Monday, January 4, 2010

140. தேற்றா ஈகை!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 137-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், சில விறலியருடன் அவ்வையார் நாஞ்சில் வள்ளுவனைக் காணச் சென்றார். விறலியர் அங்குள்ள கீரையப் பறித்து, சமைக்க ஆரம்பித்தார்கள். அக்கீரைக் கறியின் மேலே தூவுவதற்காகக் கொஞ்சம் அரிசி வேண்டுமென்று நாஞ்சில் வள்ளுவனைக் கேட்டார்கள். அரிசி கேட்ட விறலியருக்கு, நாஞ்சில் வள்ளுவன் ஒரு யானையைப் பரிசாக அளித்தான். அதைக் கண்ட அவ்வையார், “அரிசி கேட்டதற்கு யானையையா கொடுப்பர்கள்?” என்று நாஞ்சில் வள்ளுவனின் கொடைத்தன்மையை வியக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம்சில
5 அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலில் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
10 போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே?

அருஞ்சொற்பொருள்:
1.தடவு = பெருமை. 2. மடவன் = மடையன்; மன்ற = உறுதியாக ; செந்நா = செம்மையான(நடுவு நிலைமை தவறாத) நாக்கு. 3. படப்பை = கொல்லை, தோட்டம். 4. அடகு = கீரை; கண்ணுறை = மேலே தூவுவது. 5. பிற - அசை. 6. வரிசை = தகுதி, தரம். கடறு = காடு. 7. இரு = பெரிய. 9. தேற்ற = தெளியாத. 10. போற்றுதல் = பாதுகாத்தல் ; அம்ம - அசை.

உரை: நடுவு நிலைமை தவறாத புலவர்களே! பெரிய பலா மரங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்! வளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது, அக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள். தான் பரிசிலருக்கு உதவும் முறையை அறிதலால் என் வறுமையைல் கருதாமல், தன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான். இப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ? பெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச் (செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய மாட்டர்கள் போலும்!

No comments: