Monday, April 18, 2011

246. பொய்கையும் தீயும் ஒன்றே!

பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு. பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்த ஒல்லையூர் நாட்டைச் சோழமன்னன் ஒருவன் வென்று தன் ஆட்சிக்குள்ளாக்கிக்கொண்டான். பிறகு, பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் ஒல்லையூர் நாட்டைச் சோழனிடம் இருந்து வென்று, மீண்டும் பாண்டிய நாட்டோடு சேர்த்துக்கொண்டான். அந்த வெற்றியால், பூதப்பாண்டியன், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். புறநானூற்றுப் பாடல் - 71 பூதப்பாண்டியனால் இயற்றப்பட்டது. பெருங்கோப்பெண்டு பூதப்பாண்டியனின் மனைவி.

பாடலின் பின்னணி: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
5 காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
10 உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
15 நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

அருஞ்சொற்பொருள்:
3. சூழ்ச்சி = ஆராய்ச்சி; 4. கொடுங்காய் = வளைந்த காய்; போழ்ந்து = வெட்டி. 5. காழ் = விதை; விலர் = வெண்ணிறம். 6. அடையிடை = பானையின் அடிப் பக்கத்தில்; பிண்டம் = சோற்ற உருண்டை. 7. சாந்து = துவையல்; அட்ட = சமைத்த. 8.வேளை = வேளைக் கீரை; வெந்தை = நீராவியில் வேகவைக்கட்டது; வல்சி = சோறு. 9. பரல் = சிறிய கல்; வதிதல் = தூங்குதல். 10. உயவல் = வருத்தம்; மாதோ – அசைச் சொல். 11. பெருங்காடு = சுடுகாடு; கோடு = மரக் கொம்பு (விறகு). 12. தில்ல – விழைவின் கண் கூறப்பட்டது. 15. நள் = செறிந்த.

கொண்டு கூட்டு: பல்சான்றீரே, உயவற் பெண்டிரேம் அல்லேம்; பொய்கையும் தீயும் ஓர் அற்றே.

உரை: பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத, பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.

245. என்னிதன் பண்பே?

பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (245). கோட்டம்பலம் என்பது கேரள மாநிலத்தில் உள்ள ஓரூர். இப்பொழுது இவ்வூர் அம்பலப்புழை என்று அழைக்கப்படுகிறது. சேரமான் மாக்கோதை கோட்டம்பலத்தில் இறந்ததால், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்று அழைக்கப்பட்டான். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தாள். அவள் உடல் ஈமத்தீயில் வைத்து எரிக்கப்பட்டது. அவள் உடல் தீக்கிரையாகியதைத் தன் கண்ணால் கண்ட மாக்கோதை, தாங்க முடியாத துயரம் அடைந்தான். அந்நிலையில், “காதலியின் பிரிவால் அடையும் துன்பம் எவ்வளவு பெரிதாகத் தோன்றினாலும் அது அத்துணை வலியது அன்று. என் மனைவியின் உடல் தீயில் எரிந்ததை நான் கண்ணால் கண்ட பிறகும் இன்னும் உயிரோடு உள்ளேனே.” என்று மாக்கோதை புலம்புவதை இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
5 ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே.

அருஞ்சொற்பொருள்:
1. யாங்கு = எவ்வளவு, எவ்வாறு; எனைத்து = எவ்வளவு. 2. செகுத்தல் = அழித்தல்; மதுகை = வலிமை. 3. களரி = களர் நிலம்; பறந்தலை = பாழிடம். 4. பொத்துதல் = தீ மூட்டுதல், மூடுதல்; ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு விறகு அடுக்கப்பட்ட படுக்கை. 5. அழல் = தீக்கொழுந்து; பாயல் = உறங்குதல். 6. ஞாங்கர் = இடம் (மேலுலகம்).

கொண்டு கூட்டு: பாயல் சேர்த்தி, இன்னும் வாழ்வல்; என்இதன் பண்பே.
உரை: காதலியைப் பிரிவதால் நான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால், அத்துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று. கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில், வெட்ட வெளியில், தீயை விளைவிக்கும் விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் மனைவி மேலுலகம் சென்றாள். ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன?

244. வண்டு ஊதா; தொடியிற் பொலியா!

பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: தெரியவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடலில் முதல் இரண்டு வரிகளும் மூன்றாவது வரியில் இரண்டு சொற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பகுதியை ஆய்ந்து பார்த்தால், யாரோ ஒரு புலவர், கையறு நிலையில் தாம் பெற்ற துயரத்தை வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது.

திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .


அருஞ்சொற்பொருள்:
1. சென்னி = தலை. 2. தொடி = வலையல். பொலிவுல் = அழகு.

உரை: பாணர்களின் தலைகளில் உள்ள பூக்களிலிருந்து ஒழுகும் தேனைப் பருகுவதற்காக வண்டுகள் அங்கு சென்று ஒலிப்பது நின்றது. விறலியரின் முன்கைகளில் வளையல்கள் அழகு செய்யவில்லை. இரவலர்களும் …..

243. யாண்டு உண்டுகொல்?

பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார் (243). இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இப்பாடலில், இவர் “தொடித்தலை விழுத்தண்டு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருப்பதால், இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: இப்பாடலில், தொடித்தலை விழுத்தண்டினார் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியதாக அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். ஆனால், டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் இப்பாடலுக்கு பாடப்பட்டோன் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஆகவே, இப்பாடலில் பாடப்பட்டவன் யார் என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணி: தம் இளமையில் தாம் விளையாடிய விளையாட்டுகளையும், இன்பமான நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்து, அவையெல்லாம் கழிந்தனவே என்று தாம் வருந்துவதை, புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
5 மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
10 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. இனி = இப்பொழுது; திணிதல் = செறிதல். 2. பாவை = பொம்மை; தைஇ = சூடி. 3. கயம் = குளம்; பிணைந்து= கோத்து. 4. தழீஇ = தழுவி; தூங்கல் = ஆடல். 5. ஆயம் = கூட்டம். 6. சினை = கிளை. 8. பிதிர் = திவலை (சிதறும் நீர்த்துளி). 9. குட்டம் = ஆழம். 12. விழு = சிறந்த; தண்டு = தடி, ஊன்றுகோல். 13. இரும் = இருமல்; மிடைதல் = கலத்தல்.

உரை: இப்பொழுது நினைத்தால் வருந்தத்தக்கதாக உள்ளது. மணலைத் திரட்டிச் செய்த பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி, குளிர்ந்த குளத்தில் விளையாடும் பெண்களோடு கை கோத்து, அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி, ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு விளையாடினோம். உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிகுந்த, கரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் மேலே எழவும், நெடிய நீரையுடைய ஆழமான இடத்தில், “துடும்” எனக் குதித்து, மூழ்கி, மணலை வெளியில் கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை இப்பொழுது எங்குள்ளதோ? பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும் பெரிய முதியவர்களாகிய எம்முடைய இந்த நிலை இரங்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு: தன் இளமை கழிந்துபோனதை நினைத்துப் புலவர் தம் வருத்தத்தை வெளிப்படுத்துவதால், இப்பாடல் கையறுநிலையைச் சார்ந்ததாயிற்று.

242. முல்லையும் பூத்தியோ?

பாடியவர்: குடவாயில் கீரத்தனார் (242). குடவாயில் என்பது சோழநாட்டில் இருந்த ஓரூர். கீரத்தனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குடவாயிலைச் சார்ந்தவராக இருந்ததால், இவர் குடவாயில் கீரத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் குடவாயிலைச் சார்ந்தவரானாலும், பல ஊர்களுக்கும் சென்று புரவலர் பலரையும் கண்டு வந்தார். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இவருக்கு நன்கு தெரிந்தவன். ஆகவே, அவன் இறந்ததால் புலவர் குடவாயில் கீரத்தனார் பெரும் வருத்தமுற்று இப்பாடலை இயற்றியுள்ளார். புறநானூற்றில் அவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் (243). ஒல்லையூர் என்பது புதுக்கோட்டை அரசின் கீழ் இருந்த ஊர்களில் ஒன்று என்றும் இப்பொழுது அவ்வூர் ஒலியமங்கலம் என்று அழைக்கப்படுவதாகவும், அவ்வூரைச் சுற்றியுள்ள பகுதி ஒல்லையூர் நாடென்று அழைக்கப்பட்டதாகவும் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். இந்த ஒல்லையூரில் வாழ்ந்த கிழான் என்பவனின் மகன் பெருஞ்சாத்தன். அவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கினான்.
பாடலின் பின்னணி: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததைக் கண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் மிகவும் வருந்தினார். தம் வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு முல்லைக் கொடியைப் பார்த்து, “ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததால், அனைவரும் பெருந்துயரத்தில் உள்ளனர். இந்நேரத்தில் நீ பூத்திருக்கிறாயே? யார் உன் பூக்களைச் சூடப் போகிறார்கள்?” என்று இப்பாடலில் புலவர் குடவாயில் கீரத்தனார் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
5 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

அருஞ்சொற்பொருள்:
2. மருப்பு = யாழின் தண்டு. 4. கடந்த = வென்ற . 5. மாய்ந்த = இறந்த; பின்றை = பிறகு.

கொண்டு கூட்டு: சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ; இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; பாணன் சூடான் ; பாடினி அணியாள் எனக் கூட்டுக.

உரை: முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.

சிறப்புக் குறிப்பு: ”இயற்கையைப் பார்த்து கவிஞர் கேட்கும் இக்கேள்வி சாத்தன் பால் அவன் ஊர் மக்களும் அவன் புரந்த பாணரும் பாடினியரும் கவிஞரும் கொண்டிருந்த பேரன்பையும் அவன் ஊராரிடம் பெற்றிருந்த புகழையும் ஆறு வரிகளில் எடுத்துக்காட்டும் இச்சிறு பாடல் ஒரு பெருங்காவியம் செய்யும் வேலையைச் செய்துவிடுகிறது” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடைய அறிஞர் ப. மருதநாயகம், “புதுப்பார்வைகளில் புறநானூறு” என்ற தம்முடைய நூலில் கூறுகிறார்.

241. விசும்பும் ஆர்த்தது!


பாடியவர்:
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 13-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 127-இல் காண்க.
பாடலின் பின்னணி: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தார். இவர், புறநானூற்றில் 12 பாடல்களில் ஆய் அண்டிரனைப் பாடியுள்ளார். ஆய் அண்டிரன் இறந்ததையும் அவனுடன் அவன் மனைவியரும் இறந்ததையும் கண்ட இவர், ஆய் அண்டிரன் மறு உலகம் அடைந்ததாகவும் அங்கு இந்திரன் அவனை வரவேற்பதாகவும் குறிப்பிடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
5 ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே.

அருஞ்சொற்பொருள்:
1. திண் = செறிந்த, வலிய; தண் =குளிர்ந்த; தார் = மாலை. 2. ஒண் = ஒளி பொருந்திய; தொடி = வளையல். 3. வச்சிரம் = இந்திரனின் படைக்கருவி; தடக்கை = பெரிய கை; நெடியோன் = இந்திரன். 4. போர்ப்பு = போர்த்தல்; கறங்கல் = ஒலித்தல். 5. ஆர்த்தல் = ஒலித்தல்; விசும்பு = ஆகாயம்.

உரை: வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது.

Tuesday, April 5, 2011

240. பிறர் நாடுபடு செலவினர்!

பாடியவர்: குட்டுவன் கீரனார் (240). கீரன் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குட்ட நாட்டைச் சார்ந்த குட்டுவர் குடியில் பிறந்தவராகையால் குட்டுவன் கீரனார் என்று அழைக்கப்பட்டார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் இறந்ததால் வருந்திய குட்டுவன் கீரனார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
5 காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன்; எனாஅப்
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
10 ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப்பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆடு = வெற்றி; புரவி = குதிரை. 2. வாடா = அழியாத; யாணர் = புது வருவாய். 3. அருகா = குறையாத. 4. கோடு = பக்கம்; அல்குல் = இடை; தொடி = வளையல். 5. உய்ப்ப = கொண்டு போக. 7. பொத்த = பொந்துள்ள; போழ் = பிளவு; கூகை = ஆந்தை. 8. பயிர்தல் = அழைத்தல். 9. பறந்தலை = பாழிடம்.; அல்கி = தங்கி. 10. நைத்தல் = வருத்தல். 12. கல்லென் சுற்றம் = ஆரவாரமான சுற்றம்; கையழிந்து = செயலிழந்து. 14. படு = புகு.

உரை: வெற்றி நடைபோடும் குதிரையும், யானையும், தேரும், குறையாத வருவாய் உள்ள நாடும் ஊரும், பாடுபவர்களுக்குக் குறையாது வழங்குபவன் ஆய் அண்டிரன். பக்கங்கள் அகன்று, குறுகிய இடையையுடைய, சிறிய வளையல்களை அணிந்த மனைவியரோடு ஆய் அண்டிரன் காலன் என்று சொல்லப்படும் கருணை இல்லாத கூற்றுவனின் கொடிய செயலால் விண்ணுலகம் அடைந்தான். பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, “சுட்டுக் குவி” என்று செத்தவர்களை அழைப்பது போலக் கூவும் கள்ளியையுடைய பாழிடமாகிய காட்டில் ஒருபக்கத்தில் வைத்து அவனுடைய உடல் தீயால் எரிக்கப்பட்டது. பொலிவிழந்த கண்களையுடையவர்களாய், தம்மைப் பாதுகாப்போனைக் காணாது, ஆரவாரிக்கும் சுற்றத்துடன் செயலிழந்து நிற்கும் புலவர்கள் இப்பொழுது தம் உடலை வாட்டும் பசியுடன் வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.

239. இடுக சுடுக எதுவும் செய்க!

பாடியவர்: பேரெயில் முறுவலார் (239). எப்பொழுதும் முறுவலோடு இருந்தமையால் இவர் முறுவலார் என்று அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அது, அவருடைய இயற்பெயராகவும் இருந்திருக்கலாம். இவர் பாண்டிய நாட்டில் இருந்த பேரெயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகையால் இவர் பேரெயில் முறுவலார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் மட்டுமல்லாமல் குறுந்தொகையிலும் ஒருபாடலும் (17) இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன் (239). இவன் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். மூவேந்தர்களுக்கு வேண்டிய பொழுது அறிவுரைகளும், படையுதவியும் அளித்த குறுநிலமன்னர்களுக்கு மூவேந்தர்கள் தம் பெயர்களைப் பட்டமாகச் சூட்டுவது சங்க காலத்தில் வழக்கிலிருந்ததாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். அவ்வழக்குக்கேற்ப, பாண்டியன் நெடுஞ்செழியன், நம்பி என்னும் குறுநில மன்னனுக்குத் தன் பெயரைச் சூட்டியிருக்கலாம் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை கூறுகிறார்.
படலின் பின்னணி: சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர். அப்பொழுது, பேரெயில் முறுவலார், ”நம்பி நெடுஞ்செழியன் பலதுறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

தொடியுடைய தோள்மணந்தனன்;
கடிகாவிற் பூச்சூடினன் ;
தண்கமழுஞ் சாந்துநீவினன் ;
செற்றோரை வழிதபுத்தனன் ;
5 நட்டோரை உயர்புகூறினன் ;
வலியரென வழிமொழியலன் ;
மெலியரென மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்பறியலன் ;
இரந்தோர்க்கு மறுப்பறியலன் ;
10 வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர்தாங்கினன் ;
பெயர்படை புறங்கண்டனன் ;
கடும்பரிய மாக்கடவினன் ;
நெடுந்தெருவில் தேர்வழங்கினன் ;
15 ஓங்குஇயற் களிறுஊர்ந்தனன்;
தீஞ்செறிதசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்
20 இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,
படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே.

அருஞ்சொற்பொருள்:
1. தொடி = வளையல். 2. கடி = காவல்; கா = சோலை. 3. நீவுதல் = தடவுதல். 4. செற்றோர் = பகைவர்; வழி = கிளை, சந்ததி; தபுத்தல் = அழித்தல். 5. நட்டோர் = நண்பர். 6. வழிமொழிதல் = பணிந்து கூறுதல், சொல்லியவற்றை ஏற்றுக் கொள்ளுதல். 7. மீக்கூறல் = புகழ்தல். 13. கடு = விரைவு; மா = குதிரை; பரிதல் = ஓடுதல்; கடவுதல் = செலுத்துதல். 16. தசும்பு = கள் உள்ள குடம்.; தொலைத்தல் = முற்றுப்பெறச் செய்தல். 18. மயக்குதல் = ஏமாற்றுதல். 20. ஒன்றோ – அதிசய இரக்கச் சொல். 21. படுதல் = உண்டாதல், சம்மதித்தல்; வெய்யோன் = விரும்பத்தக்கவன்.

உரை: நம்பி நெடுஞ்செழியன் வளையல்கள் அணிந்த மகளிரின் தோளைத் தழுவினான்; காவலுடைய சோலையிலுள்ள மரங்களிலுள்ள பூக்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசினான்; பகைவரைக் கிளையோடு அழித்தான்; நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்; வலிமையுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்; தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்; பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்; தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்; வேந்தர்களின் அவையில் தனது உயர்ந்த புகழ் தோன்றுமாறு செய்தான்; தன்னை எதிர்த்துவரும் படையை முன்நின்று தடுத்தான்; புறங்காட்டி ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்; விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தினான்; நெடிய தெருக்களில் தேரில் சென்றான்; உயர்ந்த இயல்புடைய யானையைச் செலுத்தினான்; இனிமையான கள் நிரம்பிய குடங்களைப் பலரோடு பகிர்ந்து குடித்து முடித்தான்; பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைத் தீர்த்தான்; பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்; இவ்வாறு, அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான். ஆகவே, இப்புகழை விரும்புவோனது தலையைப் புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும்.

சிறப்புக் குறிப்பு: “வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினான்” என்று புலவர் பேரெயில் முறுவலார் கூறுவதிலிருந்து, நம்பி நெடுஞ்செழியன் முடிசூடிய மூவேந்தர்களில் ஒருவன் அல்லன் என்பது தெரியவருகிறது.

238. தகுதியும் அதுவே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 162-இல் காண்க.
பாடலின் பின்னணி: வெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் வந்த நேரத்தில் வெளிமான் இறந்தான். அவருடைய ஏமாற்றத்தையும் இரங்கத்தக்க நிலையையும், கண்ணில்லாத ஊமை ஒருவன் மழைபெய்து கொண்டிருக்கும் பொழுது அவன் சென்ற மரக்கலம் கவிழ்ந்து கடலில் விழுந்ததற்கு இப்பாடலில் ஒப்பிடுகிறார்

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
5 காடுமுன் னினனே கட்கா முறுநன்;
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே;
ஆளில், வரைபோல் யானையும் மருப்பிழந் தனவே;
10 வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென் மன்ற;
என்னா குவர்கொல் என்துன்னி யோரே?
மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
15 ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே.

அருஞ்சொற்பொருள்:
2. சேவல் = ஆண் கழுகு; பொகுவல் = பெண்கழுகு; வெரு = அச்சம். 3. கூகை = கோட்டான். 4. பெட்டாங்கு = விரும்பியவாறு; ஆயம் = கூட்டம். 5. முன்னுதல் = அடைதல். 6. தொடி = வளையல்; கவின் = அழகு. 7. கடும்பு = சுற்றம்; பையெனல் - மந்தக் குறிப்பு. 8. தோடு = தொகுதி. 9. மருப்பு = கொம்பு. 10. பேது = வருத்தம்; உறுப்ப = செய்ய. 11. படல் = இரத்தல். 12. மன்ற – அசைச் சொல். 13. துன்னியோர் = நெருங்கியவர்கள் (சுற்ரத்தார்). 14. மாரி = மழை; மரம் = மரக்கலம். 15. ஆர் = நிறைவு; அஞர் = துன்பம்; ஆரஞர் = பெருந்துன்பம். 16. ஊமன் = ஊமை. 17. நீத்தம் = கடல். 18. அவலம் = துன்பம்; மறு = தீமை; மறுகல் = சுழலல். 19. தவல் = இறப்பு.

உரை: பிணமிட்டுக் கவிழ்த்துப் புதைக்கப்பட்ட தாழியின் குவிந்த மேற்புறத்தில், சிவந்த காதுகளையுடைய ஆண்கழுகுகளும், பெண்கழுகுகளும், அச்சமில்லாத, வலிய வாயையுடைய காக்கையும், கோட்டானும் கூடி இருக்கின்றன. பேய்கள் விருப்பத்தோடு திரிகின்றன. கள்ளை விரும்பும் வெளிமான் அத்தகைய இடுகாட்டை அடைந்தான். அவனை இழந்த, வளையல்களை நீக்கிய அவன் மனைவியர் போல் முன்பிருந்த அழகு அழிந்து, பாணர்களின் சுற்றத்தினரும் கண்களில் ஒளி மழுங்க வருந்தினர். தொகுதியாக இருந்த முரசுகள் கிழிந்தன. பாகர்கள் இல்லாத, மலைபோன்ற யானைகள் தம் தந்தங்களை இழந்தன. சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன். என் சுற்றத்தார் என்ன ஆவர்? மழைபொழியும் இரவில், கவிழ்ந்த மரக்கலத்திலிருந்து கடலில் விழுந்த கண்ணில்லாத ஊமையன் பெருந்துயரம் அடைந்தது போல் ஆனேன். எல்லையைக் காணமுடியாததும் பெரிய அலைகளுடையதும் ஆகிய அக்கடலினும் கொடிய துன்பமாகிய சுழலில் சுழலுவதைவிட இறப்பதே நமக்குத் தகுந்த செயலாகும்.

சிறப்புக் குறிப்பு: கண்ணில்லாத ஊமன் கடலில் விழுந்ததோடு தன் நிலையை ஒப்பிடும் உவமை மிகவும் நயமுடையதாக உள்ளது.

“பாகர்கள் இல்லாததால் யானைகள் தந்தங்களை இழந்தன” என்பது யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றைப் பயிற்றுவிக்கும் பாகர்கள் இல்லாததால், யானைகள் பயனில்லாமல் போயின என்ற பொருளில் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

237. சோற்றுப் பானையிலே தீ!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 162-இல் காண்க.
பாடலின் பின்னணி: பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளலிடம் பரிசுபெறச் சென்றார். அச்சமயம், வெளிமான் இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நிலையிலும், அவன் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசு அளிக்குமாறு தன் தம்பியாகிய இளவெளிமானிடம் கூறி இறந்தான். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரின் தகுதிக்கேற்ப பரிசளிக்கவில்லை. வெளிமானை நம்பித் தான் வந்ததையும், அவன் இறந்ததால் அவர் அடைந்த ஏமாற்றத்தையும், இளவெளிமான் தகுந்த பரிசளிக்காததால் அவர் கொண்ட சினத்தையும் இப்பாடலில் புலவர் பெருஞ்சித்திரனார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

நீடுவாழ்க என்றுயான் நெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாள் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5 வித்திய பனுவல் விளைந்தன்று நன்றுஎன
நச்சி இருந்த நசைபழுது ஆக
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
10 ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
15 ஆங்குஅது நோயின் றாக ஓங்குவரைப்
புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
எலிபார்த்து ஒற்றா தாகும் மலிதிரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
நனியுடைப் பரிசில் தருகம்
20 எழுமதி நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. நெடுங்கடை = நெடிய வாயில் (தலைவாயில்). 4. உரவு = அறிவு. 5. பனுவல் = நூல். 6. நச்சி = விரும்பி; நசை = விருப்பம். 7. குழிசி = பானை; பயத்தல் = உண்டாதல், கிடைத்தல். 8. அளியர் = இரங்கத் தக்கவர்; ஆர்தல் = உண்ணுதல். 9. திறன் = காரணம், கூறுபாடு, வழி. 10. உருப்ப = வெப்பமுண்டாக; எருக்குதல் = வருத்துதல். 12. முதுவாய் = முதிய வாக்கினையுடைய; ஒக்கல் = சுற்றம். 13. களரி = களர் நிலம்; பறந்தலை = பாழிடம். 13. அம் – சார்ந்து வரும் இடைச் சொல். 14. விடலை = வீரன். 16. ஒற்றுதல் = வீழ்த்துதல். 18. மண்டுதல் = விரைந்து செல்லுதல்; இழும் - ஒலிக்குறிப்பு. 19. நனி = மிக; தருகம் = கொண்டு வருவோம். 20. மதி – முன்னிலை அசைச் சொல்; துணிபு = தெளிவு; முந்துறுத்துதல் = முதலாதல்; முன்னிட்டுக் கொள்ளுதல்.

கொண்டு கூட்டு: நசை பழுதாக அழற் பயந்தாங்குக் கூற்றம் துணிய விடலை மாய்ந்தனனெனவும், மகளிர் வளைமுறி வாழைப் பூவின் சிதறவெனவும் துணிபு முந்துறுத்து நெஞ்சமே எழு எனக் கூட்டுக.

உரை: நீ நெடுங்காலம் வாழ்க என்று வெளிமானின் நெடிய வாயிலை அணுகிப் பசியுடன் பாடிய காலத்தில், வெளிமான் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்நிழல் போன்றவனாக இருந்தான். அவன் யாரிடத்தும் பொய் கூறாத அறிவுடையவன். அவன் செவிகளில் நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளைந்தது என்று நினைத்துப், பரிசிலை விரும்பியிருந்த என் விருப்பம் பயனில்லாமல் போயிற்று. அது, சோற்றுப் பானையில் சோற்றை எதிர்பார்த்துக் கைவிட்ட பொழுது, அங்கு சோற்றுக்குப் பதிலாக நெருப்பு இருந்தது போல் ஆகியது. இரங்கத்தக்க இரவலர்கள் உண்ணட்டும் என்று எண்ணாத அறமற்ற கூற்றுவன், கொள்ளத்தகாத வெளிமானின் உயிரைக் காரணமின்றிக் கொல்லத் துணிந்தான். அதனால் வருந்திய அவன் மகளிர், முறைப்படி தம் மார்பில் வெப்பமுண்டாகுமாறு அடித்துக் கொண்டனர். அவர்கள் கையில் அணிந்திருந்த வளையல்கள் வாழைப் பூப்போல் சிதறின. முதிய சுற்றத்தாரும் பரிசிலரும் வருந்தினர். கள்ளிச் செடிகள் விளையும் பாழிடங்களிலுள்ள சுடுகாட்டில், ஒளியுடைய வேலையுடைய வீரன் இறந்தான். கூற்றுவன் நோயின்றி இருப்பானாக! உயர்ந்த மலையில், புலி தாக்கிய யானை தப்பிப் போனால், தனக்கு இரையாக புலி எலியைப் பிடிக்க விரும்பாது. அலைகள் மிகுந்த கடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் விரைந்து சென்று மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம். நெஞ்சே! துணிவை முன்வைத்து சோர்வடையாமல் எழுவாயாக.

சிறப்புக் குறிப்பு: ”பனுவல்” என்ற சொல் நல்லோர் கூறிய நல்லுரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விடலை என்ற சொல்லுக்கு “வீரன்” என்று பொருள் கொள்ளலாம். ; அல்லது, ”பதினாறு வயதிலிருந்து முப்பது வயதிற்கு உட்பட்டவன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, வெளிமான், முதுமை அடைவதற்கு முன்பே இறந்ததைச் சுட்டிக்காட்டுவதற்காகப் புலவர் பெருஞ்சித்திரனார் “வெள்வேல் விடலை” என்று கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.

236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாரி இறந்த பிறகு, பாரி மகளிர் இருவரையும் தகுந்தவர்களுக்கு மணம் முடிப்பாதற்காகக் கபிலர் அரும்பாடு பட்டார். கபிலர், பாரியின் மகளிரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு விச்சிக்கோ, இருங்கோவேள் என்னும் இரு குறுநிலமன்னர்களை வேண்டினார். அவர்கள் இருவரும் பாரியின் மகளிரை மணந்துகொள்ள சம்மதிக்கவில்லை. அந்நிலையில், கபிலர், பாரி மகளிரை தனக்கு நன்கு தெரிந்த அந்தணர் குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு தான் வடக்கிருந்து உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது. கபிலர், பாரி மகளிரை அந்தணர் குடும்பத்தில் ஒப்படைக்காமல், அவ்வையாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பாரி இறந்த பொழுது தானும் இறக்கவில்லையே என்று கபிலர் வருந்துகிறார். பாரி இறந்த பொழுது அவனுடன் தன்னையும் அழைத்து செல்லாததால் தான் அடைந்த வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார். மற்றும், இப்பிறவியில், பாரியும் தானும் உடலும் உயிரும் போல் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுபோல், அடுத்த பிறவியிலும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விதியை வேண்டுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசை ஆகும்
மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்; நீஎற்
5 புலந்தனை யாகுவை புரந்த யாண்டே;
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
10 இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!

அருஞ்சொற்பொருள்:
1. கலை = ஆண் குரங்கு; முழவு = முரசு; மருள் – உவமை உருபு; பெரும்பழம் = பலாப்பழம். 2. சிலை = வில்; கெழு = பொருந்திய; அல்குதல் = தங்குதல்; மிசை = உணவு. 5. புலந்தனை = வெறுத்தாய்; புரத்தல் = பாதுகாத்தல். 6. ஒல்லாது = பொருந்தாமல். 8. இனையை = வருந்தச் செய்தாய்; மற்று – அசைச் சொல். 9. மேயினேன் = கூடினேன், பொருந்தினேன். 10. உம்மை = மறுபிறவி. 12. பால் = வினை, விதி.

உரை: குரங்கு கிழித்து உண்ட, முரசுபோல காட்சி அளிக்கும் பெரிய பலாப்பழம் வில்லுடன் கூடிய குறவர்கள் சில நாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாகும். மலைகள் பொருந்திய நாட்டையுடைய, பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி! நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில், “இங்கே இருந்து வருக” எனக் கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.