந்தார். “முன்பே மழை பொழிந்தோம் என்று நினைத்து மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ அல்லது முன்பே விளைச்சலை அளித்தோம் என்று நிலம் மீண்டும் பயிர்களை விளைவிக்காமல் இருந்தாலோ உலகில் உயிர்களுக்கு வாழ்க்கை இல்லை. அதுபோல், முன்பே பரிசளித்ததால் இப்போது நீ பரிசளிக்காமல் இருப்பது முறையன்று . நீ இரவலர்க்குக் கொடுக்காமல் இருப்பவன் அல்லன். இரவலரைப் பாதுகாப்பது உன் கடமையாகும் “ என்று இப்பாடலில் சோழனுக்கு ஊன்பொதி பசுங்குடையார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின்
5 முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையும் அல்லை நீயே, ஒன்னார்
10 ஆர்எயில் அவர்கட் டாகவும் நுமதுஎனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே.

அருஞ்சொற்பொருள்:
1. வான் = மேகம். 2. கரத்தல் = மறைத்தல், கொடாது இருத்தல். 3. ஆல் - அசைச் சொல். 4. தம் = தருக. 6. அம்ம = கேளாய் (கேட்டற்பொருளைத் தழுவி வரும் இடைச்சொல்). 8. நசைதல் = விரும்ம்புதல், அன்பு செய்தல். 10. ஆர் = அரிய; எயில் = மதில். 11. இறுத்தல் = செலுத்துதல், கடமை ஆற்ருதல். 12. புரவு = பாதுகாப்பு.

உரை:கடந்த காலத்தில் பொழிந்தோம் என்று மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ முற்காலத்தில் விளைச்சலை அளித்தோம் என்று எண்ணி நிலம் விளைச்சலை அளிக்காமல் இருந்தாலோ உயிர்களுக்கு எல்லாம் வாழ்க்கை இல்லை. அதுபோல், மீண்டும் எமக்குப் பரிசில் அளிக்குமாறு எங்களைப் போன்றவர்கள் கேட்டால், “நீங்கள் முன்பே பரிசில் பெற்றுக்கொண்டீர்கள்” என்று மறுத்தல் கொடியது. நான் சொல்வதைக் கேள்! நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய தலைவ! தம்மிடத்துள்ள வறுமையினால் தம்மை நாடி வந்தவர்க்குப் பரிசளிக்க இயலாதவர்களைவிட, தம்மை நாடிவந்தவர்களுக்குப் பரிசளிக்கக் கூடிய செல்வம் இருந்தும் பரிசளிக்காதவர்கள், தம்மை நாடிவந்தவர்களால் விரும்பப்படுவதை இழந்தவர்களாவார்கள். ஆனால், நீ அத்தகையவன் அல்லன். நீ, பகைவருடைய அரண்கள் அவர்களிடம் இருக்கும்பொழுதே அவர்களின் பொருளைப் பாணர்களுக்கு கொடுப்பதைக் கடமையாகக்கொண்ட வள்ளன்மை உடையவன். எம் தலைவ! இரப்போரைப் பாதுகாத்தலை நீ கடமையாகக் கொள்வாயாக.

202. கைவண் பாரி மகளிர்

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 105-இல் காண்க.
பாடப்பட்டோன்: இருங்கோவேள். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 201-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாரி மகளிரை மணந்துகொள்ளுமாறு கூறிய கபிலரின் வேண்டுகோளுக்கு இருங்கோவேள் இணங்க மறுத்தான். அதனால் கோபமடைந்த கபிலர், “வேளே! உன் நாட்டில் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு சிறப்பான ஊர்கள் இருந்தன. இன்று அவ்வூர்கள் அழிந்துவிட்டன. உன் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழந்தான். அதனால்தான் அவ்வூர்கள் அழிந்தன. நான் இவர்களின் சிறப்பைக் கூறி இவர்களை மணந்துகொள்ளுமாறு உன்னை வேண்டினேன். நீ என் சொல்லை இகழ்ந்தாய்; நான் செல்கிறேன்; உன் வேல் வெற்றி பெறட்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
5 வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
15 கைவண் பாரி மகளிர் என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
20 இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1.வெட்சி = ஒருசெடி; கானம் = காடு. 2. கட்சி = புகலிடம்; கடமா = காட்டுப் பசு, மத யானை. 3. கடறு = காடு; கிளர்தல் = எழுதல். 4. கடி = மிகுதி; கதழ்தல் = விரைதல்; படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு. உரு = அச்சம். 9. தாயம் = உரிமை. 10. ஒலியல் = தழைக்கை. 14. மா = கறுப்பு. 17 . அடுக்கம் = மலைச்சாரல். 19. மா = கரிய; தகடு = பூவின் புறவிதழ்; வீ = மலர்; துறுகல் = பாறை. 20. கடுக்கும் = போலும். 21 கல் = மலை.

கொண்டு கூட்டு: புலிகடிமாஅல், அண்ணல், நாடு கிழவோயே, அரையத்துக் கேடும் கேள் இனி; அது கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயன்; இப்பொழுது, எவ்வி தொல்குடிப் படீஇயர்; இவர் பாரி மகளிர் என்றஎன் புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தனென்; வெலீஇயர் நின் வேலே எனக் கூட்டுக.

உரை: வெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேடர்களால் விரட்டப்பட்ட மதங்கொண்ட யானை புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம், பேரரையம் என்று அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன் தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்! உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள் ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே! ”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்” என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக!

மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்!

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், கபிலர் பல கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று கூறாமல் கூறுகிறார். அடுத்து, அரையத்தின் அழிவைப் பற்றிக் கூறும்பொழுது, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்” என்று இருங்கோவேளின் முன்னோர்களின் ஒருவன் இருங்கோவேளைப்போல் அறிவில்லாதவன் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ”நுந்தை தாயம் நிறைவுற எய்திய” என்று அவனுடைய நாடு மற்றும் செல்வம் அனைத்தும் அவன் தந்தையால் அவனுக்கு அளிக்கப்பட்டதே ஒழிய அவன் தன் சொந்த முயற்சியால் எதையும் பெறவில்லை என்று மறைமுகமாகக் கூறுகிறார். தன்னுடன் வந்த பெண்கள் பாரியின் மகளிர் என்பதால் அவர்களை மணந்தால் மூவேந்தருடன் பகை வரக்கூடும் என்ற அச்சத்தால் இருங்கோவேள் அவர்களை மணக்க மறுக்கிறான் என்று கபிலர் கருதுகிறார். அஞ்ச வேண்டாதவற்றை எண்ணி அவன் அஞ்சுகிறான் என்பதை, வேங்கைப் பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை, புலியின் முதுகுபோல் இருக்கிறது என்று மறைமுகமாக அவன் அச்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். கடைசியாக, “வெலீயர் நின் வேல்” என்று கபிலர் கூறுவது, வாழ்த்துவதுபோல் இருந்தாலும், அது “கெடுக உன் வேல்” என்ற எதிர்மறைப் பொருளில் ”குறிப்பு மொழி”யாகக் கூறியதுபோல் (பாடல் 196-இல் குறிப்பு மொழி என்பதற்கு விளக்கம் இருப்பதைக் காண்க.) தோன்றுகிறது.

