Showing posts with label புறநானூறு - பாடல் 88. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 88. Show all posts

Monday, July 27, 2009

88. எவருஞ் சொல்லாதீர்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் அஞ்சியோடு போர் செய்ய அவனுடைய பகைவர்கள் முயற்சி செய்வதாக அவ்வையார் கேள்விப்பட்டார். அதைக் கேட்ட அவ்வையார் அவ்வரசர்களை, “அதியமானைக் காணும் முன் கூழைப்படையும் தார்ப்படையும் கொண்டு அதியமானோடு போர் செய்து அவனை வெல்வோம் என்ற எண்ணத்தைத் தவிருங்கள்:” என்று இப்பாடலில் எச்சரிக்கிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

யாவிர் ஆயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
5 விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே.

அருஞ்சொற்பொருள்:
1.கூழை = பிற்படை; தார் = முற்படை. 2. ஓம்புதல் = தவிர்தல்; திறல் = வலி. 3. இலங்கல் = விளங்கல்; மழவன் = வீரன்; பெருமகன் = அரசன். 4.அம் = அழகு; பகடு = பெரிய, அகன்ற. 6. காணா ஊங்கு = காண்பதற்கு முன்.

கொண்டு கூட்டு: என்னையைக் காணா ஊங்கு யாவிராயினும் பொருதும் என்றல் ஓம்புமின்.

உரை: அதியமான் ஓங்கிய வலிமையும் ஒளிவிட்டு விளங்கும் நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன். சுடர்விடும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய அணிகலன்களை அணிந்த அழகிய அகன்ற மார்பும் போர்க்கள வெற்றி விழாக்களில் மேம்பட்ட நல்ல போர்முரசு போன்ற தோளையுமுடைய என் அரசனாகிய அவனைக் காண்பதற்கு முன்னே நீங்கள் எவராய் இருப்பினும் முற்படையும் பிற்படையும் கொண்டு யாம் போரிடுவோம் என்று கூறுவதைத் தவிருங்கள்.