Showing posts with label புறநானூறு - பாடல் 81. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 81. Show all posts

Monday, July 13, 2009

81. யார்கொல் அளியர்?


பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: கோப்பெரு நற்கிள்ளி ஆமூரில் இருக்கும் பொழுது போர் தொடங்கியது. அப்போரில் பகைவரை எதிர்த்துப் போரிடும் படைக்குக் கோப்பெரு நற்கிள்ளி தலைமை தாங்கினான். இவனது போர்த்திறமையைப் புகழ்ந்து சாத்தந்தையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5 கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

அருஞ்சொற்பொருள்:
1.ஆர்ப்பு = பேரொலி. 2.கார் = கார்காலம்; பெயல் = மழை; உரும் = இடி. 3. அளி = இரக்கம்; ஆர் = ஆத்தி. 4. செறிதல் = நெருங்குதல்; கண்ணி = மாலை. 5. கவிகை = கொடுத்துக் கவிந்த கை; கவிதல் = வளைதல்;மள்ளன் = வீரன்
உரை: கோப்பெரு நற்கிள்ளியின் படையினது ஆரவாரம் ஏழு கடலும் கூடி எழுப்பும் ஒலியைவிடப் பெரிது. அவனுடைய யானை கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமாக முழங்குகிறது. கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. அனைவரும் கொல்லப்படுவது உறுதி.