Tuesday, February 15, 2011

224. இறந்தோன் அவனே!

பாடியவர்: கருங்குளவாதனார் . பல நூல்களில், இப்பாடலின் ஆசிரியர் கருங்குழல் ஆதனார் என்று காணப்படுகிறது. இருப்பினும், உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் அது தவறு என்றும், இப்பாடலை இயற்றியவர் கருங்குளவாதனார் என்றும் குறிப்பிடுகிறார். ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இப்பொழுது தமிழ் நாட்டின் தென்பகுதியில் உள்ள கருங்குளம் என்னும் ஊர் கரிகாலனால் ஆதனாருக்கு அளிக்கப்பட்டதற்குச் சான்றாக, “கருங்குள வளநாட்டுக் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம்” என்று ”Annual Report on Epigraphy, Madras 269 of 1928” என்னும் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதை அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை சுட்டிக் காட்டுகிறார். புறநானூற்றில் இப்புலவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், புலவர் கருங்குளவாதனார் கரிகாலனின் பெருமைக்குரிய செயல்களையும் அவன் புகழையும் கூறுகிறார். மற்றும், அவன் இறந்த பிறகு, அவன் மனைவியர் தங்கள் அணிகலன்களை கழற்றிப் பொலிவின்றிருந்ததை இலைகளும் பூக்களும் இல்லாத வேங்கை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்,
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்,
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
5 முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்,
10 அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்;
அருவி மாறி அஞ்சுவரக் கடுகிப்
பெருவறன் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
15 பூவாள் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

அருஞ்சொற்பொருள்:
1. அருப்பம் = அரண்; அமர் = போர்; கடத்தல் = வெல்லுதல் (அழித்தல்). 2. புணர்தல் = சேர்தல்; ஆயம் = கூட்டம்; தசும்பு = குடம்; தொலைத்தல் = அழித்தல், முற்றுப்பெறச் செய்தல். 3. ஒக்கல் = சுற்றம்; கடும்பு = சுற்றம்; புரத்தல் = பாதுகாத்தல். 4. அற = முழுவதும்; நெறி = வழி. 5. அறியுநர் = அறிந்தோர். 6. தூவியல் = தூ+இயல்; தூ = தூய்மை; துகள் = குற்றம். 7. பருதி = வட்டம். 8. எருவை = பருந்து. 8. யூபம் = வேள்வி. 11. அளித்து = இரங்கத்தக்கது. 12. கடுகுதல் = குறைதல்; கடுகி = குறைந்து; மன்ற = நிச்சய்மாக. 13. வறன் = வறம் = பஞ்சம், வறட்சி; கூர்தல் = மிகுதல். 14. ஆயம் = பசுக்களின் கூட்டம். 15. பூவாள் = ஒருவகை வாள். 16. கட்டு = கிளை. 17. இழை = அணிகலன்.

கொண்டு கூட்டு: அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்து என கூட்டுக.

உரை: பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்தான்; துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, அவர்கள் குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்தான்; பாணர்களின் பெரிய சுற்றத்தைப் பாதுகாத்தான்; அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து, தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான். இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன் இறந்தான். ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது.

அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில் பசியால் வாடும் பசுக்களின் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக, கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளையும் பூக்களையும் உதிர்த்த பிறகு களையிழந்து காணப்படும் வேங்கை மரத்தைப்போல் கரிகாலனின் மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்து காட்சி அளித்தனர்.

சிறப்புக் குறிப்பு: கரிகால் வளவன் சிறுவனாக இருந்தபொழுது, ஒருவழக்கில் நீதி சொல்வதற்கு, நரைமுடி தரித்து முதியவர்போல் வந்து நீதிவழங்கியதாக ஒருகதை உள்ளது. இப்பாடலில், “முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த” என்பதற்கு இச்செய்தியைப் பொருளாகக் கொள்வது சிறந்தது என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

No comments: