Monday, September 28, 2009

107. பாரியும் மாரியும்

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கிறார்கள். ஆனால், இவ்வுலகைக் காப்பதற்கு பாரி மட்டுமல்லாமல் மாரியும் உண்டு” என்று வஞ்சப் புகழ்ச்சியணியால் பாரியைக் கபிலர் சிறப்பிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே.

அருஞ்சொற்பொருள்:
1.ஏத்துதல் = உயர்த்திக் கூறுதல். 2.செந்நா = செம்மையான நா , நடுநிலை தவறாத நா. 4.மாரி = மழை; ஈண்டு = இவ்விடம், இவ்வுலகம்; புரத்தல் = காத்தல்.
உரை: நடுநிலை தவறாத (நாவையுடைய) புலவர் பலரும் “பாரி, பாரி” என்று பாரி ஒருவனையே உயர்வாகப் புகழ்கிறார்கள். பாரி ஒருவன் மட்டும் (தன் கொடையால்) இவ்வுலகைக் காக்கவில்லை; இவ்வுலகைக் காப்பதற்கு மழையும் உண்டு.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், கபிலர் பாரியை இகழ்வது போல் புகழ்கிறார். இது வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. சில சமயங்களில் மழை அதிகமாகப் பெய்து கேடு விளைவிக்கும் ஆற்றலையுடையது. ஆனால், பாரியின் கொடையால் அத்தகைய கேடுகள் விளையும் வாய்ப்பில்லை. ஆகவேதான், செந்நாப் புலவர் பாரி ஒருவனையே புகழ்ந்தார் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.

1 comment:

sasitharan said...

This is great. guys like me who struggle to read Tamil cleanly .. its very very useful.. thank you sir