Sunday, November 11, 2012

358. விடாஅள் திருவே!


358. விடாஅள் திருவே!

பாடியவர்:
வான்மீகியார்.
 பாடலின் பின்னணி: இல்லறத்தைவிட துறவறமே சிறந்தது என்ற கருத்தை இப்பாடலில் வான்மீகியார் கூறுகிறார்.
திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி, மனையறம் துறவறமும் ஆம்.

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி அற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட் டனரே காதலர்; அதனால்     ,                            5

விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

அருஞ்சொற்பொருள்: 1. பருதி = பரிதி = கதிரவன்; பயம் = பயன். 2. எழுவர் – பலர் என்ற பொருளில் வந்துள்ளது; எய்துதல் = அடைதல்; அற்று =அத்தன்மைத்து. 3. வையம் = உலகம் (இல்லறத்தைக் குறிக்கிறது); தவம்  - தவம் செய்யும் துறவிகள் மேற்கொள்ளும் துறவறத்தைக் குறிக்கிறது; தூக்கில் = ஆராய்ந்தால். 4. ஐயவி = சிறு வெண்கடுகு; ஆற்றாது = ஒப்பாகாது. 5. காதலர் = இல்லறத்தில் பற்றுடையவர்கள். 6. திரு = திருமகள்.

உரை: கதிரவனால் சூழப்பட்ட , இப்பயன் மிக்க பெரிய உலகத்தை  ஒரே நாளில் பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். இல்லறத்தையும் துறவறத்தையும் ஆராய்ந்து பார்த்தால், துறவறத்துக்கு இல்லறம் கடுகளவும் ஒப்பாகாது.  அதனால், தவம் செய்வதை விரும்பியவர்கள் பற்றுக்களை கைவிட்டனர்.  பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள். திருமகளால் கைவிடப்பட்டவர்கள் பற்றுக்களை விடமாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: ’பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்’ என்பதற்கு, ’கதிரவனால் சூழப்பட்ட இப்பயனுள்ள பெரிய வுலகம்’ என்பதுதான் பொருள். ஆனால், இக்கால வானவியலின் கருத்திற்கேற்ப, ’கதிரவனைச் சுற்றிவரும் இப்பயனுள்ள பெரிய உலகம்’ என்று அதற்குப் பொருள் கொள்வது சிறப்பானதாகத் தோன்றுகிறது.

’விட்டோரை விடாள் திரு’ என்பதற்கு ’பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள்’, என்பதுதான் நேரடியான பொருள். திருமகள் செல்வத்தை அளிப்பவள் என்ற நம்பிக்கை நெடுங்காலமாகவே இருந்து வருவதால், பற்றுக்களை விட்டவர்களுக்குத் திருமகளின் அருளால் செல்வம் கிடைக்கும் என்பது பெறப்படுகிறது. ஆனால், ’பற்றுக்களை விட்டுத் துறவறத்தை மேற்கொண்டவர்களுக்குச் செல்வம் எதற்கு?’ என்ற கேள்வி எழுகிறது. அதுபோல், ‘விடாதோர் இவள் விடப்பட்டோரே, என்பதற்கு, பற்றுக்களை விடாதவர்களுக்குத் திருமகள் அருள் பாலிக்காததால், செல்வம் இருக்காது.’ என்பது நேரடியான பொருள். இப்படிப் பொருள் கொள்வது துறவறம் இல்லறம் ஆகியவற்றைப் பற்றிப் பலராலும் கூறப்படும் கருத்துகளுக்கும் திருமகளைப் பற்றிய கருத்துகளுக்கும்  முற்றிலும் முரணானதாகவும், குழப்பம் விளைவிக்கும் தெளிவற்ற கருத்தாகவும் உள்ளது.

துறவறத்தை மேற்கொள்பவர்கள் பற்றுக்களை விட்டு, வீடுபேறு அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள். பற்றுக்களை விட்டால்தான் பிறவாத நிலையை அடைய முடியும் என்ற கருத்தையும், பற்றுக்களை விடுவதற்கு இறைவனின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும்,

            பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
            நிலையாமை காணப் படும்.                                                (குறள் 349)
என்ற குறளிலும்,

            பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
            பற்றுக பற்று விடற்கு.                                                         (குறள் 350)
என்ற குறளிலும் திருவள்ளுவர் கூறுகிறார். இந்தக் குறட்பாக்களின் அடிப்படையில்,

விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

என்ற வரிகளுக்கு, ’பற்றுக்களை விட்டவர்களுக்குத் திருமகளின் அருளால் பிறவாமை கிடைக்கும் என்றும், பற்றுக்களை விடாதவர்களுக்குத் திருமகள் அருள் இல்லாமையால் பிறவாமை கிடைக்காது என்றும் வலிந்து பொருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

No comments: