Monday, March 21, 2011

234. உண்டனன் கொல்?

பாடியவர்: வெள்ளெருக்கிலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 233-இல் காண்க.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 233-இல் காண்க.
பாடலின் பின்னணி: முந்திய பாடலில், வேள் எவ்வி விழுப்புண் பெற்றான் என்ற செய்தி பொய்யாகட்டும் என்று தாம் விரும்புவதாக வெள்ளெருக்கிலையார் கூறினார். ஆனால், அது உண்மையாகியது; அவன் இறந்தான். ஒரு நாள், வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு, வேள் எவ்வியின் மனைவி, அவன் நினைவாக அவனுக்கு உணவு படைப்பதைக் கண்டார். அவர் மிகவும் வருத்தமுற்றார். அவர் புலம்பல் இபாடலாக அமைந்துள்ளது.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி அன்ன சிறுவழி மெழுகித்
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
5 உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇ யோனே.

அருஞ்சொற்பொருள்:
1. நோகோ = வருந்தக்கடவேன்; மா=பெரிய; காலை = வாழ்நாள். 2. பிடி = பெண் யானை. 3. அமர் = விருப்பம்; புன் = புல். 4. பிண்டம் = இறந்தவர்களுக்குப் படைக்கப்படும் உணவு. 6. மரீஇ = கூடி.

கொண்டு கூட்டு: பலரோடு உண்டல் மரீஇயோன், யாங்கு உண்டனன் கொல்; நோகோ யானே எனக் கூட்டுக.

உரை: உலகத்து மக்களெல்லம் புகுந்து உண்ணக்கூடிய பெரிய வாயிலை உடைய வேள் எவ்வி பலரோடும் சேர்ந்து உண்ணுபவன். அத்தகையவன், ஒரு பெண் யானையின் கால் அடி அளவே உள்ள சிறிய இடத்தை மெழுகி, அங்கிருந்த புல் மேல், அவனை விரும்பும் அவன் மனைவி படைத்த இனிய, சிறிதளவு உணவை எப்படி உண்பான்? இதைக் கண்டு நான் வருந்துகிறேன்; என் வாழ்நாட்கள் இன்றோடு ஒழியட்டும்.

No comments: