Thursday, December 2, 2010

195. நல்லாற்றுப் படும் நெறி

பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடலின் பின்னணி: சான்றோர்களாகவும் முதியோர்களாகவும் இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் நற்செயல்களுக்குப் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்துவதற்கான அறிவுரைகளை இபாடலில் நரிவெரூஉத்த்லையார் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
5 பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

அருஞ்சொற்பொருள்:
2. கயல் = கெண்டை மீன்; திரை = தோல் சுருக்கம்; கவுள் = கன்னம். 4. கணிச்சி = மழு; திறல் = வலிமை. 5. இரங்குவீர் = வருந்துவீர்; மாதோ - அசைச் சொல். 7. ஓம்பல் = தவிர்த்தல். 8. உவப்பது = விரும்புவது; படூஉம் = செலுத்தும். 9. ஆர் = அழகு, நிறைவு, ஆறு = வழி; ஆர் - அசைச் சொல்.

உரை: பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரைமுடியும், முதிர்ந்து சுருக்கம் விழுந்த கன்னங்களோடு, பயனற்ற முதுமையும் அடைந்த பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்ட பெரு வலிமையுடைய இயமன் வந்து உங்களைப் பற்றி இழுத்துச் செல்லும்பொழுது வருந்துவீர்கள். நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க. அதுதான் எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல நெறியில் செலுத்தும் வழியும் ஆகும்.

No comments: