Monday, November 23, 2009

130. சூல் பத்து ஈனுமோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக வழங்குவதைக் கண்ட முடமோசியார், “ஆயே! நின்னையும் நின் மலையையும் பாடி வரும் பரிசிலர்க்கு நீ மிகுந்த யானைகளைப் பரிசாக அளிக்கிறாய். அவற்றின் தொகையை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு போரிட்ட காலத்தில் அவர்கள் உன்னிடம் தோற்று உயிர் தப்பி மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓடிய பொழுது அவர்கள் விட்டுச் சென்ற வேல்களினும் அதிகமாக உள்ளன. உன் நாட்டில் ஒவ்வொரு இளம்பெண் யானையும் கருவுற்றால் பத்து குட்டிகளை ஈனுமோ?” என்று தன் வியப்பை இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த
5 அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1.கொடு = வளைவு; பூண் = அணிகலன். 2. பிடி = பெண் யானை; சூல் = கருப்பம். 4. கரவு = மறைவு. 6. ஞான்று = காலம். 7. தலை = இடம்; தலைப் பெயர்தல் = புறங்காட்டி ஓடுதல்.

உரை: விளங்கும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய்! உன் நாட்டில், ஒரு இளம்பெண் யானை கருவுற்றால் பத்து குட்டிகளைப் பெறுமோ? உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இன்முகம் மறைக்காமல், மகிழ்ச்சியொடு நீ அளித்த உயர்ந்த யானைகளின் தொகையைக் கணக்கிட்டால், நீ கொங்கரை மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓட்டிய பொழுது அவர்கள் புறங்காட்டி ஓடிய சமயத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்குமே!

129. வேங்கை முன்றில்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் தன்னிடம் வரும் பரிசிலர்க்கு யானைகளை அளிப்பதைக் கண்ட முடமோசியார், வானம் முழுதும் விண்மீன்கள் பூத்து விளங்கினால் அவற்றின் தொகை ஆய் பரிசிலர்க்கு வழங்கும் யானைகளின் தொகைக்கு நிகராகலாம் என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்;
5 ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் என்னில் பிழையாது மன்னே.


அருஞ்சொற்பொருள்:
1.குறி = குறுகிய; இறை = இறப்பு (சுவரைத் தாண்டி நிற்கும் கூரைப் பகுதி). 2. வாங்கு = வளைவு; அமை = மூங்கில்; பழுனுதல் = முதிர்தல்; தேறல் = மது. 3. முன்றில் = முற்றம்; அயர்தல் = விளையாடுதல். 6. கரவு = மறைவு. 7. ஆனாது = அளவிட முடியாது. 8. கருவழி இன்றி = கரிய இடம் இல்லாமல். 9. மன் - அசைச் சொல்.

உரை:குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள் வளைந்த மூங்கில் குழாயில் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து மகிழ்ந்து, வேங்கை மரங்களுடைய முற்றத்தில் குரவைக் கூத்தாடும், இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் உள்ள பெரிய மலைக்கு உரிமையாளனாகிய ஆய் அண்டிரன் கொல்லும் போரைச் செய்யும் தலைவன். அவன் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை எண்ணிலடங்காது. மேகம் மறைக்காமல், வானத்தில் சிறிதளவும் கரிய இடமின்றி எல்லா இடத்திலும் விண்மீன்கள் தோன்றி, வானமே வெண்மையாகக் காட்சி அளித்தால் அவ்விண்மீன்களின் தொகை ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகைக்கு நிகராகலாம்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை வானத்தில் உள்ள விண்மீன்களைவிட அதிகம் என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறுவது போல், 123-ஆவது பாடலில் மலையமான் திருமுடிக்காரி இரவலர்க்கு அளித்த தேர்களின் எண்ணிக்கை முள்ளூர் மலைமீது பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று கபிலர் கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

128. முழவு அடித்த மந்தி!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் கொடைச் சிறப்பால் மிகுந்த புகழுடையவனாக இருந்தான். அவ்வாறு இருப்பினும், மற்ற வேந்தர்கள் பொறாமையால் அவனோடு போர் புரியாது இருப்பதற்குக் காரணம் அவனைப் போரில் வெல்வது அரிது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கருத்தை இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்
5 கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

அருஞ்சொற்பொருள்:
1.மன்றம் = ஊர்ப் பொதுவிடம்; மா = பெரிய; சினை = கிளை; மந்தி = குரங்கு. 2. நாற்றுதல் = தூக்குதல்; விசி = கட்டு. 3. பாடு = ஓசை; தெண்கண் = தெளிந்த இடம்; செத்து = கருதி. 4. ஆலல் = ஒலித்தல், ஆடல். 5. கழல் = கழலும்; மழை = மேகம். 6. குறுகல் = நெருங்கல். 7. பீடு = பெருமை.

உரை: ஊர்ப் பொதுவிடத்துப் பலாமரத்தின் பெரிய கிளையில் இருந்த குரங்கு, பரிசிலர் தூக்கிவைத்திருந்த இறுகக் கட்டிய முழவை பலாப்பழம் என்று எண்ணி, அதன் இனிய ஒசை பிறக்கும் தெளிந்த இடத்தில் அடித்தது. அதைக் கேட்ட ஆண் அன்னப் பறவைகள் அந்த ஒசைக்கு மாறாக ஒலித்தன. கழலும் வீரவளையல்களை அணிந்த ஆயின் மேகங்கள் தவழும் பொதிய மலை ஆடிவரும் மகளிரால் அணுக முடியுமே தவிர பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது.

சிறப்புக் குறிப்பு: கபிலர் 111 - ஆவது பாடலில், பாரியிடமிருந்து பறம்பு மலையை வெல்லுவது வேந்தர்க்கு அரிது; ஆனால், “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே” என்று கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

127. உரைசால் புகழ்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவர் இயற்பெயர் மோசி. இவர் முடவராக இருந்ததால் முடமோசியார் என்று அழைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் உறையூரின் ஒரு பகுதியாக இருந்த ஏணிச்சேரி என்னும் ஊரைச் சார்ந்தவர் . புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து பாடப்பட்டவையாகும்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அண்டிரன். பாரியைப் போல் ஆய் அண்டிரனும் வேளிர் குலத்தைச் சார்ந்தவன். இவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிய மலை அடிவாரத்தில் இருந்த குடி என்னும் ஊரைத் தலநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னன். இவனும் கடையேழு வள்ளல்கலில் (அதியமான், பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, பேகன்) ஒருவன். இவனை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஒடைக் கிழார், குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர், காரிக் கண்ணனார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

ஆய் அண்டிரன் கொங்கரைப் போரில் வென்று அவர்களை மேற்குக் கடற்கரையிடத்தே ஓடி ஒளியுமாறு செய்ததாக இலக்கியத்திலும் வரலாற்றிலும் குறிப்புகள் உள்ளன.

பாடலின் பின்னணி: இப்பாடலில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆயின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: கடைநிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல் கடைநிலை எனப்படும்.

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
5 ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
10 முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.

அருஞ்சொற்பொருள்:
1.கோடு = தண்டு; சீறியாழ் = சிறிய யாழ். 2. பனுவல் = பாட்டு; உய்த்தல் = கொண்டு போதல். 3. அரை = அடியிடம். வெளில் = யானை கட்டும் தறி. 4. மஞ்ஞை = மயில்; கணம் = கூட்டம்; சேப்ப = தங்க. 6. சாயின்று = தளர்ந்தது, குன்றியது; கோயில் = அரண்மனை 7. குய் = தாளிப்பு; அடிசில் = உணவு. 8. ஈவு = கொடை; அருத்துதல் = புசிப்பு. 9. ஒரீஇய = நீங்கிய. 10. நகர் = அரண்மனை.

கொண்டு கூட்டு: ஆஅய் கோயில் சாயின்று என்ப; ஆயினும், முரைசுகெழு செல்வர் நகர் போலாதே எனக் கூட்டுக.

உரை: களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. பிறருக்கு அளிக்க இயலாத மங்கல அணிகலன்கள் மட்டுமே அணிந்த மகளிர் ஆயின் அரண்மனையில் உள்ளனர். இவ்வாறு இருப்பதால், ஆயின் அரண்மனை தன் பெருமையில் குறைந்தது என்று கூறுவர். ஆனால், இனிய சுவையுடன் தாளித்த உணவை பிறர்க்கு அளிக்காமல் தாம் மட்டும் வயிறு நிரம்ப உண்டு, மிகுந்த புகழை இழந்த முரசுடைய செல்வர்களின் அரண்மனைகள் ஆயின் அரண்மனைக்கு ஒப்பாகாது.

சிறப்புக் குறிப்பு: பிறர்க்கு உதவி செய்வதால் தனக்கு ஒரு கேடு வருவதாக இருந்தாலும், தன்னை விற்றாவது உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை,

ஒப்புர வினால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (குறள் 220)

என்ற குறளில் வள்ளுவர் கூறுவதைப் போலவே, ஆய் தன் யானைகளை எல்லாம் பரிசிலர்க்கு அளித்து, தன் செல்வத்தையும் இழந்ததாக இப்பாடலில் ஏணிச்சேரி முடமோசியார் கூறுகிறார். வள்ளுவர் குறளும் ஆயின் செயலும் ஒப்பு நோக்கத் தக்கவையாகும்.

மற்றொரு குறளில்,

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள் - 232)

என்று இரவலர்க்கு ஈகை செய்வதே ஒருவருடைய புகழுக்குக் காரணம் என்பதை வள்ளுவர் கூறுகிறார். ஆய் அண்டிரனின் புகழுக்கும் அவன் ஈகைதான் காரணம் என்று இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

126. கபிலனும் யாமும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த கொற்கையின் அருகாமையில் உள்ள மாறோக்கம் என்ற ஊரைச் சார்ந்தவர். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என்று அழைக்கப்பட்டார் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய ஏழு பாடல்கள் (37, 39, 126, 174, 226, 230, 383) உள்ளன.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் திருமுடிக்காரியின் முன்னோர்களின் பெருமையையும் திருமுடிக்காரியின் பெருமையையும் புகழ்ந்து பாடுகிறார். சேர மன்னர்கள் மேற்குக் கடலில் கப்பலோட்டத் தொடங்கிய பிறகு மற்றவர்கள் அக்கடலில் தம் கப்பலை ஓட்டிச் செல்ல அஞ்சுவது போல், புலவர்களில் சிறந்தவரான கபிலர் மலையமானைப் புகழ்ந்து பாடிய பிறகு அது போல் யாராலும் இனி பாட முடியாது என்றாலும், தன் வறுமையின் காரணத்தால் தன்னால் முடிந்த அளவு மலையமானைப் புகழ்ந்து பாட வந்ததாக இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5 வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
10 நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன்அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்துஇசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்
15 பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை;
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையின் தொடுத்தனம் யாமே; முள்எயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப
20 அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய
அருஞ்சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1.ஒன்னார் = பகைவர்; ஒடை = யானையின் நெற்றிப்பட்டம். 2. சென்னி = தலை; பொலிவு = அழகு; தைத்தல் = இடுதல், பொருத்துதல், அலங்கரித்தல். 3. விழு = சிறந்த; சீர் = தலைமை. 4. ஒடா = புறமுதுகு காட்டி ஒடாத; பூட்கை = கொள்கை; உரம் = வலிமை; மருகன் = வழித்தோன்றல். 5. வல்லேம் = வலிமை (திறமை) இல்லாதவர்கள்; வல் = விரைவு. 6. கிளத்தல் = கூறுதல்; கங்குல் = இரவு. 7. துயில் = உறக்கம்; மடி = அடங்குதல்; தூங்கிருள் = மிகுந்த இருள்; இறும்பு = சிறு காடு. 8. பொருநன் = அரசன். 9. தெறல் = சினத்தல், அழித்தல்; மரபு = பெருமை; பொலிதல் = சிறத்தல், விளங்குதல். 10. பரத்தல் = மிகுதல். 11. புலன் = அறிவு. 13. அதற்கொண்டு = அக்காலந் தொடங்கி. 14. வானவன் = சேரன்; குட = மேற்கு. 15. பொலம் = பொன்; நாவாய் = மரக்கலம் (கப்பல்). 16. அத்தை - அசைச் சொல்.17. துரப்புதல் = துரத்துதல். 18. தொடுத்தல் = தொடங்குதல்; எயிறு = பல். 19. அரவு = பாம்பு; எறிதல் = ஊறு படுத்தல்; உரும் = இடி; இயம்பல் = ஒலித்தல். 21. சமம் = போர்; ததைதல் = சிதறுதல்; நன்று = பெரிது. 22. நண்ணுதல் = நெருங்குதல் (பொருந்துதல்); தெவ்வர் = பகைவர்; தாங்குதல் = தடுத்தல். 23. படப்பை = பக்கத்துள்ள இடம்

கொண்டு கூட்டு: உரவோன் மருக, பொருந, நாடு கிழவோய்; நின்வயிற் கிளக்குவமாயின் அந்தணாளன் கிளையொடும் பொலிய இசை நிற்கப் பாடினன்; வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அதற்கொண்டு பிறர் கலம் செல்லாது அனையேம் யாம்; இன்மை துரப்ப இசைதர வந்து நின் வண்மையிற் சில தொடுத்தேம் யாம் எனக் கூட்டுக.

உரை: பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும் விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக.

இவ்வுலக மக்கள் எல்லாரினும் தூய அறிவுடைய அந்தணனாகிய கபிலன், இரந்து செல்லும் பரிசிலர்கள் சொல்வதற்கு இனி இடம் இல்லை என்று கூறுமளவுக்கு உன் பெருகிய புகழ் நிலைத்து நிற்குமாறு பாடிவிட்டான். சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை. அதுபோல், கபிலன் உன்னை புகழ்ந்து பாடிய பிறகு யாம் பாட முடியாத நிலையில் உள்ளேம். ஆயினும், வறுமையால் துரத்தப்பட்டு உன் புகழால் இழுக்கப்பட்டு உன் வள்ளல் தன்மையைப்பற்றி சில சொல்லத் தொடங்கினோம். முள்போன்ற பல்லையுடைய பாம்பை நடுங்க வைக்கும் இடிபோல் முரசு ஒலிக்க, யானையொடு அரசும் களத்தில் அழியுமாறு பொறுத்தற்கரிய போரைச் சிதறடித்துப் பொருந்தாப் பகைவரைத் தடுக்க வல்ல, பெண்ணையாற்றின் அழகிய பக்கங்களையுடைய நாட்டுக்குத் தலைவனே!

125. புகழால் ஒருவன்!

பாடியவர்: வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார். பெருஞ்சாத்தானார் என்பது இவரது இயற்பெயர். சங்க காலத்தில் பொன்னின் தரம் ஆய்பவர்கள் வண்ணக்கனார் என்று அழைக்கப்பட்டனர். இப்புலவர் பொன்னின் தரம் ஆய்வதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தமையால் இவர் வண்ணக்கன் என்று அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் வட நாட்டிலிருந்து குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர்மூண்டது. அப்போரில், மலையமான் திருமுடிக்காரி, சோழனுக்குத் துணையாக சேரனை எதிர்த்துப் போர் புரிந்தான். அது கண்ட வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தானார், “போரில் வென்றவன் உன்னால்தான் வெற்றி பெற்றாதாகக் கூறுவான். போரில் தோற்றவன், நீ போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தோல்வி அடைந்திருக்க மாட்டோம் என்று கூறுவான்” என்று திருமுடிக்காரியின் வலிமையை இப்பாடலில் புகழ்கிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே!
5 நள்ளாதார் மிடல்சாய்ந்த
வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்
10 கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே;
வெலீஇயோன் இவன்எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
15 நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
தொலைஇயோன் இவன்என
ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்
20 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1.பனுவல் = பஞ்சு. 2. தயங்குதல் = நிலை தவறுதல்; குறை = உண்ணுவதற்குப் பக்குவப்படுத்தப்பட்ட தசை. 3. பரூஉ = பருமை; மண்டை = இரப்போர் கலம்; ஊழ் = முறைமை. 5. நள்ளாதார் = பகைவர்; மிடல் = வலிமை; சாய்த்தல் = கெடுத்தல், முறித்தல். 6. மகிழ் இருக்கை = மகிழ்ச்சியான இடம் (அரசவை). 7. பகடு = காளை மாடு; அழி = வைக்கோல். 8.நயத்தல் = விரும்புதல்; நறவு = மது. 9. பெயர்தல் = சிதைவுறுதல். 10. கடந்து அடுதல் = எதிர் நின்று போரிடுதல். 11. வெலீஇயோன் = வெல்வித்தவன் (வெற்றிக்குக் காரணமாக இருந்தவன்). 12. கவர்பு = கவர்ந்து. 13. சமம் = போர். 15. மன் - அசைச்சொல். 17. தொலைஇயோன் = தோல்விக்குக் காரணமாக இருந்தவன். 20. சேஎய் = முருகன்.

கொண்டு கூட்டு: பெரும! சேஎய்! வென்றோனும், வெலியோன் இவனென நிற்கூறும்: தோற்றோனும், தொலைஇயோன் இவனென நிற்கூறும்: அதனால், நிற்பெற்றிசினோர்க்கு ஒருநீ ஆயினையாதலால், நின் மகிழிருக்கைக் கண்ணே உண்கும் எந்தைநிற் காண்குவந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு நல்ல அமிழ்தாக எனக் கூட்டுக.

உரை: அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே! பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும் பஞ்சு போல் மென்மையானதாகவும், நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான ஊன் துண்டுகளையும், பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும் முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான இடத்திற்கு உன்னைக் காண வந்தோம். உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல் நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும்.

மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி, விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால், நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும் தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு, நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய்.

சிறப்புக் குறிப்பு: தனது முயற்சியால் வந்த பொருளெல்லாம் பிறர்க்கு அளித்து, எஞ்சியதைக் காரி உண்பது குறித்து, “உழுத நோன்பகடு அழிதின்றாங்கு நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே” என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் இப்பாடலில் கூறுவது போல் தோன்றுகிறது.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களுக்கு இன்னல் விளைவித்தாகவும், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் முருகப் பெருமானை உருவாக்கி, அவரைத் தேவர்களுக்குத் துணையாக சூரபத்மனை எதிர்த்துப் போரிடுமாறு பணித்ததாகவும், அப்போரில் முருகப் பெருமான் சூரபத்மனைக் கொன்று வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்ற தேவர்களும் தோல்வியுற்ற அரக்கர்களும் முருகனின் வலிமையைப் புகழ்ந்ததாகவும் கந்த புராணம் கூறுகிறது. தேவர்களுக்குத் துணையாக முருகன் போர் செய்தது போல் காரி சோழனுக்குத் துணையாகப் போர்செய்ததால் இப்பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் காரியை முருகனுக்கு ஒப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.

Tuesday, November 17, 2009

124. வறிது திரும்பார்!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலிலும் கபிலர் திருமுடிக்காரியின் வள்ளல் தன்மையைப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; நெறிகொளப்
பாடுஆன்று இரங்கும் அருவிப்
5 பீடுகெழு மலையற் பாடி யோரே.

அருஞ்சொற்பொருள்:
1.நாள் = நல்ல நாள்; புள் = பறவை; தட்ப = தடுக்க. 2. பதன் = பக்குவம்; திறன் = தன்மை, வகை. 3. நெறிகொள் = ஒழுங்கு பட. 4. பாடு = ஒசை; ஆன்று = நிறைந்தது; இரங்கும் = ஒலிக்கும். 5. பீடு = பெருமை; கெழுதல் = பொருந்துதல்.

கொண்டு கூட்டு: மலையற் பாடியோர் வறிது பெயர்குவர் அல்லர் எனக் கூட்டுக.

