Saturday, July 30, 2011

263. களிற்றடி போன்ற பறை!


பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பாட்டோன்: தெரியவில்லை.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் ஆநிரைகளை மீட்டு வரும்வழியில் ஆநிரைகளைக் கவர்ந்தவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டு உயிர் துறந்தான். அவனுக்கு நடுகல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வழியே செல்லும் பாணன் ஒருவனை நோக்கி, “ நீ அந்த நடுகல்லை வழிபட்டுச் செல்வாயாக” என்று இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை ஆறே
5 பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

அருஞ்சொற்பொருள்

2. இரும் = பெரிய. சேறல் = செல்லல். 3. ஓம்புதல் = தவிர்த்தல். 4. வண்டர் = வீரர்; வறநிலை = வறண்ட தன்மை. 8. கொல்புனல் = கரையை அரிக்கும் நீர்; விலங்குதல் = தடுத்தல்; கல் = நடுகல்.

கொண்டு கூட்டு: புனற் சிறையில் விலங்கியோன் கல்லைத்தொழாதனை கழிதலை ஓம்பு; தொழவே இவ்வறநிலை யாறு வண்டு மேம்படுமெனக் கூட்டுக.

உரை: பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒருகண்ணுடைய பறையையுடைய இரவலனே! நீ அந்த வழியாகச் சென்றால், அங்கே ஒரு நடுகல் இருக்கிறது. அதைத் தவறாமல் வழிபட்டுச் செல்க. அது “வண்டர்” என்னும் ஒருவகை வீரர்கள் மிகுதியாக உள்ள கொடிய வழி. அங்கே, பல ஆநிரைகளைக் கவர்வதற்கு வந்தவர் திரும்பி வந்து போரிட்டனர். போர்த்தொழிலைத் தவிர வேறு எதையும் கற்காத இளைய வீரர்கள் போரிலிருந்து நீங்கினார்கள். ஆனால், தலைவன், பகைவர்களின் வில்களிலிருந்து வந்த அம்புகள் அனைத்தையும், கரையை அரிக்கும் நீரைத் தடுக்கும் அணை போல் தடுத்தான். அவன் நடுகல் அங்கே உள்ளது.

No comments: