Monday, October 24, 2011

291. மாலை மலைந்தனனே!

291. மாலை மலைந்தனனே!

பாடியவர்: நெடுங்களத்துப் பரணர். இவர் பெயர் பரணர். இவர் திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே காவிரிக்கரையின் தென்கரையிலுள்ள நெடுங்களம் என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும், பரணர் என்ற பெயருடைய புலவர் மற்றொருவர் சங்க காலத்தில் இருந்ததால், இவரை அவரிடமிருந்து வேறுபடுத்துவதற்காக இவர் நெடுங்களத்துப் பரணர் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஏடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து என்றும் பின்னர் நெடுங்கழுத்து என்றும் திரிந்தது என்று கருதப்படுகிறது. காலப்போக்கில், இவர் நெடிய கழுத்துடையவராக இருந்ததால் இவர் நெடுங்கழுத்துப் பரணர் என்ற அழைக்கப்பட்டதாக ஒருகதையும் தோன்றத் தொடங்கியது என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
பாடலின் பின்னணி: ஒருகால், அரசன் ஒருவன் தன் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்குப் படை திரட்டினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பலரும் கரந்தைப் போருக்குப் புறப்பட்டனர். வீரர்கள் போருக்குப் போகுமுன், அவர்களுள் சிறப்புடைய வீரன் ஒருவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டு தான் அணிந்திருந்த பலவடங்களுடைய மாலையை அவ்வீரனுக்கு அரசன் அணிவித்தான். அதைக்கண்டவர்கள் அவ்வீரனின் மனைவியிடம் அரசன் அவள் கணவனுக்குத் தன் மாலையை அணிவித்ததைத் தெரிவித்தனர். பின்னர், அவ்வீரன் போரில் இறந்தான். அவன் மனைவி அவனைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். அரசன் அணிவித்த மாலையை அவள் கணவன் அணிந்திருப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் தான் வருந்துவதைப் போலவே அரசனும் வருந்துவானாக என்று அவள் கூறுவதாக இப்பாடலில் நெடுங்களத்துப் பரணர் கூறுகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: வேத்தியல். வீரர்கள் அரசனுடைய பெருமையைக் கூறுதல்.

சிறாஅஅர்! துடியர்! பாடுவன் மகாஅஅர்
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்;
5 என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே;
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன்தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

அருஞ்சொற்பொருள்:

1. சிறாஅஅர் = சிறுவர்; துடியர் = துடி என்னும் பறயை அடிப்பவர்; மகாஅஅர் = மக்கள். 2. தூ = தூய்மை; வெள் = வெண்மையான; அறுவை = ஆடை; மாயோன் = பெரியவன் (கரியவன்). 3. இரு = பெரிய; இரும்புள் = பெரிய பறவை; பூசல் = ஆரவாரம்; ஓம்புதல் = தவிர்தல், நீக்கல். 4. விளரி = ஒரு பண்; கொட்பு = சுழற்சி; கடிதல் = ஓட்டுதல். 5. விதுப்பு = நடுக்கம்; கொன் = பயனின்மை (எதுவும் இல்லாமல் இருத்தல்). 7. மருள் = மயக்கம் (கலத்தல்). 8. காழ் = மணிவடம்; மலைதல் = அணிதல்.

உரை: சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற பாணர்களே! தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் அவனுடலை நெருங்கவிடாமல் ஓட்டுவேன். வேந்தனுக்காக எந்தக் காரணமுமின்றித் தன் உயிரைத் தர விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த பலமணிகள் கலந்த மாலையை அணிவித்து என் கணவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான். என் தலைவன் இறந்ததால் நான் வருத்தத்தோடு நடுங்குவதைப்போல் அவ்வேந்தனும் வருந்தி நடுங்கட்டும்.

சிறப்புக் குறிப்பு: போருக்குச் செல்லும் வீரர்கள் வெண்ணிற ஆடை அணிந்து செல்வது மரபு என்பது இப்பாடலிலிருந்தும், ”வெளிது விரித்து உடீஇ” என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடல் 279-இல் கூறியிருப்பதிலிருந்தும் தெரியவருகிறது.

290. மறப்புகழ் நிறைந்தோன்!

290. மறப்புகழ் நிறைந்தோன்!

பாடியவர்: ஔவையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87 - இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருஅரசனின் ஆநிரைகளை மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தைப் போர் நடத்த விரும்பினான். அவன் தன்நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும் கலந்துகொண்டார். வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள்போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.” என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துரை: குடிநிலை உரைத்தல். பழமையும் வீரமும் மிகுந்த குடியின் வரலாற்றைக் கூறுதல்.


இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
5 அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.

அருஞ்சொற்பொருள்:

1. இவற்கு = இவனுக்கு; ஈத்து = கொடுத்து; மதி – அசை. 2. இனம் = கூட்டம்; இயற்றல் = புதிதாகச் செய்தல்; குருசில் = குரிசில் = தலைவன், அரசன். 3. நுந்தை = உன் தந்தை. 4. ஞாட்பு = போர், போர்க்களம். 5. குறடு = வண்டிச்சக்கரத்தின் நடுப்பகுதி. 6. மறம் = வீரம்; மைந்து = வலிமை. 7. உறை = மழை; உறைப்புழி = மழை பெய்யும்பொழுது; ஓலை = ஓலைக்குடை.

உரை: ”அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக்கால்கள்போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்.”

289. ஆயும் உழவன்!

289. ஆயும் உழவன்!

பாடியவர்: கழாத்தலையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62 - இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஒருவேந்தன் வெட்சிப்போர் நடத்துவதற்காகப் ( மற்றொரு நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகப்) போர்ப்பறை ஒலித்தது. அந்நாட்டிலுள்ள வீரர்கள் பலரும் வந்து கூடினர். வேந்தன் வீரர்களுடன் கூடி விருந்துண்டான். அப்போது, வீரர்களுக்குக் கள் வழங்கப்பட்டது. மறக்குடியில் தோன்றி வீரச் செயல்களைச் செய்த வீரர்களை அவரவர் தகுதிக்கேற்ப அரசன் புகழ்ந்தான். அங்கு, வீரர்கள் மட்டுமல்லாமல் சான்றோர் பலரும் இருந்தனர். வேந்தன் தனக்குப் பொற்கலத்தில் வழங்கப்பட்ட கள்ளை சிறப்புடைய வீரன் ஒருவனுக்கு அளித்து அவனைச் சிறப்பித்தான். இந்தக் காட்சியைக் கண்டு பாணன் ஒருவன் வியந்தான். கழாத்தலையார், அப்பாணனை நோக்கி, “பாணனே, வேந்தன் செய்யும் சிறப்பைக் கண்டு வியத்தலை விட்டுவிட்டு, போர்க்குரிய பூவைப் பெற்றுக்கொள்ளுமாறு புலையன் தண்ணுமைப் பறையை அடிக்கின்றான். அதைக் கேட்பாயாக.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: தெரியவில்லை

துறை: தெரியவில்லை.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்எருத் துள்ளும் நல்லெருது நோக்கி
வீறுவீறு ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
5 மூதி லாளர் உள்ளும் காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறைப்
பூக்கோள் இன்றென்று அறையும்
10 மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.


அருஞ்சொற்பொருள்:

1. செவ்வி = பருவம் (தக்க சமயம்). 3. வீறு = தனிமை, பகுதி; வீறுவீறு = வேறுவேறு. 4. பீடு = பெருமை; பாடு = கடமை. 5. காதலின் = அன்பினால். 6. முகத்தல் = மொள்ளல்; மண்டை = கள்குடிக்கும் பாத்திரம். 7. அன்றுதல் = மறுத்தல்; சின் - முன்னிலை அசை. 10. மடிவாய் = தோல் மடித்துக் கட்டப்பட்ட வாய்; இழிசினன் = பறையடிப்பவன்.

கொண்டு கூட்டு: நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது அன்றிசின்; பாண, தண்ணுமைக் குரலைக் கேட்டி எனக் கூட்டுக.

உரை: ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன், முன்பு உழுவதற்கு உதவிய ஏறுகளில் சிறந்த ஏறுகளை உழவர்கள் வேறுவேறு விதமாய் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அதுபோல், பெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாகத் தங்கள் கடமைகளை நன்கு ஆற்றிய சிறந்த வீரர்களுள் ஒருவீரனுக்குத், தனக்காக முகந்து எடுத்துப் பொற்கலத்தில் தந்த கள்ளை “இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு; பாணனே, இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று இழிசினன் எழுப்பும் தண்ணுமைப் பறையின் ஓசையைக் கேட்பாயாக.

288. மொய்த்தன பருந்தே!

288. மொய்த்தன பருந்தே!

பாடியவர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62 - இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், பெரும்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போரில் வீரன் ஒருவனின் மார்பில் வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த மார்புடன் அவன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் மனைவி அவனைத் தழுவும் நோக்கத்தோடு அவன் அருகில் வந்தாள். அவளைத் தழுவவிடாமல் அவன் உடலைப் பருந்துகள் மொய்த்தன. இக்காட்சியைப் புலவர் கழாத்தலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

கழாத்தலையார் 62-ஆம் பாடலில் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் அவ்விருவரும் இறந்ததைப் பாடியுள்ளார். இப்பாடலில் இவர் கூறும் வீரனைப் பற்றிய செய்திகளை அப்போரோடு சிலர் தொடர்புபடுத்துகிறார்கள். இப்பாடலில் குறிப்பிடப்படும் போருக்கும் பாடல் 62-இல் குறிப்படப்படும் போருக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இப்பாடலில் காணப்படவில்லை.

இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

திணை தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டுடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
5 ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே.

அருஞ்சொற்பொருள்:

1. வரிந்த = வரி அமைந்த; வை = கூர்மை; நுதி = நுனி; மருப்பு = விலங்கின் கொம்பு. 2. அண்ணல் = பெருமை; தலைமை; மடுத்தல் = குத்துதல். 3. பச்சை = தோல். 4. திண்பிணி = திண்ணியதாய்க் கட்டப்பட்ட; புலம் = இடம்; இடைப்புலம் = போர்க்களத்தின் நடுவிடம்; இரங்கல் = ஒலித்தல். 5. ஆர் = அருமை; அமர் = போர்; ஞாட்பு = போர்; தெறு = சினம்; 7. மன்ற = நிச்சயமாக. 8. துயல்வரும் = அசையும். 9. முயக்கு = முயங்கல் = தழுவல்; இடை = இடம்.

உரை: மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய பெருமைபொருந்திய நல்ல ஏறுகள் இரண்டைப் போரிடச் செய்து, வெற்றிபெற்ற ஏற்றின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலித்தது. தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற, பகைவர் எறிந்த நெடியவேல் வந்து பாய்ந்ததால் ஒரு வீரன் நாணமுற்றான். குருதியோடு துடிக்கும் அவனது மார்பைத் தழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.

சிறப்புக் குறிப்பு: கேடயம் கையிலிருந்தும், தன்னை நோக்கிவந்த வேலைத் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாததால், “நாணுடை நெஞ்சத்து” என்று புலவர் கழாத்தலையார் குறிப்பிடுகிறார் போலும்.

போர் முரசு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தோல், வீரம் மிகுந்த ஏற்றினின்று எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது பழங்கால மரபு என்று இப்பாடலிலிருந்தும், “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்” என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளிலிருந்தும் (752-3) தெரியவருகிறது. ஏற்றின் தோல் மயிர் சீவாது பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

287. காண்டிரோ வரவே!

287. காண்டிரோ வரவே!

பாடியவர்: சாத்தந்தையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 80 - இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்பவன் தன் தந்தையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, தந்தையோடு வாழாமல் ஆமூரில் வாழ்ந்துவந்தான். அவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் பணிபுரிந்தான். ஒருகால், பகை அரசனின் வீரர்கள் ஆமூரிலிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்கும் பொறுப்பு கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று. அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது, வீரர்களை ஊக்குவிப்பதற்காகக் கூறியவற்றை சாத்தந்தையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: நீண்மொழி. ஓருவீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது.


துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
5 பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
10 தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே.

அருஞ்சொற்பொருள்:

1. துடி = ஒருவகைப் பறை; எறிதல் = அடித்தல்; புலையன் = பறை அடிப்பவன். 2. எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி; இழிசினன் = பறையடிப்பவன். 3. மாரி = மழை. 4. பிறழ்தல் = துள்ளுதல். 5. பொலம் = பொன்; புனைதல் = அணிதல், அலங்கரித்தல்; ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்; அண்ணல் = தலைமை. 6. இலங்குதல் = விளங்குதல்; வால் = வெண்மை; மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்); நுதி = நுனி; மடுத்தல் = குத்துதல். 7. பீடு = பெருமை. 9. வியன் = மிகுதி; கூடு = நெற்கூடு. 10. தண்ணடை = மருத நிலத்தூர்; யாவது = எது (என்ன பயன்?); படுதல் = இறத்தல். 11. மாசு = குற்றம்; மன்றல் = திருமணம். 12. நுகர்தல் = அனுபவித்தல். 13. வம்பு = குறும்பு. 14. இம்பர் = இவ்விடம்; காண்டீரோ = காண்பீராக.

கொண்டு கூட்டு: புலைய, இழிசின, பீடுடையாளர் பெறுதல் யாவது; படின் மன்றல் நன்றும் நுகர்ப; அதனால் வரவு காண்டீர் எனக் கூட்டுக.

உரை: துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள் விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால், அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு: ”போரில் இறந்தவர்கள் மேலுலக்த்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.