201. இவர் என் மகளிர்

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை 105 - ஆம் பாடலில் காண்க.
பாடப்பட்டோன்: இருங்கோவேள். இவன் வேளிர் குடியைச் சார்ந்தவன். இவன் முன்னோர்கள் அக்காலத்தில் தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த எருமையூர் (இப்பொழுது, எருமையூர் மைசூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் கர்நாடக மாநிலத்தில் உள்ளது.) அருகே இருந்த துவரை என்னுமிடத்திலிருந்து ஆட்சி புரிந்தனர். வேளிர் குடியைச் சார்ந்த பலர், குறுநில மன்னர்களாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆட்சி புரிந்தார்கள். இருங்கோவேள் வேளிர் குடியில் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன். இவனுடைய நாடு புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த மலைநாடு என்று கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: பாரி இறந்தபின், பாரி மகளிரைத் தகுந்தவர்க்கு மணமுடிக்க விரும்பி அவர்களைப் பல குறுநிலமன்னர்களிடம் கபிலர் அழைத்துச் சென்றார். இப்பாடலில், கபிலர் பாரி மகளிரை இருங்கோவேளிடம் அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை மணந்துகொள்ளுமாறு கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
5 நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
10 உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
15 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
20 கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
3. செல்லா = தொலையாத. 4. படுதல் = ஒலித்தல். 5. மா = பெருமை. 8. தடவு = ஓம குண்டம். 8. புரிசை = மதில். 9. சேண் = உயர். 10. உவர்த்தல் = வெறுத்தல். 12. வேள் = வேளிர் குலத்தைச் சார்ந்தவன். 13. சேடு = பெருமை. 14. ஆண் = தலைமை. 15. ஒலியல் = தழைக்கை. 18. மால் = உயர்ந்த. 19. உடலுநர் = பகைவர்; உட்கும் = அஞ்சும். 20. குரை = பெருமை.

கொண்டு கூட்டு: இவரே, பாரிமகளிர்; யானே, அந்தனன் புலவன்; நீயே, வேளிருள் வேளே, அண்ணல், கோவே, புலிகடிமால், இவரைக் கொண்மதி

உரை: ”இவர்கள் யார்?” என்று கேட்பாயாயின் , இவர்கள் தன்னுடைய ஊர்களையெல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைகொடிக்குத் தன் தேரையும் அளித்ததால் பெற்ற அழியாப் புகழையும், ஒலிக்கும் மணிகளை அணிந்த யானைகளையும் உடைய பறம்பு நாட்டின் தலைவனாகிய உயர்ந்த பெருமையுடைய பாரியின் மகளிர். நான் இவர்களின் தந்தையின் தோழன். ஆகவே, இவர்கள் எனக்கு மகளிர் (போன்றவர்கள்). நான் ஒரு அந்தணன்; மற்றும் ஒருபுலவன். நான் இவர்களை அழைத்து வந்தேன்.

வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!

வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.

சிறப்புக் குறிப்பு: பல தமிழறிஞர்கள் பல்வேறு கருத்துகளையும் கற்பனைக் கதைகளையும் இருங்கோவேளின் வரலாற்றுடன் இணைத்துக் கூறியிருப்பதால், இருங்கோவேளின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இப்பாடலில், “ வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்று கபிலர் கூறியிருப்பதற்குப் பலரும் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். விசுவபுராண சாரம் என்னும் தமிழ் நூலையும் தெய்வீக உலா என்னும் நூலையும் ஆதாரமாக வைத்து, இங்கு முனிவன் என்று குறிபிடப்பட்டது சம்புமுனிவனாக இருக்கலாம் என்று டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். இப்பாடலில் “துவரை” என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த நகரம் என்றும் அந்த நகரத்திலிருந்து அகத்தியர் வேளிர்களைத் தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும் நச்சினினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.

மைசூர் அருகே உள்ள துவரை என்னும் நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஹொய்சள மன்னர்களின் முன்னோன் ஒருவன் சளன் என்ற பெயருடையவன். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பொழுது முயல் ஒன்று புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. அவன் அப்புலியைத் தொடர்ந்து சென்றான். அங்கே ஒருமுனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். புலியக் கண்ட அந்த முனிவர், சளனைக் கண்டவுடன், “சளனே, அப்புலியைக் கொல்க” எனக் கட்டளையிட்டார். சளன் தன் வாளை உருவிப் புலியைக் கொன்றான். புலியைக் கொன்றதால் அவன் ஹொய்சளன் என்று அழைக்கப்பட்டான். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் முனிவரை இந்த முனிவரோடு தொடர்புபடுத்தி, “புலிகடிமால்” என்பது “ஹொய்சளன்’ என்பதின் தமிழ்மொழிபெயர்ப்பு என்று கொண்டு இருங்கோவேளை ஹொய்சள வழியனன் என்று கூறுவாரும் உளர்.

மேலே குறிப்பிடப்பட்ட கற்பனைக் கதைகளைவிட, அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் “வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்பதற்கும் “புலிகடிமால்” என்பதற்கும் அளிக்கும் விளக்கம் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்துவதாகவும் உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாப் பக்ககங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இடத்திற்குத் “தடவு” என்று பெயர். தமிழகத்தின் வடமேற்குப்பகுதியில் (தற்போது கர்நாடக மாநிலத்தில்) இருந்த அத்தகைய தடவு ஒன்றில் முனிவன் ஒருவன் வாழ்ந்துவந்ததால் அந்தத் தடவுக்கு ”முனிவன் தடவு” என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். அந்த ”முனிவன் தடவு”ப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன், புலிநாடென்று வழங்கப்பட்ட கன்னட நாட்டு வேந்தனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது, அந்தத் தடவுப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆந்திர சாதவாகன வேந்தருள் ஒருவனான புலிமாய் என்பவனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். சாதவாகனர்களுடைய ஆட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அந்நாளில் துவராவதி நகரம் சாதவாகனர்களின் நாட்டில் இருந்தது. சாதவாகன மன்னனை வென்ற இருன்கோவேளின் முன்னோர்கள் துவராவதி என்னும் துவரை நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததை இப்பாடலில் “துவரை யாண்டு நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள்” என்று குறிப்பிடுகிறார் என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்துப்படி, வேளிர் குலத்தினர் அக்காலத் தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் தொடங்கி பிற்காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் குறுநிலமன்னர்களாக ஆட்சி புரிந்துவந்தனர் என்பது தெரிய வருகிறது. அந்த வேளிர்குலத்தை சார்ந்தவன்தான் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இருங்கோவேள்.

Thursday, December 2, 2010

189. செல்வத்துப் பயனே ஈதல்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56, 189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவர் கடைசங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுள்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுள்களையும், நற்றிணையில் 7 செய்யுள்களையும், குறுந்தொகையில் 8 செய்யுள்களையும் இயற்றியவர். மற்றும் பத்துபாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றூப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. குறுந்தொகையில், “கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடலை (குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்தாகவும், நக்கீரர், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று சொன்னதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. (குறுந்தொகை, புலவர் துரை இராசாராம், திருமகள் நிலையம்)

பாடலின் பின்னணி: வேந்தனாக இருந்தாலும் வேடனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். தேவைகளுக்கு மீறிய செல்வம் இருந்தால் அதைப் பயன்படுத்த முடியாது. ஆகவே, தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதுதான் செல்வத்தைப் பெற்றதின் பயன். தானே தன் செல்வம் முழுவதையும் அனுபவிக்கலாம் என்று எண்ணுபவர்கள் செல்வத்தின் பயனை இழந்தவர்களாவார்கள் என்ற சிறந்த கருத்தை இப்பாடலில் நக்கீரர் கூறுகிறார். 

  திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. 

துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல். தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், 5 உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. 

அருஞ்சொற்பொருள்: 1. பொதுமை = பொதுத்தன்மை; வளாகம் = இடம் (வளைந்த இடம்). 3. யாமம் = நள்ளிரவு; துஞ்சல் = தூங்குதல். 4. கடு = விரைவு; மா = விலங்கு. 5. நாழி = ஒருஅளவு (ஒருபடி). 6. ஓர் - அசை. 8. துய்த்தல் = அனுபவித்தல் 

உரை: தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவு தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழந்தவனாவான்.

200. கொடுப்பக் கொள்க!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டவன்: விச்சிக்கோ. இளவிச்சிக்கோ என்பவன் பெண்கொலை புரிந்த நன்னன் என்பவனின் வழித்தோன்றல் என்ற காரணத்தால் அவனைப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் தழுவாது, அவனுடன் இருந்த இளங்கண்டிராக்கோ என்பவனை மட்டும் தழுவியதாகப் புறநானூற்றுப் பாடல் 151 கூறுகிறது. இப்பாடலில் பாடப்பட்ட விச்சிக்கோ அந்த இளவிச்சிக்கோவின் தமையன்.
படலின் பின்னணி: பாரி இறந்த பிறகு கபிலர், பாரியின் மகளிர் இருவரையும் தகுந்த அரசர்க்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். அவர் பாரியின் மகளிரோடு விச்சிக்கோவைக் கண்டு, அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவனை வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஆனால், விச்சிக்கோ பாரி மகளிரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கருதப்படுகிறது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி
மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
5 கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப,
நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே,
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
10 நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
15 நினக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!

அருஞ்சொற்பொருள்:
1. நிவத்தல் = படர்தல், அலர்தல், உயர்தல்; பாசிலை = பசுமையான இலை, பல = பலா. 3. சேண் = தொலைதூரம். 4. மழை = மேகம்; மால் = மலை; அடுக்கம் = பக்க மலை. 5. கழை = மூங்கில்; கல்லகம் = மலை; வெற்பு = மலை. 6. செரு = போர். 11. கறங்கல் = ஒலித்தல். 17. மடங்கா = குறையாத.

உரை: உன் நாட்டில், மேகங்கள்கூட எட்ட முடியாத அளவுக்கு உயரமான மலைகள் உள்ளன. அம்மலைகளின் உச்சியில் மூங்கில் காடுகள் உள்ளன. அந்தக் குளிர்ந்த மலைகளில் வளர்ந்த பசுமையான இலையையுடைய பலாவின் பழத்தைக் கவர்ந்து உண்ட கரிய விரலுடைய ஆண்குரங்கு, சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு, மலைச் சிகரத்தில் உள்ள மூங்கிலின் மேல் உறங்கும். அத்தகைய மலைநாட்டுத் தலைவா! போரில் பகைவரைத் தாக்கியதால் புலால் மற்றும் குருதிக் கறைபடிந்து நெருப்பைப்போல் சிவந்த நிறமுடைய வேலையையும், போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானைகளையும் ஒளிரும் மணிகளுடைய அணிகலன்களையும் உடைய விச்சிக்கோவே!

பூவைத் தலையில் வைத்ததைப்போல் உள்ள முல்லைக் கொடி ஒன்று படர்வதற்குக் கொழுக்கொம்பின்றி இருந்ததைக் கண்ட பாரி, அம்முல்லைக்கொடி தன்னைப் புகழந்து பாடாது என்பதை அறிந்திருந்தும், அக்கொடி படர்வதற்கு ஒலிக்கும் மணிகள் பொருந்திய தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்தான். இவர்கள் அத்தகைய பரந்த புகழுடைய பாரியின் சிறப்புடைய மகளிர். நான் பாடிப் பரிசுபெறும் அந்தணன். நீயோ, பகைவருடன் போர் செய்யும் முறைகளை நன்கு அறிந்து வாளால் மேம்பட்டவன். இவர்களை மணமகளிராகத் தருகிறேன். நீ இவர்களை ஏற்றுக்கொள்வாக.

அடங்காத அரசர்களைச் சினத்தோடு போர்புரிந்து, அடக்கும் குறையாத விளைவுடைய வளமான நாட்டுக்கு உரிமை உடையவனே!

199. கலிகொள் புள்ளினன்

பாடியவர்: பெரும்பதுமனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே. இவர் குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (7), நற்றிணையில் இரண்டு செய்யுள்களும் (2, 109) இயற்ரியுள்ளார். இவருடைய பாடல்களில் உவமை நயம் மிகுந்து காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: பாணர், விறலியர், கூத்தர், பொருநர், புலவர் ஆகியோர் மீண்டும் மீண்டும் செல்வந்தர்களிடத்தே சென்று பரிசு பெறுவதைப் பற்றித் தன் கருத்தை இப்பாடலில் பெரும்பதுமனார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
5 புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.

அருஞ்சொற்பொருள்:
1. தடவு = பெரிய; சினை = மரக்கொம்பு. 2. நெருநல் = நேற்று. 3. ஆனா = அமையாது; கலி = ஒலி. 4. வாழி, ஓ - அசைச் சொற்கள். 5. புரவு = பாதுகாப்பு. 7. இன்மை = வறுமை.

உரை: கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைத்து ஆரவாரமாக ஒலிக்கும் பறவைகள் அம்மரத்தைவிட்டு விலகுவதில்லை. இரவலர்களும் அப்பறவைகள் போன்றவர்கள்தான். இரவலர்களை எதிர்பார்த்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புரவலர்களின் செல்வம்தான் இரவலர்களின் செல்வம். புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களுக்கும் வறுமைதான்.

சிறப்புக் குறிப்பு: பறவைகள் ஆலமரத்தில் உள்ள பழங்களைத் தின்று, அப்பழங்களில் உள்ள விதைகளைத் தம் எச்சத்தின் மூலம் வெளிப்படுத்திப் பல்வேறு இடங்களில் புதிய ஆலமரங்கள் முளைத்துத் தழைக்க வழி செய்கின்றன. அதுபோல், இரவலர்கள் புரவலர்களிடம் பரிசுபெற்று, பல்வேறு ஊர்களுக்குச் சென்று பரிசளித்த இரவலர்களின் புகழைப் பரப்புவதால், ஆங்காங்கே, புதுப் புரவலர்கள் தோன்றக்கூடும். (அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, புறநானூறு, பகுதி 1, பக்கம் 432-433)

198. மறவாது ஈமே

பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார். பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள். இவரது இயற்பெயர் சாத்தனார். இவர், ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கன் என்பது தொழிற்பெயர். மற்றும், இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது. இவர் புறநானூற்றில் இயற்றிய இந்தப் ஒருபாடல் மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுள்களையும் , நற்றிணையில் 8 செய்யுள்களையும், குறுந்தொகையில் 5 செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
பாடலின் பின்னணி: ஒருசமயம், வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசில் பெறலாம் என்ற எண்ணத்தோடு அவனைக் காணச் சென்றார். அவன் பரிசில் அளிக்காமல் காலத்தைப் போக்கினான். அதனால் ஏமாற்றமடைந்த வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
5 கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்
திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
10 வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
15 ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
20 நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
25 துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

அருஞ்சொற்பொருள்:
1. வரை = மலை. 2. ஆரம் = மாலை (முத்து மாலை). 4. மணி = பவழ மணி. 5. கிண்கிணி = காலணி. 7. அரற்றுதல் = கதறுதல், அழுதல். 9. ஆல் = ஆல்மரம். 12. வரைப்பு = எல்லை; கொண்டி = கொள்ளை, பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல். 16. நெடுநகர் = பெரிய அரண்மணை.

உரை: அருவி வீழும் பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே! கடவுள் தன்மை அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன் புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன். வலிய தேரையுடைய தலைவ! உன்னைப் பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே கூறிக்கொண்டிருக்கிறேன். வேலையுடய வேந்தே! அப்பரிசிலின் மீது எனக்குள்ள விருப்பத்தால் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு, ஆலமரத்தில் அமர்ந்த கடவுள் போன்ற உன் பெருஞ்செல்வத்தைக் கண்டேன். ஆதலால், நான் விடைபெறுகிறேன்.

உன் தலையில் அணிந்துள்ள மாலை வாழ்க! நீ தமிழகம் முழுவதும் கொள்ளைகொண்டு உன் பகைவரை வென்று அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் மிக்க வலிமையையுடையவன். உன் புதல்வரும் உன்னைப் போன்ற மிக்க வலிமை உடையவர்கள்.எந்நாளும் பகைவர்களை அழித்து அவர்களுடைய அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து உன்னுடைய பொன்னாலான பொருள்கள் நிறைந்த பெரிய அரண்மனையில் உன் முன்னோர்கள் வைத்தார்கள். அந்த முன்னோர்களைப் போலவே உன் புதல்வரின் கருணை நிரம்பிய உள்ளமும் உள்ளது. (முன்னோர்க்கும் கண்ணோட்டம் இல்லை; உன் புதல்வருக்கும் கண்ணோட்டம் இல்லை).

எப்பொழுதும் அலையுடன் கூடிய கடல் நீரினும், அக்கடல் மணலினும், மழைத்துளிகளினும் அதிக நாட்கள் உன் புதல்வரின் பிள்ளைகளோடும் நீ விரும்பிய செல்வத்தோடும் வாழ்க! பெருந்தகையே! நான் உறவினர் இல்லாத தொலைவில் உள்ள ஊரில் மழைத்துளிக்கு ஏங்கி இருக்கும் வானம்பாடிப் பறவையைப் போல் உனது பரிசிலை விரும்பி உன் நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன். விரைவாகச் செல்லும் இயல்புடைய குதிரைகளையுடைய பாண்டியனே! நீ செய்த செயலை மறவாதே!

சிறப்புக் குறிப்பு: பாண்டியன் செய்த தீய செயலால் அவனுக்குத் தீங்கு வரும் என்று உணர்ந்த பேரி சாத்தனார், அவனுக்கு அத்தகைய தீங்குகள் வராமல் இருக்க வேண்டுமென்று எண்ணி அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

197. நல்குரவு உள்ளுதும்

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (58, 61, 167, 180, 197, 394). இச்சோழ மன்னன் குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டில் குட்டுவன் கோதையும் பாண்டிய நாட்டில் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர். இவனைப் பாடியவர்கள்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மருத்துவன் உறையூர் தாமோதரனார்.
பாடலின் பின்னணி: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணச் சென்றார். அவன் இப்புலவர்க்குப் பரிசளிப்பதற்குக் கால தாமதமாக்கினான். அதனால் கோபமடைந்த கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், “அரசே, அரசர்களிடம் தேர்களும் படைகளும் மிகுதியாக இருப்பதாலோ, பல போர்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதற்காகவோ நாங்கள் அவர்களை வியந்து பாராட்டுவதில்லை. சிறிய ஊரின் மன்னர்களாக இருந்தாலும் எங்கள் பெருமையை உணர்ந்தவர்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். எத்துணைத் துன்பம் வந்தாலும் உண்மை உணர்வும் நல்லறிவும் இல்லாதவர்களின் செல்வத்தை விரும்பமாட்டோம். நல்லறிவு உடையவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களைப் பெரிதும் பாராட்டுவோம்” என்று இப்பாடலில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
5 உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே
10 இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;
15 மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே.

அருஞ்சொற்பொருள்:
1. வளி = காற்று; வாவுதல் = தாவுதல்; இவுளி = குதிரை. 2. நுடங்குதல் = ஆடல், துவளல், முடங்குதல், தள்ளாடுதல், வளைதல்; எனா - இடைச்சொல். 5. உரும் = இடி; உட்கு = அச்சம். 6. செரு = போர். 10. படப்பை = தோட்டம்; மறி = ஆட்டுக்குட்டி. 11. அடகு = கீரை; முஞ்ஞை = முன்னை. 12. சொன்றி = சோறு. 14. பாடறிந்து ஒழுகும் பண்பு = பண்பாடு. 15. எவ்வம் = துன்பம். 17. நல்குரவு = வறுமை. 18. நனி = மிகவும்.

உரை: காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம்தரும் முரசோடு போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ, பெருநிலமாளும், ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை. முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம். மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெரும! நல்ல அறிவுடையவர்களின் வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக் கருதுவோம்.

சிறப்புக் குறிப்பு:

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (குறள் - 657)
என்ற குறளில், பழியை மேற்கொண்டு செய்த செயல்களால் பெற்ற செல்வத்தைவிட, சான்றோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது என்று திருவள்ளுவர் கூறுவது இப்பாடலில் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் கூறும் கருத்தோடு ஒத்திருப்பதைக் காண்க.

196. குறுமகள் உள்ளிச் செல்வல்

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைப் பாடிய புலவர்கள்: மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.

பாடலின் பின்னணி: ஆவூர் மூலங்கிழார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசு பெறுவதற்காகச் சென்றார். அவனைக் காண்பது அரிதாக இருந்தது. பலநாட்களுக்குப் பிறகு, அவனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனைப் புகழ்ந்து பாடினார். அவன், ஆவூர் மூலங்கிழாருக்குப் பரிசு கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். அவன் பரிசு கொடுப்பானா அல்லது கொடுக்க மறுத்துவிடுவானா என்று புலவருக்கு ஐயம் எழுந்தது. அதனால் மிகவும் கோபமடைந்த ஆவூர் மூலங் கிழார், இப்பாடலில் தன் கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
5 இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
10 நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
15 செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. ஒல்லுதல் = இயலுதல். 3. ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம், கண்ணோட்டம்; கேண்மை = நட்பு, இயல்பு. 7. வாயில் = வழி; அத்தை - அசை. 11. முனிதல் = வெறுத்தல்; மடி = சோம்பல். 12. குயிறல் = செய்தல்; நல்கூர்தல் = வறுமைப்படுதல். 14. முனிவு = வெறுப்பு.

உரை: தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியும் கண்ணோட்டமும் உடையவர்களின் இயல்பு. தம்மால் கொடுக்க முடியாததை கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததை கொடுக்காமல் மறுப்பதும் ஆகிய இரண்டும் இரவலரை விரைவில் வருத்துவதோடு மட்டுமல்லாமல் புரவலர்களின் புகழையும் குறைக்கும் வழியாகும். இப்பொழுது என்னிடம் நீ நடந்துகொண்ட விதமும் அதுவே. இது போன்ற செயல்களை இதுவரை நான் கண்டதில்லை; இப்பொழுதுதான் கண்டேன்.

உன் புதல்வர்கள் நோயில்லாமல் வாழ்வராக! நான் வெயிலின் வெம்மையை வெறுக்காமலும், பனியின் குளிரைக் கண்டு சோம்பாமலும், கல்போன்று தங்கியிருக்கும் என் வறுமையுடன், காற்றைத் தடுக்கும் சுவர்கள் மட்டுமே உள்ள என் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கே, நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய மெல்லியல்புகளுடைய என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!

சிறப்புக் குறிப்பு: இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் செயலால் ஆவூர் மூலங் கிழார் மிகவும் மனவருத்தமும் கோபமும் கொண்டார். அவன் தீய செயலால் அவன் புதல்வர்கள் நோயுடன் வருந்துவதையும் அல்லது அவன் வாழ்நாள்கள் குறைவதையும் அவர் விரும்பினாலும் அதை நேரிடையாகக் கூறாது எதிர்மறைக் குறிப்பாகக் கூறுகிறார். இவ்வாறு எதிர்மறைக் குறிப்பாக மொழிவதைத் தொல்காப்பியம்,

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட் புறத்ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல்காப்பியம் - செய்யுளியல் 177)

என்று கூறுகிறது. இப்பாடலில் ஆவூர் மூலங் கிழாரின் கூற்று குறிப்புமொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

”வளிமறை” என்பது ஆவூர் மூலங்கிழாரின் வீட்டில் வெயில், மழை போன்றவற்றிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான கூரை இல்லை என்பதைக் குறிக்கிறது.

“நாணலது” என்பது, மிகுந்த வறுமையின் காரணத்தால், ஆவூர் கிழாரின் மனைவி, அணிகலன்கள் எதுவும் இல்லாமல் நாணம் ஒன்றையே தன் அணிகலனாகக் கொண்டவள் என்பதைக் குறிக்கிறது.

195. நல்லாற்றுப் படும் நெறி

பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடலின் பின்னணி: சான்றோர்களாகவும் முதியோர்களாகவும் இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் நற்செயல்களுக்குப் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்துவதற்கான அறிவுரைகளை இபாடலில் நரிவெரூஉத்த்லையார் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
5 பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

அருஞ்சொற்பொருள்:
2. கயல் = கெண்டை மீன்; திரை = தோல் சுருக்கம்; கவுள் = கன்னம். 4. கணிச்சி = மழு; திறல் = வலிமை. 5. இரங்குவீர் = வருந்துவீர்; மாதோ - அசைச் சொல். 7. ஓம்பல் = தவிர்த்தல். 8. உவப்பது = விரும்புவது; படூஉம் = செலுத்தும். 9. ஆர் = அழகு, நிறைவு, ஆறு = வழி; ஆர் - அசைச் சொல்.

உரை: பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரைமுடியும், முதிர்ந்து சுருக்கம் விழுந்த கன்னங்களோடு, பயனற்ற முதுமையும் அடைந்த பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்ட பெரு வலிமையுடைய இயமன் வந்து உங்களைப் பற்றி இழுத்துச் செல்லும்பொழுது வருந்துவீர்கள். நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க. அதுதான் எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல நெறியில் செலுத்தும் வழியும் ஆகும்.

194. படைத்தோன் பண்பிலாளன் !

பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார். இவர் இயற்பெயர் நன்கணியார் என்று சிலர் கூறுவர். வேறு சிலர், இவர் கணிதத்துறையில் ஆற்றல் பெற்றதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுவர். மற்றும் சிலர், இவர் பக்குடுக்கை என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறுவர். பக்கு என்ற சொல்லுக்குப் பை என்று பொருள். ஆகவே, இவர் உடுத்திருந்த ஆடை பை போன்றதாக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
பாடலின் பின்னணி: வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த நன்கணியார் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
5 படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. நெய்தல் = இரங்கற் பறை (சாப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல், உதிர்த்தல்; மன்ற - அசைச் சொல். 6. அம்ம - அசைச் சொல்

உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.

193. ஒக்கல் வாழ்க்கை தட்கும்

பாடியவர்: ஓரேருழவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் ஒருபாடல் (பாடல் எண் 131) உள்ளது. அப்பாடலில், தன் வேலையை முடித்துவிட்டுத் தன் காதலியைக் காண்பதற்கு ஆவலுடன் காதலன் ஒருவன் தேரில் சென்றுகொண்டிருக்கும் காட்சியை இப்புலவர் அழகாகச் சித்திரிக்கிறார். அக்காதலன், தேர்ப்பாகனை நோக்கி, “ மழை பெய்து ஈரமுண்டாகிய நிலத்தை தன்னிடமுள்ள ஒரே ஏரால் உழும் உழவன் எப்படி விரைந்து உழ வேண்டும் என்று எண்ணுவானோ அதுபோல், என் நெஞ்சம் என் காதலியைக் காண விரைகிறது” என்று கூறுகிறான். “ஓரேர் உழவன் போல பெருவிதுப் பற்றன்றால் நோகோ யானே” என்று இப்புலவர் காதலனின் மனநிலையை ஓரே ஒருஏர் மட்டுமே வைத்துள்ள உழவனுக்கு அழகிய உவமையாகக் கூறியதால், இவர் ஓரேருழவர் என்ற பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: இப்பாடலின் ஆசிரியர், இல்வாழ்க்கை பல துன்பங்கள் உடையது என்பதை நன்கு உணர்ந்தவர். துன்பங்களால் வாடுங் காலத்து, இவர் உள்ளம் இல்வாழ்க்கையிலிருந்து தப்பியோட விழைந்தாலும், மனைவி, மக்கள் போன்ற சுற்றத்தாராடு கூடிய இல்வாழ்க்கை அதற்குத் தடையாக இருப்பதாகவும் இச்சிறிய பாடலில் நயம்படக் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே!

அருஞ்சொற்பொருள்:
1. அதள் = தோல்;எறிதல் = நீக்கல்; களர் = களர் நிலம். 2, புல்வாய் = மான். 3. உய்தல் = தப்பிப் பிழைத்தல்; மன் - அசைச் சொல். 4. ஒக்கல் = சுற்றம்; தட்கும் = தடுக்கும்.

உரை: தோலை உரித்துத் திருப்பிப் போட்டதுபோல் உள்ள வெண்மையான நெடிய நிலத்தில் வேட்டுவனிடமிருந்து தப்பியோடும் மான்போல் எங்கேயாவது தப்பியோடிப் பிழைத்துக்கொள்ளலாம் என்றால், அவ்வாறு தப்ப முடியாமல் சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை காலைத் தடுத்து நிறுத்துகிறது.

192. யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

பாடியவர்: கணியன் பூங்குன்றனார். கணிதத்தில் வல்லவராக இருந்ததால் இவர் கணியன் பூங்குன்றனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு உள்ளன. ஒன்று, புறநானூற்றில் காணப்படும் 192 ஆம் பாடல். மற்றொன்று நற்றிணையில் உள்ள 226 ஆம் பாடல். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பூங்குன்றம் என்ற ஊரினர். இவ்வூர் இப்பொழுது மகிபாலன் பட்டி என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் பூங்குன்றம் என்று அழைக்கப்பட்ட ஊர்தான் இப்பொழுது மகிபாலன் பட்டி என்ற குறிப்பு அவ்வூர்க் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: கணியன் பூங்குன்றனார் பரந்த மனப்பான்மை உடையவர்; இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதியவர். மக்கள் அனைவரையும் தமது உறவினராகக் கருதியவர். பரிசில் பெறுவதற்காக எந்த ஒரு மன்னரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடாமல், இவர் உலக இயல்பைப்பற்றிய தம் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
5 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
10 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

அருஞ்சொற்பொருள்:
1. கேளிர் = உறவினர். 3. நோதல் = வருந்துதல்; தணிதல் = குறைதல். 5. முனிவு = கோபம், வெறுப்பு. 7. தலைஇ = பெய்து; ஆனாது = அமையாது. 8. இரங்கல் = ஒலித்தல்; பொருதல் = அலைமோதல்; மல்லல் = மிகுதி, வளமை. 9. புணை = தெப்பம். 10. திறம் = கூறுபாடு; திறவோர் = பகுத்தறிவாளர். 11. காட்சி = அறிவு; மாட்சி = பெருமை.

உரை: எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்) அதைப் போன்றவை தான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று மகிழ்வதும் இல்லை. (உலகின் மேலுள்ள) வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை.

191. நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?

பாடியவர்: பிசிராந்தையர்
பாடலின் பின்னணி: தனக்கு வயதாகியும் நரையின்றி இளமையாக இருப்பதற்குரிய காரணங்களை இப்பாடலில் பிசிராந்தையார் தொகுத்துக் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
5 அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை,
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

அருஞ்சொற்பொருள்:
1. யாண்டு = ஆண்டு. 2. யாங்கு = எவ்வாறு, எங்ஙனம். 3. மாண்ட = மாட்சிமைப் படுதல். 4. இளையர் = வேலையாட்கள்.

உரை: “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.”

190. எலியும் புலியும்

பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் (190). இவன் சங்க காலத்துச் சோழர்களுள் காலத்தாற் பிற்பட்டவன் என்பது இவன் பெயரிலிருந்து தெரிய வருகிறது. புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: பிறருடைய முயற்சியால் வாழ்பவர்களின் நட்பைத் தவிர்த்து, நல்ல கொள்கை உடையவர்களின் நட்பைக்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் சோழன் நல்லுருத்திரன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
5 இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
10 புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.

அருஞ்சொற்பொருள்:
1. பதம் = பருவம்; சீறிடம் = சிறிய இடம். 2. வல்சி = உணவு; அளை = வளை; மல்கல் = நிறைதல். 4. உறுத்தல் = இருத்தல். 5. கேண்மை = நட்பு. 6. கேழல் = பன்றி. 7. அவண் = அவ்விடம், அவ்விதம்; வழிநாள் = மறுநாள். 8. விடர் = குகை; புலம்பு = தனிமை; வேட்டு = விரும்பி. 9. இரு = பெரிய; ஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர். 10. மெலிவு = தளர்ச்சி. 11. உரன் = வலிமை, அறிவு, ஊக்கம். 12. வைகல் = நாள்.

உரை: நெல் விளைந்த சமயத்தில், சிறிய இடத்தில், கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களை சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகி, நல்ல உள்ளம் இல்லாமல், தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்க. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்பு: தன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)

188. மக்களை இல்லோர்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி(188). இவன் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். புறநானூற்றில் இவன் இய்றிய பாடல் இது ஒன்றுதான். இவனைப் பிசிராந்தையார் பாடியுள்ளார் (184).
பாடலின் பின்னணி: மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை இப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி சிறப்பித்துப் பாடுகிறான்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
5 நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. படைப்பு = செல்வம்; படைத்தல் = பெற்றிருத்தல். 4. துழத்தல் = கலத்தல் (துழாவல்). 5. அடிசில் = சோறு; விதிர்த்தல் = சிதறல். பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

உரை: பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்பு: சிறுகுழந்தை நடக்கும் பொழுது, அது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்பட” என்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

187. ஆண்கள் உலகம்!

பாடியவர்: அவ்வையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் குறிப்பிடுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

அருஞ்சொற்பொருள்:
1.கொன்றோ - ஆக ஒன்றோ; அவல் = பள்ளம்; மிசை = மேடு

உரை: நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!

சிறப்புக் குறிப்பு: நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும். சங்காலத்தில் ஆண்களின் உழைப்பால் நிலம் செப்பனிடப்பட்டு வேளாண்மை நடைபெற்றது. ஆகவே, நிலத்தினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்ததாக இருந்தது. பாடுபட்டு உழைப்பவர்கள் இருந்தால் எல்லா நிலப்பகுதிகளுமே பயனளிப்பதாக இருக்கும். ஆகவே, இப்பாடலில், ”ஆடவர்” என்பதை “மக்கள்” என்றும் “நல்லவர்” என்பதை ”கடமை உணர்வோடு உழைப்பவர்” என்றும் பொதுவான முறையில் பெருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

186. வேந்தர்க்குக் கடனே!

பாடியவர்: மோசிகீரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 154-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: உடல் இயங்குவதற்கு உயிர் எவ்வளவு இன்றியமையாததோ அது போல் இவ்வுலகுக்கு மன்னன் இன்றையமையாதவன் என்பதை அறிந்து கொள்வது மன்னனின் கடமை என்று இப்பாடலில் மோசிகீரனார் வலியுறுத்துகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

அருஞ்சொற்பொருள்:
2. உயிர்த்து = உயிரை உடையது; மலர்தல் = விரிதல்
உரை: இவ்வுலகுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல. இவ்வுலகம் மன்னனையே உயிராக உடையது. அதனால், தான் இந்தப் பரந்த உலகுக்கு உயிர் (போன்றவன்) என்பதை அறிந்து கொள்வது (மிகுந்த வேல்களுடன் கூடிய படைகளையுடைய) மன்னனுக்கு கடமையாகும்.

சிறப்புக் குறிப்பு: ஒருநாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும், சிறப்பாக ஆட்சி புரியும் மன்னன் இல்லாவிட்டால், அந்த வளங்களால் பயனொன்றுமில்லை என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு. (குறள் - 740)
என்ற குறளில் கூறுகிறார். மோசிகீரனாரின் கருத்தும் திருவள்ளுவர் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கவை.

Wednesday, September 29, 2010

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் (185). இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபினன். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன். இவன் சிறந்த அரசனாகவும், கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான். இவன் நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
5 பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

அருஞ்சொற்பொருள்:
1. கால் = வண்டிச் சக்கரம்; பார் = வண்டியின் அடிமரம் (அச்சு); ஞாலம் = உலகம். 2. சாகாடு = வண்டி; உகைத்தல் = செலுத்துதல்; மாண் = மாட்சிமை. 4. உய்த்தல் = செலுத்தல்; தேற்றான் = தெளியான்; வைகலும் = நாளும். 5. அள்ளல் = சேறு; கூழ் அள்ளல் = கலங்கிய சேறு. 6. தலைத்தலை = மேன்மேல்.
உரை: சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

184. யானை புக்க புலம்!

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஒருஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர், இவர் காலத்து பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுள்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி (184). இவன் அறிவிற் சிறந்தவனாக விளங்கியதால் அறிவுடை நம்பி என்று அழைக்கப்பட்டான். இவன் புறநானூற்றில் 188 - ஆம் செய்யுளை இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

அருஞ்சொற்பொருள்:
1. காய் நெல் = விளைந்த நெல். 2. மா = ஒருநில அளவு (ஒருஏகரில் மூன்றில் ஒருபங்கு). 3. செறு = வயல்; தமித்து = தனித்து; புக்கு = புகுந்து. 6. யாத்து = சேர்த்து; நந்தும் = தழைக்கும். 8. வரிசை = முறைமை; கல் - ஒலிக்குறிப்பு. 9. பரிவு = அன்பு; தப = கெட; பிண்டம் = வரி; நச்சின் = விரும்பினால்.

கொண்டு கூட்டு: கவளங் கொளினே பன்னாட்கு ஆகும்; தமித்துப்புக்கு உணினே கால்பெரிது கெடுக்கும்; வேந்தன் நெறியறிந்து கொளினே நாடு பெரிது நந்தும்; பரிவுதப
நச்சின் உலகமும் கெடுமே எனக் கூட்டுக.

உரை: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யனை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

183. கற்றல் நன்றே!

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (183). பாண்டிய மன்னர் பரம்பரையில் நெடுஞ்செழியன் என்ற பெயருடைவர் பலர் இருந்தனர். அவற்றுள் இவனும் ஒருவன். நெடுஞ்செழியன் என்ற பெயருடைய மற்றவர்களிடத்திலிருந்து இவனை வேறுபடுத்துவதற்காக இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான். சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கு கொலைத் தண்டனை விதித்த நெடுஞ்செழியன் வேறு, இப்பாடலை இயற்றியவன் வேறு என்பது அறிஞர் கருத்து.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
5 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
10 மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

அருஞ்சொற்பொருள்:
1. உழி = இடம்; உற்றுழி = உற்ற இடத்து; உறு = மிக்க. 2. பிற்றை = பிறகு; பிற்றை நிலை = வழிபாட்டு நிலை; முனியாது = வெறுப்பில்லாமல்

கொண்டு கூட்டு: கற்றல் நன்றே; சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்; அரசும் செல்லும்; மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே எனக் கூட்டுக.

உரை: தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

சிறப்புக் குறிப்பு: வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் - 395)

182. உண்டாலம்ம இவ்வுலகம்!

