Friday, March 5, 2010

147. எம் பரிசில்!

பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார் (147, 210, 211, 318). வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்று அவனுக்கு அறிவுரை கூறிய புலவர்களில் பெருங்குன்றூர்க் கிழார் என்பவரும் ஒருவர். இவர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பரிசில் பெற்றவர். பின்னர் குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறையக் கண்டு தம் வறுமையை எடுத்துரைத்தார். ஆனால், குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குப் பரிசு எதுவும் அளிக்கவில்லை. அதனால் வருத்தமுற்ற பெருங்குன்றூர்க் கிழார் குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியாகிய இளஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றார். அவன், இவரை நன்கு வரவேற்றுச் சிறப்பித்தான். இவர் அவனைப் புகழ்ந்து பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடினார். அதனால் பெருமகிழ்ச்சியுற்ற இளஞ்சேரல் இரும்பொறை இவர்க்கு முப்பத்தீராயிரம் பொற்காசுகளைக் கொடுத்துச் சிறப்பித்தான்.

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடியது மட்டுமல்லாமல், இவர் அகநானூற்றில் 8-ஆம் செய்யுளும், குறுந்தொகையில் 338 - ஆம் செய்யுளும், நற்றிணையில் நான்கு செய்ய்ட்களும் ( (5, 112, 119, 347), புறநானூற்றில் நான்கு செய்யுட்களும் (147, 210, 211, 318) இயற்ரியுள்ளார். இவர் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழந்தவராகக் கருதப்படுகிறார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலை ஒரு பாணனின் கூற்று போல் பெருங்குன்றூர்க் கிழார் பாடியுள்ளார். பாணன் ஒருவன், “ நேற்று நாங்கள் செவ்வழிப் பண்னை இசைத்தோம். அதைக் கேட்டு ஒரு பெண் தனியளாக, கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாள். அவள் முடியில் பூச் சூடவில்லை. அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம். அவள் தன் கூந்தலில் பூச்சூடி மகிழுமாறு நீ அருளுதல் வேண்டும். ஆவியர் குடியில் தோன்றிய பேகனே! அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசில்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
5 அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

அருஞ்சொற்பொருள்:
1. முழை = குகை; நீந்தி = கடந்து. 2. செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 3. கார் = கார் காலம் (ஆவணி, புரட்டாசி); உறை = மழைத்துளி; தமி = தனிமை. 4. சிறை = பக்கம்; புலம்பு = வருத்தம். 5. அரி = செவ்வரி (கண்வரி); மதர் = செருக்கு; அம் = அழகு; மா = நிறம்; அரிவை = பெண். 7. மண்னுதல் = கழுவுதல். 8. கஞல = விளங்க; பெயரின் = செல்லின்.

கொண்டு கூட்டு: ஆவியர் கோவே! புலம்புகொண்டு உறையும் அரிவை கூந்தல் புது மலர் கஞல, இன்று பெயரின் அதுஎம் பரிசில் எனக் கூட்டுக.

உரை: ஆவியர் கோவே! கற்குகைகளிலிருந்து விழும் அருவிகளுடைய பலமலைகளைக் கடந்து, வரும் வழியில் சிறிய யாழால் மாலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணை இசைத்து வந்தோம். நேற்று நாங்கள் வந்த பொழுது, கார் காலத்தில் வானத்திலிருந்து விழும் இனிய மழைத்துளிகளின் ஓசையைத் தனித்திருந்து கேட்டு ஒரு பெண் ஒரு பக்கத்தில் இருந்து வருந்திக்கொண்டு இருந்தாள். (அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம்). அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்னின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.

No comments: