Monday, July 26, 2010

175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார் (175, 389). கள்ளில் என்பது தொண்டை நாட்டிலுள்ள ஒரு ஊர். ஆத்திரையன் என்பது இவர் இயற்பெயர். இவர் ஆதனுங்கன் என்னும் குறுநிலமன்னனின் மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் வேங்கடத்தைச் சார்ந்த நாட்டை ஆண்டவன். வேங்கடத்தில் இப்பொழுது திருமால் கோயில் இருக்கும் திருப்பதி ஆதனுங்கனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக இருந்தது என்று அவ்வை துரைசாமிப் பிள்ள தம் நூலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் ஆத்திரையனார் தனக்கு ஆதனுங்கன் மீதுள்ள அன்பைக் கூறுகிறார்.

எந்தை வாழி ஆத னுங்கஎன்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
5 என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
10 பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.


அருஞ்சொற்பொருள்:
1.எந்தை = எம்+தந்தை; 6. மோரியர் = மௌரியர்; 7. திண் = வலி; கதிர் = ஆரக்கால்; திகிரி = ஆட்சிச் சக்கரம்; திரிதர = இயங்குவதற்கு; குறைத்தல் = சுருங்குதல். 8. அறைவாய் = மலையை வெட்டி எடுக்கப்பட்ட இடம்; இடைகழி = வாயிலைச் சேர்ந்த உள்நடை (இரேழி). 9. மலர்தல் = விரிதல்; வாய் = இடம்; மண்டிலம் = வட்டம். 10. புரவு = பாதுகாப்பு; எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு.

கொண்டு கூட்டு: எந்தை, வாழி ஆதனுங்க; மண்டிலத்தன்ன அறத்துறை நின்னை யான் மறப்பின் மறக்குங்காலை என்யான் மறப்பின் மறக்குவென்; ஆதலால், என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே எனக் கூட்டுக.

உரை: என் தந்தை போன்ற ஆதனுங்கனே! நீ வாழ்க. வெல்லும் வேலையும் விண்ணைத் தொடும் உயர்ந்த குடையையும், கொடி பறக்கும் தேரையும் உடைய மௌரியரின் வலிமை மிகுந்த ஆணைச் சக்கரம் இயங்குதற்கு அறுக்கப்பட்ட இடைகழி முடிவில் நிறுத்தப்பட்ட பரந்த கதிர் மண்டிலம் போல் நாளும் பலரையும் பாதுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறவழியில் நிற்கும் உன்னை நான் மறந்தால், அப்பொழுது, என் உயிர் என் உடலிலிருந்து நீங்கும்; மற்றும் என்னையே நான் மறப்பேன். என் நெஞ்சத்தைத் திறப்போர் அங்கே உன்னைக் காண்பர்.

சிறப்புக் குறிப்பு: மௌரிய வம்சத்தைச் சார்ந்த பிந்துசாரா ( அசோகனின் தந்தை, சந்திரகுப்தனின் மகன்) என்ற மன்னன் கி. மு. 288 -இல் தமிழ் நாட்டின் மீது படையெடுத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இப்பாடலில், மௌரியர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த பொழுது மலையை வெட்டி வழி அமைத்ததாகக் குறிப்பிடப்படுவது பிந்துசாரனின் படையெடுப்பைப் பற்றிய செய்தியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றும், தமிழ் மன்னர்கள் ஒருங்கிணைந்து பிந்துசாரனின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினர் என்றும் வரலாறு கூறுகிறது. இப்பாடலில் பிந்துசாரனின் படையெடுப்பைக் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு ஆதனுங்கன் பிந்துசாரனின் காலத்தில் வாழ்ந்தவன் என்று கூற முடியாது. இப்பாடலில் குறிப்படப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் செய்தி என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.

174. அவலம் தீரத் தோன்றினாய்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 126-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன். இவன் மலையமான் திருமுடிக்காரியின் வழிவந்தவன். இவன் மலையமான் திருமுடிக்காரியின் மகன் என்று கூறுவாரும் உளர். இவன் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்ததால் ஏனாதி என்ற பட்டம் பெற்றவன். ஒரு சமயம், சோழ மன்னன் ஒருவன் தன் பகைவருடன் போரிட்டுத் தோல்வியடைந்து மலையமானுக்குரிய முள்ளூரில் ஒளிந்திருந்தான். சோழநாடு கதிரவனை இழந்த உலகம் போல் தன் அரசனை இழந்து வருந்தியது. அச்சமயம், காரியின் முன்னோர்களுள் ஒருவன் முள்ளூருக்குச் சென்று சோழனை மீண்டும் சோழ நாட்டுக்கு அரசனாக்கினான்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

பாடலின் பின்னணி: மலையமான் திருமுடிக்காரி இறந்த பிறகு, அவன் குடி மக்கள் வருந்திய பொழுது, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் பதவி ஏற்றான். அச்சமயம், மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண வந்தார். அவன் காரிக்குப் பிறகு அரசனாகி, நல்லாட்சி புரிவதை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
5 அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
அரசுஇழந்து இருந்த அல்லற் காலை
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
10 பொய்யா நாவிற் கபிலன் பாடிய
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
15 மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
20 உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
ஆறுகொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக் கானம் வெம்ப
25 மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
கோடை நீடிய பைதறு காலை
இருநிலம் நெளிய ஈண்டி
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

அருஞ்சொற்பொருள்:
1.அணங்கு = அச்சம்; அவுணர் = அசுரர்; கணம் = கூட்டம். 3. பருதி = வட்டம். 4. பருவரல் = துன்பம்; திறல் = வலிமை. 5. அஞ்சனம் = மை; அஞ்சன உருவன் = திருமால். 9. மல்லல் = வளமை. 11. மை = மேகம்; ஓய்யென = விரைவாக. 12. செரு = போர்; புகல் = விருப்பம். 13. எள் = இகழ்ச்சி. 14. விறல் = வெற்றி. 15. மருள் = போன்ற. 17. விடர் = மலைப்பிளவு. 18. சுரும்பு = வண்டு. 21. மாதிரம் = திசை. 23. நிரை = படை வகுப்பு, ஒழுங்கு. 25. மல்குதல் = நிறைதல், பெருகுதல்; உணங்கல் = வற்றல். 26. பைது = பசுமை. 28. உரும் = இடி; உரறு = ஒலி.

கொண்டு கூட்டு: ஞாயிற்றை அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு முற்றமொடு அல்லல் தீர வளவன் வெண்குடை காட்டி அக்குடை நிறுத்த புகழ்மேம் படுந; நிரைத்தார் அண்ணல்; நும்முன் பெயர்ந்தனன் ஆகலின் நெஞ்சத்து அவலந் தீர, பைதறு காலை மழை பொழிந்தாங்கு நீ தோன்றினை; ஆதலால், இவ்வுலகத்திற்குக் குறை என்ன எனக் கூட்டுக.

உரை: தொலைவில் ஒளியுடன் விளங்கும் சிறப்புடைய ஞாயிற்றைப் பிறர்க்கு அச்சம் தரும் அசுரர்களின் கூட்டம் ஒளித்து வைத்தது. அதனால் சூழ்ந்த இருள், வட்ட வடிவமான இந்த உலகத்தில் வாழும் மக்களின் பார்வையைக் கெடுத்துத் துன்பத்தைக் கொடுத்தது. அத்துன்பம் தீர, மிகுந்த வலிமையும் கரிய உருவமும் உடைய திருமால், கதிரவனைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதுபோல், ஒரு சமயம் சோழ நாடு தன் அரசனை இழந்து துன்பப்பட்டது. அதைக் கண்ட உன் முன்னோர்களுள் ஒருவன், முரசு முழங்கும் முற்றத்தோடு, கரையை மோதி உடைத்து ஒலிக்கும் நீர் மிகுந்த காவிரி ஓடும் வளம் மிகுந்த நல்ல (சோழ)நாட்டின் துன்பதைத் தீர்க்க நினைத்து, பொய்யாத நாவுடைய கபிலரால் பாடப்பட்ட , மேகங்கள் தவழும் பெரிய மலையிடத்து விரைந்து, போரை விரும்பி வந்த பகைவர்கள் புறங்காட்டி ஓடும் மிகுந்த சிறப்புடைய முள்ளூர் மலையுச்சியில், காண்பதற்கரிய இடத்தில் இருந்த வலிமையுடைய சோழனின் திங்கள் போன்ற வெண்குடையைத் தோற்றுவித்து அக்குடையை புதிதாக நிலை நிறுத்தினான். அவன் புகழ் மேம்படட்டும். மலைக்குகையில் வாழும் புலியின் சின்னம் பொறித்த கோட்டையையும், ஒளிரும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மாலையையும் பெரும்புகழையும் உடைய நின் முன்னோனாகிய மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் செய்த நல்வினைப் பயனை நுகர்வதற்காக வானவர் உலகம் அடைந்தனன். அவனுக்குப் பிறகு, எல்லாத் திசைகளிலும் கவலையுற்றவர்களின் துயரம் நீங்க நீ தோன்றினாய். வரிசையாக மாலைகள் அணிந்த தலைவனே! நீ தோன்றியது, மலைகள் பொடிபடவும், காடுகள் தீப்பற்றவும், மிகுந்த நீர் வளமுடைய குளங்கள் வற்றவும், கோடைக்காலம் நீண்டு பசுமையற்ற காலத்துப் பெரிய நிலம் தாங்காமல் வாடிய பொழுது, மேகங்கள் திரண்டு இடியுடன் மழைபொழிந்தது போல் இருந்தது.

173. யான் வாழுநாளும் பண்ணன் வாழிய!

பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 70-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன். சிறுகுடி என்பது சோழ நாட்டில் காவிரிக்கரையில் இருந்த ஒரு ஊர். இப்பண்ணன் சிறுகுடியில் வாழ்ந்த வேளாளர் குலத் தலைவன். இவன் வலிமையும் வண்மையும் மிகுந்தவன். மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், கோவூர் கிழார், செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ஆகிய சான்றோர்கள் இவனைப் பெரிதும் பாராட்டிப் பாடியுள்ளனர்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: சோழ வேந்தனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறுகுடி கிழான் பண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்டவன். அவன் இயற்றிய இப்பாடல், பண்ணனிடம் பரிசில் பெறச் செல்லும் பாணனின் கூற்று போல் அமைந்துள்ளது. இப்பாடலில், பரிசில் பெறப்போகும் பாணர்கள், சிறுகுடியை அணுகிய பொழுது, பண்ணனிடம் பரிசில் பெற்று வரும் பாணர்கள் சிலரைக் காண்கின்றனர். அவர்கள் பண்ணனை வாழ்த்திக்கொண்டு வருகின்றனர். பரிசில் பெறச் சென்ற பாணர்களில் ஒருவன், “ நான் வாழும் நாளையும் சேர்த்துப் பண்ணன் வாழ்க” என்று வாழ்த்தி, “ பரிசில் பெற்ற பாணர்களே! என்னோடு உள்ள பாணனின் சுற்றம் வருந்துவதைப் பாருங்கள். பசிப்பிணி மருத்துவன் பண்ணனின் இல்லம் அருகில் உள்ளதா, தொலைவில் உள்ளாதா?” என்று வினவுகிறான்.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய;
பாணர் ! காண்கிவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
5 பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
10 மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!

அருஞ்சொற்பொருள்:
2.காண்கிவன் = காண்க இவன்; கடும்பு = சுற்றம். 3. இமிழ்தல் = ஒலித்தல்; புள் = பறவை. 4. தானும் - அசைச் சொல். 5. எழிலி = மேகம். 6. வற்புலம் =வன்+புலம் = மேட்டு நிலம். 7. ஒழுக்கு = வரிசை; ஏய்ப்ப = ஒப்ப. 8. வீறு = பகுப்பு; வீறு வீறு = கூட்டம் கூட்டமாக. 9. காண்டும் = காண்கிறோம். 10. மற்றும் = மீண்டும்; தெற்று = தெளிவு. 12. அணித்து = அருகில்; சேய்த்து = தொலைவில்.

உரை: யான் வாழும் நாளையும் சேர்த்து பண்ணன் வாழ்வானாக. பாணர்களே! இந்தப் பாணனின் சுற்றத்தாரின் துன்பத்தைப் பாருங்கள். புதிது புதிதாகப் பழங்கள் பழுத்திருக்கும் மரங்களில் பறவைகள் உண்ணுவதால் உண்டாகும் ஒலி கேட்கிறோம். காலம் தவறாது மழைபெய்யும் இடத்திலிருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக்கொண்டு மேட்டு நிலத்திற்கு வரிசையாகச் செல்வதைப் போல் கையில் சோற்றுடன் கூட்டம் கூட்டமாகப் பெரிய சுற்றத்துடன் செல்லும் சிறுவர்களைக் காண்கிறோம். அதைக் கண்ட பிறகு, மீண்டும் மீண்டும் “ பசி என்னும் பிணியைத் தீர்க்கும் மருத்துவனின் (பண்ணனின்) இல்லம் அருகில் உள்ளதோ? தொலைவில் உள்ளதோ? எங்களுக்குக் கூறுங்கள் என்று கேட்கிறோம்.

172. பகைவரும் வாழ்க!

பாடியவர்: வடம வண்ணக்கன் தாமோதரனார். இவர் இயற்பெயர் தாமோதரனார். இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியதால் “வடம” என்ற அடைமொழி இவர் பெயரோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர் நாணயங்களைப் பரிசோதனை செய்யும் தொழிலை செய்ததனால் ”வண்ணக்கனார்” என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் இப்பாடலையும் குறுந்தொகையில் 85-ஆம் பாடலையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: வடம வண்ணக்கன் தாமோதரனார் ஒரு சமயம் பிட்டங்கொற்றனைப் பாடித் தான் பெற்ற பெருஞ்செல்வத்தை பாணன் ஒருவன் தன் சுற்றத்தாருக்கு உரைக்கும் வகையாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
5 பரியல் வேண்டா; வருபதம் நாடி;
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும், அவன்இறை
10 மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!

அருஞ்சொற்பொருள்:
2. ஓம்புதல் = தவிர்தல். 3.கோதை = மாலை; புனைதல் = சூடுதல், 5. பரியல் = இரங்குதல், வருந்துதல்; பதம் = உணவு. 6. நந்துதல் = கெடுதல்; ஆர் = கூர்மை; ஐவனம் = மலைநெல். 8. வன்புலம் = வலிய நிலம் (மலை நாடு); வயமான் = வலிய குதிரை. 10. கோதை = சேரமான் கோதை

கொண்டு கூட்டு: பிட்டன் வேலும் கோதையும் மாறுகொள் மன்னரும் நெடிது வாழியர்; அதுவே வேண்டுவது; உணவைத் தேடிப் பரியல் வேண்டா; ஏற்றுக; ஆக்குக; ஓம்புக; கோதையும் புனைக; பிறவும் செய்க.

உரை: உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக; அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த, பாடுவதில் சிறந்த, விறலியர் மாலைகளைச் சூடுக; அது போன்ற பிற செயல்களையும் செய்க. அடுத்து வரவேண்டிய உணவைப்பற்றி சிறிதும் வருந்த வேண்டாம். வலிய குதிரைகளையுடைய பிட்டங்கொற்றன் மலைநாட்டுத் தலைவன். அவன் நாட்டில், மலைநெல்லைக் காப்பவர் காவலுக்காக மூட்டிய தீயின் ஒளி குறைந்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஓளி பொருந்திய அழகிய மணிகள், அடர்ந்த இருளை அகற்றும். அவன் அரிய போரில் வெல்லும் வேலும், அவன் தலைவனாகிய வள்ளல் தன்மை மிகுந்த (அரசன்) கோதையும் அவனோடு மாறுபட்டுப் போர் புரியும் மன்னர்களும் நெடுநாட்கள் வாழ்க.

171. அவன் தாள் வாழியவே!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 169-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: பிட்டங்கொற்றனைக் காண்பது அரிதாக இருப்பதாகக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியதை 169- ஆம் பாடலில் கண்டோம். அப்பாடலை இயற்றிய பிறகு, பிட்டங்கொற்றனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குக் கிடைத்தது. அவனும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரை மகிழ்வித்தான். பிட்டங்கொற்றனின் அன்பாலும் வண்மையாலும் பெருமகிழ்ச்சி அடைந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வேண்டியது அளிக்கும் தன்மையவன் என்றும் அவன் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ வேண்டுமென்றும் இப்பாடலில் வாழ்த்துகிறார்.

இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே; பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
5 யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
10 அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே;
அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து
15 வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே!

அருஞ்சொற்பொருள்:
1.வரை = காலம்; 3. துன்னி = நெருங்கி (தொடர்ந்து); 4. வைகல் = நாள். 6. உவப்ப = மகிழ. 8. மலிதல் = மிகுதல், நிறைதல்; கதம் = சினம்; சே = காளை; களன் = தொழுவம்; 9. குப்பை = குவியல்; 12. எந்தை = எம் தந்தை ( எம் தலைவன்)

உரை: இன்று சென்றாலும் (பரிசுகள்) தருவான்; சில நாட்கள் கழித்துச் சென்றாலும் (பரிசுகள்) தருவான். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நாள்தோறும் சென்றாலும், “முன்பே தந்தேன்” என்று கூறாமல், யாம் வேண்டியவாறு தவறாமல் எங்கள் வறுங்கலங்களை நிரப்புவான். தன் அரசன் விரும்பியவாறு, அவன் மகிழ , திருந்திய வேலையுடைய பிட்டங்கொற்றன் தன்னுடைய அரிய போர்த்தொழிலை முடிப்பானாக. பெரிய கூட்டமாக உள்ள, சினமுடைய காளைகளைத் தொழுவத்தோடு கேட்டாலும், களத்தில் மிகுதியாக இருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகளை அணிந்த யானைகளைக் கேட்டாலும், பெருந்தன்மையுடைய பிட்டங்கொற்றன் எமக்கு மட்டுமல்லாமல் பிறர்க்கும் கொடுக்கும் தன்மை உடையவன். ஆகவே, எம் தந்தை போன்ற பிட்டங்கொற்றனின் காகல்களில் முள்கூடக் குத்தி வலி உண்டாக்காது இருக்க வேண்டும். ஈவோர் அரிதாக உள்ள இவ்வுலகில், வழ்வோரை வாழவைக்கும் பிட்டங்கொற்றனின் முயற்சி வாழ்கவே.

சிறப்புக் குறிப்பு: அதியமானிடம் எத்தனை நாள் சென்றாலும் அவன் முதல் நாள் பரிசளித்ததைப் போலவே தினமும் பரிசளித்து இரவலரை மகிழ்விப்பான் என்று 101 - ஆம் பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ. (புறம். 101; 1-3; அவ்வையார்)

வையாவிக் கோப்பெரும் பேகனிடம் சென்று பரிசு பெறுவதற்கு, நல்ல நாள் பார்த்துச் செல்லவேண்டியதில்லை; நிமித்தம் நல்லாதாக இல்லவிட்டாலும் பரவாயில்லை; அவனைச் சந்திப்பதற்கு ஏற்ற சமயமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; திறமையாக செய்யுள் இயற்ற வேண்டிய அவசியமும் இல்லை; அவன் நிச்சயம் பரிசளிப்பான் என்று பேகனின் கொடைத் திறத்தைக் கபிலர் 124-ஆம் பாடலில் கபிலர் புகழ்ந்து கூறுகிறார்.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; (புறம். 124; 1-3; கபிலர்)

அவ்வையார் அதியமானைப் பற்றிக் கூறியிருப்பதும், கபிலர் பேகனைப் பற்றிக் கூறியிருப்பதும் இப்பாடலில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனின் கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடுவதும் சங்காலத்து மன்னர்கள் புலவர்களையும் இரவலர்களையும் ஆதரிப்பதில் மிகுந்த ஆர்வமுடைவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.