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182). இவன் பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்தவன். சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள், தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம், சாவகம், ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.

இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
5 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

அருஞ்சொற்பொருள்:
3. தமியர் = தனித்தவர்; முனிதல் = வெறுத்தல். 4. துஞ்சல் = சோம்பல். 6. அயர்வு = சோர்வு. 7. மாட்சி = பெருமை. 8. நோன்மை = வலிமை; தாள் = முயற்சி.

கொண்டு கூட்டு: இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே உண்டு எனக் கூட்டுக.

உரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு:
திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்படிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்மபல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துகளை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கபட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (குறள் - 428)
பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் - 996)
பொருள்: பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் - 212)
பொருள்: தான் முயற்சி செய்து ஈட்டிய செல்வமனைத்தும் தகுதியுடையார்க்குக் கொடுத்து உதவு செய்வதற்பொருட்டேயாம்.

181. இன்னே சென்மதி!

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் ( 181, 265). இவர் சோழ நாட்டில் இருந்த முகையலூர் என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் ஒருபாடலில் சிறிய, கரிய யானைக் கன்றை “ சிறுகருந் தும்பி”என்று நயம்படக் குறிப்பிட்டதால், இவர் சிறுகருந்தும்பியார் என்று அழைக்கப்பட்டதாக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன் (181). இவன் வல்லார் என்னும் ஊருக்குத் தலைவனாக விளங்கியவன். இவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்த குறுநில மன்னன்.
பாடலின் பின்னணி: வறுமையில் வாடும் பாணன் ஒருவனை சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
5 புலாஅ அம்பில் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றுஅவன்
பகைப்புலம் படரா அளவைநின்
10 பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

அருஞ்சொற்பொருள்:
1. மன்றம் = ஊர் நடுவில் உள்ள பொதுவிடம்; விளவு = விளாமரம்; வெள்ளில் = விளாம்பழம். 2. எயிற்றி = வேடர் குலப் பெண். 3. இரு = கரிய; பிடி = பெண் யானை. 4. குறும்பு = அரண்; உடுத்த = சூழ்ந்த; இருக்கை = இருப்பிடம். 5. கடி = காவல்; மிளை = காடு. 6. வலார் = ஒருஊரின் பெயர்(வல்லார் என்பதின் திரிபு); வாய் = சிறந்த. 7. கடும்பு = சுற்றம். 8. இன்னே = இப்பொழுதே.

கொண்டு கூட்டு: காட்டிப் பரிசு கொள்ளுதற்கு இன்னே சென்மதி எனக் கூட்டுக.

உரை: ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள விளாமரத்திலிருந்த விளாம்பழம் அங்கிருந்த வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், கரிய கண்ணையுடைய மறக்குலப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகன் அதை எடுப்பதற்குச் செல்வான். காட்டில் வாழும் கரிய பெண்யானையின் கன்றும் அவனோடு அந்தப் பழத்தை எடுப்பதற்குச் செல்லும். இத்தகைய வளமான வல்லார் என்னும் ஊர், புலால் நாற்றமுள்ள அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய பாதுகாப்பான காவற் காடுகளையுமுடைய, பெரிய அரண்கள் சூழ்ந்த வலிய நிலத்தின் இருப்பிடம். அங்கே, சிறந்த (குறி தவறாத) வாளையுடைய பண்ணன் வாழ்கிறான். பசியுடன் வாடும் வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இப்பொழுதே சென்று, அவன் போருக்குப் போவதற்கு முன் உன் வறுமையைக் காட்டி, உங்கள் பசிக்குப் பகையாகிய (பசியைப் போக்கும்) பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

Thursday, September 16, 2010

180. நீயும் வம்மோ! முதுவாய் இரவல !

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் (180). இவன் பெயர் ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ஈர்ந்தூர் என்பது இக்காலத்தில் கொங்கு நாட்டில் ஈஞ்ஞூர் என்று அழைக்கப்படுகிறது. இவன் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தவன்.
பாடலின் பின்னணி: இப்பாடல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் பசியால் வாடும் பாணன் ஒருவனை ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: பாணாற்றுப் படையும் ஆகும்.
வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
பாணாற்றுப் படை: பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
5 மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல!
10 யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.நிரப்பு = வறுமை (இன்மை). 3. இறை = அரசன்; விழுமம் = துன்பம். 5. மயங்கி = கலந்து. 6. வடு = குற்றம்; வடிவு = அழகு. 11. மருங்குல் = வயிறு.

கொண்டு கூட்டு: பாண்பசிப் பகைஞன் ஈர்ந்தை யோன்; அவன் தன்னை யாம் இரக்கும் காலைத் தான் எம் மருங்குல் காட்டி நெடுவேல் வடித்திசின் எனக் கருங்கைக் கொல்லனை இரக்கும்; முதுவாய் இரவல, இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ எனக் கூட்டுக.

உரை: முதிய இரவலனே! ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் இரப்பவர்களின் வறுமையைத் தீர்க்கும் அளவிற்குக் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்; ஆனாலும், இல்லையென்று மறுத்துக் கூறும் சிறுமை இல்லாதவன். அவன், தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தான் தாங்கிக்கொண்டு, போர்க்களத்தில் படைக்கருவிகளால் உண்டாகும் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டவன். மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல் உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவன் குற்றமற்ற அழகிய உடலுடையவன்; இரவலரை எதிர்பார்த்திருப்பவன்; ஈர்ந்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவன்; பாணர்களின் பசிக்குப் பகைவன். உன்னுடைய வறுமை தீர வேண்டுமானால், நீ என்னோடு வருவாயாக. நாம் இரக்கும் பொழுது, நம்முடைய பசியால் வாடும் வயிற்றைத் தன் ஊரில் உள்ள வலிய கைகளுடைய கொல்லனிடம் காட்டிச் சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலை வடிப்பாயாக என்று கூறுவான்.

சிறப்புக் குறிப்பு: கொல்லனிடம் வேல் வடிப்பாயாக என்று கூறுவது, பகைவர்களோடு போருக்குச் சென்று, அவர்களை வென்று, பொருள் கொண்டுவந்து இரப்போர்க்கு அளிப்பதற்காக என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

179. பருந்தின் பசி தீர்ப்பான்!

பாடியவர்: வடநெடுந்தத்தனார்(179). இவர் வடம நெடுந்தத்தனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியதால் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன் (179). பாண்டிய நாட்டில் இருந்த நாலூர் என்னும் ஊரின் பெயர் மருவி நாலை என்று அழைக்கப்பட்டது. அவ்வூர்த் தலைவனான நாகன் நாலை கிழவன் நாகன் என்று அழைக்கப்பட்டான். இவன் பாண்டிய மன்னனுக்குத் துணையாகப் போர் புரிந்தவன்.
பாடலின் பின்னணி: நாலை கிழாவன் நாகனைப் பற்றிப் பலரும் கூறிய செய்திகளை இப்பாடலில் கூறி அவனை வட நெடுந்தத்தனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
5 திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்
வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
10 தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே.

அருஞ்சொற்பொருள்:
1.ஞாலம் = உலகம்; மீமிசை = மேல்; வள்ளியோர் = கொடையாளர். 2. ஏலல் = பிச்சையிடல்; மண்டை = இரப்போர் கலம். 3. மலைத்தல் = போரிடுதல். 4. விசி = வார், கட்டு; பிணி = கட்டு. 5. திரு = திருமகள்; வீழ்தல் = விரும்புதல்; மறவன் = வீரன். 7. வினை = தந்திரம். 10. தோலா = தளராத.

உரை: ”உலகில் வாழ்ந்த வள்ளல்கள் எல்லாம் இறந்தனர்; பிறரிடம் எதுவும் பெற முடியாத காரணத்தால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் என் இரவல் கலத்தை நிரப்புபவர் யார்?”, என்று கேட்டேன். ”பாண்டியன், தனது பகைவர்களின் வலிமையாகக் கட்டப்பட்ட முரசோடு அவர்களது நாட்டையும் வென்று, திருமகள் விரும்பும், அழகிய அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய பாண்டியனின் வீரனாகிய நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படையையும், அவன் அறிவுரை கேட்ட பொழுது அறிவுரைகளையும் வழங்குபவன். அவன், பாண்டியன் வேண்டுவன எல்லாம் வேண்டியவாறு கொடுத்து உதவுபவன். நுகத்தடியில் பூட்டப்பட்ட வண்டியை நேராக இழுத்துச் செல்லும் தளராத காளை போன்ற ஆண்மையும், சளைக்காத உள்ளமும், நல்ல புகழும் உடைய நாலை கிழவன் நாகன் பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன்” என்று பலரும் கூறினர்.

சிறப்புக் குறிப்பு: பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன் என்பது அவன் போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல் உடையவன் என்பதைக் குறிக்கிறது.

178. இன்சாயலன் ஏமமாவான்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளை பாடல் 166-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் (179). இவன் பாண்டிய மன்னனுக்குக் கீழ் பணியாற்றிய குறுநிலத் தலைவன். கீரன் என்பவனின் மகனாதலின் கீரஞ்சாத்தன் என்று அழைக்கப்பட்டான். இவன் பெயர் பாண்டிக் குதிரை சாக்கையன் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பாடலின் பின்னணி: பாண்டியன் கீரஞ்சாத்தனை ஆவூர் மூலங்கிழார் காணச் சென்றார். அவன் சான்றோர்பால் காட்டிய அன்பு அவரை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில், பாண்டியன் கீரஞ்சாத்தன் சான்றோரிடத்துக் காட்டும் அன்பையும் அவன் போரில் காட்டும் வீரத்தையும் ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
5 உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
10 அஞ்சி நீங்கும் காலை
ஏம மாகத் தான்முந் துறுமே.

அருஞ்சொற்பொருள்:
1.கந்து = யானை கட்டும் தூண்; முனிதல் = வெறுத்தல்; உயிர்த்தல் = மூச்சு விடுதல்; பணை = குதிரை கட்டுமிடம். 2. காலியல் = கால்+இயல் = காற்றின் இயல்பு; புரவி = குதிரை; ஆலும் = ஒலிக்கும். 4. சூளுற்று = உறுதி மொழி கூறி. 6. ஈண்டு = இவ்விடத்தில். 7. ஞாட்பு = போர். 9. நெடுமொழி = வஞ்சினம்; சிறுபேராளர் = வீரம் மேம்பட்ட வார்த்தைகளைப் போரின்கண் மறந்த ஆண்மையற்றவர். 11. ஏமம் = பாதுகாப்பு.

உரை: தூணில் கட்டப்பட்ட யானைகள் வெறுப்போடு பெருமூச்சு விடுகின்றன; அதுமட்டுமல்லாமல், காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள், கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரவாரிக்கின்றன; அவ்விடத்தில் மணல் மிகுந்த முற்றத்தில் நுழைந்த சான்றோர்கள் தாம் உண்ணமாட்டோம் என்று சொன்னாலும் அவர்களை வற்புறுத்தி உண்ணுமாறு பெரும்புகழ் வாய்ந்த பாண்டியன் கீரஞ்சாத்தன் வேண்டிக்கொள்வான். அவன் சான்றோர்களிடத்து மிகவும் இனிமையாகப் பழகுபவன். ஆனால், அச்சம் தரும் படைக்கலங்களைப் பகைவர்கள் எறியும் போர்க்களத்தில், பாண்டியன் கீரஞ்சாத்தனுடைய வீரர்கள், கள்ளின் மயக்கத்தால், ஊர் மக்களிடம் அவர்கள் கூறிய வீர வஞ்சின மொழிகளை மறந்து வீரமற்றவர்களாகப் புறங்காட்டி ஓடினால், அவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக முன் வந்து நிற்பான்.

177. யானையும் பனங்குடையும்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி (177). இவன் மல்லி என்னும் ஊர்க்குத் தலைவன். அவ்வூர் சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) அருகில் இருந்த ஒரு ஊர். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் காலத்தவன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம் ஆவூர் மூலங்கிழார், மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் கண்டார். அக்காட்சிகளைக் கண்ட ஆவூர் மூலங்கிழார், காரியாதி சோற்றையும் கள்ளையும் பலருக்கும் அளிப்பது மற்ற வேந்தர்கள் களிறுகளைப் பரிசாக அளிப்பதைவிட மிகச் சிறந்தது என்று இப்பாடலில் காரியாதியின் விருந்தோம்பலையும் வள்ளல் தன்மையையும் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமர்எனின் யாவரும் புகுப; அமர்எனின்
5 திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பில் ததும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
10 மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
15 வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

அருஞ்சொற்பொருள்:
1.நகர் = அரண்மனை. 2. வெளிறு = நிறக்கேடு; திரங்குதல் = உலர்தல். 5. புழை = சிறு வாயில். 6. நணிநணி = பக்கம் பக்கமாக. 7. குறும்பு = அரணிருக்கை; வைகுதல் = தங்குதல். 9. களா = ஒரு வகைப் பழம்; துடரி = ஒரு வகைப் பழம்; முனை = வெறுப்பு. 10. மட்டு =எல்லை; அறல் =அரித்தோடுகை ; எக்கர் = மணற்குன்று. 12. பிணக்கு = நெருக்கம்; அரில் = மூங்கில். 13. எயினர் = வேடுவர்; எய்ம்மான் = முள்ளம்பன்றி; எறிதல் = அறுத்தல். 14. பைஞ்ஞிணம் = வளமான தசை; அமலை = திரளை (உருண்டை). 15. சொரிதல் = பொழிதல், உதிர்தல். 16. பனங்குடை = பனை இலைகளால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற பாத்திரம் (பனங்கூடை); மிசையும் = உண்ணும்; சாலுதல் = ஒப்பாதல்.

கொண்டு கூட்டு: எந்திரப் புழையையுடைய நணிநணி இருந்த குறும்பில் கள்மாறு நீட்டத் ததும்ப உண்டு வைகிப் புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின் எக்கர் ஏறி நாவற்கனி கொய்து உண்ணும் எனக் கூட்டுக.

உரை: மிளிரும் வாளையுடைய வேந்தர்கள் வாழும் ஒளியுடன் விளங்கும் பெரிய அரண்மனைகளுக்குச் சென்று, கண் ஒளி மழுங்குமாறு பலநாட்கள் வாடிக் காத்திருந்து பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகளைப் பரிசாகப் பெறலாம். அது வேந்தர்களிடம் பரிசு பெறும் முறை. ஆனால் மல்லி கிழான் காரியாதியிடம் பரிசு பெறுவாது அவ்வாறல்ல.

மல்லி கிழான் காரியாதியின் அரண்மனைக்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால், போர் எனில், அந்த அரண்மனையில், திங்களின் கதிர்கள்கூட நுழைய முடியாதவாறு பல பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கே, கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுக்கும் வகையில் நெருங்கிய பாதுகாப்பான பல இடங்கள் உள்ளன. அங்கு, கள்ளை நிரம்ப உண்டு, பிறகு, புளிச்சுவையை விரும்பிய, சிவந்த கண்களை உடைய ஆடவர் இனிய புளிப்புடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பர். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால், காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பர். பெரும்புகழ் வாய்ந்த காரியாதியின் மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில், வேடர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுமையான தசைத்துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பர். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் அரண்மனையில், பொழுது புலரும் விடியற்காலை நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை ஒப்பாகாது.