Saturday, July 30, 2011

263. களிற்றடி போன்ற பறை!


பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பாட்டோன்: தெரியவில்லை.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் ஆநிரைகளை மீட்டு வரும்வழியில் ஆநிரைகளைக் கவர்ந்தவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டு உயிர் துறந்தான். அவனுக்கு நடுகல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வழியே செல்லும் பாணன் ஒருவனை நோக்கி, “ நீ அந்த நடுகல்லை வழிபட்டுச் செல்வாயாக” என்று இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை ஆறே
5 பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

அருஞ்சொற்பொருள்

2. இரும் = பெரிய. சேறல் = செல்லல். 3. ஓம்புதல் = தவிர்த்தல். 4. வண்டர் = வீரர்; வறநிலை = வறண்ட தன்மை. 8. கொல்புனல் = கரையை அரிக்கும் நீர்; விலங்குதல் = தடுத்தல்; கல் = நடுகல்.

கொண்டு கூட்டு: புனற் சிறையில் விலங்கியோன் கல்லைத்தொழாதனை கழிதலை ஓம்பு; தொழவே இவ்வறநிலை யாறு வண்டு மேம்படுமெனக் கூட்டுக.

உரை: பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒருகண்ணுடைய பறையையுடைய இரவலனே! நீ அந்த வழியாகச் சென்றால், அங்கே ஒரு நடுகல் இருக்கிறது. அதைத் தவறாமல் வழிபட்டுச் செல்க. அது “வண்டர்” என்னும் ஒருவகை வீரர்கள் மிகுதியாக உள்ள கொடிய வழி. அங்கே, பல ஆநிரைகளைக் கவர்வதற்கு வந்தவர் திரும்பி வந்து போரிட்டனர். போர்த்தொழிலைத் தவிர வேறு எதையும் கற்காத இளைய வீரர்கள் போரிலிருந்து நீங்கினார்கள். ஆனால், தலைவன், பகைவர்களின் வில்களிலிருந்து வந்த அம்புகள் அனைத்தையும், கரையை அரிக்கும் நீரைத் தடுக்கும் அணை போல் தடுத்தான். அவன் நடுகல் அங்கே உள்ளது.

262. தன்னினும் பெருஞ் சாயலரே!


பாடியவர்: மதுரைப் பேராலவாயர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 247-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், மதுரைப் பேராலவாயர் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அப்பொழுது, அத்தலைவன் பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவுக்காக மதுரைப் பேராலவாயர் காத்திருந்தார். சிறிது நேரத்தில், தலைவன் தன் துணைமறவர்களுடனும், தான் கவர்ந்த பசுக்களுடனும் திரும்பி வந்தான். அங்குள்ள மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவனை வரவேற்றனர். தலைவனின் வெற்றியைப் பாராட்டி அங்கே ஒரு உண்டாட்டு நடைபெற்றது. அந்த உண்டாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, இப்பாடலில் மதுரைப் பேராலவாயர் கூறுகிறார்.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.

துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

துறை: தலைத் தோற்றம். ஒரு வீரன் பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து கொண்டுவந்துது குறித்து உறவினர் தம் மகிழ்ச்சியைக் கூறுதல்.

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
5 நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

அருஞ்சொற்பொருள்

1. நறவு = மது; தொடுதல் = இழிதல்; விடை = ஆடு; வீழ்த்தல் = விழச் செய்தல் (வெட்டுதல்). 2. பாசுவல் = பாசு+உவல்; பாசு = பசிய, உவல் = இலை. 4. ஒன்னார் = பகைவர்; முருக்கி = முறித்து. 5. என்னை = என்+ஐ= என் தலைவன். 6. உழையோர் = பக்கத்தில் உள்ளவர்கள்; சாயல் = இளைப்பு (சோர்வு).

கொண்டு கூட்டு: என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மின் எனக் கூட்டுக.

உரை: மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள். பசிய இலைகளால் வேயப்பட்ட சிறிய கால்களுடைய பந்தரில் ஈரமுடைய புதுமணலைப் பரப்புங்கள்; பகைவரின் தூசிப்படையை அழித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று, ஆநிரைகளுடன் வரும் என் தலைவனுக்குப் பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.

261. கழிகலம் மகடூஉப் போல!



பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.
பாடப்பட்டோன்: இப்பாடல், காரியாதி என்ற தலைவனின் மரணத்தால் மனம் வருந்திய ஆவூர் மூலங் கிழார் பாடியது என்று அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். வேறு சிலர், இப்பாடல் கரந்தை என்பவனைப் பற்றியது என்று கூறுகின்றனர். ஆகவே, இப்பாட்டுக்குத் தலைவன் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ஒருகால், ஆவூர் மூலங் கிழார், ஒரு தலைவனைக் கண்டு பரிசில் பெற்றார். அவர், சிலகாலம் கழித்து மீண்டும் அவனைக் காணச் சென்றார். அவர் சென்ற பொழுது அவன் இறந்துவிட்டான். அவன் இல்லம் பொலிவிழந்து காணப்படுவதைக் கண்டு மனம் வருந்தி இப்பாடலை ஆவூர் மூலங் கிழார் இயற்றியுள்ளார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
துறை: பாண்பாட்டு. போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தல்.

அந்தோ! எந்தை அடையாப் பேரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றுயாற்று அம்பியின் எற்று? அற்றுஆகக்
5 கண்டனென் மன்ற சோர்கஎன் கண்ணே;
வையங் காவலர் வளம்கெழு திருநகர்
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
10 பயந்தனை மன்னால் முன்னே; இனியே
பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
15 நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல
புல்என் றனையால் பல்அணி இழந்தே.

அருஞ்சொற்பொருள்

2. நறவு = மது; தண்டா = குறையாத; மண்டை = இரப்போர் பாத்திரம். 3. முரிவாய் = வளைவான இடம். 4. அம்பி = ஓடம்; எற்று = எத்தன்மைத்து; அற்று = அத்தன்மைத்து. 6. திருநகர் = அழகிய அரண்மனை. 7. மையல் = யானையின் மதம்; அயா உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல். 8. மை = ஆடு; ஓசை – ஓசையுடன் நெய்யில் வேகும் ஆட்டிறைச்சிக்கு அகுபெயராக வந்தது. 9. புதுக்கண் = புதுமை (கண் – அசை); செதுக்கு = வாடல்; செதுக்கண் = ஒளி மழுங்கிய கண்கள். 10. மன் – கழிவின்கண் வந்தது; ஆல் – அசை. 11. பல்லா = பல்+ஆ = பல பசுக்கள்; தழீஇய = உள் அடக்கிக் கொண்டு. 12. உழை = இடம்; கூகை = கோட்டான் (ஒரு வகை ஆந்தை); ஆட்டி = அலைத்து. 13. நாகு = இளம் பசுங் கன்று. 14. விரகு = அறிவு. 16. விடலை = தலைவன், வீரன். 18. மகடூஉ = மனைவி.

கொண்டு கூட்டு: எந்தை பேரில்லே! செதுக்கணாரப் பயந்தனை முன்; இனி, மகடூஉப் போலப் பல அணியும் இழந்து புல்லென்றனையாய் அம்பியற்றாகக் கண்டேன்; கண்ட என் கண் சோர்க எனக் கூட்டுக.

உரை: ஐயோ! என் தலைவனின் பெரிய இல்லத்தின் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படாதவை. இரப்போரின் பாத்திரங்களில் வண்டுகள் மொய்க்கும் மது எப்பொழுதும் குறையாமல் இருக்கும். அங்குள்ள வளைந்த முற்றம், வந்தோர்க்குக் குறையாமல் அளிக்கும் அளவுக்கு மிகுந்த அளவில் சோறுடையதாக இருந்தது. எப்படி இருந்த அந்த இல்லம் இப்பொழுது நீரின்றி வற்றிய ஆற்றில் உள்ள ஓடம் போல் காட்சி அளிப்பதைக் கண்டேன். அதைக் கண்ட என் கண்கள் ஓளி இழக்கட்டும். முன்பு, உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க அழகிய அரண்மனையில் யானை பெருமூச்சு விடுவதைப் போன்ற ஓசையுடன் நெய்யில் வேகவைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை ஓளிமழுங்கிய கண்களுடன் வந்தவர்கள் எல்லாம் நிரம்ப உண்ணத் தந்தாய்; இப்பொழுது, பல பசுக்களின் கூட்டத்தை, வில்லைப் பயன்படுத்துவதை கற்கத் தேவையில்லாமல், இயற்கையாகவே வில்லைப் பயன்படுத்துவதில் வல்லவர்களான உன் பகைவர் கைக்கொண்டனர். அவர்கள், இறக்கப்போவதை அறிவிக்கும் வகையில் கூகைகள் தம் இனத்தைக் கூவி அழைத்தன. அவர்களை அழிப்பதற்கு இளம் பசுங் கன்றுகளின் முலை போன்ற தோற்றமுள்ள, மணமுள்ள கரந்தைப் பூவை, அறிவிற் சிறந்தோர் சூட்ட வேண்டிய முறைப்படி சூட்ட, பசுக்களைக் கவர்ந்தவர்களை அழித்தாய். இவ்வாறு, பசுக்களை மீட்டுவந்த தலைவன் இப்பொழுது இறந்து நடுகல்லாகிவிட்டதால், அழுது, தலை மயிரைக் கொய்துகொண்டு, கைம்மை நோன்பை மேற்கொண்டு, வருத்தத்துடன், அணிகலன்களை இழந்த அவன் மனைவியைப் போல் அவன் அரண்மனை பொலிவிழந்து காணப்படுகிறது.

சிறப்புக் குறிப்பு: ”கல்லா வல்வில்” என்பதில் ”வில்” என்பது வில்லேந்திய வீரரைக் குறிக்கிறது. ”கல்லா” என்பது, அவர்கள் வழிவழியாக வில்லைப் பயன்படுத்துவதில் திறமை மிகுந்தவர்களாகையால் அவர்கள் வில்லைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெறத் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது.

260. கேண்மதி பாண!


பாடியவர்: வடமோதங்கிழார் (260). சங்க காலத்தில், மோதம் என்ற பெயருள்ள ஊர்கள், தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலும் தமிழ் நட்டில் உள்ள மதுரை மாவட்டத்திலும் இருந்தன. சித்தூர் மாவட்டத்தில் இருந்த மோதம் என்ற ஊர் வடமோதம் என்று அழைக்கப்பட்டது. இப்புலவர் அவ்வூரைச் சார்ந்தவராக இருந்ததால் வடமோதங்கிழார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர் புறநானூற்றில் ஒருசெய்யுள் இயற்றியதோடு மட்டுமல்லாமல் இவர் இயற்றியதாக அகநானூற்றிலும் ஒரு செய்யுள் (317) உள்ளது.

பாடலின் பின்னணி: ஒரு தலைவனின் ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்து சென்றனர். அத்தலைவன், பகைவர்களை வென்று ஆநிரைகளை மீட்டு வந்தான். ஆனால், மீட்டு வரும்பொழுது அவன் பகைவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டான். அவன் தன்னுடைய ஊருக்கு வந்தவுடன் இறந்தான். அத்தலைவனைக் காண ஒருபாணன் வந்தான். அவன் வரும் வழியில் பல தீய சகுனங்களைக் கண்டான். ஆகவே, அவன் தலைவனைக் காண முடியாதோ என்று வருந்தினான். அவன் வருத்தத்தைக் கண்ட மற்றோர் பாணன், தலைவனைக் காண வந்த பாணனை நோக்கி, “ தலைவன் இறந்துவிட்டான். உனக்குத் தலைவன் அளித்த பொருளை வைத்து நீ வாழ்க. அல்லது வேறு புரவலரிடம் சென்று பொருள் பெறும் வழியைக் காண்க. தலைவனின் பெயர் நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த நடுகல்லை வணங்கி வழிபட்டுச் செல்க.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: பாண்பாட்டு. போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கிக் களர
5 கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
10 எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
கையுள போலும் கடிதுஅண் மையவே
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக
15 வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரைய னாகி
20 உரிகளை அரவ மானத் தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
25 உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

அருஞ்சொற்பொருள்

1. வௌவுதல் = பற்றிக்கொள்ளுதல். 2. விளரி = இரங்கற் பண்; தொடை = யாழின் நரம்பு. 3. தலைஇ = மேற்கொள்ளுதல். 4. உளர்தல் = தலைமயிர் ஆற்றுதல். 6. பசிபடு மருங்குல் = பசியுடைய வயிறு. கசிபு = இரங்கி. 8. யாணர் = புதிய வருவாய், வளமை, செல்வம். 9. புரவு = கொடை; தொடுத்தல் = வைத்தல். 10. எவ்வம் = வருத்தம். 11. கடி = மிகுதி. 13. தழீஇய = சூழ்ந்த; மீளி = வீரர். 14. நீத்தம் = வெள்ளம்; துடி = வலிமை; புணை = தெப்பம். 15. கோள் = கொள்ளப்பட்ட (பசு). 17. வை = கூர்மை; எயிறு = பல். 19. உரை = புகழ். 20. உரி = தோல்; ஆனது = அன்னது; ஆன = போல. 22. கால் = காற்று. 23. கம்பம் = அசைவு. 25. வெறுக்கை = மிகுதி. 28. படம் = திரைச் சீலை; மிசை = மேல்.

உரை: ஓசை அதிகரிக்குமாறு இசைத்தாலும், நரம்புகள் திரிந்து, இரங்கற் பண்ணாகிய விளரிப் பண்ணே யாழிலிருந்து வருகிறது என்பதை நினைத்தால் நெஞ்சம் வருத்தம் அடைகிறது. வரும் வழியில், பெண் ஒருத்தி கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு எதிரில் வந்தாள். இவை தீய சகுனம் என்று நினைத்துக் களர்நிலத்தில் விளைந்த கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி, பசியோடு கூடிய வயிற்றோடு வருந்தித் தொழுது, “நான் காண வந்த தலைவனைக் காண முடியாதோ?” என்று கேட்கும் பாண! இந்த நாட்டின் செல்வத்தின் நிலையை நான் கூறுகிறேன். கேள்! தலைவன் நமக்கு அளித்தவற்றை வைத்து நாம் உண்ணலாம். அல்லது அவன் இல்லையே என்று எண்ணி வருந்தி, உயிர் வாழ்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்று இரக்கலாம். இவை இரண்டும் நீ செய்யக்கூடிய செயல்கள். மிக அருகில் உள்ள ஊரில் தோன்றிய பூசலால், தலைவனுடைய ஊரில் இருந்த ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்தனர். அவற்றை மீட்பதற்கு நம் தலைவன் சென்றான். ஆநிரைகளைக் கவர்ந்த மறவர், நம் தலைவன் மீது எய்த அம்பு வெள்ளத்தை தன் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு பகைவரைக் கொன்று, ஆநிரைகளை, உலகம் வருந்துமாறு, தன்னை விழுங்கிய கூர்மையான பற்களையுடைய பாம்பின் வாயிலிருந்து திங்கள் மீண்டது போல் ஆநிரைகளை மீட்டுப் பெரும்புகழ் பெற்றான். ஆனால், தோலை உரித்துவிட்டுச் செல்லும் பாம்பு போல் அவன் மேலுலகம் சென்றான். அவன் உடல் காட்டாற்றின் அரிய கரையில், காற்றால் மோதி, அசைவோடு சாய்ந்த அம்பு ஏவும் இலக்குப்போல் அம்புகளால் துளைக்கப்பட்டு அங்கே வீழ்ந்தது. உயர்ந்த புகழ்பெற்ற நம் தலைவனின் பெயர், மென்மையான, அழகிய மயிலிறகு சூட்டப்பட்டு பிறருக்கு கிடைக்காத அரிய சிறிய இடத்தில் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான பந்தரின் கீழ் நடப்பட்ட கல்லின் மேலே பொறிக்கப்பட்டிருக்கிறது.

259. புனை கழலோயே!



பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார். சங்க காலத்தில், கோடைக்கானல் மலை கோடை மலை என்று அழைக்கப்பட்டது. அந்த மலையைச் சிறப்பாகப் பாடியதால், இவர் கோடை பாடிய பெரும்பூதனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஓரூரில், ஒரு தலைவனுடைய ஆநிரைகளை அவன் பகைவரின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகள் துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்த வீரர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆநிரைகளை இழந்த தலைவன் அவற்றை மீட்பதற்கு ஆவலாக இருக்கிறான். அதைக் கண்ட புலவர் பெரும்பூதனார், “பகைவர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆகவே, இப்பொழுது உன் ஆநிரைகளை மீட்கச் செல்ல வேண்டாம்.” என்று இப்பாடலில் அத்தலைவனுக்கு அறிவுறை கூறிகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: செருமலைதல். பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்.

துறை: பிள்ளைப்பெயர்ச்சி. பறவைகள் குறுக்கே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இருந்தும், அதற்கு அஞ்சாது சென்று போர் செய்த வீரனுக்கு அரசன் கொடை புரிதல்.

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
5 முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே.

அருஞ்சொற்பொருள்

1. பெயர்தல் = போதல் . 2. தலை கரந்து = தம்மை மறைத்துக்கொண்டு. 3. ஒடுக்கம் = மறைந்திருத்தல். 4. செல்லல் = செல்லாதே. 5. முருகு = தெய்வம், முருகன்; புலைத்தி புலையனின் மனைவி. 6. தாவுபு = தாவி; தெறித்தல் = பாய்தல்; ஆன் = பசு.

கொண்டு கூட்டு: புனைகழலோய், காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின்னுள்ளம் சிறப்பதாக எனக் கூட்டுக.

உரை: இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.