Monday, May 18, 2009

77. யார்? அவன் வாழ்க!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 76-இல் காணாலாம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இம்மன்னனைப் பற்றிய செய்திகளை பாடல்கள் 72, 76 ஆகியவற்றில் காணலாம்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
5 நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
10 வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும்அதனினும் இலனே.

அருஞ்சொற்பொருள்
1.கிண்கிணி = சதங்கை (சலங்கை); தொட்டு = செறிந்து (பொருந்தி). 3. பவர் = அடர்ந்த கொடி; மிலைதல் = சூடுதல். 4. சாபம் = வில். 5. கொடுஞ்சி = கொடிஞ்சி = தேர்முன் உள்ள அலங்காரவுறுப்பு. 8. அயினி = சோறு; அயில்தல் = உண்ணுதல்; வயின் = முறை; 9. உடன்று = வெகுண்டு; வம்பு = புதுமை;
மள்ளர் = வீரர். 11. ஆர்ப்பு = பேரொலி. 12. அட்டதை = அழித்ததை. 13. மலிதல் = செருக்குதல்.

கொண்டு கூட்டு: நின்றான் யார் கொல்? வாழ்க அவன் கண்ணி! அட்டதை மகிழ்ந்தன்றும் இலன், மலிந்தன்று அதனினும் இலன் எனக் கூட்டுக.

உரை: சலங்கை கழற்றப்பட்ட கால்களில் ஒளிபொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான். தலைமுடி நெற்றியில் விழாமல் விலக்கிக் குடுமியாகக் கட்டப்பட்டத் தலையில் வேம்பின் ஒளிபொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் நெருக்கமாகத் தொடுத்துச் சூடியுள்ளான். சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளால் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின் முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே, அவன் யார்? அவன் (அணிந்திருக்கும் மாலை) வாழ்க! அவன் மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! வரிசை வரிசையாக வெகுண்டு வந்த புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை; அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அகன்ற ஆகாயத்தில் ஒலி எழுமாறுஅவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி அழித்ததை நினைத்து மகிழவும் இல்லை; தன் செயலை நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே!

76. அதுதான் புதுமை!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாண்டிய நாட்டில் இருந்த இடைக்குன்றூர் என்பது இவரது ஊர். இவர் வேளாண் மரபினர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் நான்கு (76, 77, 78, மற்றும் 79). இந்நான்கு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் சேர சோழ மன்னர்களையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்றதைப் பாராட்டிப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவன் தலையாலங்கானத்தில் தன்னை எதிர்த்து வந்த எழுவரை மற்ற அரசர்களின் துணையின்றித் தான் ஒருவனே போரிட்டு வென்ற சிறப்பை மதுரை நக்கீரர், குட புலவியனார், ஆலம்பேரி சாத்தனார், மாங்குடி மருதனார், கல்லாடனார், இடைக்குன்றூர் கிழார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய விரிவான செய்திகளைப் பாடல் 72-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் இப்பாண்டிய மன்னன் வென்றதைப் புகழ்ந்து பாடிய புலவர் பலருள்ளும் இடைக்குன்றூர் கிழார் சிறந்தவர் என்பது மிகையாகாது. இவர், இப்போர் நிகழ்ந்த காலத்தில் போரைத் தாமே நேரில் பார்த்தது போல் எழுதியிருப்பதிலிருந்து இவர் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
5 நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
10 பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!

அருஞ்சொற்பொருள்
1. அடுதல் = அழித்தல்; தொலைதல் = கெடுதல் (தோற்றல்). 3. ஊங்கு = முன்னர்; அரை = மரத்தின் அடிப்பக்கம். 4. மன்றம் = மரத்தடிப் பொதுவிடம். சினை = மரக்கொம்பு. 5. பவர் = நெருக்கம், அடர்ந்த கொடி. 6. பாய்தல் = பரவுதல். 7. ஒலியல் = தழைத்தல் , வளைய மாலை. 8. பாடு = ஓசை; கிணை = பறை; கறங்கல் = ஒலித்தல்

கொண்டு கூட்டு: ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை. செழியன் பொருதுமென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டுக.

உரை: ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

75. அரச பாரம்!

படியவர்: சோழன் நலங்கிள்ளி. சோழமன்னர்களுள் மிகப் புகழ்பெற்ற சோழ மன்னன் கரிகால் வளவன். கரிகால் வளவனுக்கு இரு மகன்கள் இருந்தனர். ஒருவன் பெயர் மணக்கிள்ளி; மற்றொருவன் பெயர் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. கரிகால் வளவன் இறந்த பிறகு, மணக்கிள்ளி உறையுரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டான். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியின் மகன்களில் ஒருவன் நலங்கிள்ளி. நலங்கிள்ளிக்கும் மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகையிருந்ததையும் அவர்களுக்குள் நடந்த போர்களைப் பற்றிய செய்திகளையும் பல பாடல்களில் (44, 45, 46,73) காணலாம். இவர்களுக்கிடையே நடந்த போர்களில் நெடுங்கிள்ளி இறந்தான்.

நலங்கிள்ளி படைவலிமை மிக்கவன். அவன் பாண்டிய நாட்டில் இருந்த ஏழு அரண்களை அழித்து அங்கே தன் புலிச் சின்னத்தைப் பொறித்தவன். இவனுடைய படைபலத்தையும் போர் செய்யும் ஆற்றலையும் அறிந்த வடநாட்டு அரசர்கள் இவன் எப்பொழுது தமது நாட்டின்மீது படையெடுத்து வருவானோ என்று கலக்கமுற்றுக் கண்ணுறங்காதிருந்தனர் என்று கோவூர் கிழார் புறநானூற்றுப் பாடல் 31-இல் கூறுகிறார். நலங்கிள்ளி படைவலிமையில் மட்டுமல்லாமல் கொடையில் சிறந்தவனாகவும், நல்லாட்சி புரிபவனாகவும், தமிழ்ப் புலமை மிக்கவனாகவும் இருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இவனைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார் முதலியோராவர். புறநானூற்றில் இவனைப் பற்றிய பாடல்கள் 15. இவன் இயற்றிய பாடல்கள் இரண்டு (73, 75).

பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசுமுறை சிறந்தது என்பதுபற்றிப் பேச்செழுந்தது. “மூத்தோர் இறந்ததால் அரசுரிமைப் பெற்று ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச்சுமையை அதிகமாக்கும் சிறியோனின் ஆட்சி பொறுத்தற்கரிய சுமையாகும். ஆண்மையும் தகுதியும் உடையவன் ஆட்சிக்கு வந்தால் அரசாட்சி செய்வது உலர்ந்த நெட்டியைப் போல் சுமையின்றியிருக்கும்” என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: முதுமொழிக் காஞ்சி . அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10 நொய்தால் அம்ம தானே; மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,

அருஞ்சொற்பொருள்
1. கூற்றம் = இயமன், நாட்டின் பகுதி; உய்த்தல் = கொண்டுபோதல், அனுபவித்தல். 2. பால் = உரிமை; பழவிறல் = பழைய வெற்றி; தாயம் = உரிமைச் சொத்து. 4. புரவு = இறை; கூர் = மிகுதி. 6 மண்டுதல் = நெருங்குதல், அதிகமாதல், உக்கிரமாதல்; பரித்தல் = காத்தல், தாங்குதல்; மதன் = வலி, மாட்சிமை, செருக்கு (மனவெழுச்சி); நோன்மை = வலிமை; தாள் = முயற்சி. 7. விழுமியோன் = சிறந்தவன். 8. அறுதல் = இல்லாமற்போதல்; கயம் = குளம்; கிடை = நெட்டி. 9. என்றூழ் = கதிரவன், கோடை, வெயில்; வறல் = சுள்ளி; 10. நொய்மை = மென்மை, மிருது, எளிமை; மை = கறை, இருள், குற்றம்

கொண்டு கூட்டு: தாயம் சிறியோன் பெறின் அது மிகவும் சிறந்ததல்ல; வேந்தர் அரசு கெழு திரு விழுமியோன் பெறின் அது நன்றும் நொய்தல் ஆகும் எனக் கூட்டுக.

உரை: மூத்தோர் மூத்தோர்க்குரிய இடத்தை அடைந்ததால் (இறந்ததால்) முறைப்படி வந்த பழைய வெற்றிகளாலுண்டாகிய அரசுரிமயைப் பெற்றதால் பெரிய சிறப்பை அடைந்ததாக எண்ணித் தன் குடிமக்களிடம் (அதிகமாக) வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோன் செயல் சிறந்ததல்ல. குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்குடையையும் முரசையும் உடைய அரசாட்சி, துணிந்து போரிடும் மனவெழுச்சியும் வலிய முயற்சியும் உடையவன் பெற்றால், ஆட்சி செய்வது ஆழத்தில் நீர் வற்றிய குளத்தருகில் உள்ள சிறிய சுள்ளி போன்ற வெள்ளிய நெட்டி போல் மிகவும் சுமையற்றதாகும்.

சிறப்புக் குறிப்பு: தகுதியற்றவன் ஆட்சிக்கு வந்து மக்களிடம் அதிகமாக வரி கேட்டு அவர்களைத் துன்புறுத்தி ஆட்சி செய்வது அரசனுக்கு மட்டுமல்லாமல் குடிமக்களுக்கும் பெருஞ்சுமையாக இருக்கும். ஆனால், தகுதி உடையவன் ஆட்சிக்கு வந்தால், அவ்வாட்சி அவனுக்கும் அவன் குடிமக்களுக்கும் சுமை இல்லாததாக இருக்கும் என்பது இப்பாடலின் கருத்து.

வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு. (குறள் - 552)

அரசன் அதிகமாக வரி கேட்டு மக்களைத் துன்புறுத்துவது வேலொடு வந்து ஒருவன் கொள்ளை அடிப்பது போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

74. வேந்தனின் உள்ளம்



பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை. இம்மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். கணைய மரத்தைப் போன்ற வலிய கால்களை உடையவன் என்ற காரணத்தால் இவன் இப்பெயரைப் பெற்றதாகச் சிலர் கருதுகின்றனர்1. இரும்பொறைப் பரம்பரையில் கடைசியாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் இவனும் ஒருவன் என்றும் இவன் ஆட்சிக் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகிறார்2.

பாடலின் பின்னணி: சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. ஆனால், வேறு சிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும், அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர்2. இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: முதுமொழிக் காஞ்சி . அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5 மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள் 1. குழவி = குழந்தை; தடி = தசை. 3. தொடர்ப்பாடு = பற்று; தொடர் = சங்கிலி; ஞமலி = நாய்; இடர்ப்பாடு = இடையூறு; இரீஇய = இருக்க. 4. கேளல் கேளிர் = பகைவர், அயலார்; வேளாண் = கொடை (உபகாரம்); சிறுபதம் = தண்ணீர் உணவு. 5. மதுகை = வலிமை (மனவலிமை). 6. அளவை = அளவு. 7. ஈனுதல் = பெறுதல்.

கொண்டு கூட்டு: இறப்பினும் பிறப்பினும் வாளில் தப்பார்; இறந்துண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகில் எனக் கூட்டுக.

உரை: எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருவள்ளுவர், மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின், அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. (குறள் - 967)

பொருள்: பகைவர்க்குப் பின்னே சென்று ஒருவன் மானங்கெட வாழ்தலினும், அப்பொழுதே உயிர் துறந்தான் எனப்படுதல் நலமாகும்.

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து. (குறள் - 968)

பொருள்: ஒருவன் தனது பெருந்தன்மைக்குரிய மானம் அழிய வந்த இடத்தில் , உடலைப் பேணி வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாகி விடுமோ? (ஆகாது)

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் - 969)

பொருள்: தனது உடலிலுள்ள மயிர்த்திரள் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போல் மானத்தைப் பெரிதாகக் கருதும் மனிதர் தங்கள் மானத்திற்கு கேடு வரின் அக்கணமே தம் உயிரை விட்டு மானத்தைக் காத்துக்கொள்வர்.

மானத்தோடு கூடிய வாழ்க்கையே சிறந்தது என்று எண்ணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையின் கருத்தும் மானத்தைப்பற்றி திருவள்ளுவரின் கருத்தும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

1. புறநானூறு - தெளிவுரை, புலியூர் கேசிகன், பாரி நிலையம் (பக்கம் 529)
2. Social and Cultural History of Tamilnad (Vol.1), N. Subramanian, Ennes Publications (pp 45)
3. புறநானூறு (பகுதி 1), ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (பக்கம் 188)