பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஓரு மன்னன் கள்ளுண்டு மகிழ்ந்து இருக்கும் பொழுது புலவர்களுக்குத் தேர்களைப் பரிசாக அளிப்பது எளிது. அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிந்த அறிவோடு இருக்கும் பொழுது திருமுடிக்காரி புலவர்களுக்குப் பரிசாக அளித்த தேர்கள் முள்ளூர் மலைமேல் பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று இப்பாடலில் கபிலர் காரியின் வள்ளல் தன்மையைப் புகழ்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
5 பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.
அருஞ்சொற்பொருள்:
1.நாள்மகிழ் = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் திருவோலக்கம் (அத்தாணி மண்டபம்). 3. தொலைதல் = கெடுதல், முடிதல். 5. மீமிசை = மேலுக்கு மேல். 6. உறை = துளி.
உரை: பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த மழைத்துளிகளைவிட அதிகம்.
Showing posts with label புறநானூறு - பாடல் 123. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 123. Show all posts
Tuesday, November 17, 2009
Subscribe to:
Posts (Atom)
