Monday, September 14, 2009

98. பகைவர்களின் வளநாடு கெடுமோ!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகை மூண்டது. அதியமான் தன்னுடைய வலிமையும் ஆற்றலும் மிக்க படையுடன் கோவலூரை நோக்கிச் சென்றான். கோவலூருக்குச் செல்லும் வழியிலிருந்த சிற்றரசர்கள் அதியமானின் படையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றனர். இதனைக் கண்ட அவ்வையார், அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு இப்பாடலை இயற்றுகிறார். இப்பாடலில், “அரசே! உன் யானைப்படையைக் கண்டவர்கள் தம்முடைய மதில் வாயில் கதவுகளுக்குப் புதிய கணையமரங்களைப் பொருத்துகின்றனர். உன் குதிரைப்படையைக் கண்டவர்கள் காவற்காட்டின் வாயில்களை முட்களை வைத்து அடைக்கின்றார்கள். உன் வேற்படையைக் கண்டவர் தங்கள் கேடயங்களைப் பழுது பார்த்துக்கொள்கிறார்கள். உன் வீரர்களைக் கண்டவர்கள் தங்கள் அம்புறாத்தூணிகளில் அம்புகளை அடக்கிக் கொள்கிறார்கள். நீயோ, இயமனைப் போன்றவன். உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ” என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிக் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல். கொற்றவள்ளை என்றும் கருதப் படுகிறது. தலைவன் புகழைச் சொல்லி, அவனுடைய பகைவர் நாடு அழிதற்கு வருந்துதல் கொற்றவள்ளை எனப்படும்.

முனைத்தெவ்வர் முரண்அவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பின்நின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவம் எழுச்செல்லவும்,
5 பிணன்அழுங்கக் களன்உழக்கிச்
செலவுஅசைஇய மறுக்குளம்பின்நின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளின் புழையடைப்பவும்,
மார்புறச் சேர்ந்துஒல்காத்
10 தோல்செறிப்பில்நின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்,
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்புஒடுக்கவும்,
15 நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்புஅணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
20 பெரும்புனல் படப்பைஅவர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1.முனை = போர்முனை; தெவ்வர் = பகைவர்; முரண் = வலி, மாறுபாடு; அவிதல் = ஒடுங்குதல், கெடுதல் , தணிதல், அழிதல், குறைதல், அடங்குதல். 2. பொர = போர் செய்ததால், நுதி = நுனி; மருப்பு = கொம்பு (யானைத் தந்தம்). 4.எழு = கணையமரம். 5. அழுங்குதல் = உருவழிதல்; உழக்குதல் = மிதித்தல், கலக்குதல். 6. மறு = கறை. 7. நன்மை = சிறப்பு; மா = குதிரை. 8. கவை = பிளப்பு; புழை = காட்டு வழி (வாயில்). 9. ஒல்குதல் = எதிர்கொள்ளுதல். 10. தோல் = தோலால் ஆகிய உறை; செறிப்பு = அடக்கம்; செறித்தல் = சேர்த்தல். 11. தோல் = கேடயம். 12. வாய்த்தல் = கிடைத்தல். 13. மைந்து = வலிமை. 15. ஐயவி = சிறு வெண்கடுகு; ஒய்யென = விரைவாக. 16. உய்த்தல் = கொண்டுபோதல். 18. வரம்பு = வரப்பு. 19. அலம் = அலமரல் = சுழலல்; கழனி = வயல். 20. படப்பை = தோட்டம் (நிலப்பகுதி).

கொண்டு கூட்டு: நீயே, கூற்றத்து அனையை; ஆகலின், வரம்புஅணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனிப் பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே போற்றார் இரங்க விளிவது கொல்லோ எனக் கூட்டுக.

உரை: போர்முனையில் பகைவரது வலிமை அடங்குமாறு போர்புரிந்ததால் குறைந்த (உடைந்த) நுனியுடன் கூடிய கொம்புகளுடைய உனது யனைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் மதிற்கதவுகளில் கணையமரங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பிணங்கள் உருவழியுமாறு போர்க்களத்தில் அவற்றை மிதித்து, தங்கள் கால்கள் வருந்துமாறு சென்றதால் குருதிக்கறைப் படிந்த குளம்புகளுடைய உன் சிறப்புக்குரிய குதிரைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் காட்டுவாயில்களை கிளைகளாய் பிளவுபட்ட முட்களை வைத்து அடைக்கின்றனர். உறையில் இருந்து எடுத்த வேல்களை உன் வீரர்கள் பகைவர்களின் மீது எறிய அவை அவர்களை ஊடுருவிச் சென்றன. அதைக்கண்ட உன் பகைவர்கள் தங்கள் கேடயங்களின் காம்புகளோடு (புதிய) பிடிகளைப் பொருத்திக் கொள்கின்றனர். வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்புகளுடைய உன் வீரர்களின் வலிமையைக் கண்டவர் குருதிக்கறைப் படிந்த தங்கள் அம்புகளைத் தங்கள் அம்புறாத்தூணிகளில் அடக்கிக் கொள்கின்றனர். நீயோ, (தன்னை இயமனிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக) சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டுபோகும் இயல்புடைய இயமனைப் போன்றவன். ஆதலால், வரப்புகளைச் சார்ந்து வளைந்து ஆடும் நெற்கதிர்களுடைய வயலொடு மிக்க நீர்ப்பகுதிகளையுமுடைய உன் பகைவர்களின் அகன்ற இடங்களுடைய நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு: வீரர்கள் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால், இயமன் அவர்களின் உயிரைப் பறிக்க மாட்டான் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றும், சங்க காலத்திற்குப் பிந்திய காலத்திலும், வெண்கடுகுப் புகை கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. உதாரணமாக பன்னிரண்டாம் திருமுறையில் உள்ள ஒரு பாடலில் இக்கருத்து காணப்படுகிறது.

ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் வினைப்பர்.
(பன்னிரண்டாம் திருமுறை,
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், பாடல் 39)
பொருள்: வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய்வார்கள்.

97. இறுக்கல் வேண்டும் திறையே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறை செலுத்த வேண்டிய வேந்தர்களில் சிலர், அதனைச் செலுத்தாது அதியமானோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டனர். அதை அறிந்த அவ்வையார், “அதியமானின் வாட்படை, விற்படை, களிற்றுப் படை, குதிரைப் படை மற்றும் காலாட் படை எல்லாம் போர் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவை; அவனை எதிர்த்தவர்கள் தப்ப முடியாது; உங்களுக்குச் சொந்தமான ஊர்கள் உங்களிடத்தில் இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்துங்கள்; நீங்கள் திறை கொடுக்க மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டான்; நிச்சயமாக உங்களை எதிர்த்துப் போரிடுவான்; நான் சொல்லியும் நீங்கள் கேட்காமல் அவனோடு போருக்குச் சென்றால் உங்கள் மகளிரிடம் இருந்து நீங்கள் பிரியப் (இறக்கப்) போகிறீர்கள்; அது நிச்சயம்.” என்று எச்சரிக்கிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

போர்க்குஉரைஇப் புகன்று கழித்தவாள்
உடன்றவர் காப்புடை மதில்அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர்
5 நறுங்கள்ளின் நாடுநைத்தலின்
சுரைதழீஇய இருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம்மலைத்துஅவர்
குழூஉக்களிற்றுக் குறும்புஉடைத்தலின்
10 பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே;
மாவே, பரந்துஒருங்கு மலைந்தமறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலின்
களன்உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன்தானும், நிலம்திரைக்கும் கடல்தானைப்
15 பொலந்தும்பைக் கழல்பாண்டில்
கணைபொருத துளைத்தோலன்னே
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடம்தாள்
பிணிக்கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றுஅவற்கு
20 இறுக்கல் வேண்டும் திறையே; மறுப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான்எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
25 இறும்பூது அன்றுஅஃது அறிந்துஆ டுமினே.

அருஞ்சொற்பொருள்:
1.உரைஇ = உலாவி, சுழன்று, பரந்து; புகன்று = விரும்பி; கழிதல் = போக்குதல், நீக்குதல். 2. உடன்று = வெகுண்டு. 3. உற = மிக. 4. குறும்பு = குறும்பர், பகைவர், தீயோர். 5. நறுமை = மனம், நன்மை; நைத்தல் = கெடுத்தல். 6. சுரை = அம்புத் தலை (வேலின் தலைப் பாகம்); தழீஇய = பொருந்திய; இரு = பெரிய; காழ் = காம்பு. 7. மடை = ஆணி, ஆயுத மூட்டு. 8. எழு = கணைய மரம்; மலைத்தல் = பொருதல், வருத்துதல், எதிர்த்தல். 9. குறும்பு = அரண். 10. பரூஉ = பருமை; தொடி = கிம்புரி (யானையின் தந்தங்களில் அணியப்படும் அணிகலன்). 12. பொலம் = பொன்; பைந்தார் = பசுமை; தார் = மாலை; பரிதல் = ஓடுதல். 13. உழத்தல் = வெல்லுதல், துவைத்தல், வருத்துதல்; அசைவு = வருத்தம்; மறு = கறை. 14. திரைதல் = சுருங்குதல், திரளுதல். 15.கழல் = கழற்சிக் காய்; பாண்டில் = வட்டம். 16. தோல் = கேடயம். 17. ஆயிடை = அவ்விடத்து, அக்காலத்து; தடம் = பெரிய. 20. இறுக்கல் = திறை கொடுத்தல். 21. ஒல்லுதல் = இணங்குதல். 23. கனி = காய்; ஓதி = பெண்களின் கூந்தல். 25. இறும்பூது = வியப்பு; ஆடுதல் = போர் செய்தல்.

உரை: போர் புரிவதற்கு விரும்பி, உறையிலிருந்து எடுத்த வாள்கள் பகைவரின் காவலுடைய மதில்களை அழித்து அவர்களின் தசைக்குள் மிகவும் மூழ்கியதால் தங்கள் உருவத்தை இழந்தன. வேல்களோ, பகைவரின் அரண்களை வென்று அவர்களின் மணம் மிகுந்த கள்ளுடைய நாட்டை அழித்ததால் தலைப்பாகத்தோடு கூடிய வலிய காம்பும் ஆணியும் நிலை கெட்டன. யானைகளோ, கணையமரங்களால் தடுக்கப்பட்டக் கதவுகளைத் தாக்கி, பகைவரின் யானைகளோடு கூடிய அரண்களை அழித்ததால், தங்கள் தந்தங்களில் இறுகக் கட்டப்பட்ட பெரிய அணிகலன்களை (கிம்புரிகளை)இழந்தன. குதிரைகளோ, பரவலாக ஒன்று சேர்ந்து வந்து தாக்கிய பசும்பொன்னாலான அழகிய மாலைகளணிந்த பகைவர்களின் மார்புகளை உருவழியுமாறு வருத்தித் தாக்கிப் போர்க்களத்தில் அவர்களை அழித்ததால் தங்கள் குளம்புகளில் குருதிக் கறை கொண்டன.

அதியமான், நிலத்தைத் தன்னுள் அடக்கிய கடல் போன்ற படையுடன், கழற்காய் வடிவாகவும், வட்ட வடிவான கிண்ணிகளுடைய கேடயத்தை ஏந்திப் பொன்னாலான தும்பை மாலையை அணிந்திருக்கிறான். அவ்விடத்து, அவனுடைய சினத்துக்கு ஆளானோர் எப்படி உயிர் தப்ப முடியும்?
பெரிய தாளினையும் பின்னிக் கிடக்கும் நெற்கதிர்களையும் உடைய தலைமையும் பழைமையும் கூடிய உங்கள் ஊர் உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையை நீங்கள் செலுத்த வேண்டும். திறை செலுத்த மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டன். அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான். நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையானால், மென்மையும் கழற்காயின் உதவியால் வகுத்து சுருட்டி முடியப்பட்ட கூந்தலும் சிறிய வளையல்களையும் அணிந்த உங்கள் உரிமை மகளிரின் தோள்களைத் தழுவமுடியாமல் அவர்களை விட்டு நீங்கள் பிரியப் போவதில் (இறக்கப் போவதில்) வியப்பில்லை. அதை அறிந்து போர் செய்க!

Monday, August 10, 2009

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் அதியமான் பொகுட்டெழினி. இவன் கொடைச் சிறப்பும் வெற்றிச் சிறப்பும் உடையவன். இவனைப் புகழ்ந்து அவ்வையார் இயற்றிய மூன்று (96, 102, 392) பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

பாடலின் பின்னணி: அவ்வையார் பொகுட்டெழினியிடம் மிகுந்த அன்பு உடையவர். அவன் அழகிலும் வலிமையிலும் சிறந்தவன். அவனுடைய அழகாலும் வலிமையாலும் அவனுக்குத் தீங்கு வரக்கூடும் என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
5 நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ
‘விழவுஇன்று ஆயினும், படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளுமோ?’ என
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.

அருஞ்சொற்பொருள்:
1. அலர்தல் = மலர்தல்; அம் = அழகு; பகடு = வலிமை, பெருமை (அகன்ற). 2. தடக்கை = பெரிய கை. 4. நுணுகுதல் = மெலிதல். 6. படு - மிகுதிக் குறிப்பு; பதம் = உணவு. 7. மை = செம்மறி ஆடு; ஊன் =தசை, புலால்; மொசித்தல் = உண்ணல்; ஒக்கல் = சுற்றம். 8. கைம்மான் = கைமான் = யானை. 9. உறையுள் = இருப்பிடம்; முனிதல் = வெறுத்தல்.

கொண்டு கூட்டு: என் ஐ இளையோர்க்கு பகை இரண்டு எழுந்தன; ஒன்று, மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ துறைநீர்க் கைமான் கொள்ளுமோ என உறையுள் முனியும் அவன் செல்லும் உரே எனக் கூட்டுக.

உரை: மலர்ந்த தும்பைப் பூவாலான மாலையை அணிந்த அழகிய அகன்ற மார்பினையும், திரண்டு நீண்ட பெரிய கையையும் உடைய என் தலைவன் அதியமானின் மகனுக்கு இரண்டு பகைகள் தோன்றி உள்ளன. ஒன்று, பூப்போன்ற, மைதீட்டிய கண்கள் பசந்து, தோள்கள் மெலிந்த பெண்கள் காதல் நோயால் இவன் மீது கொண்ட சினம். மற்றொன்று, விழா இல்லையாயினும், தவறாது மிகுந்த அளவில் ஆட்டுக்கறியை உண்ட சுற்றத்தினரோடு இவன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள், இவன் யானைகள் அவர்களுடைய நீர்த்துறைகளில் இறங்கி அங்குள்ள நீரை எல்லாம் குடித்துவிடுமோ என்று அவர்கள் கொண்ட வெறுப்பு. இவை இரண்டும் இவனுக்குப் பகையாகும்.

சிறப்புக் குறிப்பு: பொகுட்டெழினியின் அழகிலும் இளமையிலும் மயங்கிய பெண்கள் அவன் மீது காதல் கொண்டு தங்கள் காதல் நிறைவேராததால் அவன் மீது கோபம் கொள்கிறார்கள். மற்றும், அவன் தன் படையுடன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள் அவன் யானைகள் தங்கள் குளங்களைப் பாழ் செய்துவிடுமோ என்று அவன் மீது வெறுப்படைகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால் அவனுக்குப் பெண்களும் அவன் செல்லும் ஊரில் உள்ள மக்களும் பகைவர்கள் என்று கூறி, அவ்வையார் பொகுட்டெழினியின் அழகையும் வெற்றிகளையும் பாராட்டுகிறார்.

95. புதியதும் உடைந்ததும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதியமான் மீது பகை கொண்டான். தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு அவ்வையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். அவ்வையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிச் செருக்கொடு இருந்த தொண்டைமான், அவ்வையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையோடு காண்பித்தான். அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின் படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாண் மங்கலம். அரசனுடைய வாளைப் புகழ்தல்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
5 கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.

அருஞ்சொற்பொருள்:
1.இவ்வே = இவையே; பீலி = மயில் தோகை. 2. கண் = உடம்பு: திரள் = திரட்சி; நோன்மை = வலிமை; காழ் = காம்பு; திருத்துதல் = சீர்ப்படுத்துதல், அழகு செய்யப்படுதல். 3. கடி = காவல்; வியன் = அகன்ற; நகரம் = அரண்மனை; அவ்வே = அவையே. 4. கோடு = பக்கம்; நுதி = நுனி. 5. கொல் = கொல்லன்; துறை = இடம்; குற்றில் = கொட்டில் (சிறிய இடம்); மாது - அசைச் சொல். 6. பதம் = உணவு. 8. ஒக்கல் = சுற்றம். 9. வை = கூர்மை.

கொண்டுகூட்டு: எம் கோமான் வைந்நுதி வேல், கொல்துறைக் குற்றில; இவ்வே கடியுடை வியன்நகரவ்வே.

உரை: செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.

சிறப்புக் குறிப்பு: தூது என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர்,

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (குறள் - 687)
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (குறள் - 690)

என்கிறார். அதாவது, தன் கடமையை அறிந்து காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து சிந்தித்து உரைப்பவன் சிறந்த தூதன். மற்றும், தான் கூறும் செய்தியால் தான் உயிரிழக்க நேரினும், தன்னாலான எல்லா முயற்சிகளையும் குறையாது செய்து தன் அரசனுக்கு நன்மை உண்டாக்குபவனே சிறந்த தூதன். இந்த குறட்பாக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவ்வையாரின் சொல்வன்மையும் செயலும் இருப்பதை இப்பாடலின் மூலம் நாம் அறிய முடிகிறது.

94. சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அரசவையிலிருந்தாலும் போர்க்களத்திலிருந்தாலும் அவ்வையார்க்கும் அவர் போன்ற புலவர்களிடத்தும் அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாக இருப்பதை வியந்து ” பெரும! நீ எமக்கு இனியவன்; ஆனால் உன் பகைவர்க்கு இன்னாதவன்” என்று அவ்வையார் இப்பாடலில் அதியமானைப் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
5 இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1.குறு மாக்கள் = சிறுவர்கள்; கோடு = கொம்பு (தந்தம்); கழாஅல் = கழுவுதல். படிதல் = அமருதல் 4. துன்னுதல் = நெருங்குதல்; கடாம் = யானையின் மத நீர். 5. இன்னாய் = இனிமை இல்லாதவன்; ஒன்னாதோர் = பகைவர்

உரை: பெரும! ஊரில் உள்ள சிறுவர்கள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்கு நீர்த்துறையில் (பொறுமையாக) அமர்ந்து இருக்கும் பெரிய யானையைப் போல நீ எமக்கு இனிமையானவன். ஆனால், உன் பகைவர்க்கு, நீ நெருங்குதற்கு அரிய மதம் கொண்ட யானையைப் போல இன்னாதவன்.

93. பெருந்தகை புண்பட்டாய்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்பாடலில், “பெரும, உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள். அவர்கள் அவ்வாறு தோற்று ஓடியதால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.

திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.

அருஞ்சொற்பொருள்:
1.திண்மை = வலிமை; பிணி = கட்டு; இழும் - ஒலிக் குறிப்பு. 2. அமர் = போர்; கடத்தல் = வெல்லுதல்; யாவது = எவ்வாறு. 3. தார் = முற்படை; வெடிபடுதல் = சிதறுதல். 4. மரீஇய = மருவிய, தழுவிய; பீடு = பெருமை, வலிமை. 5. விளித்தல் = இறத்தல்; யாக்கை = உடல்; தழீஇய = தழுவிய. 6. மருங்கு = பக்கம், விலாப்பக்கம். 7. புரிதல் = விரும்பல். 8. திறம் = செவ்வை (செப்பம்), மேன்மை. 9. கந்து = பற்றுக்கோடு. 10. நீள் = உயரம், ஒளி; உழி = இடம். 11. போழ்தல் = பிளத்தல்; உய்ந்தனர் = தப்பினர்; மாதோ - அசைச் சொல்.12. ஞிமிறு = வண்டு, தேனீ;ஆர்க்கும் = ஒலிக்கும்; கடாம் = யானையின் மத நீர். 13. அடுகளம் = போர்க்களம். 14. சமம் = போர்; ததைதல் = நெருங்கல், சிதைதல்; நூறுதல் = வெட்டுதல், அழித்தல். 15. மாறு = ஆல்.

கொண்டு கூட்டு: பெருந்தகை, நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால் நின்னொடு எதிர்த்து வந்தோர் தாம் பீடில் மன்னர் விளித்த யாக்கை தழீஇ நீள் கழல் மறவர் செல்வுழுச் செல்கென வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் ஆதலின், இனி முரசு முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது எனக் கூட்டுக.

உரை: பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.

92. மழலையும் பெருமையும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் அவ்வையார்க்கு அரிய நெல்லிக்கனியை அளித்ததால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப் புகழ்கிறார். அவற்றை அதியமான் அன்போடு கேட்கிறான். அந்நிலையில், அவன் அன்பை வியந்து அவ்வையார் இப்பாடலை இயற்றுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
5 கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.

அருஞ்சொற்பொருள்:
1. கொள்ளுதல் = ஏற்றுக் கொள்ளுதல்; புணர்தல் = பொருந்துதல். 2. அறிவரா = அறிய வாரா. 5. கடி = காவல்; கடத்தல் = வெல்லுதல். 6. மாறு = ஆல்

கொண்டு கூட்டு: புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்ன எனக் கூட்டுக.

உரை: குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால், என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் அவ்வையார் மழலைச் சொற்களின் சிறப்பைக் கூறுவதைப்போல் திருவள்ளுவர்,

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

என்று கூறுகிறார்.