Monday, March 21, 2011

232. கொள்வன் கொல்லோ!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் இறந்த பிறகு அவன் நினைவாக ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில் அதியமான் பெயரைப் பொறித்து, மயில் தோகை சூட்டி, ஒரு சிறிய பாத்திரத்தில் மதுவை வைத்துப் படைத்து அந்த நடுகல்லை வழிபட்டனர். அதைக் கண்ட அவ்வையார், துயரம் மிகுந்தவராய், அவனை நினைவு கூர்ந்து தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

இல்லா கியரோ, காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
5 கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே.

அருஞ்சொற்பொருள்:
3. பீலி = மயில் இறகு. 4. உகுத்தல் = வார்த்தல். 5. பிறங்குதல் = உயர்தல்

கொண்டு கூட்டு: நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ எனக் கூட்டுக.

உரை: காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒருசிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ?

சிறப்புக் குறிப்பு: இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைப்பதும், நடுகல்லுக்கு வழிபாடு நடத்துவதும் சங்கக காலத்தில் வழ்க்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

No comments: