Thursday, August 16, 2012


338. ஓரெயின் மன்னன் மகள்!

பாடியவர்: குன்றூர் கிழார் மகனார். குன்றூர் என்பது ஓரூர். இவ்வூரைச் சார்ந்தவரான குன்றூர் கிழாரின் இயற்பெயர் தெரியவில்லை.  நற்றிணையில் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்ற புலவர் ஒருவர் ஒருபாடல் (332) இயற்றியுள்ளார். ஆகவே, இப்பாடலை இயற்றியவரும் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்பவரும் ஒருவராக இருக்கலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து.
  
பாடலின் பின்னணி: ஓருரில், மிகுந்த  செல்வத்துடன் கூடிய தலைவன் ஒருவன் உள்ளான்.  முடிசூடிய மூவேந்தர்களானாலும், அவர்கள் அவனிடம் வந்து அவன் தகுதிக்கேற்பப் பணிந்து கேட்டால்தான் அவன் தன் பெண்ணை அவர்களுக்குத் திருமணம்  செய்விக்க உடன்படுவான்.  குன்றூர் கிழார் மகனார், இப்பாடலில், அத்தலைவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.
ஏர்பரந்த வயல்  நீர்பரந்த செறுவின்
நெல்மலிந்த மனைப் பொன்மலிந்த மறுகின்
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெருஞ்சீர் அருங்கொண் டியளே; கருஞ்சினை                                    5

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்                                               
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்வண் தோட்டுப்
பிணங்குகதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று                                             10

உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!

அருஞ்சொற்பொருள்: 1. பரத்தல் = பரவுதல் (உழுதல்); செறு = வயல். 2. பொன் = அழகு; மலிதல் = மிகுதல்; மறுகு = தெரு. 3. படுதல் = தோன்றல்; ஆர்த்தல் = ஒலித்தல். 4. போந்தை = ஓரூர். 5. கொண்டி = பிறர் பொருளைக் கொள்ளுதல் (கொள்ளை); கரு = கரிய; சினை = கிளை. 6. ஆர் = ஆத்தி; போந்தை = பனை. 7, சென்னி = தலை; மலைந்த = அணிந்த. 9. தோடு = இலை. ஓலை. 10. பிணங்குதல் = பின்னுதல்; கழனி = வயல்; நாப்பண் = நடுவே; ஏமுற்று = கட்டப்பட்டு. 11. உணங்கல் = காய்தல்; ஆழி = கடல். 12. எயில் = மதில்; மடம் = இளமை.

கொண்டு கூட்டு: மன்னன் மடமகள்; அரும் கொண்டியள்; அவளை வேந்தர்வரினும் தந்தக வணக்கார்க்கு ஈகுவன் அல்லன்; வணங்கிப் பெறுக எனக் கூட்டுக.

உரை: வளமான தோட்டையும், பின்னிக் கிடக்கும் கதிரையைமுடைய வயல்களுக்கு நடுவில், ஒற்றை மதிலால் சூழப்பட்ட கோட்டை ஒன்று உள்ளது. அந்தக் கோட்டை, கடற்கறையில் கட்டப்பட்டுக் காய்ந்து கிடக்கும் மரக்கலம் போல் காட்சி அளிக்கிறது. அந்தக் கோட்டைக்குரியவனின் இளமை பொருந்திய ஒப்பற்ற மகள், ஏர் உழுத வயலையும், நீர் நிறைந்த விளைநிலங்களையும், நெல் நிரம்பிய வீட்டையும், அழகு மிகுந்த தெருக்களையும் , மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் பன்மலர்ச் சோலையையும் உடைய நெடுவேள் ஆதனின் போந்தை என்னும் ஊர் போன்ற பெருஞ்சிறப்புடன் கூடிய செல்வத்தைப் பகைவர்களிடமிருந்து பெற்றவள்.  கரிய கிளைகளையுடைய வேம்பின் பூமாலை, ஆத்தி மாலை, பனந்தோட்டு மாலை ஆகியவற்றைச் சூடிய, வெற்றி மிக்க முடிவேந்தரில் ஒருவர் அவளை மணக்க விரும்பி அவள் தந்தையிடம் பெண் கேட்க வந்தாலும் தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டால் ஒழிய அவள் தந்தை அவளை அவருக்கு மணம் செய்விக்க மாட்டான். 

No comments: