Monday, October 12, 2009

111. விறலிக்கு எளிது!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ”பறம்பு மலை இரங்கத் தக்கது; அது வேந்தர்களால் கைப்பற்ற முடியாதது. ஆனால், பறையுடன் பாடி வரும் பெண்களுக்கு எளிதில் பரிசாகக் கிடைக்கும்” என்று தன் வியப்பைக் கபிலர் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: நொச்சி. மதிலைக் காக்கும் வீரர்கள் போர்ப்பூச் சூடியிருத்தலைப் புகழ்வது.
துறை: மகண் மறுத்தல். ஒரு தலைவன் அவனைவிட எளியவனின் மகளை வேண்ட, அவ்வெளியவன் தன் மகளை அத்தலைவனுக்கு மணம் செய்விக்க மறுத்துக் கூறுதல்.

அளிதோ தானே, பேர்இருங் குன்றே;
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து இணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

அருஞ்சொற்பொருள்:
1.அளிது = இரங்கத் தக்கது; இரு = பெரிய. 2. வேறல் = வெல்லுத;. 3. இணை = இரண்டு; புரையும் = ஒத்த; உண்கண் = மை உண்ட கண் (மை தீட்டிய கண்). 4. கிணை = ஒரு வகைப் பறை.

உரை: மிகப் பெரிய பறம்பு மலை இரங்கத் தக்கது. அதை வேற்படையால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரிது. நீலமலர்களைப் போன்ற மை தீட்டிய கண்களையுடய பெண்கள் கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது.

சிறப்புக் குறிப்பு: அழகிய பெண்களாக இருந்தாலும் அவர்களும் பரிசிலராகப் பாடி வந்து கேட்டால்தான் பறம்பு மலையைப் பெறமுடியுமே ஒழிய, தன் அழகால் பாரியை மயக்கி அம்மலையைப் பெற முடியாது என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளது.

No comments: