Saturday, December 15, 2012

371. பொருநனின் வறுமை!


371. பொருநனின் வறுமை!

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனை பற்றிய செய்திகளைப் பாடல் 72-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், பண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போரில் வெற்றி பெற்றான். போர்க்களத்தில் பிணங்கள் சிதைந்து கிடந்தன. பேய்மகளிர் அப்பிணங்களைத் தின்று, மகிழ்ந்து நெடுஞ்செழியனை வாழ்த்தினர். பசியால் வாடிய பொருநன் ஒருவன் நெடுஞ்செழியனைக் கண்டு, அவன் புகழைப் பாடி, களிறுகளைப் பரிசாகப் பெறலாம் என்று பாடுவதாக புலவர் கல்லாடனார் இப்பாடலை இயற்றியுள்ளார். 

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது
மரந்தலை சேர்ந்து பட்டினி வைகிப்
போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்
தயங்குஇரும் பித்தை பொலியச் சூடிப்
பறையொடு தகைத்த கலப்பையென் முரவுவாய்      5

ஆடுறு குழிசி பாடின்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்பக்                       
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்
கூர்வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப                    10

வருகணை வாளி . . . . .
.. .. .. .. .. .. .. .. .. .. அன்பின்று தலைஇ
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை                                  
வில்லேர் உழவின்நின் நல்லிசை யுள்ளிக்
குறைத்தலைப் படுபிணன் எதிரப் போர்புஅழித்து  15

யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள்உகு கடாவின்
மதியத் தன்னஎன் விசியுறு தடாரி                                  
அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கைப்      20

புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும!
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினள்           
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து                25

வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே!                                     

அருஞ்சொற்பொருள்: 1. அகன்றலை = அகன்+தலை = அகன்ற இடம்; வையம் = உலகம்.  2. தலை = இடம்; வைகி = தங்கி, இருந்து.  3. போது = மலரும் பருவத்தரும்பு; அவிழ் = சோறு; அலரி = பூ. 4. தயங்கல் = ஒளி செய்தல்; பித்தை = ஆணின் தலைமயிர். 5. தகைதல் = அடக்குதல் (கட்டுதல்); கலப்பை = இசைக் கருவிகள் (பொருள்கள்) அடங்கிய பை; முரவு = சிதைவு, முரிவு. 6. ஆடு = சமைக்கை; குழிசி = பானை; பாடு = கேடு.  7. உறைதல் = ஒழுகுதல் (உதிர்தல்). 8. நசைதல் = விரும்புதல்; இருக்கை = இருப்பிடம். 9. ஆரிடை = அரிய வழி. 8. குறை = இன்றியமையாத செயல். 10. இரு = பெரிய; மிளிர்தல் = புரளுதல். 11. கணை = அம்பு.12. தலைஇ = பெய்து. 13. இரைதல் = ஒலித்தல்; முரைசு = முரசு; ஆர்க்கும் = ஒலிக்கும் (முழங்கும்); உரைசால் = புகழ் நிறைந்த. 14. இசை = புகழ். 17. அதரி திரித்தல் = நெற்பயிரைக் கடாவிட்டு உழக்குதல்; உகுத்தல் = நிலை குலைதல், சிதறுதல். 18. விசித்தல் = இறுகக் கட்டுதல்; தடாரி = ஒரு வகைப் பறை. 19. ஆகுளி = ஒரு வகைப் பறை. 20. பணை = மருத நிலப்பறை, பறைக்குப் பொதுவான பெயர்; பிணர் = சொர சொரப்பு; தடம் = பெருமை; தடக்கை = தடம் + கை = பெரிய கை (துதிக்கை). 21. புகர் = புள்ளி; முகவை = பெறும் பொருள் (பரிசு). 22. களிறு = பன்றி; கோடு = கொம்பு; வால் = வெண்மை; எயிறு = பல். 23. விழுக்கு = கொழுப்பு; விரைஇ = கலந்து. 26. வியங்குதல் = விளங்குதல். 27. உரு =அச்சம்; அயர்தல் = விளையாடுதல் (கூத்தாடுதல்). 28. துகள் = புழுதி (தூள்); கிழவோன் = உரிமையுடையவன்.

கொண்டு கூட்டு: பேய்மகள் வாழியர் பலவென அயர; துகளாடிய களங்கிழவோய், பெரும, காணாது, வைகி, தகைத்த கலப் பையேனாய், நீந்தி, உள்ளி, வந்திசின் என மாறிக் கூட்டுக.

உரை: அகன்ற இடங்களையுடைய இவ்வுலகில் எங்களைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணாததால், மரத்தின் அடியில் பட்டினியோடு இருந்து, அரும்புகளாக இருந்து மலர்ந்த பூக்களை மாலையாகத் தொடுத்து, ஒளிறும் தலைமுடிமேல் அழகுடன் சூடிக்கொண்டு பறையொடு கூடிய இசைக் கருவிகள் அடங்கிய பையோடு, சிதைந்த வாயையுடைய சமையல் செய்யும் பானையைக் கேடின்றி தூக்கிகொண்டு, மன்றத்திலிருந்த வேப்பமரத்திலிருந்த ஒளிபொருந்திய பூக்கள் உதிர, சோற்றுக்குரிய அரிசி இல்லாததால், மிக இன்றியமையாத வேறு எச்செயலையும் செய்ய விரும்பாமல், பொருள் தேடுவதிலேயே விருப்பமுடையவனானேன். அரிய வழிகள் பல கடந்து, கூர்மையான படைக்கருவிகள் அவைகளின் இயல்பிற்கேற்பச் சுழலவும், அம்புகள் அன்பில்லாமல் பகைவர் மேற்சென்று … ஒலிக்கும் முரசு முழங்கும் புகழ் நிறைந்த பாசறையில் உள்ள, வில்லால் போர் செய்யும் உன்னுடைய நல்ல புகழை நினைத்து, தலைகள் வெட்டப்பட்ட உடல்கள் குவிய, பிணக்குவியலை அழித்து, யானைகளாகிய எருதுகளைப் பனைமடலால் ஓச்சி (செலுத்தி) ஆளாகிய வைக்கோலை அடித்து உதறிய களத்தில், முழுமதி போன்றதும், வாரால் இறுகக் கட்டப்பட்டதுமாகிய தடாரிப் பறையை அதன் அகன்ற கண் அதிரும்படி அடித்து, ஆகுளிப் பறையைக் கொட்டிக்கொண்டு, பறை போன்ற நெடிய கால்களையும், சொர சொரப்புடைய பெரிய கையையும், புள்ளிகள் நிறைந்த முகத்தையுமுடைய யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று வந்தேன். பெரும! பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து, கொழுப்புக் கலந்த வெண்மையான தசையைத் தின்று சுவைப்பவளாய்க், குடல்களைத் தலையில் மாலையாக அணிந்துகொண்டு, உண்ணுதற்குக் குறையாதவாறு பெரிய வளமாகிய பிணங்களைத் தந்த இவ்வேந்தன், வானத்தில் விளங்கும் பல விண்மீன்களைவிடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று, அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும் குருதி கலந்த செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!

No comments: