Friday, April 27, 2012

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!

பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார். தங்கால் என்பது விருதுநகருக்கு அருகிலுள்ள ஓரூர். இவ்வூர், ‘இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவரின் பெயர் தங்கால் பொற்கொல்லன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அகநூல்களில் இவர்பெயர் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்று காணப்படுவதால் இவரது இயற்பெயர் வெண்ணாகனார் என்பதாக இருக்கலாம் என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் புறநானூற்றில் ஒருபாடலும்(326), அகநானூற்றில் மூன்று பாடல்களும் (48, 108, 355), நற்றிணையில் ஒருபாடலும் (313), குறுந்தொகையில் ஒரு பாடலும் (217) இயற்றியதாகக் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒருகால், புலவர் தங்கால் பொற்கொல்லனார் ஒரு மறக்குடியைச் சார்ந்த தலைவன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றார். அங்கே, அத்தலைவனின் ஈகையையும், அவன் மனைவியின் விருந்தோம்பலையும் இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக் 5


கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் விதவை 10


யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. 15

அருஞ்சொற்பொருள்: 1. முதுமை = பழமை; பார்நடை = மெத்தென்ற நடை; வெருகு = காட்டுப் பூனை. 2. வெரு = அச்சம்; நாகு = இளமை; பேடை = பெண்பறவை. 3. புலாவிடல் = தொண்டை கிழியக் கூவுதல். 4. சிறை = குச்சி, கிளை; செற்றை = செத்தை; புடைத்தல் = முறத்தில் இட்டுத் தட்டுதல். 6. கவிர் = முள்முருங்கை; நெற்றி = உச்சி. 7. மிளை = காவற்காடு; இருக்கை = இருக்குமிடம். 8. சேண்புலம் = தொலைவிலுள்ள இடம்; படர்தல் = செல்லுதல். 9. படுதல் = ஒலித்தல்; மடை = வாய்க்கால். 10. விழுக்கு = தசை; விதவை = கூழ். 11. யாணர் = புதுவருவாய். 12. அயர்தல் = செய்தல். 13. சமம் = போர்; ததைதல் = சிதைதல். 15. ஓடை = நெற்றிப்பட்டம்.

கொண்டு கூட்டு: ஊர் இருக்கையது; மனைவியும் விருப்பினள்; கிழவனும் பரிசிலன் எனக் கூட்டுக.

உரை: ஊரிலுள்ள பழைய வேலியடியில் பதுங்கியிருக்கும் மெத்தென்ற நடையுடைய காட்டுப்பூனை, இருளில் வந்து இளம் பெட்டைக் கோழியை வருத்துகிறது. அதனால், அக்கோழி உயிர் நடுக்குற்று தொண்டை கிழியக் கத்துகிறது. குச்சிகளையும், செத்தையையும் அகற்றுவதற்காக எழுந்த நூல் நூற்கும் பெண்ணின் விளக்கொளியில், முருக்கம் பூப்போன்ற கொண்டையையுடைய சேவற்கோழியைக் கண்டு பெட்டைக்கோழி அச்சம் தணியும். இவ்வூர் கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது. இவ்வூர்த் தலைவனின் மனைவி, வேடர்களின் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் நீரொலிக்கும் வாய்க்காலில் பிடித்துவந்த குறுகிய காலையுடைய உடும்பின் தசையைத் தயிரோடு சேர்த்துச் சமைத்த கூழ்போன்ற உணவையும், புதிதாக வந்த நல்ல உணவுப் பொருட்களையும் பாணர்களுக்கும் அவர்களோடு வந்த மற்ற விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்பிக்கும் விருப்பமுடையவள். இவ்வூர்த் தலைவன், அரிய போர் அழியுமாறு தாக்கித், தலைமையையுடைய யானைகள் அணிந்திருந்த பொன்னால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் முதலியவற்றை பெரும்பரிசிலாகப் பாணர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குபவன்.

சிறப்புக் குறிப்பு: ‘பார்த்தல்’ என்ற சொல்லுக்கு ‘கவனித்தல்’ என்று ஒருபொருள் உண்டு. பூனை தன் இரையைப் பிடிப்பதற்காகக் கவனமாக நடப்பதை ‘ பார்நடை’ என்று புலவர் குறிப்பிடுகிறார்.

போர் வந்தால் அஞ்சுவது மகளிரின் இயல்பு. அவ்வாறு அஞ்சினாலும், வீரனாகிய தன் கணவன் போரில் ஈடுபட்டிருப்பதால் வெற்றி பெறுவது உறுதி என்ற எண்ணமும் அவர்களுக்கு எழலாம். காட்டுப் பூனையைக் கண்டு பெட்டைக் கோழி அஞ்சினாலும், தனக்குத் துணையாகிய சேவல் இருப்பதைக் கண்டு அக்கோழியின் அச்சம் தணிகிறது என்று புலவர் கூறுவது, உள்ளுறையாக மகளிரின் மனநிலையைக் காட்டுவதாகத் தோன்றுகிறது.

325. வேந்து தலைவரினும் தாங்கும்!

325. வேந்து தலைவரினும் தாங்கும்!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (27 – 30, 325). இவர் உறையூரைச் சார்ந்தவர். இவர் தந்தையாரின் பெயர் முதுகண்ணன். இவர் சோழன் நலங்கிள்ளியைப் புகழந்து பாடியவர். இவர் இயற்றிய பாடல் குறுந்தொகையிலும் ஒன்று உண்டு (133). புறநானூற்றுப் பாடல் 29 -இல் “நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்” என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார். மற்றும், அதே பாடலில், உலகம் தோன்றி நின்று மறைவதைக் கூத்தர்களின் கோலத்திற்கு உவமையாகக் கூறுகிறார்.

பாடலின் பின்னணி: ஒருகால் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் போரில் வெற்றிபெற்ற வீரன் ஒருவனைக் காணச் சென்றார். அவனது ஊரையும், ஊர் மக்களையும், அவர்களது ஈகையையும் இப்பாடலில் அவர் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை 5


முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து 10


அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே வென்வேல்

வேந்துதலை வரினும் தாங்கும்

தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே. 15

அருஞ்சொற்பொருள்: 1. களிறு = கருநிறப்பன்றி; நீறு = புழுதி; விடுநிலம் = தரிசு நிலம்; மருங்கு = பக்கம். 2. வம்பு = புதுமை; பெயல் = மழை; வரைதல் = தனக்குரியதாக்கல். 3. சின்னீர் = சிறிதளவு நீர்; குரால் = கன்றையுடைய பசு (அல்லது ஒருவகைப் பசு). 4. கிளைத்தல் = நீக்குதல்; கலுழ்தல் = கலங்கல். 6. முளவு =முள்ளம் பன்றி. 7. இழுது = தசை; ஒடு = ஒடுமரம்; காழ் = வயிரம், உறுதி; படலை = கட்டுக்கதவு (படல்). 10. மறுகு = தெரு; மதுகை = வலிமை. 11. அலந்த = வாடிய (உலர்ந்த); அலந்தலை = அலந்த தலை; இரத்தி = ஒருவகை மரம்; அலங்குதல் = அசைதல். 12. கயம் = இளமை. 13. மிளை = காவற்காடு; இருக்கை = இருப்பிடம், குடியிருப்பு, ஊர். 14. தலைவருதல் = தோன்றுதல்; தாங்குதல் = தடுத்தல். 15. தாங்கா = குறையாத.

கொண்டு கூட்டு: ஆடவர், முன்றில் கூறுசெய்திடுமார் வைத்த நிணம் கமழும் மன்றத்து நீழல் சிறார் விளையாடும் இருக்கையது நெடுந்தகை ஊர்.

உரை: பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட தரிசு நிலத்தில் புதிதாக வந்த பெருமழை அளவு கடந்து பெய்து அவ்விடத்தைவிட்டு நீங்கியது. அதனால், பள்ளங்களில் தங்கிய சிறிதளவு நீரை, கன்றையுடைய பசு குடித்து முடித்தது. அங்குள்ள மக்கள், சேற்றைத் தோண்டியதால் தோன்றிய கலங்கிய நீரை முறையாகப் பகிர்ந்து குடிப்பவர்கள்; வறுமையில் வாழ்பவர்கள். அங்குள்ள ஆடவர்கள் முள்ளம்பன்றியைக் கொல்பவர்கள். அவர்கள் சொல்லியதைச் சொல்லியவண்ணம் செய்து முடிப்பவர்கள். அவர்கள் அறுத்தெடுத்த உடும்பின் தசையை ஒடுமரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்திய சிறிய வீட்டின் முற்றத்தில் எல்லாரும் பகிர்ந்து உண்ணுவதற்காக நெருப்பில் வாட்டுவர். அப்பொழுது, நெருப்பில் வாட்டிய புலாலின் மணம் தெருவெங்கும் கமழும். ஊர் மன்றத்தில் நிற்கும் உலர்ந்த தலையையுடைய மரத்தின் நிழலில், இளஞ்சிறுவர்கள் அம்பெய்தி விளையாடுவர். அவ்வூர் கடத்தற்கரிய காவற்காடுகள் உள்ள நாட்டில் உள்ளது. குறையாத ஈகையையுடைய இத்தலைவனுடைய ஊருக்கு, வெற்றி பயக்கும் வேலையுடைய வேந்தன் தன் படையுடன் வந்தாலும் அவ்வூரில் உள்ளவர்கள் அவனை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: ’விடு நிலம்’ என்பது ஆநிரைகள் மேய்வதற்காக ஊரால் பொதுவாக விடப்பட்ட நிலம். ’வம்பு’ என்ற சொல்லுக்கு புதுமை என்று பொருள். ‘வம்பப் பெரும்புயல்’ என்பது, எதிர்பாராமல் பெய்த பெருமழையைக் குறிக்கிறது.

324. உலந்துழி உலக்கும்!

324. உலந்துழி உலக்கும்!

பாடியவர்: ஆலத்தூர் கிழார் (34, 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (112, 350) இயற்றியுள்ளார்.


பாடலின் பின்னணி: ஒருகால், ஒரு சிற்றூரின் தலைவன் ஒருவன் போர்களில் வெற்றிபெற்றுப் புகழுடன் விளங்கினான். அவன் பெரும்புகழுக்குரியவனாக இருந்தாலும் தன்னை நாடிவந்த பாணர்களுடன் மிகவும் எளிமையாகப் பழகுபவன். அவன் வீரத்தையும், பாணர்களோடு பழகும் எளிமையையும், அவன் அரசனுக்கு உறுதுணையாக இருப்பதையும் இப்பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


வெருக்குவிடை அன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வான்முள்
ஊக நுண்கோல் செறித்த அம்பின் 5


வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
குமிழ்உண் வெள்ளைப் மறுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வன்காற் பந்தர் 10


இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.


அருஞ்சொற்பொருள்: 1. வெருகு = காட்டுப் பூனை; விடை = எருது; வெருள் = அச்சம்; கயந்தலை = பெரிய தலை. 2. கயவாய் = பெரிய வாய். 3. வெள்வாய் = வெளுத்த வாய்; வீழ்தல் = விரும்புதல்; மகாஅர் = இளைஞர்கள். 4. சுரை = துளை; வால் = வெண்மை. 5. ஊகம் = ஒருவகைப் புல். 6. வலாஅர் = வளார் (இளங்கொம்பு); குலவு = வளைவு; கோலல் = வளைத்தல். 7. கருப்பை = எலி. 8. புன்புலம் = வலியநிலம்; தழீஇய = தழுவிய; அம் = அழகு. 9. குமிழ் = ஒருவகைச் செடி; வெள்ளை – வெள்ளாட்டைக் குறிக்கிறது; மறுவாய் = பின்வாய் (மலவாய்) . 10. காழ் = விதை, கொட்டை, பிழுக்கை; தாய = பரந்து கிடக்கின்ற; வன்கால் = வலியகால். 11. பொத்துதல் = தீ மூட்டுதல். 13. வலம் = வலி; படுதல் = தோன்றல்; வலம்படு தானை = வலிமையான படை. 14. உலத்தல் = கெடுதல்; உலந்துழி = கேடுவந்த பொழுது.

கொண்டு கூட்டு: சீறூர் நெடுந்தகை, வேந்தற்கு நெஞ்சறிதுணை.

உரை: இவ்வூரிலுள்ள வேட்டுவர்களின் சிறுவர்கள், ஆண் காட்டுப் பூனையின் பார்வை போன்ற அச்சம் தரும் பார்வையையும், பெரிய தலையையும், பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் வீசும் பெரிய, வெளுத்த வாயையும் உடையவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள். அவர்கள் சிறிய இலையைக்கொண்ட உடைமரத்தின் துளையமைந்த வெண்ணிற முள்ளை, ஊகம் புல்லின் சிறிய தண்டில் செருகி, வளாரால் செய்யப்பட்ட வலியவில்லில் வைத்து வளைத்து, பருத்தி வேலியின் அடியில் தங்கியிருக்கும் எலியைக் குறிபார்த்து அம்பை எய்வர். இவ்வூர்அத்தகைய புன்செய் நிலம் சூழ்ந்த அழகிய குடிகளை உடைய சிறிய ஊர். இவ்வூரின் பெருமைக்குரிய தலைவன், குமிழம் பழத்தை உண்ணும் வெள்ளாடுகள் இட்ட வெண்ணிறமுள்ள பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற, வலிய தூண்கள் உள்ள பந்தலின்கீழ், இடையன் கொளுத்திய சிறிய தீயின் வெளிச்சத்தில், பாணர்களுடன் நாணமாகிய நற்பண்போடு பழகுபவன். வெற்றி பயக்கும் படையையுடைய வேந்தன் துன்பப்படும்பொழுது, இவ்வூர்த் தலைவனும் அவனோடு சேர்ந்து துன்பப்படுபவன். அவன் வேந்தனுக்கு உணர்வால் ஒத்த உயிர்த் துணைவன்.

சிறப்புக் குறிப்பு: ’வெள்வாய்’ என்பதற்கு, ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். புகழும் வீரமும் பொருந்திய குடிகள் வாழ்வதால் அவ்வூரை ‘அங்குடி” என்று புலவர் புகழ்கிறார். ’நாணுடை நெடுந்தகை’ என்பது, அறநெறியிலிருந்து தவறிய செயல்களைக் காண்பதற்கும் செய்வதற்கும் நாணும் பெருந்தன்மை மிக்கவன் என்ற பொருளில் கூறப்பட்டிருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். ‘உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணை’ என்பது அரசனுக்குத் துன்பம் வந்தபொழுது, அதை உணர்ந்து தன் உயிரையும் கொடுக்கும் உண்மை நண்பன் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

323. உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை!

323. உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை!

பாடியவர்: தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ஒரு தலைவனின் ஊர் நலத்தையும் அவனுடைய போர்புரியும் ஆற்றலையும் இப்பாடலில் புலவர் புகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் ஒருவரி சிதைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


புலிப்பாற் பட்ட வாமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள் 5


கறையடி யானைக்கு அல்லது
உறைகழிபு அறியா வேலோன் ஊரே.

அருஞ்சொற்பொருள்: பால் = இடம்; படுதல் = இறத்தல், அழிதல், துன்புறுதல்; வாவுதல் = தாவுதல்; வாமான் = தாவும் மான்; குழவி = மான் கன்று. 2. சினம் கழி = சினம் இல்லாத; மூதா = முது+ஆ = முதிய பசு; மடுத்தல் = உண்ணுதல். 4. உள்ளியது = கருதியது; சுரத்தல் = மிகக் கொடுத்தல்; ஓம்பா ஈகை = தனக்கென சேமிக்காது பிறர்க்கு வழங்கும் கொடைத்தன்மை. 5. வெள்வேல் = ஒளிபொருந்திய வேல்; ஆவம் = போர்; ஒள்வாள் = ஒளிபொருந்திய வாள்; கறை = உரல்.

கொண்டு கூட்டு: வாமான் குழவிக்கு, மூதா ஊட்டும்; வேலோன் ஊர்.

உரை: இவ்வூரில், புலியிடம் சிக்கிக்கொண்டு இறந்த ஒருமானின், தாவும் இயல்புடைய கன்றுக்குச் சினம் இல்லாத முதிய பசு பால் கொடுக்கும். இவ்வூர்த் தலைவன், தனக்கென எதையும் சேமித்து வைத்துக் கொள்ளாமல், பரிசிலர்கள் பெற எண்ணியதை அவர்கள் எண்ணிய வாறு, தன் செல்வத்தைப் பரிசிலர்க்கு அளிக்கும் ஈகைக் குணமுடையவன். அவன் தன் ஒளி பொருந்திய வேலை எடுத்துப் போர் செய்ய வேண்டிய இடத்தில் வேலால் போர் செய்வான். உரல்போன்ற காலடிகளையுடைய யானையை வீழ்த்துவதற்கு மட்டுமே தன் ஒளிறும் வாளை உறையிலிருந்து எடுப்பான்.

சிறப்புக் குறிப்பு: யானை தொலைவில் இருந்தால் வேலாலும், அண்மையில் இருந்தால் வாளாலும் போர் செய்வது மரபு.

’உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை’ என்பது தனக்கெனப் பொருளைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல், பிறர்க்கு அவர்கள் எண்ணியதை எண்ணியவாறு வரையாது வழங்கல். இத்தகைய ஈகை தன்னலம் கருதாத ஈகை.

ஒருபசு மற்றொரு பசுவின் கன்று தன்னிடம் பால் குடிக்க வந்தால் அதைச் சினந்து வெருட்டுவது பசுவின் இயல்பு. ஆனால், ஒரு பசு மான்கன்றுக்குப் பால் கொடுப்பதைக் கண்ட புலவர் அந்தக் காட்சியை வியந்து ’சினம் கழி மூதா’ என்று அதைக் குறிப்பிடுகிறார். பசு தன்னுடைய கன்றுக்காகப் பாலைச் சேமித்து வைத்துக்கொள்ளாமல் மான்கன்றுக்குத் தருவதைப் போல் இவ்வூர்த் தலைவன், தன் செல்வத்தைத் தனக்காகச் சேமித்து வைத்துக்கொள்ளாமல் பரிசிலர்களிடம் பகிர்ந்து கொள்கிறான் என்ற கருத்து இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.

322. கண்படை ஈயான்!

322. கண்படை ஈயான்!

பாடியவர்: ஆவூர்கிழார் (322). இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் மரபினராக இருந்ததால், இவர் ஆவூர் கிழார் என்று அழைக்கப்பட்டார். ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாவட்டத்திலும், வட ஆர்க்காடு மாவட்டத்திலும் இருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். புறநானூற்றில் உள்ள 322- ஆம் பாடலைத் தவிர, சங்க இலக்கியத்தில் இவருடைய பாடல்கள் வேறு எதுவும் காணப்படவில்லை.


பாடலின் பின்னணி: வீரன் ஒருவன் போர்புரிவதில் மிகவும் ஆற்றலுடையவனாக இருக்கிறான். அவனை நினைக்குந் தோறும், பகைவேந்தர்கள் அச்சம் மிகுந்து உறக்கமின்றி உள்ளனர். அவ்வீரன் வாழும் ஊர் முல்லை நிலத்தில் உள்ள ஒருசிற்றூர். அவ்வூரில் நடைபெறும் ஒருநிகழ்வை இப்பாடலில் புலவர் ஆவூர் கிழார் குறிப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய 5


மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே. 10

அருஞ்சொற்பொருள்: 1. ஊர்தல் = ஓய்ந்து நடத்தல்; ஊழ்த்தல் = தோன்றுதல் (மலர்தல்); கோடு = கொம்பு. 2. கவை = பிளவு; பொரித்தல் = தீய்தல், வெடித்தல்; அரை = அடிப்பாகம். 3. அரிகால் = அரிந்துவிட்ட தாள்; கருப்பை = எலி. 4. புன்தலை = இளந்தலை; ஆர்ப்பு = ஆரவாரம். 5. கலன் = பாத்திரம். 6. மன்று = வாயில் முற்றம்; வன்புலம் = வலிய நிலம். 7. எந்திரம் = கரும்பு ஆலை; சிலைத்தல் = ஒலித்தல்; அயல் = அருகிலுள்ள இடம். 8. இரு = பெரிய; சுவல் = பிடர் (கழுத்து); வாளை = ஒரு வகை மீன்; பிறழ்தல் = துள்ளுதல். 9. தண்பணை = மருத நிலம். 10. கண்படை = உறக்கம், மனிதர்களின் படுக்கை.

கொண்டு கூட்டு: வேலோன் ஊர் வன்புலத்ததுவே; ஆர்ப்பின், முயல் மன்றில் பாயும்; சிலைப்பின் வாளை பிறழும் வேந்தர்க்குக் கண்படை ஈயான் எனக் கூட்டுக.

உரை: நிலத்தை உழுது களைப்படைந்து ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்பு போல், பிளவுபட்டு, முட்களும் வெடிப்புகளும் உடைய கள்ளிச் செடியின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு, புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும் சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்வர். அந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், அடுப்பில் ஏற்றிக் கரிபிடித்த பாத்திரங்கள் உடையுமாறு உருட்டித் தள்ளிவிட்டு வீட்டு முற்றத்தில் பாயும். எங்கள் தலைவனுடைய ஊர் அத்தகைய வலிய நிலம். இவ்வூரில் உள்ள எங்கள் தலைவன், கரும்பை ஆட்டும் ஆலைகளின் ஒலியால் அருகே உள்ள நீர்நிலைகளில், பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் வளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக் கண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவன்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் கூறப்படும் தலைவன் வாழும் ஊர் வலிய நிலத்தில் உள்ள ஒருசிற்றூர் என்ற கருத்தும், அவன் வலிய நிலத்திலுள்ள சிற்றூருக்குத் தலைவனாக இருந்தாலும் வளமான மருதநிலங்களையுடைய வேந்தர்கள் அவனுடைய போர்புரியும் ஆற்றலை எண்ணி அஞ்சி உறக்கமின்றி வருந்துகின்றனர் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.