Monday, December 7, 2009

135. காணவே வந்தேன்!




பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: முடமோசியார் ஆய் அண்டிரனைக் காணச் சென்றார். அவருடைய புலமையை நன்கு அறிந்திருந்த ஆய், அவருக்கு யானை, குதிரை, தேர் போன்றவற்றைப் பரிசாக அளிக்க முன்வந்தான். அவர் அவற்றை விரும்பவில்லை. ஆய் மகிழ்ச்சியோடு அளிக்கும் பரிசுகளை வேண்டம் என்று கூறினால் அவன் வருந்துவானோ என்று கருதி, ஒரு பாணன் ஆயைக் காணும் விருப்பம் மட்டுமே உள்ளத்தில் கொண்டு அவனக் காண வந்ததாகவும், அவன் தனக்கு யானை, குதிரை, தேர் போன்றவை வேண்டாம் என்று கூறி ஆயின் வலிமையையும் புகழையும் பாராட்டிப் பாடுவது போலும் இப்பாடலில் கூறித் தன் கருத்தை முடமோசியார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
5 பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
10 வந்தெனன் எந்தை யானே: என்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15 ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்குஅவர்
தமதுஎனத் தொடுக்குவர் ஆயின் எமதுஎனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி; நின்னைக்
20 காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1.கொடுவரி = புலி; கோடு = மலைச் சிகரம்; வரை = மலை. 2. விடர் = பிளவு. 3. தடவரல் = பெருந்துயர், வளைவு; தகை = தளர்வு, அழகு; ஒதுக்கு = நடை. 5. புரி = முறுக்கு. 6. வரி = இசைப்பாடல்; நவிலல் = கற்றல், பெரிது ஒலித்தல் ; பனுவல் = பாட்டு. 7. படுமலை = படுமலைப் பலை (ஒரு பண்). 8. ஒல்கல் = தளர்ச்சி. 12. கறை = உரல்; இரியல் = விட்டுப் போதல், விரைந்து செல்கை; இரியல் போக்குதல் = திரளாகக் கொடுத்தல். 15. ஒளிறு = ஓளி விடும்; புரவி = குதிரை. 17. தொடுத்தல் = சேர்த்தல், வளைத்துக் கொள்ளுதல். 18. தேற்றா = தெளியா; தாயம் = சுற்றம். 19. ஊழி = வாழ்நாள். 20. வேண்டார் = பகைவர். 21. உறு = மிக்க; முரண் = வலிமை, மாறுபாடு. 22 = பொது = அனைவரும்; மீக்கூறுதல் = புகழ்ந்து கூறுதல்.

கொண்டு கூட்டு: நாடு கிழவோய், யான் வந்தது, களிறு முதலியன வேண்டியன்று; நின்னைக் காண்டல் வேண்டிய அளவே; நின்னூழி அன்னவாக எனக் கூட்டுக.

உரை: புலிகள் திரியும் உயர்ந்த சிகரத்தையுடைய நெடிய மலையின் கடத்தற்கரிய பிளவுகளுடைய சிறுவழியில் ஏறி வந்ததால் வருத்தத்தோடும், வளைந்த உடலோடும், நடையில் தளர்ச்சியோடும் வளையல்களை அணிந்த விறலி என் பின்னால் வர நான் மலைப்பாதையில் வந்தேன். நான் வரும் வழியில், பொன்னை உருக்கிக் கம்பியாகச் செய்ததைப் போன்ற முறுக்கிய நரம்புகளுடைய என்னுடைய யாழ், இசையுடன் கூடிய பாடல்களை நிலத்திற்கேற்ப மாறி மாறி பெருமளவில் ஒலித்தது. என்னுடைய யாழ் படுமலைப் பண் அமைந்த பாடல்களைப் பாடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அத்தகைய சிறிய யாழைத் தளர்ந்த மனத்தோடு ஒரு பக்கம் தழுவிக்கொண்டு, புகழ்தற்கு அமைந்த சிறப்புடைய உன் நல்ல புகழை நினைத்து நான் என் தலைவனாகிய உன்னிடத்து வந்தேன்.

எந்நாளும் மன்றத்திற்கு வந்த பரிசிலரைக் கண்டால் உரல்போன்ற பருத்த அடிகளுடைய யானைகளையும் அவற்றின் கன்றுகளையும் திரளாக வழங்கும் மலை நாட்டினனே! பெருமைக்குரிய வேளிர் குலத்தவனே! நான் உன்னிடத்து வேண்டுவது யனையும் அன்று; குதிரையும் அன்று; ஒளிமிக்க படையுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேரும் அன்று. பாணரும், புலவரும், பரிசிலரும் ஆகியோர் தமது என உன் பொருளை வளைத்துக் கொள்வாராயின், அதனை எம்முடையது என்று அவரிடமிருந்து மீண்டும் (கைக்கொள்வதை அறியாத) கைக்கொள்ளாத, பயனுள்ள சுற்றத்தோடு கூடியதாக உன் வாழ்நாட்கள் அமையட்டும். உன்னைக் காண வேண்டுமென்பதற்காகவே வந்தேன். பகைவருடைய மிகுந்த வலிமையை அழிக்க வல்ல ஆற்றலும், எவரும் புகழந்து கூறும் நாட்டையும் உடையவனே!

No comments: