Thursday, December 2, 2010

200. கொடுப்பக் கொள்க!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டவன்: விச்சிக்கோ. இளவிச்சிக்கோ என்பவன் பெண்கொலை புரிந்த நன்னன் என்பவனின் வழித்தோன்றல் என்ற காரணத்தால் அவனைப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் தழுவாது, அவனுடன் இருந்த இளங்கண்டிராக்கோ என்பவனை மட்டும் தழுவியதாகப் புறநானூற்றுப் பாடல் 151 கூறுகிறது. இப்பாடலில் பாடப்பட்ட விச்சிக்கோ அந்த இளவிச்சிக்கோவின் தமையன்.
படலின் பின்னணி: பாரி இறந்த பிறகு கபிலர், பாரியின் மகளிர் இருவரையும் தகுந்த அரசர்க்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். அவர் பாரியின் மகளிரோடு விச்சிக்கோவைக் கண்டு, அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவனை வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஆனால், விச்சிக்கோ பாரி மகளிரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கருதப்படுகிறது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி
மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
5 கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப,
நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே,
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
10 நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
15 நினக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!

அருஞ்சொற்பொருள்:
1. நிவத்தல் = படர்தல், அலர்தல், உயர்தல்; பாசிலை = பசுமையான இலை, பல = பலா. 3. சேண் = தொலைதூரம். 4. மழை = மேகம்; மால் = மலை; அடுக்கம் = பக்க மலை. 5. கழை = மூங்கில்; கல்லகம் = மலை; வெற்பு = மலை. 6. செரு = போர். 11. கறங்கல் = ஒலித்தல். 17. மடங்கா = குறையாத.

உரை: உன் நாட்டில், மேகங்கள்கூட எட்ட முடியாத அளவுக்கு உயரமான மலைகள் உள்ளன. அம்மலைகளின் உச்சியில் மூங்கில் காடுகள் உள்ளன. அந்தக் குளிர்ந்த மலைகளில் வளர்ந்த பசுமையான இலையையுடைய பலாவின் பழத்தைக் கவர்ந்து உண்ட கரிய விரலுடைய ஆண்குரங்கு, சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு, மலைச் சிகரத்தில் உள்ள மூங்கிலின் மேல் உறங்கும். அத்தகைய மலைநாட்டுத் தலைவா! போரில் பகைவரைத் தாக்கியதால் புலால் மற்றும் குருதிக் கறைபடிந்து நெருப்பைப்போல் சிவந்த நிறமுடைய வேலையையும், போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானைகளையும் ஒளிரும் மணிகளுடைய அணிகலன்களையும் உடைய விச்சிக்கோவே!

பூவைத் தலையில் வைத்ததைப்போல் உள்ள முல்லைக் கொடி ஒன்று படர்வதற்குக் கொழுக்கொம்பின்றி இருந்ததைக் கண்ட பாரி, அம்முல்லைக்கொடி தன்னைப் புகழந்து பாடாது என்பதை அறிந்திருந்தும், அக்கொடி படர்வதற்கு ஒலிக்கும் மணிகள் பொருந்திய தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்தான். இவர்கள் அத்தகைய பரந்த புகழுடைய பாரியின் சிறப்புடைய மகளிர். நான் பாடிப் பரிசுபெறும் அந்தணன். நீயோ, பகைவருடன் போர் செய்யும் முறைகளை நன்கு அறிந்து வாளால் மேம்பட்டவன். இவர்களை மணமகளிராகத் தருகிறேன். நீ இவர்களை ஏற்றுக்கொள்வாக.

அடங்காத அரசர்களைச் சினத்தோடு போர்புரிந்து, அடக்கும் குறையாத விளைவுடைய வளமான நாட்டுக்கு உரிமை உடையவனே!

199. கலிகொள் புள்ளினன்

பாடியவர்: பெரும்பதுமனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே. இவர் குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (7), நற்றிணையில் இரண்டு செய்யுள்களும் (2, 109) இயற்ரியுள்ளார். இவருடைய பாடல்களில் உவமை நயம் மிகுந்து காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: பாணர், விறலியர், கூத்தர், பொருநர், புலவர் ஆகியோர் மீண்டும் மீண்டும் செல்வந்தர்களிடத்தே சென்று பரிசு பெறுவதைப் பற்றித் தன் கருத்தை இப்பாடலில் பெரும்பதுமனார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
5 புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.

அருஞ்சொற்பொருள்:
1. தடவு = பெரிய; சினை = மரக்கொம்பு. 2. நெருநல் = நேற்று. 3. ஆனா = அமையாது; கலி = ஒலி. 4. வாழி, ஓ - அசைச் சொற்கள். 5. புரவு = பாதுகாப்பு. 7. இன்மை = வறுமை.

உரை: கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைத்து ஆரவாரமாக ஒலிக்கும் பறவைகள் அம்மரத்தைவிட்டு விலகுவதில்லை. இரவலர்களும் அப்பறவைகள் போன்றவர்கள்தான். இரவலர்களை எதிர்பார்த்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புரவலர்களின் செல்வம்தான் இரவலர்களின் செல்வம். புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களுக்கும் வறுமைதான்.

சிறப்புக் குறிப்பு: பறவைகள் ஆலமரத்தில் உள்ள பழங்களைத் தின்று, அப்பழங்களில் உள்ள விதைகளைத் தம் எச்சத்தின் மூலம் வெளிப்படுத்திப் பல்வேறு இடங்களில் புதிய ஆலமரங்கள் முளைத்துத் தழைக்க வழி செய்கின்றன. அதுபோல், இரவலர்கள் புரவலர்களிடம் பரிசுபெற்று, பல்வேறு ஊர்களுக்குச் சென்று பரிசளித்த இரவலர்களின் புகழைப் பரப்புவதால், ஆங்காங்கே, புதுப் புரவலர்கள் தோன்றக்கூடும். (அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, புறநானூறு, பகுதி 1, பக்கம் 432-433)

198. மறவாது ஈமே

பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார். பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள். இவரது இயற்பெயர் சாத்தனார். இவர், ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கன் என்பது தொழிற்பெயர். மற்றும், இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது. இவர் புறநானூற்றில் இயற்றிய இந்தப் ஒருபாடல் மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுள்களையும் , நற்றிணையில் 8 செய்யுள்களையும், குறுந்தொகையில் 5 செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
பாடலின் பின்னணி: ஒருசமயம், வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசில் பெறலாம் என்ற எண்ணத்தோடு அவனைக் காணச் சென்றார். அவன் பரிசில் அளிக்காமல் காலத்தைப் போக்கினான். அதனால் ஏமாற்றமடைந்த வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
5 கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்
திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
10 வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
15 ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
20 நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
25 துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

அருஞ்சொற்பொருள்:
1. வரை = மலை. 2. ஆரம் = மாலை (முத்து மாலை). 4. மணி = பவழ மணி. 5. கிண்கிணி = காலணி. 7. அரற்றுதல் = கதறுதல், அழுதல். 9. ஆல் = ஆல்மரம். 12. வரைப்பு = எல்லை; கொண்டி = கொள்ளை, பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல். 16. நெடுநகர் = பெரிய அரண்மணை.

உரை: அருவி வீழும் பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே! கடவுள் தன்மை அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன் புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன். வலிய தேரையுடைய தலைவ! உன்னைப் பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே கூறிக்கொண்டிருக்கிறேன். வேலையுடய வேந்தே! அப்பரிசிலின் மீது எனக்குள்ள விருப்பத்தால் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு, ஆலமரத்தில் அமர்ந்த கடவுள் போன்ற உன் பெருஞ்செல்வத்தைக் கண்டேன். ஆதலால், நான் விடைபெறுகிறேன்.

உன் தலையில் அணிந்துள்ள மாலை வாழ்க! நீ தமிழகம் முழுவதும் கொள்ளைகொண்டு உன் பகைவரை வென்று அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் மிக்க வலிமையையுடையவன். உன் புதல்வரும் உன்னைப் போன்ற மிக்க வலிமை உடையவர்கள்.எந்நாளும் பகைவர்களை அழித்து அவர்களுடைய அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து உன்னுடைய பொன்னாலான பொருள்கள் நிறைந்த பெரிய அரண்மனையில் உன் முன்னோர்கள் வைத்தார்கள். அந்த முன்னோர்களைப் போலவே உன் புதல்வரின் கருணை நிரம்பிய உள்ளமும் உள்ளது. (முன்னோர்க்கும் கண்ணோட்டம் இல்லை; உன் புதல்வருக்கும் கண்ணோட்டம் இல்லை).

எப்பொழுதும் அலையுடன் கூடிய கடல் நீரினும், அக்கடல் மணலினும், மழைத்துளிகளினும் அதிக நாட்கள் உன் புதல்வரின் பிள்ளைகளோடும் நீ விரும்பிய செல்வத்தோடும் வாழ்க! பெருந்தகையே! நான் உறவினர் இல்லாத தொலைவில் உள்ள ஊரில் மழைத்துளிக்கு ஏங்கி இருக்கும் வானம்பாடிப் பறவையைப் போல் உனது பரிசிலை விரும்பி உன் நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன். விரைவாகச் செல்லும் இயல்புடைய குதிரைகளையுடைய பாண்டியனே! நீ செய்த செயலை மறவாதே!

சிறப்புக் குறிப்பு: பாண்டியன் செய்த தீய செயலால் அவனுக்குத் தீங்கு வரும் என்று உணர்ந்த பேரி சாத்தனார், அவனுக்கு அத்தகைய தீங்குகள் வராமல் இருக்க வேண்டுமென்று எண்ணி அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

197. நல்குரவு உள்ளுதும்

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (58, 61, 167, 180, 197, 394). இச்சோழ மன்னன் குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டில் குட்டுவன் கோதையும் பாண்டிய நாட்டில் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர். இவனைப் பாடியவர்கள்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மருத்துவன் உறையூர் தாமோதரனார்.
பாடலின் பின்னணி: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணச் சென்றார். அவன் இப்புலவர்க்குப் பரிசளிப்பதற்குக் கால தாமதமாக்கினான். அதனால் கோபமடைந்த கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், “அரசே, அரசர்களிடம் தேர்களும் படைகளும் மிகுதியாக இருப்பதாலோ, பல போர்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதற்காகவோ நாங்கள் அவர்களை வியந்து பாராட்டுவதில்லை. சிறிய ஊரின் மன்னர்களாக இருந்தாலும் எங்கள் பெருமையை உணர்ந்தவர்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். எத்துணைத் துன்பம் வந்தாலும் உண்மை உணர்வும் நல்லறிவும் இல்லாதவர்களின் செல்வத்தை விரும்பமாட்டோம். நல்லறிவு உடையவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களைப் பெரிதும் பாராட்டுவோம்” என்று இப்பாடலில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
5 உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே
10 இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;
15 மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே.

அருஞ்சொற்பொருள்:
1. வளி = காற்று; வாவுதல் = தாவுதல்; இவுளி = குதிரை. 2. நுடங்குதல் = ஆடல், துவளல், முடங்குதல், தள்ளாடுதல், வளைதல்; எனா - இடைச்சொல். 5. உரும் = இடி; உட்கு = அச்சம். 6. செரு = போர். 10. படப்பை = தோட்டம்; மறி = ஆட்டுக்குட்டி. 11. அடகு = கீரை; முஞ்ஞை = முன்னை. 12. சொன்றி = சோறு. 14. பாடறிந்து ஒழுகும் பண்பு = பண்பாடு. 15. எவ்வம் = துன்பம். 17. நல்குரவு = வறுமை. 18. நனி = மிகவும்.

உரை: காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம்தரும் முரசோடு போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ, பெருநிலமாளும், ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை. முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம். மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெரும! நல்ல அறிவுடையவர்களின் வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக் கருதுவோம்.

சிறப்புக் குறிப்பு:

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (குறள் - 657)
என்ற குறளில், பழியை மேற்கொண்டு செய்த செயல்களால் பெற்ற செல்வத்தைவிட, சான்றோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது என்று திருவள்ளுவர் கூறுவது இப்பாடலில் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் கூறும் கருத்தோடு ஒத்திருப்பதைக் காண்க.

196. குறுமகள் உள்ளிச் செல்வல்

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைப் பாடிய புலவர்கள்: மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.

பாடலின் பின்னணி: ஆவூர் மூலங்கிழார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசு பெறுவதற்காகச் சென்றார். அவனைக் காண்பது அரிதாக இருந்தது. பலநாட்களுக்குப் பிறகு, அவனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனைப் புகழ்ந்து பாடினார். அவன், ஆவூர் மூலங்கிழாருக்குப் பரிசு கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். அவன் பரிசு கொடுப்பானா அல்லது கொடுக்க மறுத்துவிடுவானா என்று புலவருக்கு ஐயம் எழுந்தது. அதனால் மிகவும் கோபமடைந்த ஆவூர் மூலங் கிழார், இப்பாடலில் தன் கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
5 இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
10 நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
15 செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. ஒல்லுதல் = இயலுதல். 3. ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம், கண்ணோட்டம்; கேண்மை = நட்பு, இயல்பு. 7. வாயில் = வழி; அத்தை - அசை. 11. முனிதல் = வெறுத்தல்; மடி = சோம்பல். 12. குயிறல் = செய்தல்; நல்கூர்தல் = வறுமைப்படுதல். 14. முனிவு = வெறுப்பு.

உரை: தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியும் கண்ணோட்டமும் உடையவர்களின் இயல்பு. தம்மால் கொடுக்க முடியாததை கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததை கொடுக்காமல் மறுப்பதும் ஆகிய இரண்டும் இரவலரை விரைவில் வருத்துவதோடு மட்டுமல்லாமல் புரவலர்களின் புகழையும் குறைக்கும் வழியாகும். இப்பொழுது என்னிடம் நீ நடந்துகொண்ட விதமும் அதுவே. இது போன்ற செயல்களை இதுவரை நான் கண்டதில்லை; இப்பொழுதுதான் கண்டேன்.

உன் புதல்வர்கள் நோயில்லாமல் வாழ்வராக! நான் வெயிலின் வெம்மையை வெறுக்காமலும், பனியின் குளிரைக் கண்டு சோம்பாமலும், கல்போன்று தங்கியிருக்கும் என் வறுமையுடன், காற்றைத் தடுக்கும் சுவர்கள் மட்டுமே உள்ள என் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கே, நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய மெல்லியல்புகளுடைய என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!

சிறப்புக் குறிப்பு: இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் செயலால் ஆவூர் மூலங் கிழார் மிகவும் மனவருத்தமும் கோபமும் கொண்டார். அவன் தீய செயலால் அவன் புதல்வர்கள் நோயுடன் வருந்துவதையும் அல்லது அவன் வாழ்நாள்கள் குறைவதையும் அவர் விரும்பினாலும் அதை நேரிடையாகக் கூறாது எதிர்மறைக் குறிப்பாகக் கூறுகிறார். இவ்வாறு எதிர்மறைக் குறிப்பாக மொழிவதைத் தொல்காப்பியம்,

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட் புறத்ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல்காப்பியம் - செய்யுளியல் 177)

என்று கூறுகிறது. இப்பாடலில் ஆவூர் மூலங் கிழாரின் கூற்று குறிப்புமொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

”வளிமறை” என்பது ஆவூர் மூலங்கிழாரின் வீட்டில் வெயில், மழை போன்றவற்றிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான கூரை இல்லை என்பதைக் குறிக்கிறது.

“நாணலது” என்பது, மிகுந்த வறுமையின் காரணத்தால், ஆவூர் கிழாரின் மனைவி, அணிகலன்கள் எதுவும் இல்லாமல் நாணம் ஒன்றையே தன் அணிகலனாகக் கொண்டவள் என்பதைக் குறிக்கிறது.

195. நல்லாற்றுப் படும் நெறி

பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடலின் பின்னணி: சான்றோர்களாகவும் முதியோர்களாகவும் இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் நற்செயல்களுக்குப் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்துவதற்கான அறிவுரைகளை இபாடலில் நரிவெரூஉத்த்லையார் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
5 பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

அருஞ்சொற்பொருள்:
2. கயல் = கெண்டை மீன்; திரை = தோல் சுருக்கம்; கவுள் = கன்னம். 4. கணிச்சி = மழு; திறல் = வலிமை. 5. இரங்குவீர் = வருந்துவீர்; மாதோ - அசைச் சொல். 7. ஓம்பல் = தவிர்த்தல். 8. உவப்பது = விரும்புவது; படூஉம் = செலுத்தும். 9. ஆர் = அழகு, நிறைவு, ஆறு = வழி; ஆர் - அசைச் சொல்.

உரை: பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரைமுடியும், முதிர்ந்து சுருக்கம் விழுந்த கன்னங்களோடு, பயனற்ற முதுமையும் அடைந்த பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்ட பெரு வலிமையுடைய இயமன் வந்து உங்களைப் பற்றி இழுத்துச் செல்லும்பொழுது வருந்துவீர்கள். நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க. அதுதான் எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல நெறியில் செலுத்தும் வழியும் ஆகும்.

194. படைத்தோன் பண்பிலாளன் !

பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார். இவர் இயற்பெயர் நன்கணியார் என்று சிலர் கூறுவர். வேறு சிலர், இவர் கணிதத்துறையில் ஆற்றல் பெற்றதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுவர். மற்றும் சிலர், இவர் பக்குடுக்கை என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறுவர். பக்கு என்ற சொல்லுக்குப் பை என்று பொருள். ஆகவே, இவர் உடுத்திருந்த ஆடை பை போன்றதாக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
பாடலின் பின்னணி: வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த நன்கணியார் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
5 படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. நெய்தல் = இரங்கற் பறை (சாப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல், உதிர்த்தல்; மன்ற - அசைச் சொல். 6. அம்ம - அசைச் சொல்

உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.