Tuesday, June 16, 2009

80. காணாய் இதனை!

பாடியவர்: சாத்தந்தையார். சாத்தந்தையார் என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுமாயினும் சாத்தன் என்பவரைப் பற்றிய குறிப்பொன்றும் காணப்படாததால் சாத்தந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்1,2. இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களை (80, 81, 82 மற்றும் 287) இயற்றியவர். இவர் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியிடம் இளமைக் காலத்திலிருந்தே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையை வெறுத்து, ஆமூர் சென்ற பொழுது, இவரும் அவனுடனிருந்து அவன் செயல்களைக் குறித்துள்ளார்2. இப்புலவர் கோப்பெரு நற்கிள்ளியின் மற்போர் ஆற்றலைப் புகழ்ந்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன் தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில் வாழ்ந்து வந்தான்.

பண்டைக் காலத்தில், போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக்கூடங்கள் இருந்தன. அவற்றிற்கு போரவை என்று பெயர். கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன். இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான்3.

இவன் ஆமூர் என்னும் ஊரில் ஒரு மல்லனை வென்றதையும், இவன் அழகையும் ஆண்மையையும் கண்டு அவ்வூரில் வாழ்ந்த பெருங்கோழி நாய்கன் என்பவரின் மகள் நக்கண்ணை என்ற பெண் இவன் மீது மிக்க காதல் கொண்டாள். இது ஒருதலைக் காதலாகத் தோன்றுகிறது2. இவன் எவ்வாறு, எப்பொழுது முடிவேந்தன் ஆனான், நக்கண்ணையின் காதல் என்னாயிற்று போன்ற வினாக்களுக்கு விடை தெரியவில்லை1.

பாடலின் பின்னணி: ஆமூரில் மல்லன் ஒருவனைக் கோப்பெரு நற்கிள்ளி வென்றதை இப்பாடலில் புலவர் சாத்தந்தையார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்குத் தும்பைப் பூச்சூடிச் செல்வது.

துறை: எருமை மறம். படை வீரர் புறமுதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
5 நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.

அருஞ்சொற்பொருள்:
1.இன் = இனிய; கடுங்கள் = அழன்ற கள்; ஆங்கண் = அவ்விடத்து. 2. மைந்து = வலிமை. மதன் = வலி; முருக்குதல் = அழித்தல், முறித்தல். 4. தார் = உபாயம். 5. நல்குதல் = விரும்பல். 7. பணை = மூங்கில். 8. தலை = இடம்; ஒசித்தல் = முறித்தல்; எற்றுதல் = மோதுதல்

கொண்டு கூட்டு: ஒருகால் மார்பு ஒதுங்கின்று; ஒருகால் பின் ஒதுங்கின்று; தித்தன் காண்க; மல்லற் கடந்தடு நிலையே எனக் கூட்டுக.

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.

1. புறநானூறு - தெளிவுரை, புலியூர் கேசிகன், பாரி நிலையம் (பக்கம் 487 - 488)
2. புறநானூறு (பகுதி 1), ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (பக்கம் 199)
3. பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ் மண் பதிப்பகம், சென்னை (பக்கம் 43)

No comments: