Monday, January 4, 2010

138. நின்னை அறிந்தவர் யாரோ?

பாடியவர்: மருதன் இளநாகனார். இவரை மதுரை மருதனிளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத் திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, இவர் தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத் திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் இயற்றிய ஐந்து பாடல்கள் (52, 55, 138, 139, 349) புறநானூற்றில் உள்ளன. அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக் கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும் நற்றிணையில் 12 செய்யுட்களும் இவர் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 137-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் செல்லும் பாணன் ஒருவனை மருதன் இளநாகனார் கண்டார். அவனை நோக்கி, “மூத்த பாணனே! நீ பெரிய எண்ணங்களோடு நாஞ்சில் வள்ளுவனைக் காணச் செல்கிறாய். நீ அவனைக் கண்டால் அவன் உன்னை ’மற்றொரு நாள் வா’ என்று கூறாமல் உனக்கு வேண்டிய பரிசுகளை அளிப்பான் “ என்று கூறுகிறார். அதைக் கேட்ட பாணன், தான் முன்பு ஒருமுறை நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெற்றதால் மீண்டும் அவனிடம் செல்லுவதற்குத் தயங்குவதாகக் கூறினான். அதற்கு மறுமொழியாக, மருதன் இளநாகனார், “ மரப்பொந்தில் உள்ள உணவுப் பொருளைக் கிளிகள் பலமுறை உண்ணுவதை நீ கண்டதில்லையா? நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெறுவதும் அது போன்றதுதான். நீ முன்பு வந்து போனவன் என்று கூறுவார் அங்கு யாருமில்லை” என்று கூறிப் பாணனை மருதன் இளநாகனார் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
5 சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண!
நீயே பேரெண் ணலையே; நின்இறை
மாறி வாஎன மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
10 மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

அருஞ்சொற்பொருள்:
1. ஆ = பசு; இனம் = கூட்டம்; கலித்த = தழைத்த; அதர் = வழி. 4. உயிர் = ஓசை (இசை). 5. சிதார் = கந்தை; முதாஅரி = மூத்த. 6. எண்ணல் = எண்ணம். 7. மாதோ - அசை. 8. ஒலித்தல் = தழைத்தல்; இரு = கரிய; கதுப்பு = மயிர்; ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள்.9. மரீஇய = மருவிய, தங்கிய; வியன் =மிகுதி, பெரிய; புனம் = காடு, கொல்லை. 10. மரன் = மரம்; அணி = பொந்து; குரல் = கதிர்.

உரை: பசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து, மான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து, மீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு வளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே! நீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்) ’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான். தழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும் உடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன், கிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில் வைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன். அங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம். அதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம். ஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்?

No comments: