Tuesday, February 15, 2011

225. வலம்புரி ஒலித்தது!

பாடியவர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளி வாழ்ந்த காலத்தில், மற்ற மன்னர்கள் தம்மிடம் உள்ள வலம்புரிச் சங்கை முழங்குவதில்லை. சங்கை முழங்கினால் அவர்கள் தம் வெற்றியை அறிவிக்கச் சங்கை முழங்குவதாக எண்ணிச் சோழன் நலங்கிள்ளி படையெடுத்துப் போருக்கு வருவான் என்று மற்ற மன்னர்கள் அஞ்சியதால்தான் அவர்கள் தங்கள் சங்குகளை முழங்காமல் இருந்தனர். அவ்வளவு வலிமை உள்ளவன் இப்பொழுது இறந்துவிட்டான். இப்பொழுது அரசர்களைக் காலையில் துயில் எழுப்புவதற்காகச் சங்குகள் முழங்கப்படுகின்றன, அதைக் கேட்டு, புலவர் ஆலத்தூர் கிழார், சோழன் நலங்கிள்லியை நினைத்து வருந்துகிறார். இப்பாடலில், அவர் தன்னுடைய செயலற்ற நிலையை வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
5 வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள்இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
10 இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினும் நோகோ யானே.

அருஞ்சொற்பொருள்:
1. மிசைதல் = உண்ணுதல். 2. மாந்துதல் = உண்ணுதல். 3. பிசிர் = ஒட்டிய தோல்; நுகர்தல் = அனுபவித்தல், புசித்தல். 5. பீடு = பெருமை. 7. களரி = பாழ்நிலம்; பறந்தலை = பாழிடம். 8. வியன் = அகன்ற, பெரிய. 10. நுவலுதல் = சொல்லுதல்; ஏய்தல் = ஒத்தல். 11. குரீஇ = குருவி. 12. சிறை = பக்கம்; கொளீஇய = கொள்ள வேண்டி; திரி = வளைந்த. 13. ஞாலம் = உலகம்; கடைத்தலை = தலைவாயில்.

கொண்டு கூட்டு: முன்பு நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென ஒரு சிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலா நிற்க, பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேன் எனக் கூட்டுக.

உரை: முன்னே செல்லுகின்ற படையினர் நுங்கின் இனிய பதத்தினை உண்ணுவர்; படையின் இடைப்பகுதியில் உள்ளோர், பனம்பழத்தின் இனிய கனியை உண்ணுவர்; படையின் கடைப்பகுதியில் உள்ளோர் தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கினை உண்பர். பரந்த நிலப்பரப்பையுடைய உலகத்தை வலமாகச் சுற்றிப் பகைமன்னர்களின் பெருமிதத்தை அழித்த வேல் ஏந்திய படையோடு கூடிய, வலிமையின் விளைவை இப்பொழுது கேட்பாயாக. அவன் இறந்த பிறகு, அவன் நாடு கள்ளிச் செடிகள் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்து முள்ளுடைய பெரிய காடாகியது.

முன்பு, மற்ற வேந்தர்களின் அரண்மனைகளில் இருந்த வலம்புரிச் சங்குகளை முழங்கினால், அவர்கள் முரசுடன் பெற்ற வெற்றியைக் குறித்து முழங்குகிறார்கள் என்று நலங்கிள்ளி நினைப்பான் என்று அஞ்சி, தூக்கணங்குருவிக் கூடுகளைப்போல் ஒருபக்கம் தூங்கிய (தொங்கிக்கொண்டிருந்த) வலம்புரிச் சங்குகள் இப்பொழுது உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில், அவர்களைத் துயில் எழுப்புவதற்காக ஒலித்தாலும் நான் அதனைக் கேட்டு, இன்னும் இறவாமல் இருக்கிறேனே என்று வருந்துகிறேன்.

No comments: