Sunday, January 6, 2013

376. கிணைக்குரல் செல்லாது!


376. கிணைக்குரல் செல்லாது!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல்  176-இல் காண்க.
பாடலின் பின்னணி:  பாணன் ஒருவன், ஒருநாள் மாலைப் பொழுதில் நல்லியக் கோடனின் இல்லத்திற்குச் சென்றான். அவன் உடையும் உருவமும் அவன் வறுமையை வெளிப்படுத்தியது. அவனைக் கண்டவுடன், நல்லியக் கோடன் அவனுக்குக் கள்ளின் தெளிவும் உணவும் அளித்தான். பாணனின் வறுமையைப் போக்குவதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நல்லியக் கோடன் அளித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட பாணன், தான் வறுமைக் கடலைக் கடப்பதற்கு ஏற்ற தெப்பம் போல் நல்லியக் கோடன்  இருந்ததாகவும், தான் இனி எவரையும் புகழ்ந்து பாடி எவரிடமும் இரக்கப் போவதில்லை என்றும் கூறுவதாக இப்பாடலில் புறத்திணை நன்னாகனார் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
சிறுநனி இறந்த பின்றைச் செறிபிணிச்
சிதாஅர் வள்பின்என் தெடாரி தழீஇப்
பாணர் ஆரும் அளவை யான்தன்                            5

யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்,
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
குணக்குஎழு திங்கள் கனைஇருள் அகற்றப்
பண்டுஅறி வாரா உருவோடு என்அரைத்
தொன்றுபடு துளையொடு பருஇழை போகி 10

நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன்எனப் பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே                  15

இரவி னானே ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்
இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி               20

ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதுஎன் சிறுகிணைக் குரலே.

அருஞ்சொற்பொருள்: 1. விசும்பு = ஆகாயம்; நீத்தம் = வெள்ளம்,கடல்; இறத்தல் = கடத்தல். 2. மழுகி = மழுங்கி = குறைந்து; வாங்கு = வளைவு. 3. சிறுநனி = சிறிதுநேரம்; பின்றை = பின்னர். 4. சிதாஅர் = கந்தை, கிழியல்; வள்பு = வார்; தெடாரி = தடாரி; தழீஇ = தழுவி.  5. ஆர்தல் = உண்ணுதல்; அளவை = அளவு. 6. யாணர் = புதுமை; கூடு = நெற்குதிர். 7. ஞெரேரென = ஞெரேர்+என = விரைவாக. 8. குணக்கு = கிழக்கு; கனை = நெருக்கம். 9. அரை = இடை (இடுப்பு). 11. பறைதல் = கெடுதல், அழிதல் (கிழிதல்). 13. முரற்கை = தாளக்கருவி. 14. அரவு = பாம்பு; தேறல் = கள்ளின் தெளிவு; சூடு = சுடப்பட்ட உணவு; தருபு = தந்து. 15. நிரயம் = நரகம். வறன் = வறுமை. 17. ஞான்று = நாள்; ஊங்கும் = மேலும். 18. நிரப்பு = வறுமை; புணை = மிதவை (தெப்பம்). 20. புதவு = வாய்மடை (மதகு). 21. வரையா = அளவில்லாமல்; கடைத்தலை = தலைவாயில். 22. ஞாங்கர் = இடம், பக்கம்; நெடுமொழி = புகழ்ச்சொல்; பயிலல் = சொல்லல். 23. தோன்றல் = வெளிப்படல்; குரல் = ஓசை.

கொண்டு கூட்டு: அந்தி இறந்த பின்றை, தழீஇ நின்றெனனாக, திங்கள் இருளகற்ற, உருவோடு உடையும் நோக்கி, நீக்கி, களைந்து, பெருந்தகை, ஈத்தோன்; தகையேன், மகிழ்ந்தனெனாகி, புணையின் சிந்தியேன்; சிறுகிணைக்குரல் தோன்றல் செல்லாது எனக் கூட்டுக.

உரை: கடல் போன்ற ஆகாயத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றின் ஓளி குறைந்து, சிவந்த நிறத்துடன் ஞாயிறு வளைந்து தோன்றும் மாலைப் பொழுது கழிந்த சிறிது நேரத்தில், தோலின் துண்டுகளாலும் கிழிந்த துணியாலும் இறுக்கிக் கட்டப்பட்ட எனது தடாரிப் பறையைத் தழுவிக் கொண்டு, பாணர்கள் உனவு உண்னும் பொழுது, நான் நல்லியக் கோடனின் நல்ல மனையின் நெற்கூட்டின்முன் நின்றேன். கிழக்கே தோன்றிய திங்கள், கண்ணை மூடித் திறக்கும் நேரத்திற்குள், அடர்ந்திருந்த இருளை விரைவாக அகற்றியது. நல்லியக் கோடன் என்னை முன்பு பார்த்திருக்கிறான். ஆனால், இப்பொழுது, அவனால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதவாறு என் உடல் உரு மாறியிருந்தது. என் இடுப்பில் இருந்த பழைய உடை, துளைகளுடனும் பருத்த இழைகளுடனும் கூடிக் கெட்டு, மெலிந்து, கரை கிழிந்து கிடந்தது. எனது உடையை நோக்கி, ‘இவன் புதியவன்; இரங்கத் தக்கவன்.’ என்று கூறிப் பெருந்தன்மையுடைய நல்லியக் கோடன், என் கையில் இருந்த தாளத்தைத் தான் வாங்கிக் கொண்டு, பாம்பு சினந்து எழுந்தாற் போன்ற (நன்றாகப் புளித்த) கள்ளின் தெளிவையும் சுட்ட இறைச்சியும் எனக்குத் தந்தான். அன்று இரவே, நரகம் போன்ற என் வறுமையைக் களைவதற்குத் தேவையான பொருள்களை எல்லாம் அவன் அளித்தான். என் தலைவனாகிய நல்லியக் கோடன், என் வறுமைக் கடலை கடப்பதற்கு ஒரு தெப்பம் போல் இருந்ததால், அன்று முதல் இன்றுவரையும், இனி மேலும், பிறரிடம் சென்று இரத்தலை நான் நினைத்திலேன்.  நான் பிறர் உள்ளத்தில் எண்ணுவதை அளந்து அறியும் ஆற்றல் உடையவன். நீர் நிறைந்த குளத்தின் மதகைத் திறந்தால் வெளிப்படும் வெள்ளப் பெருக்குப் போல நான் மகிழ்ச்சி அடைந்தேன்.  இனி, ஒருநாளும், இரப்போர்க்கு குறைவின்றிக் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவரின் வாயிலில்கூட அவர்களின் புகழைப் பாராட்டி அவரிடம் இருந்து ஒருபொருளைப் பெறுவதற்கு எனது சிறிய கிணப்பறை ஒலிக்காது.

No comments: