Tuesday, February 15, 2011

221. வைகம் வாரீர்!

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் இறந்ததும் அவன் திறமையையும், அறிவையும், பெருமையையும் கருதி அவனுக்கு ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில், அவன் பெயரும், புகழும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றும், அந்த நடுகல் மயில் இறகு சூடப்பட்டு, மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அதைக்கண்ட பொத்தியார், மனம் கலங்கி, இத்தகைய சிறந்த மன்னனின் உயிரைப் பறித்த கூற்றுவனை வைகுவோம் என்று அங்குள்ள மற்ற சான்றோர்களை அழைப்பதை இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;
5 மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
10 வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

அருஞ்சொற்பொருள்:
3. கோல் = செங்கோல். 4. திறவோர் = சான்றோர்; திண் = வலி. 5. சாயல் = மென்மை; மைந்து = வலிமை. 6. துகள் = குற்றம்; புக்கில் = புகலிடம். 9. பைதல் = துன்பம்; தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு. 10. வைகம் = வைகுவோம்; வம்மோ = வாருங்கள். 11. நனந்தலை = அகன்ற இடம்; அரந்தை = துயர்; தூங்க = அடைய.

கொண்டு கூட்டு: வாய்மொழிப் புலவீர், அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிர் உய்த்தது; அதனால், புரவலன் கல்லாயினன் என ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ எனக் கூட்டுக.

உரை: வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்; அறவோர் புகழ்ந்த செங்கோலன்; சான்றோர் புகழ்ந்த நெருங்கிய நட்புடையவன்; மகளிரடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்; குற்றமற்ற கேள்வி அறிவுடையவர்களுக்குப் புகலிடமானவன்; அத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவன் உயிரைக்கொண்டு சென்றான். அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர்.

No comments: