Wednesday, January 18, 2012

305. சொல்லோ சிலவே!

305. சொல்லோ சிலவே!

பாடியவர்: மதுரை வேளாசான். மதுரையில் பார்ப்பனர்களிடையே வேள்வித் தொழிலுக்கு ஆசானாக இருந்ததால் இவர் வேளாசான் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவர் இயற்பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: இளம் பார்ப்பனன் ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: பார்ப்பன வாகை. கேட்கத் தக்கவை கேட்டுத் தலைமை பெற்ற பார்ப்பானின் வெற்றியைப் புகழ்ந்து பாடுதல்.


வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
5 ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

அருஞ்சொற்பொருள்: 1. வயலை = பசலை; மருங்குல் = இடை. 2. உயவல் = வருத்தம், தளர்வு; பயலை = இளமை. 3. எல்லி = இரவு. 5. சீப்பு = மதில் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம். 6. மாண் = மாட்சிமையுடைய.

உரை: பசலைக் கொடி போன்ற இடையையும் தளர்ந்த நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன் தடையின்றி, இரவில் வந்து அரசனிடம் சொல்லிய சொற்கள் சிலவே. அதன் விளைவாக, மதில்மேல் சாத்திய ஏணியும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பும், சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளும் களையைப்பட்டன. அதாவது, பார்ப்பனன் கூறிய சொற்களைக் கேட்டுப் போர் கைவிடப்பட்டது.

சிறப்புக் குறிப்பு: “சொல்லிய சொல்லோ சிலவே” என்பது போருக்கான ஏற்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதையும், அவன் சொல்லிய சொற்கள் சிலவாக இருந்தாலும் அதனால் பெற்ற பயன் அதிகம் என்ற பொருளிலும் கூறப்பட்டுள்ளது. மதில் மீது ஏறுவதற்கு ஏணியும், மதிற் கதவுகளை வலிமைப் படுத்துவதற்கு சீப்பும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மணியணிந்த யானை என்பது அரசன் ஏறிச் செல்லும் யானையைக் குறிக்கிறது.

No comments: