Monday, January 24, 2011

220. கலங்கினேன் அல்லனோ!

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.

பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார் மனம் கலங்கி அழுதார். தன்னுடைய செயலற்ற நிலையை, யானையை இழந்த ஒரு யானைப்பாகனோடு ஒப்பிட்டு இப்பாடலில் தன்னுடைய தாங்கமுடியாத வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்,
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
5 கலங்கினேன் அல்லனோ யானே, பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

அருஞ்சொற்பொருள்:
1. பயந்து = தந்து; புரத்த = பாதுகாத்த. 2. பைதல் = வருத்தம், 3. அல்கல் = தங்குதல்; அழுங்குதல் = வாய்விட்டு அழுதல்; ஆலை = யானைக் கூட்டம். 4. வெளில் = தறி, தூண்; கலுழ்தல் = அழுதல், கலங்கல். 6. கிள்ளி = சோழன். 7. மூதூர் = உறையூர்; மறம் = அவை; போகிய = சென்ற.

கொண்டு கூட்டு: மூதூர் மன்றம் கண்டு கலங்கினேன் அல்லனோ எனக் கூட்டுக.

உரை: பெருமளவில் சோற்றை அளித்துத் தன்னைப் பாதுகாத்துவந்த பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன், அந்த யானை தங்கியிருந்த இடத்தில், தூண் வெறிதாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல், பொன்மாலை அணிந்தவனும் தேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத பெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு நானும் கலங்கினேன் அல்லனோ?

219. உணக்கும் மள்ளனே!

பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் (219). நான்கு பெரிய தெருக்கள் கூடும் இடத்திற்குப் பெருஞ்சதுக்கம் என்று பெயர். பெரிய ஊர்களில், பெருஞ்சதுக்கங்களில் பூதங்களுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்யும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. சிலப்பதிகாரத்திலும் சதுக்கப் பூதத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் கருவூர் ஒரு பெரிய ஊராக இருந்ததால் அங்கிருந்த பெருஞ்சதுக்கம் ஒன்றில் கோயில்கொண்ட பூதத்தின் பெயர் கொண்டவர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த காலத்து இப்புலவர் மற்ற புலவர்களுடன் சேர்ந்து வடக்கிருக்க வர இயலவில்லை போலும். இவர் கோப்பெருஞ்சோழனைக் காணவந்த பொழுது அவன் இறந்து கிடந்தான். அதைக் கண்ட கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், “ நீ வடக்கிருந்த பொழுது நான் வராததால் நீ என்னை வெறுத்தாயோ?” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே!
பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. உள் ஆறு = ஆற்று உள்ளே (அரங்கம், ஆற்றின் நடுவே உள்ள இடம்.); கவலை = பிரியும் வழி; புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழல். 2. வள்ளுரம் = தசை; உணக்கும் = வாட்டும், வருத்தும்; மள்ளன் = வீரன். 3. புலத்தல் = வெறுத்தல்; மாதோ – அசைச் சொல். 4. குறி = இடம்.

உரை: ஆற்றின் நடுவே இருக்கும் இடத்தில் (அரங்கத்தில்) உள்ள மர நிழலில், உடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வகையில் வடக்கிருந்த வீரனே! நீ வடக்கிருந்த பொழுது அதே இடத்தில் உன்னோடு பலரும் வடக்கிருந்தனர். அப்பொழுது நான் வராததால் என்னை நீ வெறுத்தாய் போலும்.

218. சான்றோர் சாலார் இயல்புகள்!

பாடியவர்: கண்ணகனார் (218). இவர் கோப்பெருஞ்சோழனின் காலத்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே. இவர் நற்றிணையில் 79 – ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார். மற்றும், இவர் பரிபாடலில் 21-ஆம் பாடலுக்கு இசை வகுத்தாகவும் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்த பிறகு பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழநாட்டிற்கு வந்து, கோப்பெருஞ்சோழன் உயிர் நீத்த இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார். அதைக் கண்டு வியந்த புலவர் கண்ணகனார் தன்னுடைய உணர்வுகளை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
5 சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

அருஞ்சொற்பொருள்:
1. துகிர் = பவளம்; மன்னிய = நிலைபெற்ற. 2. பயந்த = தந்த; காமர் = விருப்பம். 3. தொடை = தொடுத்தல். 5. பால் = பக்கம்.

உரை: பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய உயர்ந்த குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குணங்கள் இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.

217. நெஞ்சம் மயங்கும்!

பாடியவர்: பொத்தியார் (217, 220 - 223). இவர் கோப்பெருஞ்சோழனின் நெருங்கிய நண்பர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது தானும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர், தன் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவர், அவன் வடக்கிருந்த இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்ததாகக் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததையும், அவனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பையும், பிசிராந்தையார் நிச்சயமாக வருவார் என்று சோழன் கூறியதையும், அவன் கூறியதுபோல் பிசிரந்தையார் வந்ததையும் நினைத்துப்பார்த்துப் பொத்தியார் மிகவும் வியப்படைகிறார். இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
5 இசைமரபு ஆக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
10 அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!

அருஞ்சொற்பொருள்:
1. மருட்கை = திகைப்பு, மயக்கம், வியப்பு. 2. துணிதல் = முடிவெடுத்தல். 4. சான்ற = அமைந்த; போற்றி = பாதுகாத்து. 5. இசை = புகழ்; கந்து = பற்றுக்கோடு. 6. இனைய = இத்தகைய; ஈங்கு = இங்கு. 7. கோன் = கோப்பெருஞ்சோழன். 9. இறந்த = கடந்த; அன்னோன் = கோப்பெருஞ்சோழன். 13. அளியது = இரங்கத்தக்கது.

உரை: இத்துணைப் பெரிய சிறப்புடைய மன்னன் இவ்வாறு வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததை நினைத்தாலே வியப்பாக உள்ளது. வேறு நாட்டில் தோன்றிய சான்றோன் ஒருவன், புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இந்தகைய நேரத்தில் இங்கு வருவது அதைவிட வியப்பானது. அவன் வருவான் என்று கூறிய கோப்பெருஞ்சோழனின் பெருமையும், அவ்வாறு தவறாமல் வந்தவனின் அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும், வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது. தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும் சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற புகழ் மிக்க அரசனை இழந்த இந்நாடு என்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.

216. அவனுக்கும் இடம் செய்க!

பாடியவர்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 212-இல் காண்க.
பாடலின் பின்னணி: பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்று தன் அருகில் இருக்கும் சான்றோர்கள் சந்தேகப்படுவதை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், ”அவர் நிச்சயமாக வருவார்; அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று இப்பாடலில் குறிப்பிடுகிறான்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
5 ஐயம் கொள்ளன்மின்; ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்கும் காலை ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும் சிறந்த
10 காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே!

அருஞ்சொற்பொருள்:
1. மாத்திரை = அளவு; யாவதும் = சிறுபொழுதும். 2. காண்டல் = காணுதல்; யாண்டு = ஆண்டு. 3. வழு = தவறு. 4.தோன்றல் = அரசன்; அதற்பட = அவ்வாறு. 5. ஆர் = நிறைவு. 6. யாத்தல் = பிணித்தல், கட்டல். 7. வரூஉம் = வரும். 8. கிளக்கும் = கூறும். 9. பேதை = களங்கமில்லாத் தன்மை. 10. கிழமை = உரிமை; தலை = மேலே. 12. இன்னே = இப்பொழுதே; ஒழிக்க = ஒதுக்குக.

உரை: ” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. நன்கு பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பின், இந்நிலையில் அவர் உன்னுடன் இருப்பதுதான் முறை. ஆயினும் அவர் அம்முறைப்படி நடத்தல் அரிது.” என்று சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே! என் நண்பன் பிசிராந்தையார் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; அவன் மிகவும் இனியவன்; நெருங்கிய நட்பு கொண்டவன்; புகழை அழிக்கும் போலித்தனங்களை (பொய்யை) விரும்பாதவன். அவன் பெயர் என்னவென்று கேட்டால் தன் பெயர் ’களங்கமில்லாத சோழன்’ என்று கூறும் சிறந்த அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே, இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்; அவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

Monday, January 10, 2011

215. அல்லற்காலை நில்லான்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 213-இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, அவனைச் சூழ்ந்திருந்தவர்கள், பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து வடக்கிருக்கும் கோப்பெருஞ்சோழனைக் காணவருவாரோ வரமாட்டாரோ என்று சந்தேகப்பட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேள்விப்பட்ட கோப்பெருஞ்சோழன், “பிசிராந்தையார் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்திலிருக்கும் பொழுது அவர் கண்டிப்பாய் என்னைப் பார்க்க வருவார்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
5 அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.

அருஞ்சொற்பொருள்:
1. கவை = பிளப்பு; அவைப்பு = குற்றல்; ஆக்கல் = சமைத்தல். 2. தாதெரு = தாது+எரு = தாது எருவாக; மறுகு = தெரு; போது = பொழுது; பொதுளிய = தழைத்த. 4. மிதவை = கூழ். 5. ஆர = நிரம்ப; மாந்தல் = உண்ணுதல். 6. பொருப்பு = மலை. 7. பிசிர் – ஊர்ப்பெயர்; ஓம்புதல் = பாதுகாத்தல். 8. செல்வன் = அரசன். 9. அல்லல் = துன்பம்; மன் – அசைச்சொல்.

உரை: பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும், பூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந்த புழுதியையுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, இடைச்சியர் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரையைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும் தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவர் ஆந்தையார். அவர் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும் நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டார்.

214. நல்வினையே செய்வோம்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 213-இல் காண்க.
பாடலின் பின்னணி: பகையின் காரணத்தால் கோப்பெருஞ் சோழன் தன் மகன்களுடன் போர் செய்யத் தொடங்கினான். ஆனால், புல்லாற்றூர் எயிற்றியனார் போன்ற புலவர் பெருமக்களின் அறிவுரைக்கு இணங்கிப் போரை நிறுத்தினான். போரை நிறுத்தினாலும் அவன் மனவருத்தத்துடன் இருந்தான். அவ்வருத்ததால் அவன் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தான். அவ்வாறு செய்வதை ஒரு உயர்ந்த நற்செயல் என்று கருதினான். அவன் வடக்கிருந்த பொழுது, அவனுடன் இருந்த சான்றோர் சிலர் அவனுடைய செயலால் என்ன நன்மை அடையப் போகிறான் என்று பேசத் தொடங்கினர். அவர்கள் சொல்வதைக் கேள்வியுற்ற கோப்பெருஞ்சோழன், “ நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டுமல்லாமல், வீடு பேறும் பெறலாம்; அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம். பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்” என்ற கருத்துகளை இப்பாடலில் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில்,
10 மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே

அருஞ்சொற்பொருள்:
1. கொல் – ஐயப்பொருளில் வரும் இடைச்சொல். 2. கசடு = ஐயம்; மாசு, குற்றம். ஈண்டுதல் = நிறைதல், செறிதல்; காட்சி = அறிவு. 5. பூழ் = சிறு பறவை, காடை (ஒருவகைப் பறவை). 7. மருங்கு = கூறு. 8. தொய்தல் = வினை செய்தல்; தொய்யா உலகம் = விண்ணுலகம். 12. கோடு = மலையின் உச்சி; இசை = புகழ். 13. யாக்கை = உடல்; மாய்தல் = இறத்தல்; தவ = மிக; தலை = பெருமை.

கொண்டு கூட்டு: உயர்ந்திசினோர்க்கு, நுகர்ச்சியும் கூடும்; பிறப்பின் இன்மையும் கூடும்; இசை நட்டு மாய்தல் தவத்தலையே எனக் கூட்டுக.

உரை: மனத்தில் மாசுடன், தெளிந்த அறிவு இல்லாதவர்கள்தான் நல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள். யானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்; சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம். அதனால், உயுர்ந்தவற்றுள் விருப்பமுடையவர்களுக்கு அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால், விண்ணுலக இன்பம் கிடைக்கலாம். விண்ணுலக மட்டுமல்லாமல், மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் (வீடு பேறு) பெறலாம். பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின் சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக், குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.

சிறப்புக் குறிப்பு: ”தொய்தல்” என்றால் வினை செய்தல் என்று பொருள். இவ்வுலகில் வாழும்பொழுது, மனிதன் செய்யும் செயல்களில் சில நற்செயல்களாகவும் சில தீய செயல்களாகவும் அமைகின்றன. வாழ்நாளில் செய்த நற்செயல்களுக்கேற்ப, இறந்த பிறகு விண்ணுலகத்தில் மனிதன் இன்பத்தை நுகர்வான் என்பது மதவாதிகளின் நம்பிக்கை. மற்றும், விண்ணுலகத்தில் உள்ளவர்கள் இன்பம் நுகர்வதைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்யாததால், விண்ணுலகத்தைத் “தொய்யா உலகம்” என்று இப்பாடலில் கோப்பெருஞ்சோழன் குறிப்பிடுகிறான்.

விண்ணுலகில் இன்பம் நுகர்ந்த பிறகு, மண்ணுலகில் மீண்டும் பிறக்கும் நிலை உண்டு என்பது சில மதங்களின் அடிப்படை நம்பிக்கை. அவரவர்களின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். நல்வினையும் திவினையும் அற்ற நிலையில் பிறவாமை என்ற நிலையை அடையலாம். பிறவாமை என்ற நிலையை அடைந்தவர்கள் வீடுபேறு அடைந்ததாகக் கருதப்படுகிறார்கள். வீடுபேறு என்பதை “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)

என்ற குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

213. நினையும் காலை!

பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார். புல்லாற்றூர் என்பது காவிரியாற்றின் வடகரையில் உள்ள ஊர்களில் ஒன்று. எயிற்றியனார் என்பது இவர் இயற்பெயராக இருந்திருக்கலாம். இவர் புல்லாற்றுரைச் சார்ந்தவராக இருந்ததால் புல்லாற்றூர் எயிற்றியனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 212-இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாகப் போர் மூண்டது. அச்சமயம், புல்லாற்றுர் எயிற்றியனார், ”உன்னோடு போருக்கு வந்திருப்போர் சேரனோ பாண்டியனோ அல்லர். நீ இறந்த பிறகு உன் நாட்டை ஆளும் உரிமை பெறப்போகிறவர்கள் இப்போது உன்னோடு போரிட வந்திருக்கும் உன் புதல்வர்கள்தானே? போரில் உன் புதல்வர்கள் தோற்றால் உன் பெருஞ்செல்வத்தை யாருக்குத் தரப்போகிறாய்? நீ போரில் தோற்றால் பெரும்பழிதானே நிலைத்து நிற்கும்? அதனால், போரைக் கைவிடுவதே சிறந்ததாகும்.” என்று அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயன்றதாக இப்பாடலில் காண்கிறோம்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்
5 தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்
நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
10 உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால் அன்னது ஆதலும் அறிவோய், நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
15 எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே! வல்விரைந்து
20 எழுமதி; வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.

அருஞ்சொற்பொருள்:
1. மண்டு = மிகுதி, செறிவு; அமர் = போர்; அட்ட = வென்ற; மதன் = மிகுதி; நோன் = வலிமை; தாள் = முயற்சி. 2. விறல் = வெற்றி; கெழு = பொருந்திய. 3. உடுத்த = சூழ்ந்த; மலர்தல் = விரிதல். 5. துப்பு = வலிமை. 6. அமர் = போர்; வெம்மை = விருப்பம். 8. அடுதல் = வெல்லுதல், கொல்லல்; மான் = விலங்கு (யானை); தோன்றல் = அரசன். 9. மற்று – அசைச் சொல். 11. தாயம் = அரசுரிமை. 13. வெய்யோய் = விரும்புபவன். 15. காட்சி = அறிவு. 17. செல்வன் = அரசன்; உலைவு = தோல்வி. 18. இகழுநர் = பகைவர். 19. அத்தை – அசை; மறன் = மறம் = வீரம், வெற்றி, போர்; தில் – விழைவுக் குறிக்கும் அசைச்சொல். 20 மதி – முன்னிலை அசைச்சொல். 21. ஏமம் = பாதுகாப்பு. 23. ஆன்றவர் =அமரர். 23. விதும்பல் = ஆசைப்படுதல்.

கொண்டு கூட்டு: வேந்தே, நின் மதன் ஒழிக; ஆன்றவர் விருந்தெதிர் கொளற்கு நன்று செய்தல் வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்து எழுவாயாக; நின் உள்ளம் வாழ்வதாக எனக் கூட்டுக.

உரை: மிகுந்த வலிமையோடும் முயற்சியோடும் பகைவர்களைப் போரில் கொன்று, வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தே! கடல் சூழ்ந்த, பரந்த இவ்வுலகில், உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால், அவர்கள் நெடுங்காலமாக உன்னுடன் பகைகொண்ட வலிமையுடைய சேரரோ பாண்டியரோ அல்லர். போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப் பகைவன் அல்லன் என்பது அவர்களுக்குத் தெரியும். பகைவர்களைக் கொல்லும் யானைகளையுடைய தலைவ! பெரும்புகழை அடைந்து, நீ தேவருலகம் சென்ற பிறகு, உன் நாட்டை ஆளும் அரசுரிமை அவர்களுக்கு உரியதுதானே? அவ்வாறு ஆதல் நீ அறிவாய். நான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேள். புகழை விரும்புபவனே! உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும் ஆராயும் திறனும் அறிவும் இல்லாத உன் மக்கள் தோற்றால், உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்? போரை விரும்பும் அரசே! நீ அவரிடம் தோற்றால் உன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ்வார்கள். மற்றும், பழிதான் மிஞ்சும். அதனால், போரை விடுத்து விரைவில் புறப்படுவாயாக. அஞ்சுபவர்களுக்குப் பாதுகாப்பாக உனது நிழல் இருக்கட்டும். பெறுதற்கரிய விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று, விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ விரும்பினால், நல்ல செயல்களை மனம் மயங்காமல் செய்ய வேண்டும். உன் உள்ளம் வாழ்வதாக.

212. யாம் உம் கோமான்?

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ் சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ் சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.

பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்(67, 212, 213, 219, 221, 222, 223). கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. கிள்ளி வளவன் கரிகாலனின் பேரன் என்று சிலர் கூறுவர். ஆனால், வேறு சிலர் கிள்ளி வளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது, புறநானூற்றில் இவன் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மகன்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: பாண்டிய நாட்டில் இருந்த பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அந்நட்பின் காரணமாகக் கோபெருஞ்சோழனைத் தன் வேந்தனாகவே கருதினார். “என் வேந்தன் கோப்பெருஞ்சோழன் உழவர்களை விருந்தோம்பல் செய்து ஆதரிப்பவன். அவன் உறையூரில் பொத்தியார் என்னும் பெரும் புலவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்
யாமைப் புழுக்கில் காமம் வீடஆரா
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
5 வைகுதொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்நாட் டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்;
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10 வாயார் பெருநகை வைகலும் நக்கே.

அருஞ்சொற்பொருள்:
2. களமர் = உழவர்; அரித்த = வடித்த; வெம்மை = விருப்பம். 3. புழுக்கு = அவித்தது; ஆர்தல் = உண்டல்; காமம் = ஆசை; வீடல் = விடுதல். 4. ஆரல் = ஒருவகை மீன்; சூடு = சுடப்பட்டது; கவுள் = கன்னம். 5. வைகுதல் = இருத்தல்; மடிதல் = முயற்சி அற்றுப்போதல். 6. யாணர் = புது வருவாய். 7. பைதல் = துன்பம், வருத்தம். 8. கோழியூர் = உறையூர். 9. பொத்து = குற்றம், குறை; கெழீஇ = பொருந்தி. 10. வாயார் = வாய்மை அமைந்த; நக்கு = மகிழ்ந்து.

கொண்டு கூட்டு: நும்கோ யார் என வினவின், எம் கோ கோப்பெருஞ்சோழன்: அவன் பசிபகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டுக.

உரை: “உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன் கோப்பெருஞ்சோழன். உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, விரும்பத்தகுந்த கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு, வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து விழாக்கோலம் கொண்டதுபோல் சுற்றித் திரியும் வளமை மிகுந்தது சோழநாடு. அத்தகைய புதுவருவாய் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன். அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் உண்மையான பெருமகிழ்ச்சியோடு உள்ளான்.

211. நாணக் கூறினேன்!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 147 – இல் காண்க.
பாடப்பட்டோன்:
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 210 – இல் காண்க.
பாடலின் பின்னணி: சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெற விரும்பிச் சென்ற பெருங்குன்றூர் கிழார் அவன் அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருந்தார். அவன் அவருக்குப் பரிசு அளிக்காமல் காலம் கடத்தினான். அவர், அவன் வெற்றிகளைப் புகழ்ந்து பாடினார். அவன் அவருடைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தான். அவன் பரிசு கொடுப்பதுபோல் சிலசெயல்களைச் செய்தான். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஆனால், பரிசு கொடுக்காமல் அவன் தன்னை ஏமாற்றுவதை அவர் உணர்ந்தார். இனி, சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெறுவதற்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தார். ”உன்னிடம் பரிசில் பெறலாம் என்று எண்ணி வந்தேன்; உன்னைப் புகழ்ந்தேன். நான் பாடிய படல்களை நீ விரும்பிக் கேட்டாய். பரிசு கொடுக்காத பிறருடைய கொடிய செயல்களையும் கூறினேன். ஆனால், நீ பரிசு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாய். உண்ண உணவில்லாததால், என் வீட்டின் பழைய சுவர்களைப் பல இடங்களில் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் புதல்வன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். நான் என் மனைவியை நினைத்து அவளிடம் செல்கிறேன். நீ வாழ்க!” என்று கூறிப் பெருங்குன்றூர் கிழார், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம்இருந்து விடை பெற்றுச் சென்றதாக இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
5 முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
10 உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்
கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
15 பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
20 பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே.

அருஞ்சொற்பொருள்:
1. மரபு = இயல்பு; புயல் = மழை பெய்தல்; ஏறு = பெரிய இடி. 2. அரவம் = பாம்பு, ஓசை; அணங்குதல் = அஞ்சுதல்; துமிதல் = வெட்டப்படுதல். 3. மிளிர்தல் = பிறழ்தல். 4. தூஎறியும் = தூவ எறியும்; தூவல் = சிந்தல், சிதறல். 5. தலைச் சென்று = மேற்சென்று. 6. அரைசு = அரசு; உரை = புகழ்; சால் = மிகுதி, நிறைவு; தோன்றல் = அரசன். 7. உள்ளி = நினைத்து. 9. கொள்ளா = ஏற்றூ கொள்ளாத. 10. மன்ற = நிச்சயமாக. 12. புறநிலை = வேறுபட்ட நிலை. 14. நுணங்குதல் = நுண்மையாதல். 16. ஆடு = வெற்ற; வியன் = அகன்ற. பழிச்சுதல் = வாழ்த்துதல். 17. வைகல் = நாள். 18. வல்சி = உணவு; வயின் = இடம். 19. மடிதல் = சாதல்; வரைப்பு = எல்லை. 22. வாள்நுதல் = ஒளிபொருந்திய நெற்றி; படர்ந்து = நினைத்து.

கொண்டு கூட்டு: தோன்றல், நின் உள்ளி வந்த பரிசிலன் ஆகிய நான் கூற, நின் உள்ளியது செய்தலான், வருத்தம் கூறி ஏத்தித் தொழுதனென் பழிச்சி, வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனோடு தொலைந்திருந்த என் வாள்நுதலை நினைத்துச் செல்வல் எனக் கூட்டுக.

உரை: அச்சம் தரும் இயல்புடைய பெருமழை பெய்யும்பொழுது, இடியோசைக்கு அஞ்சும் பாம்பின் தலையைப் பிளக்கும் பெரிய இடிபோல் உன் முரசு ஒலிக்கிறது. மற்றும், உன் முரசின் ஒலியைக் கேட்டு, நிலத்தை நிமிர்ந்து நின்று பார்ப்பதுபோல் உயர்ந்து நிற்கும் நெடிய மலைகள் அதிர்கின்றன; சிறிய குன்றுகள் சிதறுகின்றன. அத்தகைய முரசின் முழக்கத்தோடு சென்று, வேந்தர்கள் பலரையும் எதிர்நின்று கொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளல் தன்மை உடையவனாதலால், என்னை வணங்கி, எனக்குத் தகுந்த பரிசு அளிப்பாய் என்று உன்னை நினைத்து வந்த உயர்ந்த பரிசிலன் நான். என் போன்ற புலவர்களை ஏற்றுக்கொண்டு, எமக்குப் பரிசளிக்காதவர்களின் கொடிய செயல்களைச் சொல்லக் கேட்டும், நீ நினைத்ததை நீ நிச்சயமாகச் செய்து முடித்தாய். முதல் நாள், பரிசிலை எனக்குக் கொடுப்பதுபோல் காட்டிப் பின்னர் அது இல்லாதவாறு நீ செய்ததை நினைத்து நான் வருந்துவதற்கு நீ வெட்கப்படவில்லை. நீ வெட்கப்படும் வகையில், நான் நுணுக்கமாக ஆய்வுசெய்து, என் செவ்விய நாக்கு வருந்துமாறு, நாள்தோறும், உன்னைப் புகழ்ந்து பாடப்பாடக் கேட்டு மகிழ்ந்தாய். வெற்றி பொருந்திய அகன்ற மார்பையுடைய உன்னை வாழ்த்துகிறேன்.

நாள்தோறும், உணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. அத்தகைய பழைய சுவர்களையுடைய வீட்டில் என் மனைவி வாழ்கிறாள். பலமுறை சுவைத்தும் என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் மகன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். அத்தகைய வறுமையில் வாடும் என் மனைவியின் ஒளிபொருந்திய நெற்றியை நினைத்து நான் செல்கிறேன்.