Wednesday, April 14, 2010

160. செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே !

பாடியவர்: பெருஞ்சித்திரனார் . இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: வெய்யிலால் வாடும் பயிர்களுக்கு மழை போல இரவலர்க்கு உணவு அளித்து ஆதரிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டு, பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெற வந்தார். தன் இல்லத்தில் மனைவியும் குழந்தையும் உணவில்லாமல் வாடுகிறார்கள் என்றும் தனக்குப் பரிசிலை விரைவில் அளித்தருள்க என்றும் இப்பாடலில் பெருஞ்சித்திரனார் குமணனை வேண்டுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5 அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்எனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாள்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
10 கேடின் றாக பாடுநர் கடும்புஎன
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயின் நல்குவன் பெரிதுஎனப்
15 பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்து
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று
இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
20 கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும்
25 வினவல் ஆனா ளாகி நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை உயரநின்
30 சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1.உரு =அச்சம் ; கெழு = பொருந்திய; மிசைதல் = தின்னல். 2. முளிதல் = உலர்தல்; குழைத்தல்= தளிர்த்தல். 3. ஏறு = இடி. 4. திரங்குதல் = உலர்தல், தளர்தல்; கசிவு =வியர்வை ; யாக்கை = . 5. அவிழ் = சோறு. 6. நெறிப்படுதல் = உள்ளடங்கல். 7. குய் = தாளிப்பு; அடிசில் = சோறு. 8. நவில்தல் = செய்தல். 9. இரீஇ = இருத்தி . 10. கடும்பு = சுற்றம். 11. பொலம் = பொன்; வீசுதல் = கொடுத்தல். 12. நட்டார் = நண்பர்கள். 13. மட்டார் = மது நிறைந்த; மறுகு = தெரு. 15. நுவலுதல் = சொல்லுதல். 16. துரப்ப = துரத்துதல். 16. எள் = நிந்தை; எள்ளுற்று = இகழ்ந்து. 17. உணா = உணவு. 18. உளை = ஆண்மயிர்; மாண் = மடங்கு. 20. கடைஇ = மொய்த்து; ஊழ் = முறை. 23. உள்ளுதல் = நினைத்தல். 24. பொடிதல் = திட்டுதல், வெறுத்தல்; செவ்வி காட்டல் = அழகு காட்டல். 26. உழத்தல் = வருந்துதல்; மல்லல் = வளமை. 28. அத்தை = அசை. 30. ஏத்துதல் = வாழ்த்துதல்.

உரை: அச்சம் பொருந்திய ஞாயிற்றின் ஒளிக் கதிர்களால் (தின்னப்பட்ட ) சுட்டெரிக்கப்பட்ட காய்ந்த புல்லையுடைய காடுகள் தளிர்ப்ப, “கல்’ என்னும் ஒலியுடன் நடுக்கதைத் தரும் ஒசையையுடைய இடியுடன் மழைபொழிந்தது போல், பசியால் தின்னப்பட்ட தளர்ந்த வியர்வையுடைய உடல், சோறு உட்செல்லுவதை அறியாததால் வாடி, உள்ளடங்கிய வரிகளுடைய குடல் நிரம்புமாறு குளிர்ந்ததும் தாளிப்பு உடையதுமான, வளமை மிகுந்த தசையும் நெய்யும் உடைய உணவைத் திங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் போன்ற பொன்னால் செய்யப்பட்ட சிறிய பாத்திரங்களைச் சூழ வைத்து, உண்ணச் செய்து, பாடும் பாணர்களின் சுற்றம் கேடின்றி வாழ்க என்று வாழ்த்திப் பெறுதற்கரிய அணிகலன்களை எளிதில் அளித்து நண்பர்களைவிட அதிகமாக நட்பு கொண்டவன் குமணன். அவன் மது நிறைந்த தெருக்களுடைய முதிரமலைக்குத் தலைவன். அங்கே சென்றால். பெருமளவில் பரிசுகள் அளிப்பான் என்று கூறுபவர் கூற, என் உள்ளம் என்னைத் துரத்த நான் மிகவும் விரைந்து வந்தேன்.

எனது இல்லத்தில் உணவு இல்லாததால், என் இல்லத்தை வெறுத்து, இல்லத்தை மறந்து திரிந்து கொண்டிருக்கும், குறைந்த அளவே முடியுள்ள என் புதல்வன், பல முறையும் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறாததால், கூழும் சோறும் இல்லாத பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திறந்து பார்த்து அழுகிறான். அதைக் கண்ட என் மனைவி, “புலி வருகிறது” என்று அவனை அச்சுறுத்துகிறாள்; அவன் அழுகையை நிறுத்தவில்லை; திங்களைக் காட்டி சமாதானப் படுத்த முயல்கிறாள்; ஆனால், அவன் அழுகை ஓயாததால், வருந்தி, “உன் தந்தையை நினைத்து, வெறுத்து அழகு காட்டு” என்று பலமுறை கூறுகிறாள். அவள் நாளெல்லாம் வருந்துகிறாள். வளமை மிகுந்த குறையாத செல்வத்தை அதிக அளவில் எனக்கு விரைவில் கொடுத்து என்னை அனுப்புமாறு வேண்டுகிறேன். ஒலிக்கும் அலைகளுடைய நீரால் சூழப்பட்ட நில எல்லையில் உனது சிறப்பான புகழைப் பலவாகப் வாழ்த்துவோம்.

159. கொள்ளேன்! கொள்வேன்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார் . இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: வறுமையால் வாடும் தாயும், மனைவியும், குழந்தைகளும், சுற்றத்தாரும் மகிழுமாறு பரிசளிக்க வேண்டுமென்று பெருஞ்சித்திரனார் குமணனிடம் வேண்டுகிறார். மற்றும், குமணன் மனமுவந்து அளிக்காத பரிசு பெரிய யானையாகவிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், அவன் மனமுவந்து அளிக்கும் பரிசில் சிறிய குன்றிமணி அளவே இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல்செல் லாது, என் உயிர்எனப் பலபுலந்து
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று
5 முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர்அட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதுஅழிந்து
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
10 முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
15 என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்
20 ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கஎன்
பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்துஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்துநீ
இன்புற விடுதி யாயின் சிறிது
25 குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்நிற் பாடிய யானே.

அருஞ்சொற்பொருள்:
2.தீர்தல் = முடிதல். புலத்தல் = வெறுத்தல். 3. குறும்பல = குறுகிய பல; ஒதுங்குதல் = நடத்தல். 4. கதுப்பு = மயிர்; துயில்தல் = உறக்கம், சாவு. 5. முன்றில் = முற்றம். 6. படர் = துன்பம், நோவு; அடல் = வருத்தம். 7. மருங்கு = பக்கம், இடுப்பு. 8. அழிவு = வருத்தம். 9. அகைத்தல் = எழுதல், கிளைத்தல் (முளைத்தல்). 12. அவிழ் = சோறு; பதம் = உணவு. பாசடகு = பசிய இலை; மிசைதல் = உண்டல். 14. துவ்வல் = புசித்தல்; வெய்யோள் = விரும்புபவள். 15. கானவர் = வேடர். 16. புனம் = கொல்லை, வயல். 17. ஐவனம் = மலைநெல்; மை = பசுமை; கவின் = அழகு. 18. ஈனல் = ஈனுதல்; ஏனல் = தினை; இழும் = துணையான ஓசை. 19. கருவி = துணைக்கரணம்; தலைஇ = பெய்து. 20. தொக்க = திரண்ட. 21. திரங்குதல் = தளர்தல்; ஒக்கல் = சுற்றம். 22. மருப்பு = கொம்பு (தந்தம்). 23. தவிர்தல் = நீக்குதல். 25. குன்றி = குன்றி மணி (குண்டு மணி). 26. விறல் = வெற்றி. 27. விழு = சிறந்த; திணை = குடி.

கொண்டு கூட்டு: குமண, இசைமேந் தோன்றல் நிற் பாடிய யான் உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; இருவர் நெஞ்சமும் உவப்ப, ஒக்கலும் உவந்து இன்புற விடுதியாயின் குன்றியும் கொள்வல்; அதற்பட அருளல் வேண்டுவல் எனக் கூட்டுக.

உரை: தான் பல ஆண்டுகள் வாழ்ந்தும் இன்னும் தன் உயிர் போகவில்லையே என்று தன் வாழ் நாட்களைப் பலவாறாக வெறுத்து கோலைக் காலாகக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பவளாய், வெள்ளை நூல் விரித்தது போன்ற முடியுடையவளாய், கண் பார்வை பழுதடைந்ததால் முற்றத்திற்குப் போக முடியாதவளாய் என் தாய் இருக்கிறாள். ஓளியிழந்த மேனியுடன் வறுமைத் துயரம் வருத்துவதால் வருந்தி இடுப்பில் பல சிறு குழந்தைகளுடன், குழந்தைகள் பிசைந்து பால் குடித்ததால் வாடிய மார்பகங்களுடன் பெருந்துயர் அடைந்து, குப்பையில் முளைத்த கீரைச் செடியில், முன்பு பறித்த இடத்திலேயே மீண்டும் முளைத்த, முற்றாத இளந்தளிரைக் கொய்து உப்பில்லாத நீரில் வேகவைத்து மோரும் சோறும் இல்லாமல் வெறும் இலையை மட்டுமே உண்டு, அழுக்குப் படிந்த கிழிந்த ஆடையை உடுத்தி, இல்லற வாழ்வைப் பழித்து உண்ணாதவள் என்னை விருபும் என் மனைவி. என் தாயும் என் மனைவியும் மனம் மகிழ வேண்டும்.

வேடர்கள் மூட்டிய தீயால் எரிக்கப்பட்டு கருமை நிறமாகத் தோன்றும் அகன்ற நிலப்பகுதியை நன்கு உழுது மலை நெல்லை விதைத்ததால் பசுமையாக அழகுடன் தோன்றும் தினைப் பயிர்கள், மழை பெய்யாததால் கதிர்களை ஈனாமல் இருக்கும் பொழுது “இழும்” என்ற ஒசையுடன் மின்னல் இடி ஆகியவற்றோடு வானம் மழை பொழிந்தது போல் வறியோர்க்கு வழங்கும் உன் புகழைப் பாராட்டிப் பசியால் தளர்ந்த என் சுற்றத்தினரின் கூட்டம் மகிழவேண்டும்.

உயர்ந்த, பெருமைக்குரிய தந்தங்களையும் கொல்லும் வலிமையுமுடைய யானைகளைப் பெறுவதாக இருந்தாலும் நீ அன்பில்லாமல் அளிக்கும் பரிசிலை ஏற்றுக் கொள்ளமாட்டேன். நீ மகிழ்ச்சியோடு கொடுத்தால் சிறிய குன்றிமணி அளவே உள்ள பொருளாயினும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். கூறிய வேலையுடைய குமணனே, அவ்வாறு நீ மகிழ்ச்சியோடு அளிப்பதை வேண்டுகிறேன். வெற்றிப் புகழோடு, பழியில்லாத சிறந்த குடியில் பிறந்த புகழுடைய தலைவா! உன்னை நான் புகழ்ந்து பாடுகிறேன்.

158. உள்ளி வந்தெனன் யானே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார் (158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238). பெருஞ்சித்திரனார் வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்டவர் என்பது அவருடைய பாடல்களிலிருந்து தெரிகிறது. இவர் வறுமையில் வாடினாலும், அஞ்சா நெஞ்சமும் பரந்த மனப்பான்மையும் உடையவர் என்பதும் இவர் பாடல்களிலிருந்து நன்கு புலனாகிறது. ஒரு சமயம், இவர் வெளிமான் என்ற குறுநிலமன்னனிடம் பரிசில் பெறச் சென்றார். இவர் சென்ற சமயத்தில் வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன் இவருக்குப் பரிசு அளிக்குமாறு தன் இளவல் இளவெளிமானிடம் கூறிவிட்டு இறந்தான். தான் வெளிமானிடம் பரிசு பெற வந்திருக்கும் வேளையில் அவன் இறந்ததை எண்ணிப் பெருஞ்சித்திரனார் கலக்கமுற்றார். தன் நிலையை, “ கண்இல் ஊமன் கடற் பட்டாங்கு” என்று குறிப்பிடுகிறார் (புறம் - 238).

வெளிமான் கூறியவாறு, இளவெளிமான் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசளித்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். அவன், பெருஞ்சித்திரனாருக்கு மிகவும் குறைந்த அளவே பரிசில் கொடுத்தான். அதைக் கண்ட பெருஞ்சித்திரனார், “புலி தனக்கு இரையாகக் களிற்றை வீழ்த்த முயன்று, அது தப்பிவிட்டால், எலியைப் பார்த்துப் பாயாது. துணிவினை முன்கொண்டு எழுவாயாக! கடலில் பல ஆறுகள் வந்து கலப்பது போல் நாமும் விரைந்து சென்று நமக்குரிய பரிசிலைப் பெறுவோம்! மனமே கலங்காதே! முயற்சியை முன் நிறுத்தித் துணிந்து எழுவாயாக! (புறம் - 237)” என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு, இளவெளிமான் அளித்த பரிசிலை ஏற்றுக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

பின்னர், குமணன் என்ற வள்ளலைப் பாடிப் பெருமளவில் பரிசு பெற்றார். பரிசில் பெற்றவுடன் இளவெளிமான் இருந்த இடத்திற்குச் சென்று, குமணன் கொடுத்த யானைகளில் ஒன்றை இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டிவிட்டு, “ இரவலர் புரவலை நீயும் அல்லை, புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் (புறம் 162)” என்று சுட்டிக்காட்டி, அந்த யானையை இளவெளிமானுக்குப் பரிசாக அளித்துச் சென்றார்.

மற்றொரு சமயம், அதியமான் நெடுமான் அஞ்சி இவரைக் கண்டு பாராட்டாமல் கொடுத்த பரிசிலை ஏற்க மறுத்து, “காணாது ஈத்த இப்பொருட்கு, யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன் (புறம் - 208)’ என்று கூறியவர் இவர்.

குமணன் அளித்த பரிசிலை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் இவர் கூறுவதாக அமைந்துள்ள பாடல் (புறம் -163) இவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

”சித்திரவதை” என்ற சொல், பெருஞ்சித்திரனார் வறுமையால் வாடிப் பெருந்துயருற்றதால் உருவாகியது என்று புலவர் இரா. இளங்குமரனார் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

பாடப்பட்டோன்: குமணன் ( 158, 159, 160, 161, 162, 163, 164, 165)
கடையேழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒரு வள்ளல் இருந்தான். இவன் முதிர மலையைச் சார்ந்த பகுதியை ஆண்ட குறுநில மன்னன். முதிரமலை பழனிமலைத் தொடர்களுள் உள்ளது. இப்பொழுது உள்ள உடுமலைப்பேட்டை வட்டத்தின் தென் கிழக்குப் பகுதியும் பழனி வட்டத்தின் தென்மேற்குப் பகுதியும் சேர்ந்த பகுதி பழங்காலத்தில் முதிரமலை என்று அழைக்கப்பட்டாதாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

குமணன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன், குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு , அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால், அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செய்தார்.

இவனைப் பாடிய புலவர்கள் பெருந்தலைச் சாத்தானாரும் பெருஞ்சித்திரனாரும் ஆவர்.

பாடலின் பின்னணி: கடையேழு வள்ளல்கள் இறந்த பிறகு, இரவலர்க்குப் பெருமளவில் பரிசளிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டுப், பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெறச் சென்றார். இப்பாடலில், கடையேழு வள்ளல்களையும் குமணனையும் பெருஞ்சித்திரனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல்: தலைவனை வாழ்த்துவது வழ்த்தியல் எனப்படும்
பரிசில் கடாநிலையும் என்ரும் கூறுவர். பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5 கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக், கொடும்பூண் எழினியும்;
10 ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
15 தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் எனஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்துஇவண்
20 உள்ளி வந்தனென் யானே; விசும்புஉறக்
கழைவளர் சிலம்பின் வழையடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
25 அதிரா யாணர் முதிரத்துக் கிழவ
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுக நீ ஏந்திய வேலே!


அருஞ்சொற்பொருள்:
1.கடிப்பு = குறுந்தடி; இகுத்தல் = அறைதல், ஒலித்தல்; வால் = வெண்மை; வளை = சங்கு; துவைத்தல் = ஒலித்தல், முழங்கல். 2. கறங்கல் = ஒலித்தல்; வரை = மலையுச்சி. 4. பிறங்குதல் = உயர்தல். 6. கடத்தல் = வெல்லுதல். 10. ஈர் = குளிர்ச்சி; சிலம்பு = மலை; நளிதல் = செறிதல். 11. திறல் = வலிமை. 12. திருந்துதல் = ஒழுங்காதல், சிறப்புடையதாதல். 14. உலைவு = வறுமை; நனி = மிகுதியாக. 16. கொள்ளார் = பகைவர். 17. அழி = இரக்கம். 19. அற்றம் = துன்பம். 20 = விசும்பு = ஆகாயம். 21. கழை = மூங்கில்; சிலம்பு = மலை; வழை = சுரபுன்னை. 22. ஆசினி = ஒரு வகை மரம். 23. கடுவன் = ஆண் குரங்கு. 24.துய் = பஞ்சு மென்மை; கை இடூஉ = கையால் குறி செய்து ; பயிர்தல் = அழைத்தல். 25. அதிர்தல் = தளர்தல்; யாணர் = புது வருவாய்.

உரை: நெடிய மலையுச்சியிலிருந்து ஒலியுடன் கற்களில் மோதி ஓடி வரும் வெண்மையான அருவிகளுடைய பறம்பு மலைக்குத் தலைவன் பாரி. அவன், குறுந்தடிகளால் அறையப்பட்ட முரசுகள் ஒலிக்க வெண் சங்கு முழங்கத் தன்னுடன் போருக்கு வந்த மூவேந்தர்களுடன் போரிட்டவன். வலிய வில்லை உடைய ஓரி என்பவன், உயர்ந்த உச்சிகளையுடைய கொல்லி மலையை ஆண்டவன். காரி என்னும் குதிரையில் சென்று பெரும்போரில் வெற்றியும், மழை போன்ற வண்மையும், போர் புரிவதில் மிகுந்த வீரமும் உடையவன் மலையமான் திருமுடிக்காரி. எழினி என்று அழைக்கப்பட்ட அதியமான், உயர்ந்த (செலுத்தப் படாத) குதிரை என்னும் மலையையும், கூரிய வேலையும், கூவிள மாலையையும், வளைந்த அணிகலன்களையுமுடையவன். மிகக் குளிர்ந்த மலையின் இருள் செறிந்த குகையையும், மிகுந்த வலிமையும், கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியையும் உடைய பெரிய மலை நாடன் வையாவிக் கோப்பெரும் பேகன். நற்றமிழால் மோசி (உறையூர் ஏணிச்சேறி முடமோசியார்) என்னும் புலவரால் பாடப்பட்டவன் ஆய் அண்டிரன். நள்ளி என்பவன் ஆர்வத்தோடு தன்னை நினைத்து வருவோர் வறுமை முற்றிலும் தீருமாறு குறையாது கொடுக்கும் பெருமைக்குரிய வண்மையும் பகைவரைத் துரத்தி வெற்றி கண்ட வலிமையும் உடையவன். இவர் எழுவரும் மறைந்த பின்னர் இரக்கம் வரும் வகையில், பாடிவரும் பாணரும் மற்றவரும் படும் துன்பத்தை தீர்ப்பவன் நீ என்பதால் உன்னை நினைத்து நான் இங்கே விரைந்து வந்தேன்.

வானத்தைத் தொடுமளவிற்கு மூங்கில் வளரும் மலையிடத்து சுரபுன்னையோடு ஓங்கி, ஆசினி மரத்தோடு அழகாக வளர்ந்திருக்கும் பலாவின்மேல் ஆசைப்பட்டு, முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற ஆண்குரங்கு பஞ்சுபோல் மயிருடைய தலையையுடைய பெண் குரங்கைக் கையால் குறி செய்து அழைக்கும். இத்தகைய குறையாத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ! இவ்வுலகத்து விளங்கும் சிறப்பும் நன்கு செய்யப்பட்ட தேர்களும் உடைய குமணனே! புகழ் மேம்பட்ட வண்மையுடன் பகைவரை வென்று உன் வேல் உயர்வதாக!

157. ஏறைக்குத் தகுமே!

பாடியவர்: குறமகள் இளவெயினி. குறமகள் என்ற அடைமொழியிலிருந்து இவர் குறக்குலத்தைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. மலைவாழ் குறவர்கள் எயினர் என்றும் குறக்குலப் பெண்கள் எயினி என்றும் அழைக்கப்பட்டனர். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன். இவன் குறக்குலத்தில் தோன்றியவன். மலைநாட்டுப் பகுதி ஒன்றை ஆண்ட குறுநில மன்னர்களில் இவனும் ஒருவன். இவன் காந்தட் பூவாலாகிய மாலையை அணிபவன்.
பாடலின் பின்னணி: இப்பாடலில் குறமகள் இளவெயினி ஏறைக் கோனின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
5 நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
10 கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே.

அருஞ்சொற்பொருள்:
1.தமர் = தமக்கு வேண்டியவர்; தப்பின் = தவறு செய்தால்; நோன்றல் = பொறுத்தல். 2. கையறவு = வறுமை, செயலற்ற நிலை. 3. மைந்து = வலிமை. 6. சிலை = வில்; மலர்ந்த = விரிந்த. 7. கோடல் = செங்காந்தள் மலர். 8. ஆடுதல் = அசைதல், அலைதல்(தவழுதல்); தவிர்த்தல் = தடுத்தல்; மீமிசை = மலையுச்சி. 9. எல் = கதிரவன்; படுதல் = மறைதல்.9. தலைமயக்கம் = இடம் தடுமாற்றம். 10. கட்சி = சேக்கை; கடம் = காடு. 11. மடம் = மென்மை; நாகு = இளமை; பிணை = பெண்மான்; பயிர்த்தல் = அழைத்தல், ஒலித்தல்; விடர் = மலைப்பிளப்பு; முழை = குகை. இரு = பெரிய; புகர் = கபில நிறம், கருமை கலந்த பொன்மை; போத்து = விலங்கு துயிலிடம்; ஓர்த்தல் = கேட்டல்.

உரை: தமக்கு வேண்டியவர்கள் (சுற்றத்தார்) தவறு செய்தால் அதைப் பொறுத்துக் கொள்வதும், பிறர் வறுமையைக் கண்டு தான் நாணுதலும், தனது படைக்குப் பழி வராத வலிமையுடைவனாக இருத்தலும், வேந்தர்கள் உள்ள அவையில் நிமிர்ந்து நடத்தலும் நும்மால் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுந்த குணங்கள் அல்ல. எம் தலைவன், வில்லை வலித்தலால் அகன்ற மார்பினையும், கொல்லும் வேலினையும், செங்காந்தள் மலரான மாலையையும் கொண்ட குறவர்க்குத் தலைவன். தவழும் மேகங்களைத் தடுக்கும் பயன் பொருந்திய உயர்ந்த மலையின் உச்சியில் கதிரவன் மறையும் பொழுது, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து, தான் சேர வேண்டிய இடம் தெரியாமல் காட்டில் கலங்கிய ஆண்மான், தன் மெல்லிய இளம் பெண்மானை அழைக்கும் ஒலியை மலைப்பிளவில் இருந்து கபில நிறமான பெரிய புலி கேட்கும் பெரிய மலை நாடனாகிய எங்கள் ஏறைக் கோனுக்குத் அக்குணங்களெல்லம் தகுந்தனவாகும்.

சிறப்புக் குறிப்பு: நெடுங்காலமாக நண்பராக இருக்கும் ஒருவர், தன்னைக் கேளாது, உரிமையோடு ஒரு செயலைச் செய்தால், அதை விரும்பி ஏற்றுக் கொள்வதுதான் நெடுங்கால நட்பின் அடையாளம் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். (குறள் - 804)

என்ற குறளில் கூறுவது இங்கு ஒப்பிடத் தக்கதாகும்.

156. இரண்டு நன்கு உடைத்தே!

பாடியவர்: மோசிகீரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 154-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 154-இல் காணாலாம்
பாடலின் பின்னணி: இப்பாடலில் மோசிகீரனார் கொண்கான மலையின் வளத்தையும் கொண்கானங் கிழானின் வெற்றிகளையும் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஒன்றுநன் குடைய பிறர்குன்றம் என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
5 நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
3.நச்சி = விரும்பி; சுட்டி = குறித்து. 4. தொடுத்து = சேர்த்து. 5. நிறை = திண்மை; 6. பெயர்தல் = திரும்பல்; செம்மல் = அரசன், தலைவன்.

உரை: மற்றவர்களின் மலைகள் ஒரே ஒரு சிறப்புடையதாக (நன்மை உடையதாக) இருக்கும். ஆனால், கொண்கானம் எந்நாளும் இரண்டு சிறப்புகளுடையது (நன்மைகளையுடையது). ஒன்று, பரிசில் பெற விரும்பிச் சென்ற இரவலர் தனது என்று குறிப்பிட்டுச் சேகரித்து உண்ணக் கூடிய உணவுப் பொருட்களை உடையதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், நிறுத்தற்கரிய படையுடைய வேந்தர்களைத் திறை கொண்டுவந்து கொடுத்து திருப்பி அனுப்பும் தலைவனும்(கொண்கானங் கிழானும்) உடையது.