உரை: நல்ல நாளன்று போகாவிட்டாலும், போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் அவன் அவைக்குள் நுழைந்தாலும், தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: திறன் அறிந்து பேச வேண்டும் என்ற கருத்தைத் திருவள்ளுவர் சொல்வன்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியிருப்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியது.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூங்கு இல். (குறள் - 644)

பொருள்: சொல்லும் சொல்லைத் தன்மை அறிந்து சொல்லுக; அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை. கேட்பவர்களின் தன்மையறிந்து அவர்கள் விரும்புமாறு பேசுவது அறம்; திறமான பேச்சால் தான் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடிவதால் பொருள் அல்லது இலாபம் கிடைப்பதற்கு வழியுமுண்டு.

123. மயக்கமும் இயற்கையும்!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஓரு மன்னன் கள்ளுண்டு மகிழ்ந்து இருக்கும் பொழுது புலவர்களுக்குத் தேர்களைப் பரிசாக அளிப்பது எளிது. அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிந்த அறிவோடு இருக்கும் பொழுது திருமுடிக்காரி புலவர்களுக்குப் பரிசாக அளித்த தேர்கள் முள்ளூர் மலைமேல் பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று இப்பாடலில் கபிலர் காரியின் வள்ளல் தன்மையைப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
5 பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1.நாள்மகிழ் = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் திருவோலக்கம் (அத்தாணி மண்டபம்). 3. தொலைதல் = கெடுதல், முடிதல். 5. மீமிசை = மேலுக்கு மேல். 6. உறை = துளி.

உரை: பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த மழைத்துளிகளைவிட அதிகம்.

122. பெருமிதம் ஏனோ!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் திருமுடிக்காரியின் வள்ளல் தன்மையை வியந்து, “திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை அந்தணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டாய். மூவேந்தர்களுக்கு நீ துணையாக இருப்பதற்கு அவர்கள் அளிக்கும் பொருளை இரவலர்களுக்கு அளிக்கிறாய். உனக்கு உரியது உன் மனையின் தோள்கள் மட்டுமன்றி வேறொன்றும் இல்லை. நீ அத்தகைய பெருமிதம் உடையவன்” என்று கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரிநின் நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல்கெழு தானை
5 மூவருள் ஒருவன் துப்பாகியர் என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள்அளவு அல்லதை
10 நினதுஎன இலைநீ பெருமிதத் தையே.

அருஞ்சொற்பொருள்:
1.உடலுநர் = பகைவர்; ஊக்கல் = முயலுதல். 2. திருந்துதல் = அழகு பெறுதல், செவ்விதாதல். 3. புறந்தருதல் = பாதுகாத்தல். 4. வீதல் = கெடுதல், சாதல்; விறல் = வலிமை, வெற்றி; கெழு = பொருந்திய. 5. துப்பு = துணை, வலிமை. 6. ஏத்துதல் = புகழ்தல்; கூழ் = பொன், பொருள், உணவு, செல்வம். 8. வடமீன் = அருந்ததி (கற்பில் சிறந்தவள்); புரைதல் = ஒத்தல். 9. அரிவை = பெண் (மனைவி).

உரை: வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள். அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு உரியது. குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று உன்னைப் புகழ்ந்து உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது. அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும், வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ.

121. பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. திருக்கோவலூருக்கே மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் சங்க காலத்தில் மலாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மலாடு என்ற பகுதிக்குக் கோவலூர் தலைநகராக இருந்தது. கபிலர் காலத்தில் கோவலூரைத் தலைநகராகக்கொண்ட மலாடு என்ற பகுதியை ஆட்சி புரிந்த குறுநில மன்னனின் பெயர் மலையமான் திருமுடிக்காரி. அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். அவன் காரி என்றும் மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் அழைக்கப்பட்டான்.

பெண்ணையாற்றுக்குத் தென்மேற்கே உள்ள முள்ளூர் என்ற ஊரும் காரிக்குச் சொந்தமானதாக இருந்தது. ஓரு சமயம் அதனைக் கைப்பற்ற ஆரிய மன்னர் பெரிய வேற்படையோடு வந்து முற்றுகையிட்டனர். காரி அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான். இச்செய்தி, “ ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையன் ஒருவேற் கோடி ஆங்கு” என்ற நற்றிணைப் (பாடல் 170) பாடலிலிருந்து தெரிய வருகிறது.

மலையமான் திருமுடிக்காரி தமிழ் மூவேந்தருடன் நட்பு கொண்டிருந்தான். அவர்களுக்கு வேண்டும் பொழுது துணையாகப் போர்புரிந்தான். உதாரணமாக, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் போரிட்ட பொழுது, திருமுடிக்காரி சோழனுக்குத் துணையாக இருந்து சேரனை எதிர்த்துப் போர் செய்தான். திருமுடிக்காரி அதியமானால் கோவலூர் என்ற ஊரில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டதாக வரலாற்றில் காண்கிறோம் .

பாடலின் பின்னணி: ஒரு சமயம், கபிலர் மலையமான் திருமுடிக்காரியைக் காணச் சென்றார். எல்லாப் புலவர்களுக்கும் சிறப்புச் செய்வதைப் போலவே காரி கபிலருக்கும் சிறப்புச் செய்தான். அது கண்ட கபிலர், புலவரின் தகுதி அறிந்து சிறப்புச் செய்தல் வேண்டும் என்று காரிக்கு இப்படலில் அறிவுரை கூறுகிறார்.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.



   ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
   பலரும் வருவர் பரிசில் மாக்கள்
   வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
   ஈதல் எளிதே மாவண் தோன்றல்
5 அதுநற்கு அறிந்தனை ஆயின்
   பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!

அருஞ்சொற்பொருள்:

1.உள்ளி = நினைத்து. 3. வரிசை = தகுதி. 4. தோன்றல் = அரசன், தலைவன். 6. மதி - அசைச்சொல்

உரை: ஒரு திசையில் உள்ள வள்ளல் ஒருவனை நினைத்து, பல (நான்கு) திசைகளிலிருந்தும் பரிசுபெற விரும்பும் மக்கள் பலரும் வருவர். பெரிய வண்மையுடைய அரசே! (தகுதியை ஆராயமல்) அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது மிகவும் எளிது. அவர்களின் தகுதியை அறிந்து அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது அரிய செயலாகும். அவர்களின் தகுதியை நீ நன்கு அறிந்தாயானால், புலவர்கள் அனைவரையும் ஒரே தரமாக (பொது நோக்காக) மதிப்பிடுவதைத் தவிர்ப்பாயாக.

சிறப்புக் குறிப்பு: பரிசளிப்பவர்கள் பரிசு பெறுபவர்களின் தகுதியைஆராய்ந்து பரிசளிக்க வேண்டும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

   பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
   அதுநோக்கி வாழ்வார் பலர். (குறள் - 528)

பொருள்: அரசன் எல்லாரையும் ஒரே தன்மையராகப் பார்க்காமல், அவரவர் தகுதிக்கேற்ப வரிசைப்படுத்திப் பார்ப்பானானால், அச்சிறப்பை நோக்கி அவனை விடாது நெருங்கி வாழும் சுற்றத்தார் பலராவர்.

Monday, November 16, 2009

120. பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: முன்பு, பாரியின் பறம்பு நாட்டில், புன்செய் நிலத்தில் வரகு, தினை, எள் போன்ற பொருள்கள் நிறைய விளைந்தன. அந்நாட்டு மக்கள் மிகுந்த அளவில் கள்ளும் ஊனும் உண்டார்கள். இது போன்ற புது வருவாயுடைய வளமான நாடு இனி அழிந்துவிடுமோ என்று எண்ணிக் கபிலர் புலம்புவதை இப்பாடலில் காணலாம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
5 களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி
மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
10 தினைகொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோள்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறுஅட்டுப்
15 பெருந்தோள் தாலம் பூசல் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலும் சேட்சிமைப் புலவர்
பாடி ஆனாப் பண்பிற் பகைவர்
20 ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

அருஞ்சொற்பொருள்:
1.வெப்பு = வெப்பம்; சுவல் = மேட்டு நிலம். 2. கார் = கார் காலம் ( ஆவணி, புரட்டாசி); கலித்த = மிகுந்த; பாடு = இடம் . 3. பூழி = புழுதி; மயங்குதல் = கலத்தல். 4. பல்லியாடல் = நெருக்கமாக விளைந்த பயிர்களப் விலக்குவதற்கும் மற்றும் களையெடுப்பதற்கும் உழவர்கள் செய்யும் ஒரு பணி; செவ்வி = சமயம், நிலை. 5. கழால் =கலைதல், களைதல்; தோடு = இலை; ஒலிதல் = தழைத்தல்; நந்தி = விளங்கி (பெருகி). 6. புனிற்ற = ஈன்றணிமை ( பிரசவித்தவுடன்); பெடை = பறவையின் பெட்டை; கடுப்ப = ஒப்ப; நீடி = நீண்டு. 7. தாள் = தண்டு; போகுதல் = நீளம்; பீள் = பயிரிளங்கதிர். 9. வாலிதின் = சீராக. 10. கவ்வை = எள்ளிளங்காய்; கறுப்ப = கறுக்க. 11. விளர்தல் = வெளுத்தல்; கோள் = ஏற்றுக் கொள்ளுதல். 12. பழுனுதல் = முதிர்தல்; மட்டு = கள். 13. குரம்பை = குடிசை; பகர்தல் = கொடுத்தல். 14. விசைத்தல் = வேகமுறல்(துள்ளல்). 15. தாலம் = கலம்; பூசல் = கழுவுதல்; மேவுதல் = உண்ணல்.16. யாணர் = புது வருவாய்; நந்துதல் = அழிதல். 17. இரும் = கரிய. 18. கழை = மூங்கில்; நரலும் = ஒலிக்கும்; சேட்சிமை = உயர்ச்சி. 19. ஆனா = குறையாத. 20. கம்பலை = ஆரவாரம். 21. செரு = போர்; வெம்பல் = விரும்புதல்; விறல் = வலிமை, வெற்றி.

பல்லியாடல்: “பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தல் என்பன ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். அது நெருங்கி முளைத்த பயிர்ளை விலக்குதற்கும், எளிதாகக் களை பிடுங்குவதற்கும் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டு பக்கத்திலும் மேற்புறத்திலுள்ள வளையங்களில் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல்” - பழைய உரையாசிரியரின் குறிப்பு.

கொண்டு கூட்டு: செரு வெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங் கொல்லொ எனக் கூட்டுக.

உரை: வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த மேட்டு நிலத்தில் கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய இடத்தில் புழுதி கலக்குமாறு உழவர்கள் பலமுறை உழுது பின்னர் விதைகளை விதைக்கின்றனர். அதன் பிறகு, பல்லியாடி நெருங்கி முளைத்தப் பயிர்களைப் பிரிப்பதோடு மட்டுமல்லாமல் களைகளையும் நீக்குகின்றனர். பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள் அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி, கரிய தண்டுகள் நீண்டு, அண்மையில் முட்டையிட்ட மெல்லிய மயில்களின் நிறத்தோடு காட்சி அளிக்கின்றன. எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும் காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை செய்கின்றனர். தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன. அவரையின் வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன. நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை புல்லைக் கூரையாகக்கொண்ட குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச் சமைத்து அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர் பாத்திரங்களைக் கழுவுகின்றனர். கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி, அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன். அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன். பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன். அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையுடையவன். அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு. அந்நாடு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் கபிலர் கூறுவதைப் போல், பலமுறை உழுதால் பயிர்கள் நன்றாக விளையும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (குறள் - 1037)
பொருள்: ஒரு நிலத்தை உழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின் அந்நிலத்தில் விளையும் பயிர்கள் ஒரு பிடி எருவும் தேவையின்றிச் செழித்து வளரும்.