Tuesday, May 10, 2011

252. அவனே இவன்!

பாடியவர்: மாரிப்பித்தியார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 251-இல் காண்க.
பாடலின் பின்னணி:
முந்திய பாடலில் இளைஞன் ஒருவன் துறவறம் பூண்டொழுகுவதைக் கூறிய மாரிப்பித்தியார் அவன் இல்வாழ்க்கையில் இருந்த பொழுது மகளிரை இனிய சொல்லால் காதல் மொழிபேசி வயப்படுத்தும் வேட்டுவனாய் இருந்தான் என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: தாபத வாகை. முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல்.

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
5 சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே.

அருஞ்சொற்பொருள்:
1. கறங்கல் = ஒலித்தல். 3. அள்ளு = செறிவு; தாளி = ஒருவகைக் கொடி; புல் = புல்லிய, மென்மையான; மடமயில் = இளம் மயில்.

உரை: ஒலிக்கும் வெண்மையான அருவியில் நீராடுவதால், பழையநிறம் மாறி தில்லைமரத் தளிர் போன்ற வெளிறிய சடையோடு கூடி நின்று, செறிந்த இலைகளுடைய தாளியைப் பறிக்கும் இவன், முன்பு இல்வாழ்க்கையில் இருந்த பொழுது இளம் மயிலை ஒத்த தன் மனைவியை வயப்படுத்தும் சொற்களலாகிய வலையையுடைய வேட்டுவனாக இருந்தான்.

No comments: