Monday, July 13, 2009

85. யான் கண்டனன்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க.

பாடப்பட்டோன்: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இச்சோழனைப்பற்றிய செய்திகளை 80-ஆம் பாடலில் காண்க.

பாடலின் பின்னணி: நற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்ததை நக்கண்னையார் நேரில் பார்த்தார். நற்கிள்ளி ஆமுரைச் சார்ந்தவன் அல்லன். போரைப் பார்த்தவர்களில் சிலர் “நற்கிள்ளிக்கே வெற்றி” என்றும் வேறு சிலர் “நற்கிள்ளிக்கு வெற்றியில்லை” என்றும் கூறுவதைக் கேட்ட நக்கண்ணையார் போரவையிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்து அங்கிருந்தபடியே நற்கிள்ளி மற்போரில் வெற்றி பெறுவதைக் காண்பதைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார்.

திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடன்று" என்ப, ஒருசா ரோரே;
5 நல்ல பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.

அருஞ்சொற்பொருள்:
6. அம் = அழகு. 7. முழா = முரசு; அரை = அடிமரம்; போந்தை = பனை. 8. ஆடு = வெற்றி

கொண்டு கூட்டு: என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும், நாடு இஃது அன்மையானும் ஆடென்ப, ஆடன்று என்ப; யான் கண்டனன் ஆடாகுதல்

உரை: என் தலைவன் இவ்வூரைச் சார்ந்தவன் அல்லன்; இந்த நாட்டைச் சார்ந்தவனும் அல்லன். ஆகவே, என் தலைவனுக்கும் மல்லனுக்கும் இடையே நடைபெறும் மற்போரைப் பார்ப்பவர்களில், ஒரு சாரார் நற்கிள்ளிக்கு “வெற்றி, வெற்றி” என்பர். மற்றொரு சாரார் அவனுக்கு வெற்றி இல்லை என்பர். நல்லவர்களாகிய பலரும் கூறும் இருவகையான கூற்றுக்களும் நன்றாகவே இருந்தன. (ஆனால், என்னால் அங்கே இருக்க முடியவில்லை.) நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்து என் வீட்டில் முரசு போல் அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்ந்து நின்றவாறு அப்போரில் என் தலைவன் வெற்றி பெறுவதைக் கண்டேன்.

No comments: