Tuesday, February 15, 2011

222. என் இடம் யாது?

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார், அவன் வாழ்ந்த காலத்தையும் அவன் நட்பையும் நினைவு கூர்ந்தார். “மன்னா! நான் வடக்கிருக்க வந்திருக்கிறேன். எனக்குரிய இடம் எது?” என்று இப்பாடலில் பொத்தியார் கேட்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

அழல்அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்இவண் ஒழித்த அன்பி லாள!
5 எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாதுமற்று இசைவெய் யோயே!

அருஞ்சொற்பொருள்:
1. அழல் = தீ; அவிர் = விளங்கும்; வயங்கிழை = விளங்கும் ஒளியுடைய அணிகலன்கள். 2. வெய்யோள் = விரும்பத்தக்கவள்; பயந்த = தந்த. 6. யாது = எது; இசை வெய்யோய் = புகழை விரும்புபவனே.

கொண்டு கூட்டு: புதல்வன் பிறந்தபின் வா என, இவண் ஒழித்த அன்பிலாளா, என் இடம் யாது எனக் கூட்டுக.

உரை: ”தீயைப்போல் விளங்கும் பொன்னாலான அணிகலன்களை அணிந்த அழகிய வடிவுடையவளாய், உன் நிழலைக்கூட ஒருபொழுதும் நீங்காத, உன்னை மிகவும் விரும்பும் உன் மனைவி புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா” எனக் கூறி என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே! நம் நட்பினை நீ எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டாய். புகழை விரும்பும் மன்னா! நான் மீண்டும் வந்துள்ளேன்; எனக்குரிய இடம் எது என்று கூறுவாயாக.

No comments: