Tuesday, March 23, 2010

155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

பாடியவர்: மோசி கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 154-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். இவனைப் பற்றிய செய்தைகளைப் பாடல் 154-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: கொண்கானம் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசி கீரனார் ஒரு பாணனை கொண்கானம் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்று படை. பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.

வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யார்என் இடும்பை தீர்க்கஎனக்
கிளக்கும் பாண கேள்இனி நயத்தின்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
5 ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே.

அருஞ்சொற்பொருள்:
1.வணர் = வளைவு; கோடு = யாழ்த் தண்டு; புடை = பக்கம்; தழீஇ = தழுவிய. 3. கிளத்தல் = கூறுதல். 4. பசலை = பொன்னிறமாதல்; வான் = அழகு. 5. ஏர்தல் = எழுதல். 6. இலம் = வறுமை; மண்டை = இரப்போர் பாத்திரம். 8. அகலம் = மார்பு.

உரை: வளைந்த தண்டையுடைய சிறிய யாழைத் உனது வாடிய உடலின் ஒரு பக்கத்தில் தழுவிக்கொண்டு, உன்னுடைய துன்பத்தை உணர்ந்து அதைத் தீர்ப்பவர் யார் என்று கூறும் பாணனே! நான் சொல்வதை நீ நன்றாகக் கேட்பாயாக. பாழூரில் நெருஞ்சிச் செடியின் பொன்னிறமான அழகிய பூ எழுகின்ற கதிரவனை எதிர் நோக்கியிருப்பது போல், வறுமையுற்ற புலவர்களின் கலங்கள் (பாத்திரங்கள்) புகழ் விளங்கும் பெரும் கொண்கானம் கிழானது மார்பை நோக்கித் திறந்திருக்கும்.

154. இரத்தல் அரிது! பாடல் எளிது!

பாடியவர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும் கீரர் குடியினராக இருந்ததாலும் மோசி கீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அதைக் கண்ட சேரமன்னன், இவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் இவருக்குக் கவரி வீசிய செய்தியை புறநானூற்றுப் பாடல் 50-இல் காணலாம். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.

இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும், அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84) நற்றிணையில் ஒரு செய்யுளும் ( 342) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான் (154, 155, 156). கொண்கான நாடு என்பது பிற்காலத்தில் கொங்கண நாடு என்று மருவியது. இது சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்நாட்டில், கொங்கு வேளாளர் குடியில் பிறந்து சிறந்த வள்ளலாக விளங்கியவன் கொண்கானம் கிழான். இந்நாடு பொன்வளம் மிகுந்து இருந்ததால், “ பொன்படு கொண்கானம்” என்று நற்றிணையில் (நற்றிணை - 391)
பாடப்பட்டுள்ளது
பாடலின் பின்னணி: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற பெருமன்னர்களைப் பாடி, புகழும் பரிசிலும் பெற்ற புலவர் மோசி கீரனார் தன்னிடம் வந்து தன் ஈகையைப் புகழ்வதைக் கண்டு கொண்கானம் கிழான் வியந்தான். மோசி கீரனார் தகுதிக்கேற்ப தான் அவருக்கு என்ன பரிசில் அளிக்க முடியும் என்று எண்ணினான். அவன் எண்ணியதை உணர்ந்த மோசி கீரனார், “பரந்த கடலருகே சென்றாலும் நீர் வேட்கை கொண்டவர்கள் சிறிய ஊற்றை நாடிச் செல்வர். அதுபோல், புலவர்களுக்கு வேந்தர்கள் பரிசுகள் அளித்தாலும், அவர்கள் வள்ளல்களை நாடிச் செல்வது இயல்பு. ஆகவேதான், நான் உன்னை நினைத்து வந்தேன்; எனக்கு ஈயென்று கேட்பது கடினமான செயல். ஆனால், உன் வீரத்தையும் உன் கொண்கான நாட்டையும் பாடுதல் எளிது. மற்றும், பெற்றது சிறிதே ஆயினும் அதை ஊதியமாகக் கருதுபவன் நான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
5 வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே; நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
10 எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே.

அருஞ்சொற்பொருள்:
4. உழை = பக்கம், இடம்; புரை = குற்றம்; தபுதல் = கெடுதல்; புரைதபு = குற்றமற்ற. 10. அறுவை = உடை, ஆடை. 11. தூ = தூய; துவன்றல் = பொலிவு; கடுப்ப = ஒப்ப; மீமிசை = மேலுக்குமேல் (உச்சி).

உரை: அலைகள் மோதும் கடற்கரை அருகில் சென்றாலும், தெரிந்தவர்களைக் கண்டால் தாகத்திற்கு நீர் வேண்டும் என்று கேட்பது உலக மக்களின் இயல்பு. அது போல், அரசரே பக்கத்தில் இருந்தாலும் குற்றமற்ற வள்ளல்களை நினைத்துப் புலவர் செல்வர். அதனால், நானும் பெற்றதைப் பயனுள்ளாதாகக்கொண்டு, பெற்ற பொருள் சிறிதாயினும், “இவன் அளித்தது என்ன?” என்று இகழ மாட்டேன். வறுமை உற்றதால் உன்னை நினைத்து வந்தேன். எனக்கு , “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். நீ பரிசில் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போரில் உன்னை நோக்கி எறியப்பட்ட படைக்கலங்களுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத உன் ஆண்மையையும், தூய ஆடையை விரித்தது போன்ற பொலிவுடன் உச்சியிலிருந்து விழும் குளிர்ந்த அருவியையுடைய கொண்கான நாட்டையும் பாடுவது எனக்கு எளிது.

153. கூத்தச் சுற்றத்தினர்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.

பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. இவனை பற்றிய குறிப்புகளைப் பாடல் 152-இல் காணாலாம்
பாடலின் பின்னணி: வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம், தமக்குரிய ஆடலையும் பாடலையும் செய்யாது இருந்தனர். இதைக் கண்டவர்கள், “தங்கள் சுற்றத்தார் ஏன் ஆடலையும் பாடலையும் செய்யாது இருக்கின்றனர்?” என்று கேட்டனர். அதற்கு, வன்பரணர், “என் சுற்றத்தாரோடு நான் வல்வில் ஓரியைக் காணச் சென்றேன். எங்களுக்குப் பொன்னாலான மாலையையும் பிற அணிகலன்களையும் ஓரி அளித்தான். அவனிடமிருந்து நாங்கள் பெற்ற பெரு வளத்தால் என் சுற்றத்தார் பசி அறியாது இருக்கின்றனர். ஆகவேதான் அவர்கள் ஆடலையும் பாடலையும் மறந்தனர்.“ என்று இப்பாட்டில் குறிப்பிடுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்புஅமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஓரி
5 மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
10 பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே?

அருஞ்சொற்பொருள்:
3. சூர்ப்பு = கடகம். 5. நன்று = பெருமை, சிறப்பு. 6. கண்ணுள் = கூத்து; கடும்பு = சுற்றம். 7. மிடைதல் = கலத்தல். 8. கண்ணி = தலையில் அணியும் மாலை. 10. ஆகன்மாறு = ஆகையால்; விசி = கட்டு. 11. இயம் = இசைக் கருவிகள்; கறங்கல் = ஒலித்தல். 12. ஒல்லல் = இயலல்.

உரை: மேகங்கள் சூழ்ந்த கொல்லி மலைக்குத் தலைவனாகிய ஓரி நாள்தோறும் நன்கு செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த யானைகளை இரப்போர்க்கு அளிப்பவன். அவன் ஒளிவிடும் பசும்பொன்னாலான வளைந்த கடகம் அணிந்த முன்கயையுடையவன். கொல்லும் போர்த்திறமையில் குறையாத ஆதன் ஓரியின் வளமை மிகுந்த கொடையைக் காண்பதற்கு என் கூத்தர்களாகிய சுற்றத்தார் சென்றனர். அவர்கள் பொன்னாலாகிய (குளிர்ந்த நீரில் பூக்காத) குவளை மலர்களும் மணிகளும் கலந்து வெள்ளியால் ஆகிய நாரால் கட்டப்பட்ட மாலையையும் பிற அணிகலங்களையும் யானைகளையும் பரிசாகப் பெற்றனர். அவர்கள், தாம் பெற்ற கொடையால் தம் பசி நீங்கினார். ஆகையால், அவர்கள் வாரால் பிணித்துக் கட்டப்பட்ட பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க ஆடுவதை விட்டனர்; பாடுவதையும் மறந்தனர்.

152. பெயர் கேட்க நாணினன்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. இவன் கடையேழு வள்ளல்களில் (அதியமான், ஆய் அண்டிரன், பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன்) ஒருவன். இவனைக் ”கொல்லியாண்ட வல்வில் ஓரி” என்றும் ”ஆதன் ஓரி” என்றும் கூறுவர். ஓரி வாழ்ந்த காலத்து சேர நாட்டை ஆட்சி செய்த சேரமன்னன் கொல்லி மலையைத் தான் அடைய வேண்டும் என்று திட்டமிட்டு, முள்ளூர் மன்னன் காரிக்கும் ஓரிக்கும் பகைமையை வளர்த்தான். காரி ஓரியோடு போரிட்டால் சேரன் அவனுக்கு உறுதுணையாகப் போர் புரிவதாகவும், காரி போரில் வென்றால் கொல்லிமலையைத் தனக்கு அளிக்க வேண்டுமென்றும் சேரன் காரியோடு ஒப்பந்தம் செய்துகொண்டான். பகைமை காரணமாக காரிக்கும் ஓரிக்கும் இடையே போர் மூண்டது. போரில், சேரன் காரிக்குத் துணையாக ஓரியை எதிர்த்துப் போர் புரிந்தான். போரில் ஓரி காரியிடம் தோல்வியுற்று இறந்தான். காரி, தான் சேரனோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கொல்லிமலையைச் சேரனுக்கு அளித்தான்.

பாடலின் பின்னணி: வன்பரணர் கொல்லிமலையைச் சார்ந்த காட்டில் தன் சுற்றத்தாரோடு சென்று கொண்டிருக்கையில், வேட்டுவன் ஒருவன் வேட்டையாடியதைக் கண்டார். அவ்வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவனின் ஆற்றலைக் கண்டு வன்பரணர் வியந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்தால் வேட்டுவன் போல் தோன்றவில்லை. அவன் ஓரு மன்னனைப் போல் இருந்தான். வன் பரணரும் அவர் சுற்றத்தாரும் பல இசைக்கருவிகளோடு பல பாடல்களைப் பாடி ஒரியைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உண்பதற்கு ஊனும் மதுவும் அளித்து கொல்லிமலையில் கிடைக்கும் பொன்னையும் கொடுத்து அவர்களை ஓரி சிறப்பித்தான். வன்பரணர் இச்செய்தியை இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
5 ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றுஇவன்
விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்:
10 ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல் விறலி ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
15 கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
20 மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி மற்றுயாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்குஓர்
வேட்டுவர் இல்லை நின்ஒப் போர்என
25 வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
ஆன்உருக்கு அன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம்எனச்
30 சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச்சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

அருஞ்சொற்பொருள்:
1.வேழம் = யானை; விழு = சிறந்த; தொடை = அம்பின் பின் தோகை, அம்பு; பகழி = அம்பு. 2. பேழ் = பெரிய; உழுவை = புலி; பெரும்பிறிது = இறப்பு; உறீஇ = உறுவித்து. 3, புழல் = துளையுள்ளது; புகர் = புள்ளி; கலை = ஆண்மான். 4. கேழற்பன்றி = ஆண்பன்றி. 5.ஆழல் = ஆழமுடைத்தாதல்; செற்றுதல் = அழுந்துதல். 6. வேட்டம் = வேட்டை; வலம் = வெற்றி. திளைத்தல் = அழுந்துதல், பொருதல், மகிழதல், விடாதுபயிலல். 9. வெறுக்கை = செல்வம். 10. ஆரம் = மாலை, சந்தனம். 13. வண்ணம் = இசையுடன் கூடிய பாட்டு. 14. மண் = முழவுக்குத் தடவப்ப்டும் மார்ச்சனை (ஒரு வகைக் கருஞ்சாந்து); நிறுத்துதல் = நிலைநாட்டுதல். 15. தூம்பு = ஒரு இசைக் கருவி. 16. எல்லரி, ஆகுளி = இசைக் கருவிகள். 17. பதலை = ஒரு இசைக் கருவி. பை = இளமை (மென்மை). 18. மதலை = பற்று; மா = கரிய; வலம் = இடம்; தமின் = தம்மின் = கொணர்மின். 26. புழுக்கல் = அவித்தல்; 27. ஆன் உருக்கு = நெய்; வேரி = கள். 28. தா = குற்றம். 29. குவை = கூட்டம், திரட்சி. 30. சுரம் = வழி; விடர் = குகை, மலைப் பிளப்பு. 32. வெய்யோய் = விரும்புபவன்.

உரை: சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் குத்தி நின்றது. வலிய வில்லோடு இவ்வாறு வேட்டையாடியவன் அம்பு எய்வதில் மிகவும் புகழுடையவனாகவும் வல்லவனாகவும் இருக்கின்றான். அவன் யாரோ? அவனைப் பார்த்தால் கொலைத்தொழில் புரிபவன் போல் தோன்றவில்லை. நல்ல செல்வந்தன் போல் உள்ளான்; முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ? அல்லது இவன் ஓரி அல்லனோ?

விறலியரே! நான் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடப் போகிறேன். நீங்கள், முரசுகளில் மார்ச்சனையைப் பூசுங்கள்; யாழை மீட்டுங்கள்; யானையின் தும்பிக்கை போன்ற துளையுள்ள பெருவங்கியத்தை இசையுங்கள்; எல்லரியை வாசியுங்கள்; சிறுபறையை அறையுங்கள்; ஒருதலைப் பதலையைக் கொட்டுங்கள்; இசைப்புலமையை உணர்த்தும் சிறிய கரிய கோலை என் கையில் கொடுங்கள் என்று சொல்லி வேட்டுவனை அணுகி, அவன் அரசன் போலிருப்பதால் இருபத்தொரு பாடல் துறையும் முறையுடன் பாடி முடித்து, ”கோ” என்று கூறினேன். ”கோ” என்று கூறியதைக் கேட்டவுடன் அது தன்னைக் குறிப்பதால் அவன் நாணினான். பின்னர், “நங்கள் நாடு நாடாகச் சென்று வருகிறோம். உன்னைப் போன்ற வேட்டுவன் யாரும் இல்லை” என்று நாங்கள் கூற விரும்பியதைக் கூறினோம். அவன் என்னை மேற்கொண்டு பேசவிடாமல், தான் வேட்டையாடிக் கொன்ற மானின் தசையை வேகவைத்து, அதோடு நெய் போன்ற மதுவையும் கொடுத்தான். தன் மலையாகிய கொல்லி மலையில் பிறந்த குற்றமற்ற நல்ல பொன்னையும் பல மணிகளையும் கலந்து “இதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தான். குகைகளையும் சிகரங்களையும் உடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன் வரையாத ஈகையுடையவன்; வெற்றியை விரும்புபவன்.

151. அடைத்த கதவினை!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார் (151, 164, 165, 205, 209, 294). இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர். பெருந்தலை என்ற பெயரில் தமிழ் நாட்டில் பல ஊர்கள் இருப்பதால் இவர் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் இவர் இயற்றிய செய்யுள் ஒன்றில் (224) இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மனகனார் பெருந்தலைச் சாத்தனார் என்று குறிப்பிடப்படுவதால் இவரது பெற்றோர்கள் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தலை பெரிதாக இருந்ததால் இவர் பெருந்தலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுவர்.

வறுமையில் வாடிய புலவர்களில் பெருந்தலைச் சாத்தனாரும் ஒருவர். கடையேழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒரு வள்ளல் இருந்தான். அவன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன், குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு , அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால், அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செசெய்தார்.

இவர் புறநானூற்றில் ஆறு செய்யுட்களும் அகநானூற்றில் இரண்டு செய்ய்ட்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) இயற்றியவர்.

பாடப்பட்டோன்: இளவிச்சிக் கோ (151). இவ்வேந்தனின் இயற்பெயர் தெரியவில்லை. விச்சி என்பது ஒரு மலை. அந்த மலையை சுற்றியிருந்த இடத்தை ஆண்ட அரசனை விச்சிக் கோ என்று கூறுவர். அந்நாட்டு இளவரசன் இளவிச்சிக் கோ என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: கண்டீராக் கோப்பெரு நள்ளியின் இளவல் இளங்கண்டீராக் கோ என்று அழைக்கப்பட்டான். இளங்கண்டீராக் கோவும் இளவிச்சிக் கோவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு சமயம், அவர்கள் இருவரும் கூடியிருந்த இடத்திற்குப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீராக் கோவைக் காண வந்தார். இளங்கண்டீராக் கோவைக் கண்டவுடன் அவனைத் தழுவினார். ஆனால், அவர் இளவிச்சிக் கோவைத் தழுவவில்லை. அதைக் கண்டு கலக்கமுற்ற இளவிச்சிக்கோ, பெருந்தலைச் சாத்தனார் ஏன் தன்னைத் தழுவவில்லை என்று கேட்டான். அவனுடைய கேள்விக்குப் பெருந்தலைச் சாத்தனார், “அரசே, இளங்கண்டீராக் கோ வண்மை மிக்கவன். அவன் வீட்டில் இல்லாவிட்டாலும் அவன் வீட்டுப் பெண்டிர் தம் தகுதிக்கேற்ப இரவலர்க்குப் பரிசளிப்பர். அதனால், இளங்கண்டீராக் கோவைத் தழுவினேன். உன் முன்னோருள் முதல்வன் நன்னன் என்பவன் ஒரு பெண்ணைக் கொலை செய்தவன். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில் பாடி வருபவர்களுக்குப் பரிசளிக்காமல் வீட்டுக் கதவை அடைக்கும் வழக்கம் உள்ளது. அதனால் என் போன்ற புலவர்கள் விச்சி மலையைப் பாடுவதில்லை. அதனால் அம்மலைக்குரிய உன்னைத் தழுவவில்லை” என்று இப்பாடலில் விடையளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின் இழைஅணிந்து
புன்தலை மடப்பிடி பரிசில் ஆகப்
5 பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்குமொழிப்
10 பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே.

அருஞ்சொற்பொருள்:
1. பண்டு = பழமை; உவத்தல் = மகிழ்தல். 2. சிமையம் = உச்சி; விறல் = சிறந்த; வரை = மலை; கவா = மலைப் பக்கம். 3. சேண்புலம் = நெடுந்தூரம்; படர்தல் = செல்லல். 4. பிடி = பெண் யானை. 5. தம்பதம் = தம் தகுதிக்கேற்ப. வண் = மிகுதி; 7. முயங்கல் = தழுவல்; பொலம் = பொன். 9. வியங்குதல் = விளங்குதல். ஆடுதல் = அசைதல். 11. அணங்கு = அச்சம்; சால் = மிகுதி, நிறைவு; அடுக்கம் = மலைப் பக்கம். 12. மால் = பெருமை; வரை = மலை; வரைதல் = நீக்கல்.

உரை: வானளவிய சிறந்த மலைச் சிகரங்களும், மலைப்பக்கங்களும் உடைய நாட்டிற்கு உரியவனாகிய இளங்கண்டீராக் கோ நெடுந்தூரம் சென்றிருந்தாலும், அவன் இல்லத்து மகளிர் தமக்குகந்த முறையில், பாடி வருபவர்கள் மகிழும் வகையில் நன்கு செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்த சிறிய தலையையுடைய இளம்பெண் யானைகளைப் பரிசாக அளிக்கும் புகழ் மிகுந்ததாகப் பன்னெடுங்காலமாகவே அவன் நாடு உள்ளது. ஆகவே, நான் அவனை நன்றாகத் தழுவினேன். நீயும் தழுவுவதற்கு ஏற்றவன்தான். ஆனால், நீ பொன்னாலான தேரையுடைய (பெண் கொலை புரிந்த) நன்னனின் வழித்தோன்றல். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில், விளங்கும் மொழியில் பாடுவோர்க்கு வாயிற் கதவுகள் அடைக்கப் படுவதால், அச்சம் நிறைந்த மலைப் பக்கங்களில் தவழும் மேகம் பொழியும் மழையுடன் மணமும் உடைய பெருமைக்குரிய விச்சி மலையை எம் போன்றவர்கள் பாடுவதை நீக்கினார்கள். ஆகவே, நான் உன்னைத் தழுவவில்லை.

சிறப்புக் குறிப்பு: நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் நாட்டில் இருந்த மா மரம் ஒன்றிலிருந்து விழுந்த காய் நீரில் மிதந்து சென்றது. அந்நீரில் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொன்னான். அப்பெண் செய்த தவற்றிற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாக பொன்னால் செய்யப்பட்ட பாவை (பொம்மை) யையும், எண்பத்தொரு யானைகளையும் நன்னனுக்கு தண்டனையாக அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கபட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி குறுந்தொகைப் பாடல் 292 -இல் காணப்படுகிறது.

மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன்
(குறுந்தொகை - 292: 1-5)

Friday, March 5, 2010

150. நளி மலை நாடன்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், தான் முதல்முதலாக கண்டீரக் கோப்பெரு நள்ளியைச் சந்தித்த நிகழ்ச்சியைக் வன்பரணர் கூறுகிறார். வறுமையோடு இருந்த வன்பரணர் தன் சுற்றத்தாரோடு மலைகளையும் காடுகளையும் கடந்து நள்ளியின் கண்டீர நாட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரும் அவர் சுற்றத்தாரும் பசியோடு ஒரு பலா மரத்தடியில் வருந்தி இருந்தனர். அச்சமயம், மான்களை வேட்டையாடியதால் அவற்றின் குருதி படிந்த, கழல் அணிந்த கால்களோடு ஒருவன் அங்கே வந்தான். அவனைப் பார்த்தால் ஒரு செல்வந்தனைப் போல் இருந்தது. வன்பரணரும் அவர் சுற்றத்தாரும் பசியோடு இருந்ததை அவர்கள் முக குறிப்பால் அவன் உணர்ந்துகொண்டு, தான் கொன்ற விலங்குகளின் இறைச்சியைச் சமைத்து அவர்களுக்கு அளித்தான். உண்டு பசி தீர்ந்த வன்பரணரும் அவர் சுற்றத்தாரும் அருவி நீரைக் குடித்துக் களைப்பாறினார்கள். “ என்னிடத்தில் பெருமைக்குரிய அணிக்கலன்கள் வேறு யாதும் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று கூறி தன் மார்பில் அணித்திருந்த முத்து மாலையையும் கையில் அணிந்திருந்த கடகத்தையும் வன்பரணரிடம் கொடுத்தான். வன்பரணர், அவன் வள்ளல் தன்மையை வியந்து, “உம்முடைய நாடு எது?; ஐயா, நீர் யார்?” என்று கேட்டார். அவன் வன்பரணரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். பின்னர், தனக்குப் பரிசளித்த வள்ளல், தோட்டி மலைக்குரிய கண்டீராக் கோப்பெரு நள்ளி என்பதை வழியில் இருந்தவர்களிடமிருந்து வன்பரணர் தெரிந்து கொண்டார். இப்பாடலில் இந்த நிகழ்ச்சியை வன்பரணர் சித்திரிக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
5 மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
10 கான்அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி
15 நல்மரன் நளிய நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என
20 மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்;
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்:
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
25 இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.கூதிர் = குளிர்; கூதிர் காலம் = ஐப்பசி, கார்த்திகை. 2. பாறுதல் = அழிதல், சிதறுதல் ; சிதார் = கந்தை. 3. புலம் = இடம்; படர்ந்த = சென்ற. 4. உயக்கம் = வருத்தம்; உயங்குதல் = வருந்துதல், வாடுதல், துவளுதல்; உலைவு = இளைப்பு, ஊக்கக் குறைவு. 5. கணம் = கூட்டம். 6. வான் = மழை, அழகு, சிறப்பு; சென்னி = தலை. 8. இரீஇ = இருத்தி. 9. இழுது = நெய்; கொழுங்குறை = ஊன் துண்டுகள். 10. கான் = காடு; அதர் = வழி; ஞெலிதல் = கடைதல், தீக் கடைதல். மிசைதல் = அனுபவித்தல், உண்டல், நுகர்தல். 14.காய் = வருந்தல், பசி. 15. நளிய = செறிந்த. 17. வல் = விரைவு. 18. வீறு = ஒளி, பெருமை. 20. வயங்குதல் = விளங்குதல்; காழ் = முத்து வடம், மணி வடம். 21.மடை = ஆபரணக் கடைப் பூட்டு. 28. நளி = பெரிய

உரை: குளிர் காலத்தில் மழையில் நனைந்த பருந்தின் கரிய சிறகைப் போன்ற கிழிந்த கந்தைத் துணியை உடுத்திய நான் பலாமரத்தடியில் என்னையே மறந்து இருந்தேன். வேற்று நாட்டிலிருந்து அங்கே வந்துள்ள என்னுடைய வருத்ததையும் தளர்ச்சியையும் கண்டு, மான் கூட்டத்தைக் (வேட்டையாடிக்) கொன்று குருதி தோய்ந்த, அழகிய வீரக்கழலணிந்த காலும், அழகிய நீலமணி ஒளிரும் தலையும் உடைய, செல்வச் செம்மல் போன்ற ஒரு வேட்டுவன் வலிய வில்லோடு அங்கே தோன்றினான். அவனைக் கண்டு நான் வணங்கி எழுந்திருப்பதைப் பார்த்த அவன், தன் கையை அசைத்து என்னை இருக்கச் செய்தான். காட்டு வழியில் சென்று வழிதவறிய இளைஞர்கள் விரைந்து வந்து சேர்வதற்கு முன், நெய் விழுது போன்ற வெண்ணிறமுடைய புலால் துண்டுகளை தான் மூட்டிய தீயில் சமைத்து, “தங்கள் பெரிய சுற்றத்தோடு இதை உண்ணுக” என்று எனக்கு அளித்தான். அதனை நாங்கள் அமிழ்தத்தைப் போல் உண்டு எங்களை வருத்திய பசியைத் தீர்த்து, நல்ல மரங்கள் சூழ்ந்த மணமுள்ள குளிர்ந்த மலைச் சாரலில் மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் குளிர்ந்த நீரைப் பருகினோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அவன் விரைந்து வந்து, “ தாங்கள் பெறுதற்கரிய பெருமைக்குரிய அணிகலன்கள் வேறு எதுவும் எங்களிடம் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறித் தனது மார்பில் அணிந்திருந்த ஒளிபொருந்திய முத்து மாலையையும் முன் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கொடுத்தான். ”தங்களது நாடு எது?” என்று கேட்டேன். அவன் தன் நாடு எது என்று கூறவில்லை. “தாங்கள் யார்?” என்று கேட்டேன். அவன் தன் பெயரையும் கூறவில்லை. அவன், பெருமைக்குரிய தோட்டி என்னும் அழகிய மலையையும், பக்கத்திலுள்ள அழகிய பெரிய மலையையும் காப்பவன் என்றும் பளிங்கு போன்ற நிறமுடைய இனிய நீருடைய பெரிய மலை நாட்டு நள்ளி என்றும் வழியில் வந்த பிறர் சொல்லக் கேட்டேன்.

சிறப்புக் குறிப்பு: தோட்டி என்னும் சொல்லுக்கு, யானைப்பாகன் யனையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தும், ”அங்குசம்” என்று ஒரு பொருள். அது இரும்பால் செய்யப்பட்டது. ஆனால், இப்பாடலில் குறிப்பிடப்படும் தோட்டி என்னும் சொல் தோட்டி மலையைக் குறிக்கிறது. இப்பாடலை இயற்றிய புலவர், “இரும்பு புனைந்து இயற்றா” என்ற அடைமொழியால் “இரும்பால் செய்யாப்படாத தோட்டி” என்று தோட்டி மலையைக் குறிப்பிடுகிறார்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோற் வித்து. (குறள் - 24)

என்ற குறளில் தோட்டி என்ற சொல் யனைப்பாகன் பயன்படுத்தும் கருவியைக் குறிப்பது காண்க. துறடு என்னும் சொல் துறட்டி என்றும் தோட்டி என்றும் மருவியதாக மொழி அறிஞர்கள் கருதுகின்றனர் ( தேவநேயப் பாவணர், திருக்குறள் தமிழ் மரபுரை, பக்கம் 67).

149. வண்மையான் மறந்தனர்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் வன்பரணர் கண்டீராக் கோப்பெரு நள்ளியுடன் இருந்தார். அப்பொழுது பாணர் சிலர் காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணை காலையிலும் மாற்றிப் பாடினர். அவர்கள் ஏன் அவ்வாறு தவறாகப் பாடுகிறார்கள் என்று நள்ளி வன்பரணரைக் கேட்டான். அதற்கு, வன்பரணர், “ நள்ளி! காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்னும் பாடுவதுதான் முறை. நீ அவர்களுக்கு வறுமை தெரியாதவாறு வேண்டியவற்றை எல்லாம் நிரம்ப அளித்ததால் அவர்கள் அம்முறைமையை மறந்தனர்” என்று இப்பாடலில் விடை அளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நள்ளி வாழியோ; நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அதுநீ
5 புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

அருஞ்சொற்பொருள்:
1.நள் = இரவு, இருள்,செறிவு. 2. மருதம் = காலை நேரத்திற்குரிய பண். 3. கைவழி = பாணர்கள் எப்பொழுதும் கையில் வைத்துள்ள ஒரு வகை யாழ்; செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 4. எமர் = எம்மவர். 5. புரவு = கொடை.

கொண்டு கூட்டு: நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே வரவு எமர் மறந்தனர்.

உரை: நள்ளி! நீ வாழ்க! கொடுப்பதைக் கடமையாக மேற்கொண்டு நீ அளித்த கொடையால் ஏற்பட்ட வளத்தால், பாணர்கள் இசைக்குரிய வழிமுறைகளை மறந்து இருண்டு வரும் மாலைப் பொழுதில் மருதப் பண்ணையும் காலையில் கையிலுள்ள யாழால் செவ்வழிப் பண்ணையும் வாசிக்கிறார்கள்.

148. என் சிறு செந்நா!

பாடியவர்: வன்பரணர்(148, 149, 150, 152, 153, 255). இவர் பரணர், நெடுங்கழுத்துப் பரணர் என்பவர்களிலிருந்து வேறானவர். இவர் கண்டீராக் கோப்பெரு நள்ளியையும் வல்வில் ஓரி என்னும் வள்ளலையும் பாடியுள்ளார்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி(148, 149, 150, 151, 158). இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். இவன் கண்டீராக் கோ என்றும் கண்டீராக் கோப்பெரு நள்ளி என்றும் அழைக்கப்பட்டான். தோட்டி மலைக்கும் அதனைச் சார்ந்த பகுதிகட்கும் தலைவனாக விளங்கினான். இவனைப் பாடியவர்கள் வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார், கபிலர், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், பரணர் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆவர்.

பாடலின் பின்னணி: வன்பரணர் நள்ளியிடம் சென்று அவன் அவன் வெற்றிச் சிறப்பையும் வண்மையையும் புகழ்ந்தார். அதனைக் கேட்ட நள்ளி, அப்புகழுரைகளுக்குத் தான் தகுதியுடையவனா என்பதில் தனக்கு ஐயம் உண்டு என்று கூறினான். அவன் கூற்றுக்கு மறுமொழியாக, “ உன் கொடையால் என் வறுமை மறைந்து விட்டது. ஆககவே, பெருமை இல்லாத மன்னர்களின் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய்யாகக் கூற வேண்டிய வறிய நிலை என்னிடம் இல்லை. அதனால், என் நாக்கு ஒருவரையும் அவர் செய்யாததைக் கூறிப் பாராட்டாது” என்று கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.


கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளிநின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்
5 பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே.

அருஞ்சொற்பொருள்:
1.கறங்குதல் = ஒலித்தல்; மிசை = மேல்; பிறங்குதல் = ஒளி செய்தல். 2. அசைவு = மடி, இளைப்பு; நோன்மை = வலிமை; நோன்தாள் = வலிய முயற்சி; நசை = விருப்பம்; ஏத்தி = வாழ்த்தி. 4. கூடு = நெற்கூடு. 5. பீடு = பெருமை. 6. கிளத்தல் = கூறுதல். 7. எய்யாது = அறியாதது.

கொண்டு கூட்டு: நீ பரிசில் முற்றளித்ததால், எம் சிறு செந்நா நசைவளன் ஏத்தி, மன்னரைப் பகழ்ச்சி வேண்டிக் கிளத்தல் எய்யாதாகின்று எனக் கூட்டுக.

உரை: மலை மேலிருந்து ஒலியுடன் விழுந்து விளங்கும் அருவிகள் உள்ள மலை நாட்டு நள்ளி! உன்னுடைய தளராத வலிய முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானைகளோடு கொண்டுவந்து, நெற்குதிர்கள் விளங்கும் பெரிய நகரங்களில் இருக்கும் பரிசிலர்களுக்கு அனைத்தையும் அளிக்கிறாய். ஆகவே, பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைக் செய்தது போல் கூறுவதை எம் சிறிய, நடுவு நிலைமை தவறாத நாக்கு அறியாததாயிற்று.

147. எம் பரிசில்!

பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார் (147, 210, 211, 318). வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்று அவனுக்கு அறிவுரை கூறிய புலவர்களில் பெருங்குன்றூர்க் கிழார் என்பவரும் ஒருவர். இவர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பரிசில் பெற்றவர். பின்னர் குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறையக் கண்டு தம் வறுமையை எடுத்துரைத்தார். ஆனால், குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குப் பரிசு எதுவும் அளிக்கவில்லை. அதனால் வருத்தமுற்ற பெருங்குன்றூர்க் கிழார் குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியாகிய இளஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றார். அவன், இவரை நன்கு வரவேற்றுச் சிறப்பித்தான். இவர் அவனைப் புகழ்ந்து பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடினார். அதனால் பெருமகிழ்ச்சியுற்ற இளஞ்சேரல் இரும்பொறை இவர்க்கு முப்பத்தீராயிரம் பொற்காசுகளைக் கொடுத்துச் சிறப்பித்தான்.

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடியது மட்டுமல்லாமல், இவர் அகநானூற்றில் 8-ஆம் செய்யுளும், குறுந்தொகையில் 338 - ஆம் செய்யுளும், நற்றிணையில் நான்கு செய்ய்ட்களும் ( (5, 112, 119, 347), புறநானூற்றில் நான்கு செய்யுட்களும் (147, 210, 211, 318) இயற்ரியுள்ளார். இவர் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழந்தவராகக் கருதப்படுகிறார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலை ஒரு பாணனின் கூற்று போல் பெருங்குன்றூர்க் கிழார் பாடியுள்ளார். பாணன் ஒருவன், “ நேற்று நாங்கள் செவ்வழிப் பண்னை இசைத்தோம். அதைக் கேட்டு ஒரு பெண் தனியளாக, கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாள். அவள் முடியில் பூச் சூடவில்லை. அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம். அவள் தன் கூந்தலில் பூச்சூடி மகிழுமாறு நீ அருளுதல் வேண்டும். ஆவியர் குடியில் தோன்றிய பேகனே! அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசில்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
5 அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

அருஞ்சொற்பொருள்:
1. முழை = குகை; நீந்தி = கடந்து. 2. செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 3. கார் = கார் காலம் (ஆவணி, புரட்டாசி); உறை = மழைத்துளி; தமி = தனிமை. 4. சிறை = பக்கம்; புலம்பு = வருத்தம். 5. அரி = செவ்வரி (கண்வரி); மதர் = செருக்கு; அம் = அழகு; மா = நிறம்; அரிவை = பெண். 7. மண்னுதல் = கழுவுதல். 8. கஞல = விளங்க; பெயரின் = செல்லின்.

கொண்டு கூட்டு: ஆவியர் கோவே! புலம்புகொண்டு உறையும் அரிவை கூந்தல் புது மலர் கஞல, இன்று பெயரின் அதுஎம் பரிசில் எனக் கூட்டுக.

உரை: ஆவியர் கோவே! கற்குகைகளிலிருந்து விழும் அருவிகளுடைய பலமலைகளைக் கடந்து, வரும் வழியில் சிறிய யாழால் மாலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணை இசைத்து வந்தோம். நேற்று நாங்கள் வந்த பொழுது, கார் காலத்தில் வானத்திலிருந்து விழும் இனிய மழைத்துளிகளின் ஓசையைத் தனித்திருந்து கேட்டு ஒரு பெண் ஒரு பக்கத்தில் இருந்து வருந்திக்கொண்டு இருந்தாள். (அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம்). அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்னின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.

146. தேர் பூண்க மாவே!

பாடியவர்: அரிசில் கிழார் ( 146, 230, 281, 285, 300, 304, 342). இவர் அரிசில் என்னும் ஊரைச் சார்ந்தவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம் உள்ள அரியிலூர் என்னும் ஊர் என்று பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார். வேறு சிலர், குடந்தை அருகே ஓடும் அரசலாறு பண்டைக் காலத்தில் அரிசில் ஆறு என்று அழைக்கப்பட்டது என்றும் அரிசில் என்னும் ஊர் அரசலாற்றின் கரையே இருந்த ஊர் என்றும் கருதுவர். இவர் கிழார் என்று அழைக்கப்படுவதிலிருந்து இவர் வேளாண் மரபினர் என்பது தெரியவருகிறது, இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்து வாழ்ந்தவர். இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகத்தில் புகழந்து பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் இவர் இயற்றிய செய்யுட்களால் பெரு மகிழ்ச்சி அடைந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குத் தன் நாட்டையும் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தான். ஆனால், இவர் சேர நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராகப் பணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்த பொழுது, அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று சேரனின் படைவலிமையை எடுத்துரைத்து, அதியமானுக்கும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் நடக்கவிருந்த போரைத் தடுக்க முயன்றார். இவர் முயற்சி வெற்றி பெறவில்லை. சேரமானுக்கும் அதியமானுக்கும் போர் மூண்டது. அப்போரில் அதியமான் தோல்வியுற்று இறந்தான். இவர் அதியமானிடமும் மிகுந்த அன்பு கொண்டவர். அதியமான் இறந்ததை, ”கூற்றுவன் செய்த தவறு” என்று புறநானூற்றுப் பாடல் 230 - இல் கூறுகிறார்.

இவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகமும், புறநானூற்றில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (193) இயற்றியுள்ளார்.

பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னனி: வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்ற அரிசில் கிழார் அவனைக் காணச் சென்றார். பேகன் இவருக்குப் பெருமளவில் பரிசில் அளித்தான். இவர், “என்னைப் பாராட்டி எனக்குப் பரிசில் அளிக்க விரும்பினால், நான் விரும்பும் பரிசில் பொன்னும் பொருளும் அல்ல; நீ உன் மனைவியோடு சேர்ந்து வாழவேண்டும். அதுவே நான் வேண்டும் பரிசில்” என்று இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
5 பரிசில் நல்குவை யாயின் குரிசில்நீ
நல்கா மையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
10 தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

அருஞ்சொற்பொருள்:
1.வெறுக்கை = செல்வம். 3. செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 4. நயந்து = விரும்பி. 5. குரிசில் = அரசன், தலைவன். 6. நைவரல் = இரங்குதல்; சாய்தல் = தளர்தல். 7. உழத்தல் = வருந்துதல்; அரிவை = இருபத்து ஐந்து வயதுள்ள பெண் (பெண்).8. கலித்தல் = தழைத்தல்; கலாவம் = தோகை. 9. ஒலித்தல் = தழைத்தல். 10. கோதை = பூ மாலை; புனைதல் = சூடுதல். 11. வண் = மிகுதி; பரிதல் = ஓடுதல்; மா = குதிரை.

உரை: நீ எனக்கு அளிக்கும் அரிய அணிகலன்களும் செல்வமும் அப்படியே இருக்கட்டும். அவற்றை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. போர்களில் வெல்லும் பேகனே! சிறிய யாழை ஏந்தி, மலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணில் பாட்டிசைத்து உன் வலிய நிலமாகிய நல்ல நாட்டை நான் பாடுவதால் நீ என்னை விரும்பி எனக்குப் பரிசில் அளிப்பதாக இருந்தால், தலைவனே! நீ அருள் செய்யாததால் அரிய துயரத்தால் மனம் வருந்தி உடல் தளர்ந்து அழகிய அணிகலன்களோடு உள்ள உன் மனைவியின் மயில் தோகை போல் காலளவு தழைத்த மெல்லிய கூந்தலில் நறுமணமுள்ள புகையூட்டி, குளிர்ந்த மணமுள்ள மாலை அணியுமாறு விரைந்தோடும் குதிரைகளை உன் நெடிய தேரில் பூட்டுவாயாக!