Monday, February 4, 2013

377. நாடு அவன் நாடே!


377. நாடு அவன் நாடே!

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 258-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருநாள் இரவு, வறுமையில் வாடிய பொருநன் ஒருவன் தன் கிணைப்பறையை ஒலித்து, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் அரண்மனை வாயிலில் நின்றான். வேந்தர்களில் பெருநற்கிள்ளிக்கு ஒப்பானவன் யாருமில்லை என்று பலரும் பாராட்டுவதைக் கேட்டான். அதைக் கேட்ட பொருநன் மதி மயங்கினான். அப்பொருநனைக் கண்ட பெருநற்கிள்ளி, அவனை வரவேற்று, மணியும், பொன்னும், முத்தும், நல்ல உடைகளும், கள்ளும் அளித்தான். பொருநனுக்குக் கனவில் கண்டது நனவாகியது போல் இருந்தது.  நாடுகளில் சிறந்தது பெருநற்கிள்ளியின் சோழநாடு என்றும், வேந்தர்களில் சிறந்தவன் பெருநற்கிள்ளிதான் என்றும் பலரும் கூறுவதை எண்ணிப் பார்த்தான். பெருநற்கிள்ளியின் யனைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை எல்லாம் திரண்டிருப்பது கடலின் முழக்கம் போல் இருப்பாதாகப் பொருநனுக்குத் தோன்றியது. பொருநன், பெருநற்கிள்ளியை ‘நீடு வாழ்க!’ என வாழ்த்தினான்.  பொருநன் பரிசு பெற்றதையும் அவன் மனநிலையையும் புலவர் உலோச்சனார் இப்பாடலில் சித்திரிக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

பனிபழுனிய பல்யாமத்துப்
பாறுதலை மயிர்நனைய
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
இனையல் அகற்றஎன் கிணைதொடாக் குறுகி
அவிஉணவினோர் புறங்காப்ப                                                 5

அறநெஞ்சத்தோன் வாழ்நாள்என்று
அதற்கொண்டு வரல்ஏத்திக்
கரவுஇல்லாக் கவிவண்கையான்
வாழ்கஎனப் பெயர்பெற்றோர்
பிறர்க்குஉவமம் தான்அல்லது                                                  10
தனக்குவமம் பிறரில்லென

அதுநினைத்து மதிமழுகி
அங்குநின்ற எற்காணூஉச்
சேய்நாட்டுச் செல்கிணைஞனை
நீபுரவலை எமக்குஎன்ன                                                           15

மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்                                   
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நசைசால் தோன்றல்                                20

நாடுஎன மொழிவோர் அவன்நாடென மொழிவோர்                          
வேந்தென மொழிவோரவன் வேந்தென மொழிவோர்
புகர்நுதலவிர் பொற்கோட்டு யானையர்
கவர்பரிக் கச்சைநன்மாவினர்
வடிமணி வாங்குஉருள                                                             25
கொடிமிசைநற் றேர்க்குழுவினர்                                                                 

கதழிசை வன்கணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
கடல்ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!                                     30

அருஞ்சொற்பொருள்: 1. பழுனுதல் = முதிர்தல்; யாமம் = இரவு. 2. பாறுதல் = சிதறுதல். 3. துஞ்சும் = தூங்கும்; திருநகர் = செல்வமுள்ள மாளிகை; வரைப்பு = சுவர் சூழ்ந்த இடம். 4. இனையல் = வருந்தல். 5. அவி = தேவர் உணவு, வேள்விப் பொருள்; புறங்காத்தல் = பாதுகாத்தல். 8. கரவு = மறைவு, களவு. 12. மழுகுதல் = மயங்குதல், மழுங்குதல். 16. பயத்தல் = கொடுத்தல், உண்டாதல், விளைதல்; கடறு = காடு (மலைச்சாரல்). 18. சேறு = கள்; தசும்பு = கள் வைக்குங் குடம். 20. நசை = அன்பு, விருப்பம். 23. புகர் = புள்ளி; நுதல் = நெற்றி; அவிர்தல் = விளங்கல்; பொன் = இரும்பு; கோடு = கொம்பு (தந்தம்); பொற்கோட்டு யானை = இரும்பாலான கிம்புரி என்னும் அணிகலனைத் தந்தத்தின் நுனியில் அணிந்திருக்கும் யானை. 24. கவர்தல் = விரும்புதல்; பரி = விரைவு. 25. வடி = ஆராய்ச்சி; வாங்கு = வளைவு. 26. மிசை = மேல். 27. கதழ்தல் = விரைதல்; வன்கண் = வீரத்தன்மை. 28. ஈண்டுதல் = கூடுதல். 30. குரிசில் = குருசில் = தலைவன்; மன்னுதல் = நிலைபெறுதல்.

கொண்டு கூட்டு: அகற்ற, குறுகி, பிறர்இல்லென, நினைந்து, மழுகி, நின்ற எற்காணூஉ, என்ன, நிற்ப, தோன்றல், நல்கியோன்; மொழிவோர்; மொழிவோர்;  யானையர், மாவினர், குழுவினர், வன்கணினர், வாழ்நர், ஈண்டுக்கொண்ட தானையையுடைய குரிசில் நெடிது மன்னிய எனக் கூட்டுக.

உரை: பனி மிகுந்த பல இரவுகளில், தலையில் பனிபடும்படி உறங்கியதால், பரந்து கலைந்து தோன்றும் என் தலைமயிர் பனியால் நனைந்து படிந்து கிடந்தது. செல்வம் மிகுந்த மாளிகையில் உள்ளவர்கள் இனிது உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த மாளிகையின் பக்கத்தில் நின்று, என் வறுமையைப் போக்கக் கருதி என் தடாரிப்பறையை இசைத்தேன். வேள்வியில் அளிக்கப்படும் உணவை உண்ணும் தேவர்கள் அந்த மாளிகையில் இருந்த வேந்தனைப் பாதுகாத்தனர். ’அறத்தை நெஞ்சில் உடைய வேந்தன் நெடுநாள் வாழ்வானாக!’ என்று பலரும் வாழ்த்தினர். வாழ்த்தியவர்களை வேந்தன் வரவேற்றான். ’இரவலர்க்கு ஓளிவு மறைவின்றிக் கொடுக்கும் கையையுடையவராதலால் நெடிது வாழ்க’ என்று புலவர்களால் வாழ்த்தப்பட்ட பிற வேந்தர்க்கு, இவ்வேந்தன் உவமம் அல்லது இவனுக்குப் பிற வேந்தர்கள் உவமம் இல்லை என்று சான்றோர் பலர் பாராட்டினர். அவர்கள் பாராட்டியதை நினைத்து நான் மதி கலங்கி நின்றேன். அங்கே, என்னைக் கண்டு, ‘தொலைவில் உள்ள நாடுகளுக்குச் செல்லும் கிணைப் பொருநனே, நான் உனக்கு ஆதரவு அளிக்கிறேன்.’ என்று கூறி, மலையிலிருந்து கிடைத்த மணிகளையும், காட்டிலிருந்து பெற்ற பொன்னையும், கடலிலிருந்து பெற்ற ஒளியையுடைய முத்துக்களையும், வேறுவேறு வகையான உடைகளையும், கள் நிறைந்த குடங்களையும், நான் இனிமேல் வறுமையில் வருந்தாமல் இருப்பதற்காக அன்பு நிறைந்த வேந்தன் அளித்தான். அவனுடைய கொடை, நான் கனவில் கண்டது நனவில் நிறைவேறியது போல் இருந்தது.  நாடுகளில் சிறந்த நாட்டைப் பற்றிப் பேசுபவர்கள் பெருநற்கிள்ளியின் நாடுதான் சிறந்தது என்று கூறுவர். வேந்தர்களில் சிறந்த வேந்தன் யார் என்று பேசுபவர்கள் பெருநற்கிள்ளிதான் சிறந்த வேந்தன் என்று கூறுவர்.

புள்ளிகள் பொருந்திய நெற்றியையும் விளங்குகின்ற கிம்புரி அணிந்த கொம்பினையுமுடைய யானைப்படை, காண்போர் உள்ளத்தைக் கவரும் ஓட்டமும் கச்சும் அணிந்த குதிரைப்படை, ஆய்ந்தெடுத்த மணியின் ஓசையையும் வளைந்த சக்கரங்களையும் மேலே கொடியையும் உடைய  நல்ல தேர்ப்படை, விரைவும் புகழும் வீரமுமுடைய வாட்படை ஆகிய படைகளைச் சார்ந்த வீரர்கள் ஆர்வத்தோடு கூடி உள்ளனர். பெருநற்கிள்ளியின் படைமுழக்கம் கடலின் முழக்கம் போல் உள்ளது. போரில் வெற்றி பெறுவதை விரும்பும் வேந்தனாகிய பெருநற்கிள்ளி நெடுங்காலம் வாழ்வானாக!
                 
சிறப்புக் குறிப்பு: இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி கொடையில் சிறந்து விளங்கியதும், புகழ் மிகுந்தவனாக இருந்ததும், அவனுடைய படையின் சிறப்பும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

No comments: