Monday, September 14, 2009

100. சினமும் சேயும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: சங்க காலத்தில், அரச குலத்தில் முதல் மகன் பிறந்த சில நாட்களில், தந்தை போர்க்கோலத்தோடு சான்றோர்கள் சூழச் சென்று அம்மகனைக் காண்பது மரபு. இம்மரபுக்கேற்ப, தன் மகன் பொகுட்டெழினி பிறந்த சில நாட்களில், போர்க்கோலம் பூண்டு அதியமான் அவனைக் காணச் சென்றான். அச்சமயம், அவ்வையார் அங்கிருந்தார். தான் கண்ட காட்சியை இப்பாடலில் அவ்வையார் கூறியுள்ளார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

கையது வேலே; காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோடு
5 வெட்சி மாமலர் வேங்கையடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர்இவன் உடற்றி யோரே;
10 செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே.

அருஞ்சொற்பொருள்:
1.புனை = அழகு. 2.வியர் = வியர்வை; மிடறு = கழுத்து; பசும்புண் = ஆறாத புண். 3. வட்கு = கேடு; வட்கர் = வட்கார் = பகைவர்; போகிய = ஒழிந்த, தொலைந்த; போந்தை = பனங்குருத்து. 5. வெட்சி = ஒரு செடி (பசு நிரை கவர்தல்); விரைஇ = கலந்து; வேங்கை = ஒரு வகை மரம். 6. சுரிதல் = சுருளுதல்; இரு = கரிய; பித்தை = முடி. 7. வரிவயம் = புலி; வயம் = வலி. 8. அன்னோ = ஐயோ. 9. உய்ந்தனர் = பிழைத்தவர்; உடல்தல் = சினத்தொடு போரிடுதல். 10. செறுவர் = பகைவர். 11. ஆனாமை = நீங்காமை, குறையாமை

கொண்டு கூட்டு: வெண்தோடு வெட்சி மாமலர் வேங்கையோடு விரைஇச் சூடிச் செறுவர் நோக்கிய கண் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே; அன்னோ! இவன் உடற்றியோரே உய்ந்தனர் அல்லர்.

உரை: கையிலே வேல்; கால்களிலே அழகான கழல்கள்; உடலிலே வியர்வை; கழுத்திலே ஈரம் ஆறாத புண்; பகைவரை அழிப்பதற்காக, வளரும் இளம் பனங்குருத்தின் உச்சியில் உள்ள ஊசி போன்ற வெண்மையான தோட்டையும், வெட்சியின் பெரிய மலர்களோடு வேங்கைப் பூவும் கலந்து சுருண்ட, கரிய முடியில் அழகுறச் சூடி, புலியோடு போரிட்ட வலிய யானையைப் போல இன்னும் நீங்காத சினத்துடன் அதியமான் உள்ளானே! இவனுடன் சினந்து போரிட்டவர்கள் பிழைக்கமாட்டார்கள். பகைவரைப் பார்த்த கண்கள் தன் புதல்வனைப் பார்த்தும் சிவப்பு நிறம் குறையாமல் இருக்கின்றனவே!

சிறப்புக் குறிப்பு: அதியமான் போர்க்கோலம் பூண்டு தன் மகனைக் காண வந்ததாகப் பாடலின் பின்னணியில் குறிப்பிடப்பட்ட கருத்து அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் உரையில் காணப்படும் கருத்து. ஆனால், போர்க்களத்தில் பகைவரை அழித்த பிறகு, அரண்மனைக்குச் சென்று அதியமான் தன் மகனைக் காண்பது போன்ற காட்சியை அவ்வையார் இப்பாடலில் கூறுகிறார் என்றும் கருதுவதற்கும் இப்பாடல் இடமளிக்கிறது.

No comments: