Monday, March 21, 2011

235. அருநிறத்து இயங்கிய வேல்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமானின் வள்ளல் தன்மையை நன்கு அறிந்தவர் அவ்வையார். ”அதியமானின் நெஞ்சில் பாய்ந்த வேல் அவனைக் கொன்றது மட்டுமல்லாமல், இரவலர்களின் பாத்திரங்களைத் துளைத்து, அவர்களின் கைகளைத் துளைத்து, பாடும் பாணர்களின் நாவையும் துளைத்தது. இனி, நாட்டில் பாடுவோரும் இல்லை; பாடுவோர்க்கு ஈவோரும் இல்லை” என்று கூறி, அதியமான் இறந்ததால் தான் அடைந்த அளவற்ற துயரத்தை இப்பாடலில் அவ்வையார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
5 பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
10 அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றுஅவன்
15 அருநிறத்து இயங்கிய வேலே;
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்குஒன்று
20 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. மன் - இரங்கல் பொருளில் - அது போய்விட்டதே என்ற பொருளில் - பலமுறை கூறப்பட்டுள்ளது. 4. நனி = மிக. 6. தடி = தசை. 8. நரந்தம் = நறுமணம். 9. புலவு = புலால்; தைவரல் = தடவல். 10. இரும் = பெரிய; மண்டை = இரப்போர் பாத்திரம்; உரீஇ = உருவி. 12.பாவை = கருவிழி; புன்கண் = துன்பம். 13. நுண் தேர்ச்சி = நுண்ணிய ஆராய்ச்சி. 15. நிறம் = மார்பு; இயங்கிய = துளைத்த. 16. ஆசாகு = ஆசு ஆகு = பற்றுக்கோடு. 18. பகன்றை = ஒரு செடி; பகன்றை மலர் = சூடுவதற்கு பயன்படுத்தாத ஒருமலர்; நறை = தேன். 20. தவ = மிக.

உரை: சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான். எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன.

அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த ஆறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது. எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

234. உண்டனன் கொல்?

பாடியவர்: வெள்ளெருக்கிலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 233-இல் காண்க.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 233-இல் காண்க.
பாடலின் பின்னணி: முந்திய பாடலில், வேள் எவ்வி விழுப்புண் பெற்றான் என்ற செய்தி பொய்யாகட்டும் என்று தாம் விரும்புவதாக வெள்ளெருக்கிலையார் கூறினார். ஆனால், அது உண்மையாகியது; அவன் இறந்தான். ஒரு நாள், வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு, வேள் எவ்வியின் மனைவி, அவன் நினைவாக அவனுக்கு உணவு படைப்பதைக் கண்டார். அவர் மிகவும் வருத்தமுற்றார். அவர் புலம்பல் இபாடலாக அமைந்துள்ளது.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி அன்ன சிறுவழி மெழுகித்
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
5 உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇ யோனே.

அருஞ்சொற்பொருள்:
1. நோகோ = வருந்தக்கடவேன்; மா=பெரிய; காலை = வாழ்நாள். 2. பிடி = பெண் யானை. 3. அமர் = விருப்பம்; புன் = புல். 4. பிண்டம் = இறந்தவர்களுக்குப் படைக்கப்படும் உணவு. 6. மரீஇ = கூடி.

கொண்டு கூட்டு: பலரோடு உண்டல் மரீஇயோன், யாங்கு உண்டனன் கொல்; நோகோ யானே எனக் கூட்டுக.

உரை: உலகத்து மக்களெல்லம் புகுந்து உண்ணக்கூடிய பெரிய வாயிலை உடைய வேள் எவ்வி பலரோடும் சேர்ந்து உண்ணுபவன். அத்தகையவன், ஒரு பெண் யானையின் கால் அடி அளவே உள்ள சிறிய இடத்தை மெழுகி, அங்கிருந்த புல் மேல், அவனை விரும்பும் அவன் மனைவி படைத்த இனிய, சிறிதளவு உணவை எப்படி உண்பான்? இதைக் கண்டு நான் வருந்துகிறேன்; என் வாழ்நாட்கள் இன்றோடு ஒழியட்டும்.

233. பொய்யாய்ப் போக!

பாடியவர்: வெள்ளெருக்கிலையார் (233, 234). வெள்ளெருக்கின் இலையைச் சிறப்பித்துப் பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் வேளிர் குலத்தில் தோன்றிய வேள் எவ்வி என்ற வள்ளலிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார். அவ்வள்ளல் இறந்த பின்னர் தம் வருத்தத்தை புறநானூற்றில் இரண்டு பாடல்கள் வழியாகக் கூறுகிறார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி. இவன், வேள் பாரியைப் போல் வேளிர் குலத்தில் தோன்றியவன். இவன் நீடூர் என்னும் ஊரிலிருந்து ஆட்சி செய்தான். நீடூர் என்னும் ஊர் அறந்தாங்கி வட்டத்துத் தென்பகுதியையும் இராமநாதபுர வட்டத்தின் கீழ்ப்பகுதியையும் தன்னுள்ளே கொண்டது என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் சிறந்த வாட்படையும் வேற்படையும் கொண்டவனாக இருந்தான். இவன் புலவர்களையும் பாணர்களையும் பெரிதும் ஆதரித்து அவர்களிடம் பேரன்பு கொண்டவனாகவும் இருந்தான்.
பாடலின் பின்னணி: பண்டைக் காலத்தில் அகுதை என்று ஒருமன்னன் கூடல் என்ற கடல் சார்ந்த ஊருக்குத் தலைவனாக இருந்து ஆட்சி புரிந்துவந்தான். அவனிடத்துப் இரும்பினால் செய்யப்பட்ட சக்கரம் போன்ற ஆயுதம் தாங்கிய படை (சக்கரப்படை) ஒன்று இருப்பாதாகவும், அது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்றும், அது அவனிடம் இருக்கும்வரை அவனை யாராலும் வெல்ல முடியாது என்றும் அனைவரும் நம்பினர். அந்தச் சக்கரப்படையைப் பற்றிய செய்தி நன்கு பரவி இருந்தது. அதனால் பகைவர் அனைவரும் அவனிடம் அஞ்சினர். முடிவில், ஒரு போரில் அகுதை கொல்லப்பட்டன். அவனிடம் ஆற்றல் மிகுந்த சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியது.

போரில் வேள் எவ்வி மார்பில் புண்பட்டான் என்று புலவர் வெள்ளெருக்கிலையார் கேள்விப்பட்டார். அவன் மீது அவருக்கு இருந்த பேரன்பின் காரணத்தால் அவன் புண்பட்டான் என்ற செய்தி அகுதையிடம் சக்கரப்படை இருந்தது என்ற செய்தியைப்போல் பொய்யாகட்டும் என்று விரும்பினார். அவர் தம் கருத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
5 இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்
போர்அடு தானை எவ்வி மார்பின்
எஃகுஉறு விழுப்புண் பலஎன
வைகுறு விடியல் இயம்பிய குரலே.

அருஞ்சொற்பொருள்:
2. பாவடி = பா + அடி = பரவிய அடி (யானையின் பரந்து அகன்ற பாதம்). 4. பொன் = இரும்பு. 7. எஃகு = வேல். 8. வைகுறு = வைகறை (விடியற் காலம்)

கொண்டு கூட்டு: திகிரியின் பொய்யாகியர், விடியல் இயம்பிய குரல் பொய்யாகியர் எனக் கூட்டுக.

உரை: பெரிய பாதங்களையுடைய யானைகளைப் பரிசிலருக்குக் குறையாது வழங்கிய சிறந்த, வலிய முயற்சியையுடைய அகுதையிடத்துச் சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியதுபோல் , பெரிய பாண் சுற்றத்துக்கு முதல்வனும், மிகுந்த அனிகலன்களை அணிந்து, போரில் பகைவரை அழிக்கும் பெரிய படையையுடயவனுமாகிய வேள் எவ்வி, வேலால் மார்பில் பல விழுப்புண்கள் உற்றான் என்று இன்று அதிகாலையில் வந்த செய்தியும் பொய்யாகட்டும்.

232. கொள்வன் கொல்லோ!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் இறந்த பிறகு அவன் நினைவாக ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில் அதியமான் பெயரைப் பொறித்து, மயில் தோகை சூட்டி, ஒரு சிறிய பாத்திரத்தில் மதுவை வைத்துப் படைத்து அந்த நடுகல்லை வழிபட்டனர். அதைக் கண்ட அவ்வையார், துயரம் மிகுந்தவராய், அவனை நினைவு கூர்ந்து தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

இல்லா கியரோ, காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
5 கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே.

அருஞ்சொற்பொருள்:
3. பீலி = மயில் இறகு. 4. உகுத்தல் = வார்த்தல். 5. பிறங்குதல் = உயர்தல்

கொண்டு கூட்டு: நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ எனக் கூட்டுக.

உரை: காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒருசிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ?

சிறப்புக் குறிப்பு: இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைப்பதும், நடுகல்லுக்கு வழிபாடு நடத்துவதும் சங்கக காலத்தில் வழ்க்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

231. புகழ் மாயலவே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாரிடத்து மிகுந்த அன்பு கொண்டவனாக இருந்தான். அவனுடைய அவைக்களத்தில் புலவராக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வையார் அதியமானின் தூதுவராகவும் பணியாற்றினார். இருவரும் மிகுந்த நட்புடன் இருந்ததாகப் புறநானூற்றிலுள்ள பல பாடல்கள் கூறுகின்றன. அதியமான் இறந்த பிறகு அவன் உடலை தீயிலிட்டு எரித்தார்கள். அதைக் கண்ட அவ்வையார் துயரம் தாங்காமல், அதியமான் உடல் அழிந்தாலும் அவன் புகழ் எப்பொழுதும் அழியாது என்று இப்பாடலில் வருத்தத்துடன் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று
விசும்புறு நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
5 திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே.

அருஞ்சொற்பொருள்:
1. எறிதல் = வெட்டல்; எறி = வெட்டிய; புனம் = கொல்லை; குறவன் = குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன்; குறையல் = மரத்துண்டு. ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு அடுக்கிய விறகுகளின் அடுக்கு; அழல் = தீக்கொழுந்து, நெருப்பு. 6. மாய்தல் = அழிதல்.

உரை: தினைப்புனத்தில், குறவன் ஒருவனால் வெட்டப்பட்ட அரைகுறையாக எரிந்த மரத்துண்டுகள் போல் கரிய நிறமுள்ள மரத்துண்டுகள் அதியமானின் உடலை எரிப்பதற்காக அடுக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளன. ஒளிநிறைந்த அந்த ஈமத்தீ அவன் உடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல், வானளாவ நீண்டு பரவினாலும் பரவட்டும். குளிர்ந்த திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடையவனும், ஓளிபொருந்திய ஞாயிறு போன்றவனுமாகிய அதியமானின் புகழ் அழியாது.

சிறப்புக் குறிப்பு: பாடல் 228 – இல் இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைப்பதை பற்றிக் கூறப்பட்டது. இப்பாடலில், இறந்தவர்களின் உடலை எரிப்பதைப் பற்றிக் கூறபட்டுள்ளது. ஆகவே, சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலை எரிப்பதும் புதைப்பதும் ஆகிய இரண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

Monday, March 7, 2011

230. நீ இழந்தனையே கூற்றம்!

பாடியவர்: அரிசில் கிழார் (146, 230, 281, 285, 300, 304, 342). இவர் அரிசில் என்னும் ஊரைச் சார்ந்தவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம் உள்ள அரியிலூர் என்னும் ஊர் என்று பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார். வேறு சிலர், குடந்தை அருகே ஓடும் அரசலாறு பண்டைக் காலத்தில் அரிசில் ஆறு என்று அழைக்கப்பட்டது என்றும் அரிசில் என்னும் ஊர் அவ்வாற்றின் கரையே இருந்த ஊர் என்றும் கருதுவர். இவர் கிழார் என்று அழைக்கப்படுவதிலிருந்து இவர் வேளாண் மரபினர் என்பது தெரியவருகிறது. இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்து வாழ்ந்தவர். இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகத்தில் புகழந்து பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் இவர் இயற்றிய செய்யுட்களால் பெருமகிழ்ச்சி அடைந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குத் தன் நாட்டையும் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தான். ஆனால், இவர் சேர நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராகப் பணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்த பொழுது, அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று சேரனின் படைவலிமையை எடுத்துரைத்து, அதியமானுக்கும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் நடக்கவிருந்த போரைத் தடுக்க முயன்றார். இவர் முயற்சி வெற்றி பெறவில்லை. சேரமானுக்கும் அதியமானுக்கும் போர் மூண்டது. அப்போரில் அதியமான் தோல்வியுற்றான்.

இவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகமும், புறநானூற்றில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (193) இயற்றியுள்ளார்.

பாடப்பட்டோன்: அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி. உரைவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்கள் “தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த அதியமான்களுள் எழினி என்பான் ஒருவன்” என்று தம் நூலில் குறிப்பிடுகிறார். ”அதியமான் எழினி என்பவனும் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவனும் ஒருவனா அல்லது அதியமான் பரம்பரையைச் சார்ந்த வேறுவேறு மன்னர்களா?” என்பது ஆய்வுக்குரியது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் நெடுமான் அஞ்சியுடன் போர்புரிந்து அவனை வென்றான் என்ற செய்தி பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தின் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது. மற்றும், வரலாற்று ஆசிரியர்களிடத்தில் ( K.A. நீலகண்ட சாஸ்திரி, N.சுப்பிரமணியன், முனைவர் கோ. தங்கவேலு, டாக்டர் பொன். தங்கமணி போன்றவர்களிடத்தில்) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரில் போர் புரிந்தபோது தகடூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பதில் கருத்து வேறுபாடு காணப்படவில்லை. அவ்வை சு. துரைசாமிப் பிள்ளையும் புறநானூற்றுப் பாடல் 87க்கு எழுதியுள்ள முன்னுரையில், அதியமான் நெடுமான் அஞ்சி, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் போரிட்டுத் தோல்வியுற்று உயிர் துறந்தான் என்று குறிப்பிடுகிறார்.

அரிசில் கிழார் பதிற்றுப்பத்தில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிப் பரிசு பெற்றார் என்று கூறப்படுகிறது. அவர், புறநானூற்றில் 230-ஆம் பாடலில் அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினியையும் பாடியிருப்பதால் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி மற்றும் அரிசில் கிழார் ஆகிய மூவரும் சமகாலத்தவர் என்பது தெளிவு. சேரமான் பெருஞ்சேரல் தகடூரில் போர் செய்த பொழுது இரண்டு அதியமான்கள் அங்கு ஆட்சி செய்திருக்க முடியாது. ஆகவே, அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பவனும், அதியமான் நெடுமான் அஞ்சியும் ஒருவனாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அதியமான் நெடுமான் அஞ்சியும் அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பவனும் ஒருவனே என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் உள்ளது. புறநானூற்றுப் பாடல் 158-இல், புலவர் பெருஞ்சித்திரனார் கடையெழு வள்ளல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி என்று எழுவரைக் குறிப்பிடுகிறார். சிறுபாணாற்றுப்படையில் கடையெழு வள்ளல்கலைக் குறிப்பிடும் பொழுது, அதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார், முறையே பேகன், பாரி, காரி, ஆய் அண்டிரன், அவ்வைக்கு நெல்லிக் கனி கொடுத்த அதிகன், நள்ளி, ஓரி என்ற எழுவரைக் குறிப்பிடுகிறார். அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி, எழினி என்றும் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதுகாறும் காட்டிய சான்றுகளால் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவனும் அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி என்பவனும் ஒருவனே என்பதும் இப்பாடலில் பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பதும் தெளிவாகப் புலனாகிறது.
பாடலின் பின்னணி: அரிசில் கிழார் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியவர். அவர் அதியமானிடத்தும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தும் மிகுந்த அன்புடையவர். ஆகவே, அதியமான் இறந்ததற்காக, சேரனை இகழாமல், அது கூற்றுவன் செய்த தவறு என்று கூறி இப்பாடலில் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களம்மலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
5 வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
பொய்யா எழினி பொருதுகளம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
10 நோய்உழந்து வைகிய உலகிலும் மிகநனி
நீஇழந் தனையே அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் வித்துண் டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்
15 நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோஅவன் அமர்அடு களத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. அமர்தல் = பொருந்துதல்; ஆயம் = கூட்டம்; கானம் = காடு; அல்கல் = தங்குதல். 2. வம்பலர் = புதியவர்; புலம் =இடம். 3. மலிதல் = மிகுதல், பெருகல்; குப்பை = குவியல்; வைகல் = தங்கல். 4. விலங்கு பகை = தடுக்கும் பகை; கடிதல் = தடை செய்தல். 5. வயங்குதல் = விளங்கல். 8. அமர் = விருப்பம். 9. இடும்பை = துன்பம். 13 வீழ்குடி = வளமில்லாத குடி. 15. நேரார் = பகைவர். 16. ஆர்கை = தின்னுதல்.

கொண்டு கூட்டு: எழினி, களஞ்சேர, ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின், அவன் அமரடு களத்துப் பல்லுயிரும் பருகி ஆர்குவை; அது கழிந்ததே எனக் கூட்டுக.
உரை: கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே தங்கி இருக்கவும், வெப்பமிக்க வழியில் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் அச்சமின்றித் தங்கவும், களத்தில் பெரிய நெற்குவியல்கள் காவலின்றிக் கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து, உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறந்தான். பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தைபோல் தன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த, மிக்க பசியால் கலக்கமடைந்த துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு, அவனை இழந்து நாடு வருந்தியது. . அறமில்லாத கூற்றமே! நீ அதைவிட மிக அதிகமாக இழந்தாய். தன் வருங்கால வளமான வாழ்வுக்குத் தேவையான விளைச்சலைத் தரும் விதைகளைச் சமைத்து உண்ட வறுமையுற்ற குடியில் உள்ள உழவன்போல் இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு நீ நிறைவடைந்திருப்பாய்.

229. மறந்தனன் கொல்லோ?

பாடியவர்: கூடலூர் கிழார் (229). சங்க காலத்தில் கூடலூர் என்ற ஒரு ஊர், இன்று கேரள மாநிலத்தில் உள்ள பாலைக்காட்டு வட்டத்தில் (Palghat Taluk) இருந்தது. இப்புலவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவர் புறநானூற்றில் இயற்றிய இப்பாடல் மட்டுமின்றி, குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (166,167, 214) இயற்றியுள்ளார். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு என்னும் நூலை இவர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.

இவர் வானவியலில் மிகவும் சிறந்த அறிஞர் என்பது அவர் இயற்றிய இப்பாடலிலிருந்து நன்கு தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (17, 20, 22, 53, 229). பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலில் பல சேர மன்னர்களின் வரலாறு காணப்படுகிறது. அந்நூலில் கூறப்படாத இரும்பொறை மரபைச் சார்ந்த மன்னர்களுள் இவன் ஒருவன். மற்றொருவன் கணைக்கால் இரும்பொறை என்பவன்.

இவன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும் அழைக்கப்பட்டான். இவனது இயற்பெயர் சேய். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது குறித்து இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். “யானைக்கண்” என்பதற்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வெல்லப் பிணிமுகம் என்னும் யானைமீது அமர்ந்து சென்றது போல் இவன் யானைமீது ஏறிச் சென்றதை ஒப்பிட்டு “யானைக்கட் சேய்“ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

ஒருசமயம், இவன் இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியுடன் போரிட்டு அப்போரில் தோல்வியுற்றான். பின்னர், இச்சேரமன்னனுக்கும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், இவன் பாண்டியனிடம் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு, தன் வலிமையால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் நாட்டை மீண்டும் ஆட்சி செய்தான் (புறநானூறு -17).

இச்சேரமான் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொக்குப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பாடப்பட்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 - 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது (சுப்பிரமனியன், பக்கம் 45).
பாடலின் பின்னணி: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறுதி நாட்களில், பங்குனி மாதத்தில் வானிலிருந்து ஒரு விண்மீன் (நட்சத்திரம்) தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. பங்குனி மாதத்தில் விண்மீன் எரிந்து விழுந்தால் அரசனுக்கு கேடுவரும் என்பதை கூடலூர் கிழார் நன்கு அறிந்திருந்தார். அந்த விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் சில விண்மீன்களின் நிலையினையும் ஆராய்ந்த கூடலூர் கிழார், சேரன் இன்னும் ஏழு நாட்களில் இறப்பான் என்பதை உணர்ந்தார். அவர் எண்ணியதுபோல் ஏழாம் நாளில், சேரன் இறந்தான். அன்று, வேறு சில தீய நிமித்தங்களும் நிகழ்ந்தன. விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் அப்பொழுது நிகழ்ந்த தீய நிமித்தங்களையும், சேரன் இறந்ததையும் இப்பாடலில் கூடலூர் கிழார் வருத்தத்துடன் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

ஆடுஇயல் அழல்குட்டத்து
ஆர்இருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்,
5 பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய,
நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல்நாள்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
10 அளக்கர்த்திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
15 நோயிலன் ஆயின் நன்றுமற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
20 காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
25 பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே?

அருஞ்சொற்பொருள்:
1. ஆடு இயல் = ஆடு போன்ற உருவமுடைய மேட இராசி; அழல் = நெருப்பு, தீ; குட்டம் = கூட்டம்; அழல் குட்டம் = நெருப்புப் போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம். 3. ஆர் = நிறைந்த; அரை = பாதி; அரையிரவு = நடு இரவு. 3. முடம் = நொண்டி; முடப்பனை = வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைய அனுடம் என்னும் நட்சத்திரம் (அனுடம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்; ஒரு தனி நட்சத்திரம் அல்ல.); முடப்பனையத்து வேர்முதல் = வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுட ம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரம் (கேட்டை). 4. கடைக்குளத்துக் கயம் காய = கயம் குளத்து கடை காய = கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை (புனர்பூசம் என்பது ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டம்) எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை) விளங்கிக் காய. 5. உயர் அழுவம் = முதல் பதினைந்து நாட்கள். 6. தலைநாள் மீன் = உத்தரம் என்னும் நட்சத்திரம். 7. நிலைநாள் மீன் = எட்டாம் மீன் (உத்தரம் என்னும் நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மூலம்) ; ஏர்தல் = எழுதல். 8. தொல்நாள் = உத்தரத்திற்கு முன்னதாக நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம். 9. பாசி = கிழக்கு; தூசி = வடக்கு; முன்னுதல் = படர்ந்து செல்லுதல். 10. அளக்கர் = கடல்; திணை = பூமி. 11. கனை = ஒலி; கால் = காற்று; எதிர்பு பொங்கி = கிளர்ந்து எழுந்து. 16. மடிதல் = வாடுதல்; பரத்தல் = அலமருதல் (கலங்குதல்). 20 பரிதல் = ஒடிதல்; உலறுதல் = சிதைதல் (முறிதல்). 21. கதி = குதிரை நடை; வைகல் = தங்கல். 24. ஆயம் = கூட்டம். 25. பிணிதல் = சாதல். 27. மணி = நீலமணி; மாயோன் = திருமால்.

உரை: ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில், இருள் நிறைந்த நடு இரவில், வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுட ம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரமாகிய கேட்டை முதலாக, கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை நட்சத்திரம் எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் பதின்மூன்றும் (கேட்டை, அனுடம், விசாகம், சுவாதி, சித்திரை, அத்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம் திருவாதிரை) விளங்கிக் காய்ந்தன. அப்பொழுது உத்தரம் என்னும் நட்சத்திரம் உச்சத்தில் (வானின் நடுவில்) இருந்தது. அந்த உத்தர நட்சத்திரம் அவ்வுச்சியிலிருந்து சாய்ந்தது. அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழுந்தது. அந்த உத்தரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில், கடல் சூழந்த உலகுக்கு விளக்குப்போல் வானில் ஒரு நட்சத்திரம் கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக, பெருமுழக்கத்தோடு காற்றில் கிளர்ந்து எழுந்து தீப்பரந்து சிதறி வீழ்ந்தது. அதைக் கண்டு, நாம் பலரும் பல்வேறு இரவலரும், “பறை ஓசைபோல் ஒலிக்கும்அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நோயின்றி இருப்பது நல்லது” என்று வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி அஞ்சினோம். அந்த நட்சத்திரம் விழுந்து இன்று ஏழாம் நாள். இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது. காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?

சிறப்புக் குறிப்பு:
நட்சத்திரங்கள்: 1. அசுவினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்தரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.

இராசிகள்: 1. மேடம், 2. ரிஷபம், 3. மிதுனம், கடகம், 5, சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுர், 10. மகரம், 11. கும்பம், 12. மீனம்.

228. ஒல்லுமோ நினக்கே!

பாடியவர்: ஐயூர் முடவனார் ( 51, 228, 314, 399). இவர் ஐயூர் என்னும் ஊரினர். இவர் முடவராக இருந்தார் என்பது, தாமன் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை இழுத்துச் செல்வதற்கு காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து (399) தெரியவருகிறது. இவர் ஆதன் எழினியையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார். இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் ( 216) , குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (206, 344) இயற்றியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய நயமுடையவை.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன் இறந்ததை அறிந்து வருந்திய சான்றோர்களில் ஐயூர் முடவனாரும் ஒருவர். ”கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால் தாழி செய்ய முடியும். ஆனால், அவன் புகழுடம்பு மிகப்பெரியது. அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
5 அளியை நீயே; யாங்கா குவைகொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
விரிகதிர் ஞாயிறு விசும்புஇவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
10 கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
15 மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

அருஞ்சொற்பொருள்:
1. கலம் = மண்கலம்; கோ = வேட்கோ = குயவன்; 2. குரூ = நிறம் (கருமை நிறம்); திரள் = உருண்டை; பரூஉ = பருமை. 3. இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; சூளை = மண்கலங்கலைச் சுடுமிடம். 4. நனந்தலை = அகன்ற இடம்; மூதூர் = பழமையான ஊர். 5. அளியை = இரங்கத் தக்கவன். 8. இவர்தல் = பரத்தல். 9. செம்பியர் மருகன் = சோழர்களின் வழித்தோன்றல். 10. நுடங்குதல் = அசைதல். 12. கவித்தல் = மூடுதல்; கண்ணகன் தாழி = இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய மண் பாத்திரம். 13. வேட்டல் = விரும்பல்; எனையதூஉம் = எப்படியும். 14. திகிரி = சக்கரம்; பெருமலை = இமயமலை; ஒல்லுமோ = முடியுமோ. 15. வனைதல் = செய்தல்.

கொண்டு கூட்டு: கலஞ்செய் கோவே, வளவன் தேவருலகம் எய்தினானாதலான், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக, மாமேரு மண்ணாக வனைதல் ஒல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை; நீ இரங்கத்தக்கவன் எனக் கூட்டுக.

உரை: மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! அகன்ற பெரிய ஆகாயத்தில், இருள் திரண்டாற் போல் பெருமளவில் புகை தங்கும் சூளையையுடைய பழைய ஊரில் மண்கலங்கள் செய்யும் குயவனே! கிள்ளிவளவன், நிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடையவன்; புலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடையவன். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, தொலைதூரத்தில், வானில் விளங்குவதைப்போல் சிறந்த புகழையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றலாகிய கிள்ளிவளவன் கொடி அசைந்தாடும் யானைகளையுடையவன். அவன் தேவருலகம் அடைந்தான். அவனை அடக்கம் செய்வதற்கேற்ற பெரிய தாழியைச் செய்ய விரும்பினாய் என்றால் எப்படிச் செய்வாய்? பெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், இமயமலையை மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? அத்தகைய தாழியைச் செய்வதற்கு நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.

சிறப்புக் குறிப்பு: ஆனந்தம் என்ற சொல்லுக்கு ”சாக்காடு” என்றும் ஒரு பொருள். பையுள் என்ற சொல்லுக்கு “துன்பம்” என்று பொருள். ஆகவே, ஒருவனுடைய இறப்பினால் அவன் சுற்றத்தாரோ அல்லது அவன் மனைவியோ வருந்துவதைப் பற்றிய பாடல்கள் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும் என்பது அறிஞர் கருத்து. இப்பாடலில், கிள்ளிவளவன் இறந்ததால் துன்பமுற்ற புலவர் ஐயூர் முடவனார் தம் வருத்தத்தை கூறுகிறார். அவர், அவனுடைய சுற்றத்தாருள் ஒருவர் என்பதற்கு ஏற்ற ஆதாரம் ஒன்றும் காணப்படாததால், இப்பாடல், கையறு நிலையைச் சார்ந்த மற்ற பாடல்களைப்போல், அரசன் இறந்ததால் புலவர் தம் வருத்தத்தைக் கூறும் ஒருபாடல். ஆகவே, இப்பாடலையும் கையறு நிலையைச் சார்ந்ததாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

கிள்ளிவளவனின் பூத உடலை ஒரு தாழியில் வைத்துப் புதைத்தாலும், அவன் பெரும்புகழ் கொண்டவனாகையால், அவனுடைய புகழுடம்பை கொள்ளக்கூடிய அளவுக்குத் தேவையான பெரிய தாழி செய்ய முடியாது என்று கூறி, ஐயூர் முடவனார் கிள்ளிவளவனின் புகழை இப்பாடலில் பாராட்டுகிறார்.

227. நயனில் கூற்றம்!

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார் (227). சங்க காலத்தில் சோழ நாட்டில் ஆவடுதுறை என்று ஒரு ஊர் இருந்தது. அவ்வூரின் பெயர் பிற்காலத்தில் ஆடுதுறை என்று மருவியதாகக் கருதப்படுகிறது. இப்புலவர் அந்த ஆவடுதுறையைச் சார்ந்தவர். சாத்தனார் என்பது இவர் இயற்பெயர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன் இறந்ததை அறிந்த சாத்தனார் மிகவும் வருத்தம் அடைந்தார். ”கூற்றுவனே! நீ உன் அறிவின்மையின் காரணத்தால் கிள்ளிவளவனைக் கொன்றாய். உன் செயல், வறுமையில் வாடும் உழவன் விதைக்காக வைத்திருந்த நெல்லை உணவாக்கி உண்டது போன்ற செயல். நீ அவனைக் கொல்லாது இருந்திருப்பாயாயின், அவன், நாளும் போர்க்களத்தில் பகைவர்கள் பலரைக் கொன்று உன் பசியைத் தீர்த்திருப்பான். இப்பொழுது யார் உன் பசியைத் தீர்ப்பர்?” என்று இப்பாடலில் ஆடுதுறை மாசாத்தனார் நயம்படக் கூற்றுவனைச் சாடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

நனிபே தையே நயனில் கூற்றம்
விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை;
இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
5 குருதியும் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றுநின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
10 இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

அருஞ்சொற்பொருள்:
1. நனி = மிக; நயன் = நன்மை, நடுவு நிலைமை. 2. விரகு = அறிவு (சாமர்த்தியம்); அடுதல் = சமைத்தல்; வித்து அட்டு = விதையை உணவாகச் சமைத்து. 3. நன்வாய் = சொல்லிய சொற்கள் நல்ல மெய்யாதல். 5. குரூஉ = ஒளி, நிறம். 6. ஆனான் = அளவு இல்லாதவன் (அடங்காதவன்). 6. கடத்தல் = வெல்லுதல். 8. நின்னோர் அன்ன = உனக்கு ஒப்பான. 9. மூசல் = மொய்த்தல்; கண்ணி = மாலை. 10. இனையோன் = இத்தன்மையானவன்.

கொண்டு கூட்டு: கூற்றமே, இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத் தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்துண்டனை; நன்வாயாகுதல் இன்னும் காண்குவை எனக் கூட்டுக.

உரை: மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே! அறிவில்லாததால், நீ விளைச்சளைத் தரும் விதையைச் சமைத்து உண்டாய். இச்சொற்களின் உண்மையை நீ நன்கு அறிவாய். ஓளியுடைய வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தன. அவ்வாறு இறந்தும், அமையாதவனாய், நாள்தோறும் பகைவர்களின் படைகளை வென்று அழித்து, உன்னை வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய, உன்னைப்போல் பொன்னாலான பெரிய அணிகளை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கிள்ளிவளவனின் உயிரைப் பறித்தாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?

226. திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் கிள்ளிவளவன் குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்தான். அவன் இறந்ததைக் கேள்வியுற்ற மாறோக்கத்து நப்பசலையாரால் அவன் இறந்தான் என்பதை நம்ப முடியவில்லை. “கிள்ளிவளவன் ஆண்மையும் வலிமையும் மிகுந்தவனாதலால், கூற்றுவன் கிள்ளிவளவனிடம் பகைமை காரணத்தாலோ, கோபத்தாலோ அல்லது நேரில் வந்தோ அவன் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. பாடுவோர் போல் வந்து தொழுது பாராட்டி வஞ்சகமாகத்தான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும்.” என்று இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலந்தார்
5 மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

அருஞ்சொற்பொருள்:
1. செற்றம் = நெடுங்காலமாக உள்ள பகை; மனக்கறுவம்; செயிர்த்தல் = சினங்கொள்ளுதல். 2. உற்றன்று = உற்றது; உறுதல் = மெய்தீண்டல்; உய்வின்று = தப்பும் வழியில்லை; மாதோ – அசைச் சொல்; 4. பொலம் = பொன்; தார் = மாலை. 5. மண்டுதல் = உக்கிரமாதல்; உக்கிரம் = கொடுமை, கோபம். 6. கூற்று = இயமன்.

கொண்டு கூட்டு: பாடுநர் போலக் கூற்றம் கைதொழுது ஏத்தி, இரந்தன்று ஆகல் வேண்டும்; இன்றேல் உய்வின்று எனக் கூட்டுக.

உரை: பொன்மாலையையும், உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும், திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்றுவனே! பகைமை உணர்வோடோ, சினங்கொண்டோ அல்லது நேரில் வந்து கிள்ளிவளவனிடம் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டு செல்ல முயன்றிருந்தால் நீ தப்பியிருக்க வழியில்லை. பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும்.

சிறப்புக் குறிப்பு: செற்றும் செயிர்த்தும் உற்றும் கிள்ளிவளவனின் உயிரைக் கூற்றுவன் கொண்டு சென்றிருக்க முடியாது என்பது அவன் ஆண்மை மிகுதியைக் குறிக்கிறது. பாடுநர் போல வந்து கைதொழுது ஏத்தி இரந்துதான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும் என்பது அவன் வள்ளல் தன்மையைக் குறிக்கிறது.