Tuesday, June 16, 2009

80. காணாய் இதனை!

பாடியவர்: சாத்தந்தையார். சாத்தந்தையார் என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுமாயினும் சாத்தன் என்பவரைப் பற்றிய குறிப்பொன்றும் காணப்படாததால் சாத்தந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்1,2. இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களை (80, 81, 82 மற்றும் 287) இயற்றியவர். இவர் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியிடம் இளமைக் காலத்திலிருந்தே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையை வெறுத்து, ஆமூர் சென்ற பொழுது, இவரும் அவனுடனிருந்து அவன் செயல்களைக் குறித்துள்ளார்2. இப்புலவர் கோப்பெரு நற்கிள்ளியின் மற்போர் ஆற்றலைப் புகழ்ந்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன் தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில் வாழ்ந்து வந்தான்.

பண்டைக் காலத்தில், போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக்கூடங்கள் இருந்தன. அவற்றிற்கு போரவை என்று பெயர். கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன். இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான்3.

இவன் ஆமூர் என்னும் ஊரில் ஒரு மல்லனை வென்றதையும், இவன் அழகையும் ஆண்மையையும் கண்டு அவ்வூரில் வாழ்ந்த பெருங்கோழி நாய்கன் என்பவரின் மகள் நக்கண்ணை என்ற பெண் இவன் மீது மிக்க காதல் கொண்டாள். இது ஒருதலைக் காதலாகத் தோன்றுகிறது2. இவன் எவ்வாறு, எப்பொழுது முடிவேந்தன் ஆனான், நக்கண்ணையின் காதல் என்னாயிற்று போன்ற வினாக்களுக்கு விடை தெரியவில்லை1.

பாடலின் பின்னணி: ஆமூரில் மல்லன் ஒருவனைக் கோப்பெரு நற்கிள்ளி வென்றதை இப்பாடலில் புலவர் சாத்தந்தையார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்குத் தும்பைப் பூச்சூடிச் செல்வது.

துறை: எருமை மறம். படை வீரர் புறமுதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
5 நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.

அருஞ்சொற்பொருள்:
1.இன் = இனிய; கடுங்கள் = அழன்ற கள்; ஆங்கண் = அவ்விடத்து. 2. மைந்து = வலிமை. மதன் = வலி; முருக்குதல் = அழித்தல், முறித்தல். 4. தார் = உபாயம். 5. நல்குதல் = விரும்பல். 7. பணை = மூங்கில். 8. தலை = இடம்; ஒசித்தல் = முறித்தல்; எற்றுதல் = மோதுதல்

கொண்டு கூட்டு: ஒருகால் மார்பு ஒதுங்கின்று; ஒருகால் பின் ஒதுங்கின்று; தித்தன் காண்க; மல்லற் கடந்தடு நிலையே எனக் கூட்டுக.

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.

1. புறநானூறு - தெளிவுரை, புலியூர் கேசிகன், பாரி நிலையம் (பக்கம் 487 - 488)
2. புறநானூறு (பகுதி 1), ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (பக்கம் 199)
3. பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ் மண் பதிப்பகம், சென்னை (பக்கம் 43)

79. பகலோ சிறிது!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளை 76 - ஆவது பாடலில் காணலாம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னனைப் பற்றிய விரிவான செய்திகளை 72-ஆவது பாடலில் காணலாம்.

பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் நடைபெறுகின்ற போரில் பாண்டியனின் வீரர்கள் பகைவர்களை அழித்து வருகிறார்கள். பகற்பொழுது கழிந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வந்து கொண்டிருக்கிறான். அதைக் கண்ட புலவர் இடைக்குன்றுர் கிழார், “இப்பொழுதுதானே மன்னன் வருகிறான்; பகற்பொழுது மிகக் குறைவாக இருக்கிறதே; ஒரு சிலர் உயிர் தப்பிவிடுவரோ?” என்று தனக்குள் எண்ணுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
5 வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே?

அருஞ்சொற்பொருள்:
1. மண்ணுதல் = மூழ்குதல். 2. குழை = தளிர்; மலைதல் = அணிதல். 3. தெண் = தெளிவு; கிணை = பறை; இயலல் = அசைதல் (நடத்தல்). 5. வம்பு = புதுமை, நிலையின்மை; மள்ளர் = வீரர் (பகைவர்). 6. தவ = மிக

உரை: தனது பழைய நகரத்தின் வாயிற்புறத்தே உள்ள குளிர்ந்த நீருடைய குளத்தில் மூழ்கி, பொதுவிடத்தில் உள்ள வேப்பமரத்தின் ஒளிபொருந்திய தளிர்களை அணிந்து, தெளிந்த ஒலியுடைய பறை முன்னே ஒலித்துச் செல்ல, அதன் பின்னர் யானையைப்போல் பெருமிதத்தோடு நடந்து கடுமையான போர் செய்யப் பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வருகிறான். அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அணியணியாகப் புதுப்புது வீரர்கள் பலர் வருகிறார்களே! பகற்பொழுது மிகச் சிறிதே (எஞ்சி) உள்ளதால், சில பகைவர்கள் தப்பிவிடுவார்களோ?

Monday, June 15, 2009

78. அவர் ஊர் சென்று அழித்தவன்!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளை 76 - ஆவது பாடலில் காணலாம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னனைப் பற்றிய விரிவான செய்திகளை 72-ஆவது பாடலில் காணலாம்.

பாடலின் பின்னணி: முந்திய பாடலில் (புறம் - 77) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் இளமையையும் அவன் பகைவரை வென்றதையும், அவ்வெற்றியினால் வியப்போ பெருமிதமோ அடையாதவனாக அவன் இருந்ததையும் பாராட்டிய புலவர் இடைக்குன்றூர் கிழார், இப்பாடலில் அவன் பகைவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுடைய ஊரில் அவர்களை அழித்ததைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து
5 “விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
10 மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.

அருஞ்சொற்பொருள்
1. வணக்கல் = வளைதல்; தொடை = தொடர்ச்சி; வணங்கு தொடை = வீரக் கழல்; பொலிதல் = சிறத்தல், அழகு; நோன்தாள் = வலிய கால்; நோனுதல் = நிலை நிறுத்தல். 2. அணங்கு = வருத்தம்; கடுத்தல் = மிகுதல்; திறல் = வலி; முணங்குதல் = சோம்பல் முறித்தல். 3. அளை = குகை; செறிதல் = பொருந்தல்; உழுவை = புலி. 4. மலைத்தல் = பொருதல்; அகலம் = மார்பு; சிலைத்தல் = சினங்கொள்ளுதல், கிளர்தல். 5. விழுமியோர் = பெரியோர், சிறந்தோர். 6. கொண்டி = கொள்ளை. 7. வம்பு = புதுமை, நிலையின்மை; மள்ளர் = வீரர் (பகைவர்). 8. புல் = புன்மை, பார்வை மங்கல். 9. ஒல்லுதல் = இசைதல். 10. கழிதல் = சாதல். 12. தெண் = தெளிந்த; கறங்கல் = ஒலித்தல்

கொண்டு கூட்டு: எள்ளி வந்த வம்ப மள்ளர், புறத்திற் பெயர அடுதலும் ஒல்லான்; தந்தை தம்மூர் ஆங்கண் அட்டனனே எனக் கூட்டுக.

உரை: வீரக் கழல்கள் அழகு செய்யும், வலிய, நிலை தளராத கால்களையுடைய, வருத்தற்கரிய மிக்க வலிமையுடயவன் என் இறைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். குகையிலிருந்த புலி இரை தேடுவதற்காக சோம்பல் முறித்து வெளியே வருவது போல் அவன் போருக்கு வருகிறான். அவனுடைய வலிமையை (பொருதற்கரிய அகண்ட மார்பை) மதிக்காமல், “நாங்கள் சிறந்தவர்கள்; பெரியவர்கள். நம்மோடு போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்; இவனைப் போரில் வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்கு பெருமளவில் உள்ளன” என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக வந்த ஒளியிழந்த கண்களையுடைய பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட, அவர்களைத் தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல், அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களின் மகளிர் நாணம் கொண்டு இறந்து படுமாறு, அவர்களின் சொந்தமான ஊர்களிலேயே தெளிந்த போர்ப்பறையொலிக்க அவர்களைக் கொன்றான்.

சிறப்புக் குறிப்பு: வம்பு என்னும் சொல் புதுமை அல்லது நிலையின்மை என்று பொருள்படும். போரிட வந்த வீரர்கள் கொல்லப் படுவதால் புதிய வீரர்கள் போருக்கு வருவதைக் குறிக்கும் வகையில் “வம்ப மள்ளர்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.