Tuesday, February 15, 2011

223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: முந்திய பாடலில், பொத்தியார் தனக்கு வடக்கிருப்பதற்குரிய இடம் எது என்று கோப்பெருஞ்சோழனின் நடுகல்லைப் பார்த்துக் கேட்கிறார். அச்சமயம், அவருக்குக் கோப்பெருஞ்சோழன் உயிருடன் வந்து அவர் வடக்கிருப்பதற்கு ஏற்ற இடத்தைச் சுட்டிக் காட்டியது போல் தோன்றியது. சோழன் காட்சி அளித்துத் தனக்கு இடம் காட்டியதை வியந்து, இப்பாடலில், பொத்தியார் அவனுடைய நட்பைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பலர்க்குநிழ லாகி உலகம்மீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
5 இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

அருஞ்சொற்பொருள்:
1. நிழல் ஆதல் = அருள் செய்தல்; மீக்கூறல் = புகழ்தல், வியத்தல், மிகவும் சொல்லப்படுதல். 2. தலைப்போதல் = அழிதல், முடிதல்; சிறுவழி மடங்கி = சிறிய இடத்தின்கண் அடங்கியிருந்து. 4. மன்ற = நிச்சயமாக. 5. கிழமை = உரிமை. 6. உழை = பக்கம்.

கொண்டு கூட்டு: தொன்னட்புடையோர் தம்முழைச் செலின் இடம் கொடுத்து அளிப்ப எனக் கூட்டுக.

உரை: பலருக்கும் அருள் செய்யும் நிழலாகி, உலகத்தாரால் மிகவும் பெருமையாகப் பேசப்படும் வகையில் அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் ஒருசிறிய இடத்தில் அடங்கி நிலைபெறும் நடுகல் ஆனாய்; அவ்வாறு நீ நடுகல்லானாலும், உடம்பும் உயிரும் இணைந்தது போன்ற உரிமையுடைய, பழைய நட்பினர் உன்னிடம் வந்தால், நிச்சயமாக நீ அவருக்கு இடம் கொடுத்து உதவி செய்வாய் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

சிறப்புக் குறிப்பு: நெருங்கிய நட்புக்கு உதாரணமாக உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைத் திருவள்ளுவர்,

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு. (குறள் – 1122)

என்று கூறியிருப்பதை இங்கு ஒப்பு நோக்குக.

No comments: